இலங்கை அரசுக்கு பாலஸ்தீன- இஸ்ரேல் யுத்தத்தினை நிறுத்தக்கோரும் யோக்கியதையில்லை – ஜனா எம்.பி

சொந்த நாட்டு மக்களையே பொஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவும், கொத்துக் குண்டுகள் மூலமாகவும், வான்வழிக் குண்டுகளாலும் கொன்றொழித்த இலங்கை அரசுக்கு பாலஸ்த்தீன- இஸ்ரேல் யுத்தத்தினை நிறுத்தும் படி கோருவதற்கு எந்தவிதமான யோக்கியதையோ அருகதையே இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமுன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் (20) மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது.

வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

 தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பை ஏற்று ஹர்த்தாலை அனுஷ்டித்த உறவுகளுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

அதுமாத்திரமல்லாமல் உண்மையிலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்து தனக்கு அச்சுறுத்தல் எனக் கூறி நாட்டை விட்டு வெளியேறிய நீதவானுக்காக மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கிலே நடைபெறும் அத்துமீறல்களுக்கும் பௌத்த மயமாக்கல்களுக்கும் மட்டக்களப்பில் நடைபெறும் மேய்ச்சல் தரைப்பிரச்சினை அனைத்தையும் உள்ளடக்கியே நாங்கள் இன்றைய தினம் தமிழ் பேசும் மக்களை ஹர்த்தாலை அனுஷ்டிக்கும்படி கேட்டிருந்தோம்.  அந்த வகையில் அனைத்து மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

அத்தோடு இன்றைய தினம் மின்சாரக் கட்டணம் 18 வீதத்தினால் உயர்த்தப்படுகின்றது. அதாவது சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டாவது கட்ட நிதி உதவி கொடுப்பதற்காக இலங்கையின் திறைசேரியில் பணம் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கமைய அந்த பணத்தை வைத்துக் கொள்வதற்காக எங்களுடைய நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து அவர்களது மின்சாரக் கட்டணத்தினை 18 வீதத்தினால் உயர்த்தி அந்தப் பணத்தைச் சேகரித்து சர்வதேச நாணய நிதியத்திற்குக் காட்டுவதற்காக கடந்த கொரோனாக் காலமிருந்தே கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் வயிற்றிலடிக்கும்   ஒரு செயலாகவே நாங்கள் இதை பார்க்கின்றோம்.

அந்த வகையில் அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த நாட்டு மக்களை வஞ்சித்து கொண்டு வருகின்றது. அந்த வஞ்சிப்புக்கு எதிராக நாங்கள் எங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கியமாக இந்த பத்திரிகையாளர் மகாநாட்டை நான் கூட்டியதற்கான காரணம், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேடமாக ஒரு ஒத்திவைப்புப் பிரேரணை வந்திருக்கிறது.அதாவது, மத்திய கிழக்கு நாடுகளிலே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகளிடமும் போர் செய்து கொண்டிருக்கும் அந்த பலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளிடம் அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வேண்டி இந்த ஒத்திவைப்பு பிரேரணையைக் கொண்டுவந்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் கேட்பது என்னவென்றால் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு 2009ஆம் ஆண்டு எங்களது யுத்த முடிவுற்ற நேரம் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் நடைபெறாத விடயமா?

இன்று மத்திய கிழக்கு நாடுகளில் வருகிறது. 14 வருடங்களுக்கு முன்பு 7சதுர கிலோ மீட்டருக்குள்ளே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை திறந்த வெளி சிறைச்சாலையில் அடைத்து வைத்ததை போல், அவர்களை அந்த 7 சதுர கிலோமீட்டருக்குள் அவர்களை வைத்து பொஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவும், கொத்துக் குண்டுகள் மூலமாகவும் வான்வழி மூலமாகவும் அழித்து அதிலே ஒரு லட்சத்து 40 ஆயிரம் மனித உயிர்களை பலி எடுத்த இந்த இலங்கை அரசாங்கம், அதுவும் சொந்த நாட்டிலே சொந்த மக்களை பலி எடுத்த இந்த இலங்கை அரசு எவ்வாறு போரா முடிவுக்குக் கொண்டுவரும்படி கோர முடியும்.

இஸ்ரேல்- பலஸ்த்தீனம் ஆகிய இரண்டு நாடுகள் போர் புரிகிறார்கள். மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உயிர்கள் பலி எடுக்கப்படக் கூடாது என்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த போரை நிறுத்தும்படி கேட்பதற்கோ இலங்கை அரசாங்கத்திற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை.

எந்தவிதமான யோக்கியதையும் இல்லை. எந்த விதமான அருகதையும் இல்லை. அதாவது பாலஸ்தீனத்தில், இஸ்ரேலில் மனிதர்கள் கடத்தப்படுகின்றார்கள். அவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள். அது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கூறும் இலங்கை அரசாங்கம் தங்களது உறவினர்களால் தங்களது கண்முன்னே கையளிக்கப்பட்ட உறவுகள் கூட இன்று படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் இருக்கின்றன.

கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற சடலங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களதாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் இருக்கும்போது, இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான அருகதையுமில்லை. நாங்கள் மனித உயிர்ப்பலிக்கு எதிரானவர்கள். பாலஸ்தீனம் – இஸ்ரேலிடையே நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையுமில்லை. ஆனால் இலங்கை அரசுக்கு இதைக் கேட்பதற்கு எந்தவிதமான யோக்கியதையும் இல்லை என்பதைத்தான் நாங்கள் கூறுகின்றோம்.

