பொதுஜன பெரமுனவுக்கு 13ஐ எதிர்க்கும் தார்மீக உரிமை இல்லை – நிமல் லன்சா

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தார்மீக உரிமை இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் , அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

13க்கு அப்பால் அதிகாரப் பகிர்வு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.

13ஆவது திருத்தம் தற்போதும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துகளைப் பெற்று நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது , பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அதற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் மூலம் நாட்டின் முன் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாகக் காண்பித்துள்ளது.

ஸ்திரமான பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து மக்களுக்கும் இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவர் மத்தியிலும் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், அனைவரும் ஏற்கும் வகையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பங்களிக்க முடியும்.

அப்போது சகல மக்கள் மத்தியிலும் இலங்கையர் என்ற உணர்வு கட்டியெழுப்பப்படும். அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு அதிகாரப் பகிர்வை வழங்குவதன் மூலம் சர்வதேச நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும்.

இது தொடர்பான புரிதல் சிறிதளவும் இன்றி ,பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்கும், மனசாட்சிக்கமைய செயற்படும் பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்களது நிலைப்பாட்டுக்கும் முரணான கருத்தை பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எந்த அடிப்படையில் தெரிவிக்கின்றார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் சிறு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முடிந்தால் பொதுஜன பெரமுனவில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியிலிருந்து வேட்பாளரொருவரை களமிறக்கும் என்றும் , அதற்காக மூன்றெழுத்து பெயர் கொண்ட தலைவரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்புக்களை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றது.

முடிந்தால் சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டுக்கமைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு சவால் விடுக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைமையால் தோன்றிய நெருக்கடிகளிலிருந்தும் ,நாட்டை மீளக் கட்டியெழுப்பி பொருளாதார ,சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் ,மக்கள் ஆணையற்ற பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களுக்கு மறந்து போயுள்ளது.

மீண்டும் அவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை மறந்து அந்த கட்சியின் சில உறுப்பினர்கள் செயற்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடிகளை தீர்த்து நாட்டில் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைமைத்துவமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு காணப்பட்ட ஒரேயொரு தெரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து சர்வதேசத்தின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கைக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

முற்போக்கான பார்வையுடனும் , சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கையை மீண்டும் முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.

இது தொடர்பில் பரந்துபட்ட புரிந்துணர்வு கொண்ட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்கு பாடுபடுவார்கள். மக்கள் ஆணையற்ற சிலரின் கருத்துக்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார் என்றார்.

13ஆம் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விவாதித்து தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் – ஆஷு மாரசிங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் கால்பந்து அடிக்காமல் பாராளுமன்றத்தில் விவாதித்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

ஏனெனில் 13ஆம் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதியின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பிரதானியும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவிததார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் கலந்துரையாடி அதனை செயற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே 13 தொடர்பான தனது பிரேரணையை ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு முன்வைத்திருந்தார்.

பாராளுமன்றத்தினால் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு 13ஆம் திருத்தத்தை வைத்துக்கொண்டு கால்பந்தாடி வருகின்றன.

13ஆம் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. ஒரு தரப்பு ஆதரவளிக்கும்போது மற்ற தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாடு 13ஆம் திருத்தத்தில் மாத்திரமல்ல, அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்திருக்கும் அனைத்து பிரேரணைகளிலும் அவ்வாறே இருக்கின்றது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் விடயத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரு நிலைப்பாட்டில் இல்லை. இவ்வாறான எதிர்க்கட்சி எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு என்ன நடக்கும் என தெரியாது.

மேலும், 13ஆம் திருத்தத்தை பாரியதொரு விடயமாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதலொன்றை ஏற்படுத்தவே எதிர்க்கட்சி முயற்சிக்கிறது.

நாடுதொடர்பில் உணர்வு இருக்கும் உண்மையான எதிர்க்கட்சி என்றால், 13தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு முன்வைத்திருக்கும் பிரேரணை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதித்து, மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

மேலும், அரசாங்கம் வடக்கில் கைப்பற்றிய காணிகளில் ஒரு தொகையை அந்த மக்களுக்கு மீண்டும் கையளிக்க முற்படும்போது சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது காலத்தில் சுமார் 12ஆயிரம் ஏக்கர் காணி விடுவித்தார்.

ஆனால், தற்போது நாங்கள் 300 ஏக்கர் காணி விடுவிக்கும்போது, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த தேரர்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் வடக்கில் கட்டிடங்கள் காணிகளை கைப்பற்றி இருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த கட்டிடங்கள் காணிகளை மீள கையளிக்க நடவடிக்கை எடுத்தனர். அதுவே தற்போதும் இடம்பெறுகிறது.

