தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கே வடக்கில் போதை வியாபாரம் தீவிரம் – வினோ எம்.பி. குற்றச்சாட்டு

இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள், வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது, யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், “மன்னார் மாவட்டத்தில் நறுவிலிக்குளம் பிரதேசத்தில் பொது மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு காரணங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டு இன்று வரை அந்த பணிகள் நிறைவு பெறவில்லை.

ஏறக்குறைய 50 சதவீத நிதி ஒதுக்குகைகளுக்கன வேலைத்திட்டங்கள் நடந்தேறியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதான பணிகள் 9 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்திலும் இதே போன்றே ஓமந்தையில் இருக்கின்ற பொது மைதானபணிகள் ஏறக்குறைய பூர்த்தியாகி விட்டது. ஆனால் மின்சார இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

அதனால் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த மைதானம் இன்னும் கையளிக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக இந்த மைதானங்களை வீரர்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொறுப்புக்கொடுக்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

முல்லைத்தீவில் மாவட்டத்திற்குரிய மைதானம் இல்லை. ஒரு மைதானத்திற்குரிய காணியை இனம் காண்பதற்கு எல்லோருமே தடையாக இருந்துள்ளார்கள்.

3 இடங்களில் காணி பார்த்தார்கள் ஆனால் ஒரு மைதானத்தை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஒவ்வொரு காரணம் கூறி காலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

அண்மையில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த 72 வயதான அகிலத்திரு நாயகி என்ற வீராங்கனை பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

வன்னியில் 72 வயதிலும் சாதிக்கக்கூடிய வீர, வீராங்கனைகள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இளைஞர்,யுவதிகளுக்கு விளையாட்டுக்களில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் பட்சத்தில் தேசிய, சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பார்கள்.

அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொடுங்கள். வடக்கு மாகாணத்தில் இன்று இளைஞர்கள் போதைப் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர்.

அவர்கள் வேறு திசைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள் கூட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள்
இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள்,வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை.

போதைப்பொருள் புழக்கத்திற்கு அங்கு காவல்துறையினர் உடந்தையாக உள்ளனர். போதைப்பொருள் விற்போர், வாங்குவோரை காவல்துறையினருக்கு தெரியும்.

பாவனையாளரை காவல்துறையினருக்கு தெரியும். ஆனால் யுத்தத்தில் எவ்வாறு இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ அதேபோன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மூலமும் அழிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மெளலவியின் கருத்துக்கள் எமது மக்கள் மனதை புண்படுத்தியுள்ளது – ரெலோ வினோ எம்.பி சபையில் காட்டம்

இந்துக்களையும், அவர்களது கலை கலாசாரங்களையும் இழிவுபடுத்தும் வகையில் மௌலவி ஒருவர் கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது எமது மக்களின் மனங்களை கடுமையாக புண்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

இந்துக்கள் பெரிதும் போற்றுகின்ற, மதிக்கின்ற, ஆலயங்களில் மதிக்கப்படுகின்ற பரதநாட்டிய கலையை அந்த மௌலவி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார்.

இது மிகவும் வேதனையான விடயம். நாங்கள் சக மதத்தவரின் கலாசாரத்தை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நாங்கள் முஸ்லிம் தமிழ் சமூகத்தினர் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மௌலவியின் கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல்லின மக்கள் வாழ்கின்ற போதும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பெளத்த கலாசார நிகழ்வுகளுக்கு மாத்திரம் அதிகூடியளவு அதாவது 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஏனைய இந்து மற்றும் இஸ்லாமிய கலாசார நிகழ்வுகளுக்காக எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என வினோ நோகராதலிங்கம் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தொடர்ந்து கருத்துரைக்கையில்;

”இலங்கையை ஒரு பெளத்த சுற்றுலா மையமாக மாற்றும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதிலிருந்து இது ஒரு பெளத்த என்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. பல்லின சமூகம் வாழ்கின்ற நாடாக இந்த நாட்டை ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்றை அவசியமாகுமானால் இந்தியாவிடமே கோரவேண்டியுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் நிலமலா சீதாராமன் திருகோணமலை ஆலயத்தை புனரமைப்பதற்கு உதவுவதாக கூறினார். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மனவருத்தத்தை கொடுக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதியையே கோருகின்றனர், நிதியை கோரவில்லை. ஆனால் அவர்களுக்கான நட்டஈடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நிதி எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். முன்னதாக பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன அரசியல் தீர்வு அவசியமில்லை, பொருளாதாரத் தீர்வே அவசியம் என்றார். ஆனால், நிரந்தர அரசியல் தீர்வு இன்றி பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது இலங்கையின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கோ தீர்வுகாண முடியாது” எனது தெரிவித்தார்.

