மட்டக்களப்பு என்ன தனி நாடா? ஏன் அங்கு புத்தர் சிலை அமைக்க முடியாது – ஓமல்பே சோபித தேரர் கேள்வி

மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுவது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஓமல்பே சோபித தேரர், அரசியலமைப்புக்கமைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதச்சுதந்திரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் பௌத்த மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் திபுல பெத்தான பகுதியில் வைக்கப்பட்ட புத்தரின் சிலை காணாமல் போயுள்ளதாகவும் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே, ஓமல்பே சோபித தேரர் இதனை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஓமல்பே சோபித தேரர் மட்டக்களப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புத்தரின் சிலையை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வேறு ஒரு நாடு அமைக்கப்பட்டுள்ளதா? கிழக்கில் கோவில்களை அமைக்கலாம். ஆலயங்கள் இருக்கலாம். முஸ்லிம் பள்ளிவாசல்கள் இருக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

நாடாளாவிய ரீதியில் மக்கள் அனைவரும் சமாதானத்துடன் தங்கள் மதச்சார்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். இதற்கு யாரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க ஏன் கிழக்கில், முக்கியமாக மட்டக்களப்பில் மாத்திரம் இவ்வாறான அசாதாரணமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

சிறிலங்காவின் அரசியலமைப்புக்கமைய மக்களுக்குள்ள மதச்சுதந்திரம் குறித்து ரணில் விக்ரமசிங்க தெளிவு படுத்த வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பிரிவினைகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடர்பான முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் – மனோ எம்.பி

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்”  என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.

ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது. இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன்.

எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது முகநூல், டுவிட்டர் எனும் எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில்,  மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிசில் புகார் செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும்.  அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறை.

இதைவிடுத்து சண்டியன் மாதிரியும். மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?

ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார்.

இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.

சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.

இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் இவருக்கு சோறாக்கி சாப்பாடு போடுகிறது. இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாக பேசி வருகிறார். பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியை தட்டி விடுகிறார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அப்படியானால், இவர் யார்?

திவுலப்பொத்தானை சிங்கள மக்களை பாதுகாக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம்

மட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ள நான்குபக்க கடிதத்தில் அவர் இந்த  வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை காரணமாக விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பு திவுலுபொத்தானையிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கு அனுமதித்துள்ளது என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைமைத்துவத்தின் சார்பில் மகாவலிஅதிகாரிகளும்  பொலிஸாரும் கிழக்கு மாகாணத்திலிருந்து சிங்களவர்களை வெளியேற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் ஏனையவர்களுக்கும்  ஒத்துழைப்பு வழங்குகின்றனர் எனவும் மனித உரிமை குழுவிற்கான கடிதத்தில் தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கிழக்கு மாகாண ஆளுநரும் முக்கியமானவர்கள் என தேரர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சமூகங்களிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சிங்கள சமூகத்தினரிடமிருந்து பறிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

திவுலுப்பொத்தானையில் சிங்களவர்கள் நீண்டகாலமாக வசிக்கின்றனர் அங்கு 80 தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ள அவர் சிங்கள முஸ்லீம்களைஅங்கிருந்து விரட்டுவதற்காக  தமிழீழ விடுதலைப்புலிகள் படுகொலைகளில் ஈடுபட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் 2009 இல் வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவரும் வரை அங்கிருந்து அகற்றப்பட்ட மக்களால் தங்கள் பகுதிகளிற்கு மீண்டும் திரும்பிவரமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் மங்களராமய  அந்த மக்களின் சார்பில் தலையிட்டு 25 வீடுகளை அமைத்துக்கொடுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற அரசியல்வாதிகளின் அழுத்தங்களிற்கு அடிபணிந்து 2016 அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி அந்த பகுதியை கால்நடைமேய்ச்சலிற்கு வழங்கியது எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் நல்லாட்சி அரசாங்கம் அதனை புறக்கணித்தது 2019 நவம்பரில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னரேதிவுலுப்பொத்தானைக்கு மக்கள் மீண்டும் திரும்ப முயன்றது எனவும் மனித உரிமை குழுவிற்கான கடிதத்தில் தேரர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது முதல் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அழுத்தங்களிற்கு அடிபணிந்துள்ளது சிங்கள மக்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும்  தேரர் தெரிவித்துள்ளார்.