அத்தோடு 2009இல் அத்தனை உயிர்களையும் பலி கொடுத்த இலங்கை அரசு இன்றுவரை இந்த இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காணாமல் தொடர்ச்சியாக  மனித உயிர்களை பலி கொடுத்ததற்கு மேலாக வடகிழக்கு பிரதேசங்களை பௌத்த மயமாக்கி இங்கு சிங்களவர்கள் தான் ஆதியிலிருந்து வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, அங்கே ஒரு சமாதானம் வேணும் என்று கேட்பதற்கு எந்தவிதமான அருகதையும் யோக்கியதையும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழர்களின் குடிப்பரம்பலை சிதைத்தால் தமிழீழ கனவு எவ்வாறு இல்லாமல் போகும் – ஜனா எம். பி கேள்வி

2009ல் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்ற கூறும் நீங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்யாமல் வடக்கு கிழக்கிலே புத்த சிலைகளை நிறுவி, பெரும்பான்மையினரைக் குடியேற்றி தமிழ் பேசும் மக்களின் குடிப்பரம்பலைக் குறைப்பதையே அரசு நிகழ்ச்சி நிரலாக வைத்துக் கொண்டால் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தமிழீழக் கனவு எவ்வாறு இல்லாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்ரர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழு ஒன்றினை நியமிப்பதற்காக யோசனை அரச தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன? இது தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காகவா? இல்லை காலம் கடத்துவதற்காகவா? விசாரணை என்ற போர்வையில் உண்மையை மூடி மறைப்பதற்காகவா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.

ஏனெனில் எமது கடந்த கால அனுபவங்களின் படியும், ஆட்சியாளர்களின் கடந்த கால செயற்பாடுகளின் படியும், இதனை நோக்கின் பாராளுமன்ற விசேட குழுவின் நோக்கமானது இந்தப் பிரச்சினையை இழுத்தடிப்பதைத் தவிர இது தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காக அல்ல என்ற உண்மையை அனைவரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

நாட்டில் அவ்வப்போது பாரதூரமான பிரச்சினைகள் எழுகின்றபோதெல்லாம் ஏற்படும் எதிர்க் கட்சியினரின் அழுத்தம் அல்லது சர்வதேச அழுத்தம், தமிழ்த் தரப்பின் அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் அரசு செய்கின்ற விடயம் இது தொடர்பாக ஆராயந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஒரு குழுவினை நியமிப்பதாகும். ஆந்தக் குழுவின் அறிக்கை அரசுத் தலைவரிடம் கையளிப்பதாக ஊடகங்களில் ஒரு செய்தியும் வெளிவரும். அத்தோடு அந்தச் சம்பவம் அடியோடு மறக்கப்பட்டுவிடும். இதுவே அரசு நியமித்த ஆணைக்குழுக்கள் தொடர்பிலான கடந்தகால வரலாறு. அந்த விசாரணைக்குழு அறிக்கையினை அடிப்படையாக வைத்து எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக வரலாற்றில் எவ்வித பதிவுகளும் இல்லை. குறைந்த பட்சம் இத்தகைய அறிக்கைகள் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்கோ அல்லது பொது மக்கள் பார்வைக்கோ சமர்ப்பிக்கப்படுவதும் அரிதாகவே காணப்படும் நிகழ்வாகும்.

உண்மையைக் கூறப்போனால் சில அறிக்கைகள் திறந்து பார்க்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடந்ததே வரலாறாகும். சன்சோனி ஆணைக்குழு காலத்திலிருந்து அண்மைய ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவரை இது பொருத்தமானதாகும். ஏற்கனவே அரச தரப்பால் நியமிக்கப்பட்ட ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்குழு அறிக்கையில் அரசு திருப்திப்படவில்லையா? அவ்வறிக்கையினை முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காததன் பின்னணி என்ன? அவ்வாறு முழுமையாக சமர்ப்பித்தால் அப்போது அரச தரப்பினராக இருந்தவர்களது அல்லது ஒரு குண்டுவெடிப்பொன்றுக்காகக் காத்திருந்த பல அரசியல்வாதிகளது இராணுவ, பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளது வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமென்ற பயமா? இவ்வறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படாமலிருப்பதன் காரணமாகவே சமூக ஊடகங்களும் வெகுசனத் தொடர்பு சாதனங்களும் இவை தொடர்பான நியாயமான சந்தேகங்களை கேள்விகளாக வைக்கின்றன. இதற்காக புதிய ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஆக்குவதன் மூலமோ, நிகழ்நிலைக் காப்பு பற்றிய சட்டங்களை இயற்றியோ இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசு தப்பிக்க முயலக்கூடாது.

உண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 கூறுவதென்ன? அதில் முக்கிய கருத்தாளரான ஆசாத் மௌலானா கூறியது என்ன? உண்மையில் நான் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமும் அதன் கருத்தாளர் ஆசாதா மௌலானா கூறிய வாக்குமூலமும் வேத வாக்கியங்கள் போல தம்ம பத வாக்கியங்கள் போல, அல் குர்ஆன் வாக்கியங்கள் போல, பைபிள் போல புனித வாக்கியங்கள் என்று கூற வரவில்லை. இதற்காக அந்த ஆவணப்படமும் அதன் கருத்தாளர் ஆசாத் மௌலானா கூறியவற்றில் உண்மைத் தன்மை எதுவுமில்லையென்று இலகுவாகப் புறமொதுக்கவும் முடியாது. உண்மையில் ஆசாத் மௌலானா பாதுகாப்புத் துறை, நீதித்துறை, உளவுத்துறை தொடர்பான உயர் அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் வகித்த பதவிகள், யாவற்றையும் துல்லியமாகக் கூறியுள்ளார்.

இவற்றில் எவையும் பொய்யாகக் காணமுடியாது. அதே போல மட்டக்களப்புச் சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவங்கள், சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள், சில நீதிபதிகளின் பெயர்கள், குறிப்பிட்ட ஒரு வழக்கின் போது நீதிபதிகள் மாற்றப்பட்ட சம்பவம் போன்ற பலவற்றைக் கூறுகின்றார். உண்மையில் இவைகள் நடைபெற்றேயுள்ளன. எந்தவிதமான தொடர்பற்ற ஒருவரால் இவ்வாறு நபர்களின், திணைக்களங்களின், பெயர்களைக் கூறி, நடைபெற்ற சம்பவங்களைக் கூறி கற்பனையாக புனைய முடியாது என்பதே உண்மையாகும்.