திடீர் ஜனாதிபதி ரணிலால் பேச்சு எனும் போலி வேசத்திற்குள் புதிய நாடகம் அரங்கேற்றம்

திடீரென வந்த ஜனாதிபதி ரணில் இப்பொழுது எங்களை அழைத்து பேச்சு என்று ஒரு போலி வேசத்திற்குள் புதிய நாடகம் அரங்கேறிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் படுகொலை நிகழ்வு (10.06.2023) நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறான நினைவு நாட்களை அடுத்த சந்ததி மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் நினைவேந்தல் செய்யப்படுகின்றது. மாறிமாறி வந்த கடந்தகால அரசுகள் ஆரம்ப காலங்களில் யே.ஆர்.ஜெயவர்த்தான முதற்கொண்டு இறுதியாக ரணில் விக்கிரமசிங்க வரைக்கும் ஆட்சிசெய்தவர்கள் கடந்த ஆட்சிகாலங்களில் திட்டமிட்டு இனப்படுகொலையினை அரங்கேற்றி இருந்ததை நாங்கள் மறந்துவிடவில்லை.

இந்த இனப்படுகொலைகள் எல்லாம் எங்களின் தமிழ்தேசியத்தினை சிதைவடையசெய்து உணர்வுகளை அடக்கி உரிமைபோராட்டத்திற்கு எங்கள் தாயார் படுத்தல்களை அடியோடு கிள்ளிவிடுவதற்காக காலத்திற்கு காலம் திட்டமிட்ட இனப்படுகொலைகள் அரங்கேறி வந்துள்ளன.

அரசியல் ரீதியாக எங்கள் உரிமை போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட போது மூத்த தமிழ்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிடப்பட்டு சிங்கள பேரினவாத வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட வரலாற்றினை நாங்கள் கண்டுள்ளோம் அது இன்றுவரை தொடர்கின்றது.

அண்மையில் கடைசியாக சிங்கள பேரினவாதத்தின் கைக்கூலிகளால் படுகொலை முயற்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் இதுபோன்றுதான் தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உரிமை போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது அரசின் ஏவல்படைகள் ஊடக அச்சுறுத்தும் செயற்பாடு இன்றுவரை தொடர்கின்ற நிலையாகத்தான் இருக்கின்றது.

எங்கள் போராட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகவும் எங்கள் உரிமை போராட்டத்தினை நாங்கள் மீண்டும் ஒருதடவை சிந்திக்ககூடாது என்பதற்காகவே மாறி மாறி வரும் அரசு செயற்படுகின்றது.

தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி முனைகின்றார். அவரால் கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கா தன்னை தயார்படுத்துவதற்காக ஒருபோலி நாடகம் இந்த பேச்சுவார்த்தை என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆரம்ப பேச்சு வர்த்தை தமிழ்தேசிய கட்சிகள் என்று அழைக்கப்பட்ட நிலையில் கடைசியாக நடந்த பேச்சுவார்தை தமிழரசு கட்சி என்று ஒரு குறுகிய எல்லைக்குள் கொண்டுவரப்பட்டு பேச்சு நடைபெற்றுள்ளது.

கடந்தகலங்களில் விடுதலை போராட்ட போரளிகளை பிரித்ததைபோல் இப்போது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தினை மீண்டும் ஆயுதமாக காணக்கூடியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுக்கு இடையூறு; வினோ எம்.பியை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வினோநோகராதலிங்கம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகவேண்டுமென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கானது நேற்று (02)முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே நீதிபதியால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு மேலதிக விசாரணைகளுக்காக இவ்வழக்கானது எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவ் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், செல்வராஜாகஜேநனதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.

பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து B/688/22 என்னும் வழக்கிலக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், 10.11.2022அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிஸாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து உத்தரவிட்டிருந்ததுடன், 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டிருந்தார்.

அந்தவகையில் குறித்த வழக்குவிசாரணை 02.03.2022 இன்று நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகவேண்டுமென உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கானது எதிர்வரும் 08.06.2023ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை – வினோ எம்.பி

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன் மூலம்  தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய கடந்த கால போராட்டம், இழப்புக்கள் மற்றும் தியாகங்கள் அனைத்தையும் தமிழரசுக் கட்சி செய்த இந்த செயல் மூலமாக கொச்சைப் படுத்தியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியினர் உண்மையான அக்கறையோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதை அவர்களுடைய இந்த முடிவு உணர்த்துகிறது.

தற்போது அது தேர்தலாக இருந்தாலும் சரி பேச்சுவார்த்தை மற்றும் ஜனாதிபதி சந்திப்புகளாக இருந்தாலும் சரி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

அதாவது இவர்கள் பிரிந்து சென்று தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளனர். இது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அத்துடன் இவர்களின் நடவடிக்கை அற்ப தேர்தல் கதிரைகளுக்காக தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயற்பாடாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தற்போதுள்ள தமிழ் தலைவர்களால் பிரச்சினைகளிற்கு தீர்வை தர முடியாது: வினோ எம்.பி

தற்போதுள்ள தமிழ் தலைவர்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர முடியாது. தற்போதுள்ள சிங்களத் தலைவர்களினாலும் அது முடியாது. ரணில் விக்கிரமசிங்க கபடத்தனமான பேச்சையே நடத்த விரும்புகிறார் என தெரிவித்துள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவத்துள்ளார்.

நேற்று வவுனியாவில் சமத்துவ கட்சியின் வன்னி பிராந்திய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

சமத்துவ கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு போட்டியாக உள்ள ஒரேயொரு கட்சி சமத்துவக்கட்சிதான். தமிழ் மக்கள் மத்தியில் பல கட்சிகள் இருந்தாலும், அனைவரதும் இறுதி இலக்கு தமிழ் மக்களின் விடுதலையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் மத்தியில் கட்சிகள் அதிகரித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த பலர் பல கட்சிகளை தொடங்கியுள்ளனர். தற்போது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட நடக்கும் முயற்சிகளிற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் கட்சிகள் நிச்சயமாக ஒன்றிணையாது. அதனால்தான் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஊடாக தீர்வை பெற முடியாது. தமிழ் மக்களிற்கு தீர்வு கிடைக்கக்கூடாதென்பதில் சிங்கள கட்சிகள் ஓரணியாக செயற்படுகின்றன. ஆனால், தீர்வை பெறுவதில் தமிழ் தரப்பிடம் ஒற்றுமையில்லை.

கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவே நான் விமர்சனங்களை வைக்கிறேன். விடுதலைப் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு மாற்றப்பட வேண்டுமென நினைக்கும் சிலர் கூட்டமைப்பிற்குள் உள்ளனர் என்றார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடணம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியற் பிரமுகர்களின் வாழ்த்து மற்றும் கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.

இதன் போது கட்சியின் தலைவராக சி.வேந்தன், உபதலைவராக ந.நகுலேஸ், செயலாளராக இ.கதிர், உபசெயலாளராக த.கவியரசன், பொருளாளராக த.விதுரன், தேசிய அமைப்பாளராக க.துளசி, மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ந.நகுலேஸ், வவுனியா மாவட்ட இணைப்பாளராக நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக நவமேனன், யாழ் மாவட்ட இணைப்பாளராக கவியரசன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக கருணாகரன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக ஆதவன், மன்னார் மாவட்ட இணைப்பாளராக ஜீவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர், தேசிய அமைப்பாளர் க.துளசி, உபதலைவர் ந.நகுலேஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளருமான நிரோஷ் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாண உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது – வினோ எம்.பி

மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களினதும் விருப்பத்திற்கு முரணாக உள்ளுராட்சிமன்றங்களின் எல்லை தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயம், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொகுதி தொடர்பான எல்லை நிர்ணய குழுவின் கூட்டங்கள் மாவட்ட ரீதியில் இடம்பெறுகின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமாக இருந்தாலும் அவசர அவசரமாக எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களின் விருப்பமில்லாமல், அதிகாரிகளின் விருப்பத்திற்கமைய எல்லை நிர்ணயம் செய்யப்படுவது. உண்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கமைய மாத்திரம் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயங்களை தமது விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் நிர்ணயம் செய்ய முயற்சிக்கிறது, இது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.

வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் பயிர்செய்கைகளுக்காக வழங்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டார், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் வடக்கு மாவட்டத்தில் மக்கள் காலம் காலமாக விவசாயம் செய்த காணிகளை வனவளத்துறை திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் நாட்டில் விவசாயத்துறை மேம்படுத்த வேண்டும். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய காணிகளை வனவளத்துறை திணைக்களம் ஏதாவதொரு காரணத்தை குறிப்பிட்டுக் கொண்டு சுவீகரிப்பதையே பிரதான இலக்காக கொண்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மீனவர் பிரச்சினை, விவசாய பிரச்சினை தொடர்பான கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை. வடக்கு மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்படாத காரணத்தினால் அரச அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்படுகிறார்கள்.

மக்கள் பிரநிதிகள் மக்கள் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்த உரிய வழிமுறை காணப்படவில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரம் தீர்வு காண முடியாது, ஆகவே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். என தெரிவித்தார்.

வன்னி மண்ணில் பொது மைதானம் அமைக்கப்படுவதில் ஆட்சியாளர்கள் பாராபட்சம் – ரெலோ வினோ எம்.பி

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா வவுனியா மாவட்டங்களில் ஆட்சியாளர்கள் பொது விளையாட்டு மைதானம் ஒன்று அமையப்பெறுவதை தடுத்து வருகின்றார்கள். எமது மண்ணின் விளையாட்டு வீரர்களுக்கு பாரபட்சம் காட்டுகின்றார்கள். சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள். விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள்.விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மன்னார் மாவட்டத்திற்கு என பொது மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தில் தலையீட்டுடன் ஆரம்பத்தில் நிர்மாணிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டது,தற்போது உரிய காரணிகள் இல்லாமல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உதைப்பந்தாட்டத்திற்கு பிரசித்துப் பெற்றுள்ளது.விளையாட்டு வீரர்களுக்கு உரிய மைதானம் இல்லாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே குறித்த மைதானம் விரைவாக முழுமைப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அபிவிருத்தி தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. மாவட்ட அபிவிருத்திகளின் போது பாரப்பட்சம் காட்டப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் பொது மைதானம் இல்லை.அப்பிரதேச இளைஞர்களுக்கு என்று வசதிகளுடனான மைதானம் ஒன்று இல்லை. ஆகவே மாவட்ட அடிப்படையில் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்புக்கள் இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மைதானத்தை அமைப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,வெறும் இழுத்தடிப்புக்கள் மாத்திரம் இடம்பெறுகிறது. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறது.வடமாகாணத்திற்கு என சகல வசதிகளுடன் மைதானம் என்பதொன்று இல்லை.

சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.

தேசிய போட்டிபகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.

இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள்.விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து செல்கிறது,போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் சீரழிந்து செல்கிறார்கள்.இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.

ஆகவே போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் பொலிஸார் மந்தகரமாக செயற்படுகிறார்கள்.ஆகவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

ஒரு கட்டிட பிரச்சினையை தீர்க்க முடியாத ஜனாதிபதி இனப்பிரச்சினையை எப்படி தீர்க்க போகிறார்- ரெலோ வினோ எம்.பி

ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்திற்கான விஜயம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கும் நிகழ்வு அவரின் விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் அது இறுதி நேரத்தில் மாற்றப்பட்டு திறந்து வைக்கப்படவில்லை.