திம்புலாகல சிங்கள மக்களை வெளியேற்றின் தமிழ் – சிங்கள இனக்கலவரம் உருவாகும் – சரத் வீரசேகர எச்சரிக்கை

மட்டக்களப்பு – திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) இடம் பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன மோதல், பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு திம்புலாகல பகுதியில் வாழும் சிங்களவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள்  சிங்களவர்களை அழித்து அப்பகுதியில் சிங்கள இன பரம்பலை இல்லாதொழித்தார்கள்.

திம்புலாகல சிங்கள பாரம்பரிய கிராமம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே திம்புலாகல சிங்கள கிராம விவகாரத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரத்துடன் சிங்களவர்களை வெளியேற்றினால் சிங்கள -தமிழ் இன முரண்பாடு தோற்றம் பெறும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு இனங்களுக்கு என்று எழுதிக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கியுள்ளது. இவர்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

புத்தர் சிலையை பார்க்க வேண்டுமென பொலிஸாருடன் முரண்டு பிடித்த புத்த பிக்கு

புத்தர் சிலையை பார்க்க வேண்டும் என தெரிவித்து அம்பிட்டிய சுமணரட்ன தேரர் பொலிஸாருடன் முரண்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மட்டக்களப்பில் அம்பிட்டிய ரத்ன தேரரின் அடாவடி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய அம்பிட்டிய ரத்ன தேரர் மீண்டும் பொலீசாருடன் முரண்பட்டுள்ளார். இதன்போது முரண்பட்ட அவர் “பன்சாலைக்கு செல்வதற்கு தான் உங்களிடம் கேட்டேன் . என்னை பன்சாலைக்கு போகவிடாமல் பொலிசார் தடுத்தனர்.

நான் காவி உடை அணிந்திருக்கின்றேன். அப்போ ஏன் என்னை பன்சாலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டீர்கள். அங்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைய இராணுவத்தினர், திருட்டுத்தனமாக நேற்று இரவு புத்தர் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர்.

சிங்கள பன்சாலையை மூடி சிலையை எடுத்துச் சென்றுள்ளனர். உலகத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றோம் .

காக்கி சீருடை அணிந்த பொலிஸார் கிழக்கு மாகாணத்தில் எங்களை எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்

மட்டக்களப்பில் வடக்கு,கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு‌ தமிழ்த் தேசியக் கட்சிகள்‌ கோரிக்கை

மட்டக்களப்பில் வடக்கு கிழக்கில் எதிர்வரும் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஹர்த்தால் கடையடைப்பிற்கு வர்த்தக சங்கம் அரச ஊழியர்கள் போக்குவரத்து துறையினர் பொதுமக்கள் ஆனைவரும் ஆதரவு வழங்குமாறு  கோரி இன்று செவ்வாய்க்கிழமை (17) தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்துகட்சிகளும் ஒற்றுமையாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா.அரியேந்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் தவிசாளரும் ரெலோ, அமைப்பின் பிரதி தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கேசவன்,  ஈ.பி,ஆர்.எல்.எப், அமைப்பின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உநுப்பினருமான இரா.துரைரெட்ணம், ஜனநாயக போராளிகள் கட்சி பிரதி தலைவர் நகுலேஸ் ஆகியோர் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்

இந்த நாட்டில்  நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால்  இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதை சிந்திக்கவேண்டு ஜனநாயக ஆட்சி இல்லாமல் 74 சதவீதமான சிங்கள மக்களின் இன நாயக ஆட்சி நடைபெறுகின்றது இதனை சுட்டிக்காட்டுவதற்கும் நீதிதுறையை பாதுகாப்பதற்கும் நீதிபதி சரவணராஜாவுக்கு எதிரான அச்சுறுத்தல்.