அதனால்தான் இன்று இவை தொடர்பான உண்மைத் தன்மையினை அறிவதற்காக நீதியான நடுநிலையான சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று தேவையென்ற கோரிக்கை இன்று எழுந்துள்ளது. இதுவரை உள்ளக விசாரணையின் நம்பிக்கையீனம் பற்றி தமிழ்த் தரப்பே கூறிவந்தது. ஆனால், இன்று உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை சர்வதேச விசாரணை இது தொடர்பாகத் தேவையென எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் அனைவரும் கத்தோலிக்க ஆயர் உட்பட ஆயர் பேரவையினரும் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

தமக்குச் சார்பான தீர்ப்;பினைப் பெறுவதற்காக நீதித்துறையினை அரச தரப்பு பாவித்த முறை தொடர்பாக புதிதாக ஏதும் கூறத் தேவையில்லை. இது நமது நாட்டில் இடம்பெறாத சம்பவமும் இல்லை. முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவரே தமது பக்கச்சார்புத் தீர்ப்புப் பற்றி தாம் பதவி விலகிய பின்னர் திறந்த வாக்குமூலம் அளித்த வரலாற்றைக் கண்டது நம் நாடு.

எனவே சனல் 4 தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலகுவாக, வழமைபோல ஏற்க முடியாது என வேண்டுமானால் உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. என்றோ ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கும் மேலாக கடந்த கிழமை ஜனாதிபதி செயலகத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளை நாங்கள் அழித்துவிட்டோம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழக் கனவு இன்னும் ஓயாமல் இருப்பதாக முன்னாள் அமைச்சார் ஒருவர் கூறியிருக்கின்றார்.

நானும் ஒரு விடுதலைப் போராளி என்ற வகையிலே எமது மக்களின் மனநிலையில் இருந்து கூறுகின்றேன் உண்மையிலேயே தமிழீழக் கனவு தனிநாட்டுக் கனவு என்பது இன்னும் எமது மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செல்வதற்கு, அழிவதற்கு உங்களைப் போன்ற ஒரு சில அமைச்சர்கள் விரும்பவில்லை என்பதைத் தான் நான் கூறுகின்றேன.

இதனையே வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் கட்டியம் கூறுகின்றன. இன்று வடக்கில் இருந்து கிழக்கு வரை தயிட்டி விகாரை, வெடுக்குநாறிமலை விகாரை, குருந்தூர்மலை விகாரை, திருகோணலையில் பல விகாரைகள், அம்பாறையில் தமிழர் பிரதேசங்களில் பல விகாரைகள் என அமைக்கப்படுகின்றன. இதற்கும் மேலாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே பண்ணையாளர்கள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்கள் மாடுகளை மேய்ப்பதற்கான பாரம்பரிய மேய்ச்சற் தரையினை அயல் மாவட்ட பெரும்பான்மையின மக்கள் பயிர்செய்வதென்ற கோதாவிலே அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அந்தப் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்க முடியாமல் அதனால் ஈட்டும் வருமானங்;களை இழந்து தவிக்கின்றார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி உடனடியாக அத்துமீறிக் குடியேறியிருப்பவர்களை நீதிமன்ற உத்தரவைப் பெற்று அங்கிருந்து அகற்றுமாறு பொலிசாருக்கும், மகாவலி அதிகாரசபைக்கும் உத்தரவு வழங்கியிருக்கின்றார். அதேபோன்று அந்தப் பிரதேசத்தில் ஆக்கிரமித்துள்ள அயல் மாவட்ட மக்களுக்கு அந்த அந்த மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கு இடம் வழங்குமாறும் கூறியிருக்கின்றார்.

ஆனால் நேற்று அங்கு என்ன நடந்திருக்கின்றது. முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்களும், அடாவடி பிக்கு அம்பிட்டிய தேரர் அவர்களும் புதிதாக ஒரு புத்த சிலையை அங்கு கொண்டு சென்று வைத்துள்ளார்கள். ஜனாதிபதி ஒரு முடிவினை எடுக்கின்றார். அவர் முடிவினை அறிவித்து மறுநாளே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாங்கள் என்ன சிந்திக்க வேண்டும். இந்த நாட்டை ஆள்வது ஜனாதிபதியா? பாராளுமன்றமா? அல்;லது புத்த பிக்குகளா? வியத்மக அமைப்பினரா? என்ற சந்தேகமே எழுகின்றது.

இவ்வாறான விடயங்களை நோக்கும் போது தமிழீழக் கனவு எவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செல்லும். அந்த வகையில் இனப்பிரச்சனை தீரவேண்டும் என்பதற்காக 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்ற கூறும் நீங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்கின்றீர்களா என்றால் இல்லை. மாறாக வடக்கு கிழக்கிலே புத்த சிலைகளை நிறுவி, பெரும்பான்மை மக்களைக் குடியேற்றி வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் பேசும் மக்களின் குடிப்பரம்பலை குறைப்பதே உங்களது நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. இந்த நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

தனிநாடு கேட்கும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு சரத்வீரசேகர போன்றவர்களே காரணம்; ஜனா எம்.பி தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காணாவிடின் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதையும், தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு, என்ற நினைப்பு விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதனை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் இலங்கையிலே தமிழ் மக்களின் ஆயுத போராட்ட அமைப்பு அழிந்தாலும் அவர்களின் தனிநாடு கனவு அழியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 2009லே எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன் தனிநாடு தான் தமிழர்களின் ஒரே இலக்கு என்று பயணித்துக் கொண்டிருந்த நிலைமை தற்போது இன்னும் வீரியம் அடையக் கூடிய விதத்திலே மக்களின் மனநிலை இருக்கின்றது.

2009லே சர்வதேசத்தின் உதவியுடன் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக பிளஸ் பிளஸ் அமுல்ப்படுத்தி தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று சர்வதேசத்திற்குக் கூறியது. இறுதியில் வடக்கு கிழக்கு தமிழர்களை மிகவும் கஸ்டத்திற்கும், மனவேதனைக்கும் உட்படுத்தும் செயற்பாடுகளையே செய்கின்றது.

வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்கும் நோக்கத்துடன் மாத்திரமல்லாமல் வடக்கு ,கிழக்கிலே சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கைக் கபளீகரம் செய்து தமிழர்களின் குடிப்பரம்பலைக் குறைக்கும் நடவடிக்கையிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு கோட்டபாயவுடன் இணைந்து இயங்கிய வியத்மக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நாட்டை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகளின் நிலைப்பாடு தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் உறுதியாக்குவதாகவே இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திலே திருகோணமலையையும் அம்பாறையையும் தங்களது குடியேற்றத்தின் ஊடக தமிழர்களை முதன்மை இடத்தில் இருந்து திருகோணமலையில் இரண்டாம் இடத்திற்கும், அம்பாறையில் மூன்றாம் இடத்திற்கும் கொண்டு சென்றவர்கள் தற்போது மட்டக்களப்பில் தங்களது கைங்கரியத்தைச் செய்வதற்கு தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்டத்தவரைக் கொண்டு வந்து சேனைப் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் அங்கு அவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன.

மாகாணசபை காலத்திலே நாங்கள் அதனைத் தடுத்திருந்தோம். அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தோம். ஆனால் தற்போதைய ஆளுநருக்கு முன்னர் இருந்த ஆளுநர் வியத்மக அமைப்பின் முக்கிய உறுப்பினர் அனுராதா ஜகம்பத் அவர்கள் இந்;த மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்பைத் தூண்டியிருந்தார். தற்போது அவர் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் பின்புலத்தில் இருந்து இந்த விடயத்iதை தூண்டிக் கொண்டிருக்கின்றார்.

நாட்டின் ஜனாதிபதி கடந்த சனி ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு வந்திருந்த போது அம்பிட்டிய தேரர் தலைமையில் மட்டக்களப்பில் போராட்டம் நடத்தியதோடு மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பதாதைக்கு தும்புத்தடியால் அடித்த விடயத்தை உலகமே பார்த்தது. இதனை தமிழர் ஒருவரோ, அல்லது தமிழ் பேசும் ஒருவரோ அல்லது தமிழ் பேசும் மதகுரு ஒருவரோ செய்திருந்தால் அவரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்.

இந்த நாட்டை மக்கள் பிரதிநிதிகள் ஆள்கின்றார்களா? அல்லது புத்தபிக்குகள் ஆள்கின்றார்களா என்ற கேள்விக்குறி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் இருக்கின்றது. இவ்வாறான புத்தபிக்குகள் தான் வியத்மக அமைப்புடன் இணைந்து வடக்கு கிழக்கை கபளீகரம் செய்திருக்கின்றார்கள். அந்த வகையிலே மயிலத்தமடு மாதவணையில் புதிதாக ஒரு விகாரையை அமைத்து அங்கு புதிது புதிதாக ஆட்களைக் கொண்டு வந்து அந்த பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக காலம் காலமாக தங்கள் கால்நடைகளை அந்த இடத்தில் மேய்த்துக் கொண்டிருக்கும் பண்ணையாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்ககான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும், சிவில் செயற்பாட்டாளர்களையும் புத்த பிக்கு உள்ளிட்டவர்கள் சிறைப்பிடித்த கைங்கரியம் கூட அங்கு இடம்பெற்றது.

தற்போது பெரும்போக வேளாண்மை செய்யும் காலம் தொங்கி விட்டது. பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை மேய்ச்சற் தரைக்குக் கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றது. ஒருபுறம் இந்த மாவட்டத்தின் வேளாண்மைச் செய்கையைத் தொடங்குவதற்கு விவசாயிகள் மாடுகளை அப்புறப்படுத்துமாறு தெரிவிக்கின்றார்கள். மறுபுறம் மாடுகளை தங்கள் மேய்ச்சற் தரைக்கு கொண்டு செல்ல விடாமல் அத்துமீறி ஊடுருவியிருக்கும் பெரும்பான்மையினர் தடுக்கின்றார்கள். இவ்வாறான நிலைமை இருக்க பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை ஆற்றிலா அல்லது கடலிலா மேய்ப்பது.

இன்று அந்தப் பண்ணையாளர்கள் 29 நாளாக சுழற்சி முறையிலான அகிம்சைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி கடந்த வாரம் இங்கு வந்து அவர்களின் ஒருசில பிரதிநிதிகளைச் சந்தித்து செவ்வாய்க் கிழமைக்குள் ஒரு தீர்வு தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையாகின்றது எந்தவொரு தீர்வும் இல்லை. காலத்தை இழுத்தடிப்பதும், மக்களை ஏமாற்றியி அரசியல் நடத்துவதும் தான் இந்த ஜனாதிபதியின் செயற்பாடு என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்த தேய்ச்சற் தரை விடயம் தொடர்பாக நாங்கள் பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம், ஒத்திவைப்புப் பிரேரணையைக் கூட கொண்டு வந்திருக்கின்றோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். ஒருவர் முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்தவர், தமிழ் மக்களின் மத்தியில் இருந்து இருவர் அரச தரப்பிலே இராஜாங்க அமைச்சர்களாகவும், நாங்கள் இருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகத் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

என் சக பாராளுமன்ற உறுப்பினர் தம்பி சாணக்கியன் அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பலே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை கூறியிருந்தார். அவர் என்னையும் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறை கூறியிருந்தார். என்னை அவர் குறிப்பிட்டு நான் எங்கிருக்கின்றேன் என்று தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். அது அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ஏனெனில் அவர் மாவட்டத்தில் இருப்பதில்லை. ஆனால், எமது மாவட்ட மக்களுக்குத் தெரியும் பாராளுமன்ற அமர்வுகள் அற்ற நாட்களில் எமது மாவட்ட மக்களின் தேவைகளை என்னால் முடிந்தளவில் நான் அவர்களைச் சந்தித்து பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றேன். அவரைப் போன்று தான் நினைத்த போது மாவட்டத்திற்கு வந்து ஒரு ஊடக சந்திப்பினையும், ஆர்ப்பாட்டத்தினையும் செய்துவிட்டு போகும் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல.