எனவே, யுத்தம் முடிவடைந்தும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அவர்களின் உரிமைகளை அனுபவிக்க இன்னும் முடியாமல் போயிருக்கிறது. அவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களை நசுக்கவேண்டுமா என நாங்கள் சமூகத்தில் கேட்கவேண்டும் என்றார்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் விளக்கும் அளிக்கும் வகையில் சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நடைபெற்ற பொழுது தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருந்தவர்கள் யுத்தம் முடிந்த பிறகு எதனையுமே கொடுக்கக்கூடாது என்ற நிலைக்கு வருவதாக இருந்தால், அவ்வாறானவர்களுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை அரசியல் தலைமைகளிடையே உள்ள முரண்பாடான நிலைமைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களை கொடுத்தால் நாடே பிளவுபடும் எனும் பிழையான இனவாத கருத்துகள் மீண்டும் மீண்டும் திணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், நாட்டில் நிரந்தரமான ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

13 ஐ முழுமையாக அகற்றினால் நீங்கள் இதுவரை திருந்தவில்லை என்பதை உலகம் அறியும் – மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

அதைவிட 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உமது கட்சி, பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும். அதன் அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், விமல் வீரவன்ச எம்பி தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவை நோக்கி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துக்கொண்ட கூட்டணி தலைவர் மனோ கணேசன், எம்பீக்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது;

நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப்பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் கட்சியின் சார்பாக, 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை, பாராளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். அதை இந்த பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது, எம்பீக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம். உலகமும் தெரிந்துக்கொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம்.

உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, சாளரம், கதவுகளை மூடி வைத்து இந்நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் இன்று இந்நாடு விழுந்து போய் கிடக்கிறது. ஆகவே இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்.

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் – மொஹமட் முஸம்மில்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். உண்மையான நாட்டு பற்றாளர்கள் அதிகார பகிர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு உறுதியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையின் அயல் நாடான இந்தியாவுடன் இணக்கமாக செயற்பட தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுவது ஆச்சியரியமாக உள்ளது.

1987 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் இணக்கமாக செயற்பட்டிருந்தால் 60 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். நாட்டில் இனக்கவலரம் என்பதொன்று தோற்றம் பெற்றிருக்காது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்த வண்ணம் உள்ளது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை.

போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கிறார்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி துப்பாக்கி அதிகாரத்துக்கு பதிலாக மாற்று அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதியின் தந்திர செயற்பாட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

13ஆவது திருத்த விவகாரத்தில் போலியான தேசப்பற்றாளர்கள் அனைவரும் மௌனித்துள்ளார்கள். தேசியத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அனைவரும் 13 ஆவது திருத்த விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

Posted in Uncategorized

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை பாராட்டுகிறோம்: பாப்பரசரின் பிரதிநிதி

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,

இத்திருப்பலியில் கலந்து கொள்ளும் சகோதர சகோதரிகலே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். திருத்தந்தை உங்கள் நாட்டை அன்பு செய்கிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி திருத்தந்தை இந்த நாட்டிற்கும் இத்திருப்பதிக்கும் மேற்கொண்ட திருத்தூது பயணத்தை அவர் மிகவும் பாராட்டுகின்றார்.

அன்றைய நாளில் அவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மடு மாத திருச் சொரூபத்தை அவர் இன்று வரை போற்றுகின்றார். உலகம் போற்றும் இத்திருத்தலத்தில் அன்று அவர் ஆற்றிய உரையை நோக்கி இன்று எனது சிந்தனைகள் செல்கிறது.

அவர் அன்று கூறிய பல விடயங்களில் கீழ் கண்ட அவருடைய வார்த்தைகளை இங்கே தருகின்றேன். மரியன்னை என்றும் உங்களோடு இருக்கிறார். அவர் ஒவ்வொரு வீட்டினுடைய அன்னை. காயப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களினதும் அன்னை.

ஒரு அமைதியான இருப்பை நோக்கி திரும்புவதற்கு நாடுகின்ற அனைவரினதும் அன்னை பிரகாசிக்கின்ற இந்த இலங்கைத்தீவில் உள்ள தன் பிள்ளைகளை அவர் ஒருபோதும் மறக்க வில்லை. எவ்வாறு மரியா சிலுவையில் தொங்கிய தனது பிள்ளையை விட்டு விலகாது நின்றாறோ அவ்வாறே துன்புறும் தனது இலங்கை நாட்டு பிள்ளைகளை அவர் விட்டு விலகுவது இல்லை.