மற்றும் தொல்லியல் திணைக்களம் என்ற பெயரில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றது அதேபோன்று வனஜீவராசிகள் திணைக்களம் வனவிலங்கு திணைக்களம் மாகாவலி திணைக்களம் ஊடாக பல்வேறுபட்ட ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்றது

எனவே இதனை கண்டித்து வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தையும்  சட்டஆட்சியையும்  மனித உரிமையையும்  நீதிதுறையின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக ஹர்த்தால் கடையடைப்பு பொது வேலை நிறுத்தத்திற்கான  அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

மயிலத்தமடு சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஒரு வாரத்தில் வெளியேற்ற ஜனாதிபதி உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள விவசாயிகளை அந்த பகுதியிலிருந்த ஒரு வாரத்துக்குள் சட்டரீதியாக வெளியேற்ற வேண்டுமென பொலிசார், மகாவலி திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரையான மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் முன்னாள் ஆளுனர் அனுராதா யகம்பத், பௌத்த பிக்குகளின் துணைகளுடன் சிங்கள விவசாயிகள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டு, இனமுறுகல் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடைகள் மேய்ச்சல் தரையின்றி சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்தது.

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், மகாவலி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், பதில் அரச அதிபர், ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன், கிழக்கு ஆளுனர், மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), சிவநேசதுரை சந்திரகாந்தன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட நிலங்கள், அந்த மாவட்ட மக்களிற்கே பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலன்னறுவை, அம்பாறை பகுதிகளை சேர்ந்த சிங்களவர்கள் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக மகாவலி திணைக்களமும் சுட்டிக்காட்டியது.

அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நீதிமன்றத்தின ஊடாக ஒரு வாரத்தில் வெளியேற்றி, நிலமையை சுமுகமாக்கமாறு ஜனாதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

தனிநாடு கேட்கும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு சரத்வீரசேகர போன்றவர்களே காரணம்; ஜனா எம்.பி தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காணாவிடின் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதையும், தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு, என்ற நினைப்பு விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதனை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் இலங்கையிலே தமிழ் மக்களின் ஆயுத போராட்ட அமைப்பு அழிந்தாலும் அவர்களின் தனிநாடு கனவு அழியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 2009லே எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன் தனிநாடு தான் தமிழர்களின் ஒரே இலக்கு என்று பயணித்துக் கொண்டிருந்த நிலைமை தற்போது இன்னும் வீரியம் அடையக் கூடிய விதத்திலே மக்களின் மனநிலை இருக்கின்றது.

2009லே சர்வதேசத்தின் உதவியுடன் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக பிளஸ் பிளஸ் அமுல்ப்படுத்தி தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று சர்வதேசத்திற்குக் கூறியது. இறுதியில் வடக்கு கிழக்கு தமிழர்களை மிகவும் கஸ்டத்திற்கும், மனவேதனைக்கும் உட்படுத்தும் செயற்பாடுகளையே செய்கின்றது.

வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்கும் நோக்கத்துடன் மாத்திரமல்லாமல் வடக்கு ,கிழக்கிலே சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கைக் கபளீகரம் செய்து தமிழர்களின் குடிப்பரம்பலைக் குறைக்கும் நடவடிக்கையிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு கோட்டபாயவுடன் இணைந்து இயங்கிய வியத்மக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நாட்டை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகளின் நிலைப்பாடு தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் உறுதியாக்குவதாகவே இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திலே திருகோணமலையையும் அம்பாறையையும் தங்களது குடியேற்றத்தின் ஊடக தமிழர்களை முதன்மை இடத்தில் இருந்து திருகோணமலையில் இரண்டாம் இடத்திற்கும், அம்பாறையில் மூன்றாம் இடத்திற்கும் கொண்டு சென்றவர்கள் தற்போது மட்டக்களப்பில் தங்களது கைங்கரியத்தைச் செய்வதற்கு தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்டத்தவரைக் கொண்டு வந்து சேனைப் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் அங்கு அவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன.