கடந்த பாராளுமன்ற அமர்விலே மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற விடயத்தையும் குறிப்பட்டிருந்தார். உண்மை நான் கலந்து கொள்ளவில்லை தான். கடந்த பாராளுமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நான் பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் இருக்கும் போது தம்பி சாணக்கியன் என்னை வந்து சந்தித்து என் மணி விழா சம்மந்தமாகக் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் நான் வாகனத்தில் ஏறிச் செல்லும் போது சக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த போராட்ட விடயத்தைத் தெரிவித்தார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த என்னை சாணக்கியன் சந்தித்து கலந்துரையாடும் போது இந்த விடயம் சம்மந்தமாக ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. அன்றைய நாள் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் விநோ அவர்கள் பேச இருந்த நேரத்தை எடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் ஆட்கள் இன்மையால் இப்போராட்டம் கைவிடப்பட்டதாகவும் மறுநாள் நடைபெறும் விடயம் எனக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் இவர் கூறியதாகவும் நான் அறிந்தேன்.

அன்று நான் கொழும்பில் தான் நின்றேன். நான் மட்டுமல்ல செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சாள்ஸ் உள்ளிட்ட பலரும் அங்குதான் இருந்தோம். இந்த மாவட்ட மக்கள் சம்மந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக எல்லோருக்கும் அறிவித்து செய்திருந்தால் அது பிரயோசனமாக இருந்திருக்கும். அதுமாத்திரமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையகப் பிரச்சனை சம்மந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அவர்களுடன் கைகோர்த்திருந்தோம். அவர்களுக்கும் பண்ணையாளர்கள் தொடர்பான ஆர்ப்பாட்ட விடயத்தினைச் சொல்லியிருந்தால் அவர்களும் எம்முடன் இணைந்திருப்பார்கள். தனிப்பட்ட ரீதியிலே அரசியல் செல்வாக்கைப் பெற வேண்;டும், மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று செய்து விட்டு குறை கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இந்த மாவட்டத்தில் பல கட்சிகள் பல சுயேட்சைக் குழுக்களில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்கள் வெறும் ஐந்து பேர்தான். நாங்கள் பாராளுமன்ற உறுப்பினாராக வந்ததன் பிற்பாடு இந்த மாவட்ட மக்களின் அனைவரின் பிரதிநிதியே தவிர தனக்கு வாக்களித்த மக்களுக்கான உறுப்பினர் அல்ல என்பதே எனது நிலைப்பாடு. இதனை ஏனையவர்களும் மனதில் நிறுத்த வேண்டும்.

எனவே இந்த நாடு உருப்படியாக இருக்க வேண்டும் என்றால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் கொண்டு வந்து எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியை உருவாக்கினால் தான் இந்த நாடு உருப்படும். அவ்வாறில்லாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரத் வீரசேகர கூறியது போன்று தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இன்னமும் தனிநாடு, தமிழீழம் என்ற நினைப்பு விலகவில்லை, விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜனாவின் வாக்குமூலம் : தமிழ் இளைஞர்கள் அனைவரும் படித்து அறிய வேண்டிய வராலாற்று ஆவணம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

இன்று அக்டோபர் மாதம் முதலாம் தேதி தனது அகவை அறுபதை எட்டும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பா.உ தனது அனுபவத் தொகுப்பான ஜனாவின் வாக்கமூலம் என்ற நூலை வெளியிடுகிறார்.

இந்நூல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது பிறந்த நாளிலே பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் மத்தியில் வெளியிடப் படுகிறது.

தனது பதின்ம வயதிலே, இனத்தின் விடுதலைக்காக சகலவற்றையும் துறந்து உயிரைத் துச்சமாக எண்ணி ஆயுதப் போராட்டத்தை வரித்துக் கொண்டு ஒரு இளைஞன் புறப்படுகிறான். களத்திலே விழுப் புண்களை சுமக்கிறான். தனது கனவிலும் கொள்கையிலும் மாறாத நம்பிக்கையோடு போராட்டத்தில் ஈடுபடுகிறான்.

வீரமும் தீரமும் அர்ப்பணிப்பும் ஆயுத பலமும் இருந்தால் விடுதலையை காணலாம் என்ற கனவு நனவாகியதா? தன் வாழ்நாளில் சந்தித்த மாற்றங்கள் என்ன? பயணித்த பாதை சரியானதா? இலக்கை எட்ட முடிந்ததா? எதிர்கொண்ட சிக்கல்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள் என்ன?
மாற்றங்களை ஏற்றுக் கொண்டாரா? அடைந்த பயன்கள் பெற்றெடுத்த வெற்றிகள் என்ன?

தேசம், தேசியம், போராட்டம், அதன் வடிவம், மாற்றம், தொடர்ச்சி என்ன பல விடயங்களை தொகுத்து இந்த நூலின் வடிவத்தில் ஜனா தந்திருக்கிறார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால போராளியாக பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக ஒரு அரசியல் தலைவனாக அரசியல் வாழ்க்கையிலே இவ்வளவு காலமும் அவர் கடந்து வந்த பாதைகள் என்பவற்றின் அனுபவப் பகிர்வை வடித்து தந்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் பயணித்த பலருக்கு எழுதுவதற்கு ஆக்கபூர்வமான வரலாறுகள் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பயணிக்காத பலர் இன்று விடுதலை பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனாக தேசிய பயணத்தில் போராளியாக ஆரம்பித்து இன்று ஒரு அரசியல் தலைவனாக அகவை 60 தொடுகின்ற ஒருவரின் அனுபவப் பதிவில் அனைத்து தற்கால மற்றும் எதிர்கால தமிழ் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் புதைந்துள்ளன.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அதில் பங்கு பற்றிய ஒருவருடைய நேரடி வாக்குமூலம் தரப்பட்டுள்ளது. செவி வழி கதைகளை கேட்டு போராளிகளையும் போராட்டத்தையும் விமர்சிக்கின்ற பலருக்கு இந்த வாக்குமூலம் தக்க பதிலாக அமையும் என்று கருதப்படுகிறது.

ஒரு போராட்டத்தின் இலக்கு, அதை அடைவதற்கு படுகின்ற துன்பங்கள், அதில் செல்வாக்குச் செலுத்துகின்ற உள்ளக வெளியக காரணிகள், அவற்றை கையாளும் திறமை, அத்திறமை இல்லாவிட்டால் இனம் படுகின்ற துன்பம் என்ற பல விடயங்களை இந்த வாக்குமூலம் புட்டுக்காட்டி உள்ளது.