சில பிரச்சினைகளினால் ஒரு கட்டிடத்தையே திறந்து வைக்க முடியாத ஜனாதிபதியினால் இந்த நாட்டின் இனப்பிரச்சினையை  எப்படி தீர்த்து வைக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நான் விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை ஒரு நல்ல நோக்கத்திற்காக வவுனியா வந்திருந்தார். அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அவர் முதல் முதல் தனது விஜயத்தை வன்னி மாவட்டத்திற்கு மேற்கொண்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஜனாதிபதி அங்கு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தபோது யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா செயலக வாசலில் குழுமியிருந்தனர்.

இந்த நாட்டின் தலைவரை நாம் சந்திக்க வேண்டும், அவரிடம் எமது பிரச்சினைகளை கூற வேண்டும் என்பதற்காகவே  அங்கு குழுமியிருந்தனர்.

ஆனால் அங்கிருந்த பொலிஸார் நீங்கள் ஊடகங்களுக்காகவும், சர்வதேசத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றீர்கள் என் கூறி ஜனாதிபதியை சந்திக்க விடாது தடுத்தனர்.

அந்த உறவுகளின் தூய்மையான போராட்டத்தை கேவலப்படுத்தினர். இதன்மூலம் அந்த தாய்மார்களுக்கு இந்த அரசோ ஜனாதிபதியோ  ஒரு போதும் தீர்வை வழங்கப்பபோவதில்லையென்பதனை உறுதிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியும் அந்த போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கான தீர்வை அதிலே வழங்காமல் நழுவிச் சென்றுள்ளார்.

இந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களும்  ஊடகங்களுக்காவே பேச முடியும். மக்களி திருப்திப்படுத்த, பொய் வாக்குறுதியாகலிக்கொடுக்கவே இங்கு பேச முடியும். ஏனெனில்  இங்கு நாம் முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சபாநாயகரினாலோ அல்லது  சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினராலோ பதிலோ, தீர்வோ வழங்க முடியாது.  சபைக்கு அமைச்சர்களும் வருவதில்லை. எனவே தீர்வுகள் கிடைக்காது என்ற நம்பிக்கை நூறு வீதம் உள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்த போது  எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் மன்னார் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆகவே இதில் ஒரு உள்நோக்கம் உள்ளது. இந்த திருட்டுத்தனமான  பயணம் எதற்கு என்ற சந்தேகம் எமக்கும் மக்களுக்கும் உள்ளது. இதற்கான விடையை எங்கிருந்து எதிர்பார்ப்பது?

அதுபோன்றே வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களாகியும் இதுவரையில் அது திறக்கப்படவில்லை ஜனாதிபதியின் விஜயத்தின்போது அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நிகழ்ச்சி நிரலில் இருந்தன.

ஆனால் அது தவிர்க்கப்பட்டு மத்திய நிலையம் திறக்கப்படவில்லை. ஏன் திறக்கப்படவில்லை? வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் இருக்கலாம். அவை என்ன? திறக்கப்படாததற்கான காரணம் என்ன? ஒரு கட்டிடத்தை தீர்ப்பதற்கான பிரச்சினையைக்கூட ஜனாதிபதியினால் தீர்க்க முடியவில்லை. அப்படிப்பட்டவரால் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, அபிவிருத்தி சார்ந்த பிரச்சினையென ஒட்டு மொத்த பிரச்சினையை எப்படித்  தீர்க்க முடியும்?

மன்னாருக்கு சென்ற ஜனாதிபதி ஒரு சிறு கிராம மீனவர்களை மட்டும் சந்தித்து விட்டு மீன்பிடி சங்கங்கள், சமாசம் போன்றவற்றை சந்திப்பதனை தவிர்த்தது ஏன்? வடக்கில் ஒரு விமான நிலையம்  இருந்தும் அதனை இயக்க முடியவில்லை. அதில் உள்ள தடைகளை இந்தியாவுடன் பேசி தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கையில் வவுனியாவில் ஒரு விமான நிலையம் அமைக்கபபோகின்றார்களாம், ஒன்றையே இயக்க முடியாதவர்கள் எப்படி இன்னொன்றை இயக்குவார்கள்?எனவே ஜனாதிபதியின் வன்னிக்கான விஜயத்தில் இது போன்ற பல சந்தேகங்கள் எமக்குண்டு என்றார்.