மாகாணசபை காலத்திலே நாங்கள் அதனைத் தடுத்திருந்தோம். அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தோம். ஆனால் தற்போதைய ஆளுநருக்கு முன்னர் இருந்த ஆளுநர் வியத்மக அமைப்பின் முக்கிய உறுப்பினர் அனுராதா ஜகம்பத் அவர்கள் இந்;த மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்பைத் தூண்டியிருந்தார். தற்போது அவர் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் பின்புலத்தில் இருந்து இந்த விடயத்iதை தூண்டிக் கொண்டிருக்கின்றார்.

நாட்டின் ஜனாதிபதி கடந்த சனி ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு வந்திருந்த போது அம்பிட்டிய தேரர் தலைமையில் மட்டக்களப்பில் போராட்டம் நடத்தியதோடு மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பதாதைக்கு தும்புத்தடியால் அடித்த விடயத்தை உலகமே பார்த்தது. இதனை தமிழர் ஒருவரோ, அல்லது தமிழ் பேசும் ஒருவரோ அல்லது தமிழ் பேசும் மதகுரு ஒருவரோ செய்திருந்தால் அவரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்.

இந்த நாட்டை மக்கள் பிரதிநிதிகள் ஆள்கின்றார்களா? அல்லது புத்தபிக்குகள் ஆள்கின்றார்களா என்ற கேள்விக்குறி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் இருக்கின்றது. இவ்வாறான புத்தபிக்குகள் தான் வியத்மக அமைப்புடன் இணைந்து வடக்கு கிழக்கை கபளீகரம் செய்திருக்கின்றார்கள். அந்த வகையிலே மயிலத்தமடு மாதவணையில் புதிதாக ஒரு விகாரையை அமைத்து அங்கு புதிது புதிதாக ஆட்களைக் கொண்டு வந்து அந்த பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக காலம் காலமாக தங்கள் கால்நடைகளை அந்த இடத்தில் மேய்த்துக் கொண்டிருக்கும் பண்ணையாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்ககான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும், சிவில் செயற்பாட்டாளர்களையும் புத்த பிக்கு உள்ளிட்டவர்கள் சிறைப்பிடித்த கைங்கரியம் கூட அங்கு இடம்பெற்றது.

தற்போது பெரும்போக வேளாண்மை செய்யும் காலம் தொங்கி விட்டது. பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை மேய்ச்சற் தரைக்குக் கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றது. ஒருபுறம் இந்த மாவட்டத்தின் வேளாண்மைச் செய்கையைத் தொடங்குவதற்கு விவசாயிகள் மாடுகளை அப்புறப்படுத்துமாறு தெரிவிக்கின்றார்கள். மறுபுறம் மாடுகளை தங்கள் மேய்ச்சற் தரைக்கு கொண்டு செல்ல விடாமல் அத்துமீறி ஊடுருவியிருக்கும் பெரும்பான்மையினர் தடுக்கின்றார்கள். இவ்வாறான நிலைமை இருக்க பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை ஆற்றிலா அல்லது கடலிலா மேய்ப்பது.

இன்று அந்தப் பண்ணையாளர்கள் 29 நாளாக சுழற்சி முறையிலான அகிம்சைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி கடந்த வாரம் இங்கு வந்து அவர்களின் ஒருசில பிரதிநிதிகளைச் சந்தித்து செவ்வாய்க் கிழமைக்குள் ஒரு தீர்வு தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையாகின்றது எந்தவொரு தீர்வும் இல்லை. காலத்தை இழுத்தடிப்பதும், மக்களை ஏமாற்றியி அரசியல் நடத்துவதும் தான் இந்த ஜனாதிபதியின் செயற்பாடு என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்த தேய்ச்சற் தரை விடயம் தொடர்பாக நாங்கள் பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம், ஒத்திவைப்புப் பிரேரணையைக் கூட கொண்டு வந்திருக்கின்றோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். ஒருவர் முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்தவர், தமிழ் மக்களின் மத்தியில் இருந்து இருவர் அரச தரப்பிலே இராஜாங்க அமைச்சர்களாகவும், நாங்கள் இருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகத் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