நம்முடைய பரிசுத்த தாயான மரியா தன்னுடைய இத்தீவின் பிள்ளைகளை மறப்பதில்லை. அவரின் பரிந்துரை ஊடாக நீதி, நல்லிணக்கம், அமைதி எங்களுக்கு கிடைப்பதாக.

உடல் ரீதியான உணர்வு ரீதியான வடுக்களை விட்டுச் சென்ற 26 வருடங்கள் நீடித்துச் சென்ற உள்நாட்டு போரின் தாக்கங்களை நாம் மறந்து விட முடியாது. பல தடவைகளில் இந்த போரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். வாசித்தும் இருக்கின்றேன். எனினும் 2 வாரங்களுக்கு முன்னர் யாழ். மறை மாவட்டத்திற்கு நான் மேற்கொண்டிருந்த மீட்புப்பணி விஜயத்தின் போது மக்கள் மீதும், கைவிடப்பட்ட வீடுகள் மீதும் உடமைகள் மீதும் போரின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை இன்னும் ஆழமாக பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் ஒரு போர் வேண்டாம். இன, மத, மொழி, சாதி கருத்து போன்ற வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பும், அமைதியும் சகிப்புத்தன்மையும் நிலை பெறுவதாக.

வெறுப்பும், விரோதமும் வேண்டாம். ஏனெனில் சமாதானம் என்பது ஓர் இல்லாத நிலை அன்று. இது நல்லிணக்கத்திற்கான நேரம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பயணங்கள். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியுடன் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

அதேவேளை ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெளிவாக குறிப்பிட்டது போல அனைவரும் நன்கு அறிந்த குழப்பமான விடயங்களை போதுமான அளவில் தீர்த்து வைக்கும் வகையில் இந்த செயன்முறைகள் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

மூன்று வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு வந்த போது இந்த நாட்டின் பல பாகங்களுக்கும் நான் விஜயம் செய்தேன். இலங்கை மக்கள் பொதுவாக நல்லவர்கள். சகிப்புத்தன்மை கொண்டவர்கள். குறைவாக உள்ள சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்கு செலுத்தவோ, உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.

பல்வேறு சமயங்களை சார்ந்த சமையத்தலைவர்கள் அன்பையும், சகோதரத்துவத்தையும், நோக்கிய சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முன்னனி பங்கு வகிக்க வேண்டும். எந்த ஒரு சமையத்தலைவரும் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள், மதிப்பு, சலுகைகள் போன்றவற்றை பயண்படுத்தி மற்றைய சமையங்களை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் முன்னுதாரணமாக திகழ்ந்து வழிநடத்த வேண்டும். நாம் ஒன்றினைப்பின் முகவர்களாக திகழ வேண்டுமே தவிர பிரிவினை வாதத்தின் முகவர்களாக அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இது பொருத்தமான தருணம் அல்ல – பொதுஜன பெரமுன

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது உரிய தருணமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது பொருத்தமான தருணமிலலை என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ள பொதுஜனபெரமுனவின் பிரிவும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது.

பலவீனமான பொருளாதார நிலை காரணமாக அரசாங்கமே நெருக்கடியான நிலையில் உள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் 13 வதுதிருத்தத்தை விஸ்தரிப்பதற்கு இணங்கினால் அரசாங்கம் தேவையற்ற அழுத்தத்திற்குள்ளாகலாம் என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்

நாடு வலுவான பொருளாதாரநிலையில் உள்ளவேளை 13வதுதிருத்தத்தை விஸ்தரிப்பது குறித்து சிந்திக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

13க்கு எதிராக தென்னிலங்கையை ஒன்றிணைப்போம் – உதய கம்மன்பில

13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதால் தான் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை புறக்கணித்தார்கள்.

ஜனாதிபதியின் எதிர்கால ஜனாதிபதி கனவுக்காக 13ஐ அமுல்படுத்த இடமளிக்க முடியாது. 13 இக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த புதிய சட்டத்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

நடைமுறை அரசியலமைப்பின் ஒரு திருத்தமாகவே 13 ஆவது திருத்தம் காணப்படுகிறது.ஆகவே புதிதாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்டு 13 பிளஸ் அமுல்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினத்தவர்களாக வாழும் சிங்களவர்கள் உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படுவார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்களவர்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளார்.