வாழும் போராளியாக துணிச்சலோடு இந்த வாக்குமூலத்தை ஜனா பதிவு செய்துள்ளது தன்னுடைய சொந்த வாழ்க்கையை மாத்திரமல்ல தமிழ் இளைஞர்களின் குறிப்பாகப் போராளிகளின் வாழ்க்கையை படம் போல எடுத்துக் காட்டியுள்ளது.

இதை தனிப்பட்ட ஒரு ஜனாவின் வாக்குமூலமாக கருதாமல் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று ஆவணமாக படித்துப் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

குருசுவாமி சுரேந்திரன்
பேச்சாளர்- ரெலோ-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாவின் வாக்குமூலம்: 40 வருட போராட்ட, அரசியல் வரலாறு நூல் ஒக்ரோபர் 1இல் வெளியீடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) , எதிர்வரும் ஒக்ரோபர் 1ஆம் திகதி 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள நிலையில், அன்று மட்டக்களப்பில் நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

ஜனாவின் வாக்குமூலம்- எனது 40 வருட போராட்ட, அரசியல் வரலாறு என்ற நூல் வெளியிப்படவுள்ளது.

இதையொட்டி ஒக்ரோபர் 1ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் ஆகியோருடன், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானும் நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கவனிக்காது உலகம் சுற்றும் வாலிபனாக ரணில் : மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் – ஜனா எம். பி

உள்நாட்டிலேயே பல இருக்கும்போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதாக காட்டி காலத்தை கடத்துகின்றார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

11ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கை அனுசரணை கொடுத்து இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுக்கு பொறுப்பு கூறுவது தொடர்பாக பிரேரணை அங்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தையும், சர்வதேசத்தையும் தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரதி உயரஸ்தானிகர் ஒரு எழுத்து மூலமாக அறிக்கையை கொடுத்திருக்கின்றார்.

அந்த அறிக்கையில், இலங்கையிலே நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஒரு நியாயமான விசாரணை வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும், வடகிழக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு சர்வதேச அங்கீகரிக்க கூடிய சட்ட திட்டத்தை கொண்டு வரும் வரை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்கு மாறாக இந்தியாவின் வதிவிட பிரதிநிதி இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு இங்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக விவாதம் வர இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகள் அனைத்தும் இந்த நாட்டில் இருக்கும்போது அதை விடுத்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றது, உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டம் இருக்கின்றது, வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பு திட்டம் இருக்கின்றது, பல பிரச்சனைகள் இந்த நாட்டிலே இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் அனைத்துமே உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகம் சுற்றும் வாலிபனாக ஒவ்வொரு நாடாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றார்.

பிரித்தானியா செல்கின்றார்,பிரான்ஸ் செல்கின்றார்,ஜப்பான் செல்கின்றார், சிங்கப்பூர் செல்கின்றார் தற்போது கியூபா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல இருக்கின்றார். உண்மையில் உள்நாட்டிலேயே இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதுமாக காலத்தை கடத்துகின்றார்.

தற்போதைய உயிர்த்த ஞாயிறு பிரச்சனை தொடர்பாக மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இது விடயமாக விசாரித்து அந்த அறிக்கையை பாராளுமன்றத்திலே சமர்ப்பிப்பதாக இருக்கின்றார். ஆனால் பாராளுமன்றத்திலே இன்று இருக்கும் பொதுஜன பெரமுன கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி நிற்கும் போது ஜனாதிபதி மாத்திரம் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமான சேனல் 4 வெளியிட்ட வீடியோ சம்பந்தமாக விசாரித்து ஒரு அறிக்கையை தயாரிப்பது என்பது இந்த நாட்டு மக்களை மாத்திரம் அல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாக தன்னுடைய வழமையான பாணியிலேயே ஏமாற்றும் செயலாகவே இவர் செய்து கொண்டிருக்கின்றார்.

தென்னிலங்கையில் இருந்து விமல் வீரவன்ச குழுவினரும் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தமிழ் மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் குற்றம் சாட்டுவது என்பது உண்மையிலேயே நகைப்புக்குரிய ஒரு விடயம். விமல் வீரவன்சவை பொருத்தமட்டில் அவருடைய உடம்பிலே ஓடும் இரத்தம் இன வெறியுடன் சம்பந்தப்பட்ட இரத்தம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த இன துவேசத்தை இன வெறியை வைத்துக் கொண்டுதான் தன்னுடைய அரசியலை அவர் தக்கவைத்துக் கொள்கின்றார். எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் இந்த நிலையில் அந்த தேர்தலில் கூட தானோ அல்லது தான் சார்ந்தவர்களோ வெல்ல வேண்டுமாக இருந்தால் இப்படியான இன துவேச இன வெறி கொண்ட கருத்துக்களை விதைப்பது சர்வசாதாரண விடயம்.

அந்த வகையில் அவர் இந்த கருத்துக்களை சொல்லியிருப்பது மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே இருக்கும் சில தமிழ் பிரதிநிதிகள் தமிழ் கட்சிகள் கூட இந்த பிரச்சினையை ஒரு அரசியல் ரீதியாக அணுகப் பார்க்கின்றார்கள். உண்மையில் இந்த விடயத்தை உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் என்பது 250 க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட ஒரு சம்பவம் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்ட ஒரு சம்பவம் அது மாத்திரமல்ல இலங்கையின் நிலைப்பாட்டை வெளி உலகத்திற்கு உணர்த்திய சம்பவம்.

ஏனென்றால் கிட்டத்தட்ட 40 வெளிநாட்டவர்கள் உயிர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். அந்த வகையிலே இந்த சம்பவத்தை அரசியலுடனோ, தமிழ் தேசியத்துடனோ, தமிழ் மக்களுடனோ இணைத்து பார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக இன்று இரண்டு அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது. அதில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன். இந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை மாத்திரமல்ல நாட்டில் உள்ள நிர்வாக சீர்கேடு அது மாத்திரமல்லாமல் அமைச்சுகளில் உள்ள ஊழல்கள் சம்பந்தமாக நிர்வாகத்தை ஒழுங்காக கொண்டு நடத்த முடியாமல் இன்று பலரும் பல விடயங்களை முன்வைத்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என்கின்ற ஒரு பெரிய பிரளயமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த நாட்டில்.

