தமிழரசுக் கட்சி – ரணில் இடையிலான முறையற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ்க்கட்சிகள் அதிருப்தி சொல்ஹெய்மை இணைத்தால் இந்திய பிரதிநிதியை இணைப்போம் என்றும் எச்சரிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையற்ற சந்திப்புடனான இந்த சந்திப்பிற்கு தமிழர் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை இணைய ஊடகம் ஒன்றிற்கு இது தொடர்பில் அவர் தெரிவித்தார்.

ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, முறையற்ற ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு, தமிழர் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தம்மால் வர முடியாதென தெரிந்தும் சுமந்திரன் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் சார்பிலும் தான் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலாளருக்கும் கடிதம் அனுப்பியதாக க.வி.விக்னேஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

அத்துடன், எரிக் சொல்ஹெய்மை இந்த பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து எமது சார்பில் ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வருவோம் என க.வி.விக்னேஸ்வரன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, வரும் ஜனவரி 5ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது

சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

கடந்த 13 ஆம் திகதி சர்வகட்சித் தலைமைகளை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ்த் தேசியம் சார்ந்த நான்கு கட்சி தலைவர்கள் இணைந்து மூன்று கோரிக்கைகளை கொடுத்து அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கால எல்லையாக 2023 ஐனவரி 31 வரை வழங்கிவிட்டு அதற்கு முன்பாக மீண்டும் இன்று 21/12/2022 சம்பந்தன் ரணிலை சந்திப்பதற்கான தீர்மானத்தை தமிழரசுக் கட்சி தனித்து எடுத்திருப்பது ரணில் அரசை காப்பாற்றவா?
ஏனைய கட்சிகளுடன் இணைந்து எடுத்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவா? தமிழர்களை பலவீனப்படுத்தி தோற்கடித்த எரிச்சொல்ஹெமின் தலைமையில் பேசவா? தமிழ் மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பலவீனப்படுத்தவா? என வினவியுள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ்.

காலநிலை மாற்றத்தை தணிக்கும் முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம்

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக அதனை தணிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் 70 சதவீத இலக்கை அண்மித்தல், 2050இற்குள் காபன் மத்திய நிலையை (Carbon Neutrality) எட்டுதல், காபன் வெளியேற்ற அனுமதி பத்திரத்துக்கு பதிலாக  சர்வதேச சந்தையைக் கண்டறிவது ஆகிய மூன்று இலக்குகளையும் அடைவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதே அரசின் திட்டம் ஆகும்.

இது தொடர்பான கலந்துரையாடல் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்கால எரிசக்தி ஆதாரங்கள், கார்பன் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றின் மீதான தனது சர்வதேச அறிவை சொல்ஹெய்ம் இந்தக் கலந்துரையாடலுக்கு வந்திருந்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் கருத்து தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம்,  இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதன்மூலம் அதிக நன்மைகளை பெற்றிருப்பதாகவும் அதே நன்மைகளை இலங்கையாலும் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தீர்த்து வைப்பார் என தாம் நம்புவதாகவும் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, புதுப்பிக்கத்தக்க சக்தி மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் இத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே இலங்கை மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வாறான முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ருவன் விஜயவர்தன, கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான மாநாடு ஒன்றை எதிர்காலத்தில் நடத்தவிருப்பதாகவும் அதன் ஊடாக முதலீட்டாளர்களை எமது நாட்டுக்கு ஈர்க்க முடியும் என நம்புவதாகவும் ருவன் விஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலக பணிப்பாளர் குமுதுனி வித்யாலங்கார, உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.ஆர்.டி.வீரசூரிய, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் பன்டு டி சில்வா, இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.எல். வீரசிங்க, பிரதம பொறியியலாளர் வஜிர விஜேகோன், பிரதம பொறியியலாளர் கே. ராம்ஜி, சஜனா சூரியராச்சி, ஹஷான் ஜெயகொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளேன் என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்துள்ளேன்.

இலங்கைக்கு காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் முன்னேற்றத்திற்காக புதிய முதலீடுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த வாரம் அரசியல் கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எனக்கு தெளிவுப்படுத்தினார். இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கிய செயற்பாடாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள்,மேல்நாட்டு தமிழர்கள் மற்றும் சிங்கள,முஸ்லிம் சமூகத்தினருடன் அமைதியான முறையில் வாழும் அபிலாசையை அவர் தெளிவுப்படுத்தினார். அத்துடன் இலங்கையில் ஏழ்மை நிலையில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய சேவை விநியோகம் தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

மிகமோசமான நிலையில் வாழும் இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு என்னால் இயலுமான ஒத்துழைப்பை வழங்குவேன். நாட்டில் பெரும்பாலானோருக்கு உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும்,ஒரு சிலர் உணவை உட்கொள்ளும் வேளையை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி பாரிய முயற்சிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துள்ளார். பொருளாதாரத்தை மீட்சிப்படுத்தும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அது அனைவருக்கும் பயனுடையதாக அமையும் என்றார்.

மனோ கணேசனுடன் எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை நேற்று (16) சந்தித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் நுகேகொடையிலுள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. (a)