13 பிளஸ் என்ற நோக்கத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதால் நாட்டு மக்கள் அவரை 2015 ஆம் ஆண்டு புறக்கணித்தார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 13 அமுல்படுத்த ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது. ஆகவே 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான தென்னிலங்கையின் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என்றார்.

Posted in Uncategorized

அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் மஹிந்த 13 பிளஸ் நிலைப்பாட்டிலேயே உள்ளார் – பிரசன்ன ரணதுங்க

அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டார். 13 ஆவது திருத்தம் குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி மாநாட்டில் முன்வைப்போம் என ஆளும் கட்சி பிரதம கொறடவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் பின்னர் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலேயே இருக்கின்றோம்.

அவர் எப்போதும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கு அமைச்சரவைக்கு வந்து அமர்வதற்கான வாய்ப்பை அவர் வழங்கியிருந்தார்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் மொட்டு கட்சியில் பிளவு என்று குறிப்பிட்டாலும் நாங்கள் அதிகார பகிர்வுக்காக கதைக்கின்றோம். 13 பிளஸ் தொடர்பிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ கதைத்திருந்தார். இதில் மறைக்க எதுவும் கிடையாது. ஜனாதிபதி தலைமையில் நடக்கும் சர்வகட்சி கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடுகளை முன்வைப்போம் மஹிந்த ராஜபக்‌ஷவின் அனுமதியுடனேயே இதனை கூறுகின்றேன் என்றார்.

13ஆவது அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணை இனமோதலுக்கு வழிவகுக்கும் – அதுரெலியே ரத்ன தேரர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைகள் நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களுக்கான வழியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதற்கு நாங்கள் விருப்பம் இல்லை. அதனால் சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இந்த சபையில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சுயநினைவுடன் பதிலளிப்பர் என்றே நினைக்கின்றேன். அந்தக் கட்சியினரின் கருத்துக்களுடனே நாங்கள் இருந்தோம். நாங்கள் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டு வர செயற்பட்டவர்கள். தற்போது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கும் விடயங்களின் பாரதூர நிலைமையை சபையில் உள்ளவர்கள் புரிந்துகொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உள்ளன. நிதி, கலாசார பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்கான இன விவகாரத்தை எடுக்க வேண்டாம். வடக்கிற்கான அதிகாரம், தெற்கிற்கான அதிகாரம், கிழக்கிற்கான அதிகாரம், முஸ்லிம்களுக்கு அதிகாரம் அல்ல. மில்லியன் கணக்கில் முதலீடுகளை மாகாண சபைகளுக்கு கொண்டு வர முடியும் என்று கூறுகின்றார்.

இதன் ஆபத்துக்களை இந்த சபை சிந்திக்க வேண்டும். ஏதேனும் மாகாணத்திற்கென அவ்வாறு முதலீட்டை கொண்டு வர முடியாது. சீனாவை உதாரணமாக கூறியுள்ளீர்கள். அது தனி கட்சி நாடு. அங்குள்ள நிலைமை வேறு. அதனை இங்கே ஒப்பிட முடியாது.

இப்போது மீண்டும் மக்கள் அலை ஏற்பட்டு, மோதல் நிலைமைகளுக்கு நாட்டை கொண்டு செல்ல முடியாது. மாகாண சபை முறைக்கு இப்போதும் நாங்கள் எதிர்ப்பு. ஆனால் மாகாண சபை முறைமையை நீக்குமாறு கோரவில்லை. அருகிலுள்ள இந்தியாவை கோபித்துக்கொண்டு மீண்டும் மோதல்களுக்கு செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய சூழ்நிலை 50 வீதம் உள்ளது. மிகுதி 50 வீதத்தை நாடு முழுவதும் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே தீர்க்க முடியும். இதனால் இந்த பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிட போகின்றதா? 13 ஆவது திருத்தத்தை வழங்கியதும் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் யுத்தம் நடைபெற்றது. நாங்கள் மீண்டும் இனவாத போராட்டத்திற்கு செல்ல தயாராக இல்லை. இதனால் நாட்டு மக்களின் கோபத்தை உண்டாக்க வேண்டாம். நீங்கள் செய்யும் இந்த செயற்பாடு மீண்டும் இனவாத மோதல்களுக்கான பாதையையே ஏற்படுத்தும். இதற்கு நாங்கள் விருப்பமில்லை.

சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவாருங்கள்.அதற்காக நாங்கள் வருவோம். முதலில் ஜனநாயகத்துக்காக தேர்தலை நடத்துங்கள் என்றார்.