அந்த வகையில் நேற்றைக்கு முதல் நாள் மதியம் இருந்து புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தத்திலே ஈடுபட்டிருக்கின்றார்கள.; இதன் காரணமாக புகையிரதத்திலே நெருசல் மாத்திரம் அல்ல இருப்பதற்கு இடமில்லாமல் புகையிரதத்துக்கு மேல் இருந்து பயணம் செய்த ஒரு பல்கலைக்கழக மாணவன் தலை துண்டிக்கப்பட்டு இறந்த ஒரு சம்பவம் என்பது இந்த நாட்டின் ஒரு சோகமான நிர்வாக கேட்டுன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது.

அந்த வகையில் அரச திணைக்கள ஊழியர்கள் அமைச்சையும் அமைச்சின் மேலதிகாரிகளையும் குற்றம் சாட்டுவதுடன் அமைச்சர்கள் ஊழியர்களை குற்றம் சாட்டும் ஒரு நிலை மாறி மாறி குற்றச்சாட்டு அளவுக்கு நிலை இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இந்த மரணத்திற்கு போக்குவரத்து அமைச்சு முழு பொறுப்பையும் எடுத்து உரிய விசாரணையை முன்னெடுத்து இந்த உயிர் இழப்பிற்கு ஒரு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆக்ரோசத்துடன் இந்த அமைச்சை கேட்டுக் கொள்கின்றேன்.

அரசாங்கம் குற்றம் சாட்டுவது அரசாங்கத்தை மாற்றுவதற்காக எதிரணிகள் எதிர்க்கட்சிகள் பின்புலத்தில் இருந்து இயக்கிக் கொண்டு இங்கே போராட்டங்கள் நடைபெறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகின்றது இதே போன்று தான் 2021 ஆம் ஆண்டுக்கு பின்பு இந்த பொருளாதார நெருக்கடி வந்ததன் பின்பு அரகல என்னும் போராட்டமும் நடைபெற்று இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படும் போது போராட்டங்களை செய்ய எத்தனிக்கும்போது அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் தலைமையில் இதனை திணிப்பது என்பது ஒரு புதிய விடயம் அல்ல.

அந்த வகையில் மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கடந்த வருடம் அரகலயின் மூலமாக அறிந்திருக்கின்றது தொடர்ச்சியாக இந்த அடக்குமுறை நீடித்தால் இது ஒரு பெரியதொரு போராட்டமாக வெடிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையினை பூர்த்தி செய்ய நடவடிக்கை – ஜனா எம்.பி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையாகயிருந்த இருதய சிகிச்சைப்பிரிவிற்கான இருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று(02.09.2023) அவரது மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி குறித்த இயந்திரத்தினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சரின் செயலாளரும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்று வேறுமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதனை பெறுவதற்கு பல்வேறு பிரயனத்தனங்கள் செய்து கொண்டுவரப்படாத நிலையில் இந்த இயந்திரத்தினை கொண்டுவர அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மாகாண அதிகாரங்களைப் பரவலாக்க நிபுணர் குழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் ஜனாதிபதியின் தந்திரம்: ஜனா எம்.பி

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம். இந்தப் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இலங்கை அரசியலமைப்பிலிருக்கும் இந்தச் சட்டம் இன்னும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் மாறி மாறி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும், தலைவர்களும் இலங்கையின் அரசியலமைப்பையே மீறிக் கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே அன்று 1987ல் 6 இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்திலே தான் இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட அக்கட்சியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்கப் பிரதிநிதிகளை மாத்திரம் வைத்தே 6 இல் 5 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்குக் கொண்டுபோக வேண்டிய தேவை இருக்காது.

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சிங்கள மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக இருக்கும் அரசியல்வாதிகளைத் தட்டியெழுப்பி இனங்களுக்கடையிலே மேதலை, முறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்;கும் சூழ்நிலைக்கு ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார் என்றே எண்ணத் தோணுகின்றது.

அதுமாத்திரமல்லாமல் தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் கூறுகின்றார்கள். இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கான சட்டம் அவர்களால் பாராளுமன்றத்திலே கொண்டுவரட்டும் அதற்குப் பின்னர் இந்த நாடு எந்த நிலைமைக்குச் செல்கின்றது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

இந்தப் 13வது திருத்தச்சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலமாக இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களை ஆளக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும். ஆனால் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாது மாகாணசபைகளுக்கு நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முயற்சிக்கின்றார். அதற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சில கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

மாகாணசபைகளுக்கு நிபுனர் குழுவை அமைப்பதென்பது மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்தரமே ஒழிய இதன் மூலம் வேறு எதுவுமே சாதிக்க முடியாது. மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த மாகாண நிபுனர் குழு அமைப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பது 13வது திருத்தச் சட்டத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி, மத்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதி, அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி என மூவர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலருக்கு வரலாறு தெரியாது.

1988ம் ஆண்டு இறுதியிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையிலே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா அவர்களை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாசா அவர்கள் நியமித்திருந்தார்கள். அவரின் கீழே 3000 மாகாண பொலிசார்களை நியமிப்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு 13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

அந்த வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இன்றும் குருந்தூர் மலையிலே பெரிய களேபரம் நடக்க இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் அங்கிருக்கின்ற இந்துக் கோவிலில் பூசை செய்ய விடாமல் தடுக்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கின்ற இந்துக்கள் இன்று அந்தக் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்ய இருக்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காக பௌத்தர்கள் செல்கிறார்கள். உதய கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளும் செல்கின்றார்கள். இவர்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவே நாங்கள் எண்ணுகின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மாத்திரமல்லாமல், புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு இந்த நாடுஇஸ்திரமான நாடாக இருப்பதற்குமான வழியினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்படல் வேண்டும் – ஜனா எம்.பி

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னிலங்கையில் சரத் வீரசேகர, உதயகம்பன்பில, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை,

மாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தினை முழுமையான அமுல்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்ல முடியும்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம்.

அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை நாங்கள் விரும்புகின்றோம் என்ற வகையில் இந்திய பிரதமர் தனது பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஜனாதிபதி மகாநாடு ஒன்றை நடாத்தியுள்ளார். அதன் ஊடாக அமைச்சரவை உபகுழுவினை நியமித்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது அரசியல் படுகொலை துரையப்பா; அதை தூண்டியது அமிர்தலிங்கம்: ஜனா எம்.பி

அல்பிரட் துரையப்பாவே முதலாவது அரசியல் படுகொலையாகும். அவரை சுட்டுக்கொன்றது பிரபாகரன். அதனை தூண்டியது அமிர்தலிங்கம். யாழ்ப்பாணத்தில் மேடையில் ஒருமுறை அமிர்தலிங்கம் சொன்னார், துரையப்பாவிற்கு இயற்கை மரணம் நிகழாது என்றார். அதை தொடர்ந்து அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. பிரபாகரன் கடைசி அரசியல் படுகொலையென்பது துரதிஸ்டமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூற வரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி – நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது, இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.

அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.

1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.

அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

அன்று 13 திருத்த சட்டத்தை ஏற்று இருந்தால் இன்று அது பேசும் பொருளாக இருந்திருக்காது. இந்த 1987 மாகாணசபை மு​றைமை வந்தது தொடக்கம் 2009 மே 18 வரை ஜே. ஆர் ஜெயவத்தனாவின் கையை முறுக்கி பலாத்காரமாக அந்த ஓப்பந்தத்தில் கையொழுத்து இட வைத்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்த நாட்டிலே எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு கிழக்கிலே முதலாவது அரசியல் படுகொலை முன்னாள் யாழ். நகர மேஜர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அதை தூண்டியது அண்ணன் அமிர்தலிங்கம் அவர் யாழில் மேடை ஒன்றில் பேசும் போது அல்பிரட் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் கிடையாது என பேசியிருந்தார் அதை தொடர்ந்து தான் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. ஆனால் நாட்டிலே இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரதிஸ்டம்.

13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துமாறு கேட்கின்றோம். ஆனால் இறுதி தீர்வு மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் 13 இல் உள்ளடக்கப்படவில்லை. அது மேலும் செல்ல வேண்டும். எங்களை நாங்களே எமது பிரதேசத்தில் ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும். அதுதான் இறுதி இலக்கு. அதற்காகத்தான் அகிம்சை ரீதியில் போராடினோம். அது கிடைக்காததால் ஆயுதரீதியில் தனிநாட்டுக்காக போராடினோம். இன்று 13உம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

இந்திய பிரதமர் நரோந்திர மோடியை சந்தித்த ஜனாதிபதி ரணிலுக்கு நல்ல குளுசை கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்க வேண்டிய கடமையம் தேவையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. காரணம் இந்த ஆயுத போராட்டத்திற்கு தார்மீக ஆதரவும் அனுசரனையும் பயிற்சிகளையும் தந்தது இந்திய அரசாங்கம்.

அதேபோன்று 2009 ஆயுத போராட்டத்தை மௌனிக்க வைப்பதற்கு இந்திய அரசு முக்கிய காரணம். இலங்கை இந்திய சர்வதேச ஓப்பந்தத்தில் இந்தியா கையொழுத்து இட்டுள்ளது. அவர்களை நம்பிதான் நாங்கள் எல்லாம் ஆயுதங்களை ஒப்படைத்து இந்த நாட்டிலே அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளோம். எனவே இந்தியாவுக்கு கடமை இருக்கின்றது.

அவர்கள் ரணிலுக்கு நல்ல ஆலோசனை கூறியுள்ளார்கள் என நினைக்கிறேன். கடந்த புதன்கிழமை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் சந்தித்தபோது, 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துகிறேன், ஆனால் பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என்றார். நாம் அதை நிராகரித்தோம்.

பொலிஸ் அதிகாரத்தை தர மாட்டேன் என சொல்ல ரணிலுக்கு மாத்திரமல்ல, யாருக்கும் கிடையாது. ஏனெனில், இலங்கை அரசியலமைப்பில் அது உள்ளது. அரசியலமைப்பை மீற அவருக்கும் அதிகாரமில்லை.

ஜனாதிபதி 26ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசர சந்திப்பின் அர்த்தத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கை அரசு வடகிழக்கல் மாத்திரமல்ல தெற்கில் 1971 ஆம் ஆண்டும் 1988 இரண்டு தடவை ஜே.வி.பி ஆயுத கிளர்ச்சியை சந்தித்தது. அந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியா உதவிகரம் நீட்டியதுடன் வடகிழக்கில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவிகரம் கொடுத்தது மாத்திரமல்ல தற்போதைய பொருளாதார ரீதியாக அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்ட போது முதல் முதலாக உதவிகரம் நீட்டியது.

சர்வதேச நாணய நிதியம் கூட இன்று 2.9 பில்லியன் கடன்களை நீண்டகால சலுகையில் கொடுக்க இருக்கின்றது. ஆனால் இந்தியா ஒரு வருடத்துக்குள் 4 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கின்றது. அப்படிச் செய்த நாடு இந்தியா.

வடகிழக்கு தமிழர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும் அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என ஜனாதிபதி ரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பல இனவாதிகளை கண்டிருக்கின்றோம் சிறில் மத்தியூஸ், ஆர்.எம்.பி. ராஜரட்ண, ஆர்.எம். சேனநாயக்கா போன்றவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு ஆளுக்குள் செலுத்தியதை போன்று இன்று சரத்வீரசேகர என்பவர் ஒரு இனவாதியாக தமிழின துரோகியாக கருத்துக்களை கூறிவருகின்றார்.

எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே கருத்தை கூற விட்டால் அந்த ஒற்றுமையின் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவர்கள் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டாம் என்றார்.