என் சக பாராளுமன்ற உறுப்பினர் தம்பி சாணக்கியன் அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பலே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை கூறியிருந்தார். அவர் என்னையும் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறை கூறியிருந்தார். என்னை அவர் குறிப்பிட்டு நான் எங்கிருக்கின்றேன் என்று தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். அது அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ஏனெனில் அவர் மாவட்டத்தில் இருப்பதில்லை. ஆனால், எமது மாவட்ட மக்களுக்குத் தெரியும் பாராளுமன்ற அமர்வுகள் அற்ற நாட்களில் எமது மாவட்ட மக்களின் தேவைகளை என்னால் முடிந்தளவில் நான் அவர்களைச் சந்தித்து பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றேன். அவரைப் போன்று தான் நினைத்த போது மாவட்டத்திற்கு வந்து ஒரு ஊடக சந்திப்பினையும், ஆர்ப்பாட்டத்தினையும் செய்துவிட்டு போகும் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல.

கடந்த பாராளுமன்ற அமர்விலே மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற விடயத்தையும் குறிப்பட்டிருந்தார். உண்மை நான் கலந்து கொள்ளவில்லை தான். கடந்த பாராளுமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நான் பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் இருக்கும் போது தம்பி சாணக்கியன் என்னை வந்து சந்தித்து என் மணி விழா சம்மந்தமாகக் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் நான் வாகனத்தில் ஏறிச் செல்லும் போது சக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த போராட்ட விடயத்தைத் தெரிவித்தார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த என்னை சாணக்கியன் சந்தித்து கலந்துரையாடும் போது இந்த விடயம் சம்மந்தமாக ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. அன்றைய நாள் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் விநோ அவர்கள் பேச இருந்த நேரத்தை எடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் ஆட்கள் இன்மையால் இப்போராட்டம் கைவிடப்பட்டதாகவும் மறுநாள் நடைபெறும் விடயம் எனக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் இவர் கூறியதாகவும் நான் அறிந்தேன்.

அன்று நான் கொழும்பில் தான் நின்றேன். நான் மட்டுமல்ல செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சாள்ஸ் உள்ளிட்ட பலரும் அங்குதான் இருந்தோம். இந்த மாவட்ட மக்கள் சம்மந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக எல்லோருக்கும் அறிவித்து செய்திருந்தால் அது பிரயோசனமாக இருந்திருக்கும். அதுமாத்திரமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையகப் பிரச்சனை சம்மந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அவர்களுடன் கைகோர்த்திருந்தோம். அவர்களுக்கும் பண்ணையாளர்கள் தொடர்பான ஆர்ப்பாட்ட விடயத்தினைச் சொல்லியிருந்தால் அவர்களும் எம்முடன் இணைந்திருப்பார்கள். தனிப்பட்ட ரீதியிலே அரசியல் செல்வாக்கைப் பெற வேண்;டும், மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று செய்து விட்டு குறை கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இந்த மாவட்டத்தில் பல கட்சிகள் பல சுயேட்சைக் குழுக்களில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்கள் வெறும் ஐந்து பேர்தான். நாங்கள் பாராளுமன்ற உறுப்பினாராக வந்ததன் பிற்பாடு இந்த மாவட்ட மக்களின் அனைவரின் பிரதிநிதியே தவிர தனக்கு வாக்களித்த மக்களுக்கான உறுப்பினர் அல்ல என்பதே எனது நிலைப்பாடு. இதனை ஏனையவர்களும் மனதில் நிறுத்த வேண்டும்.

எனவே இந்த நாடு உருப்படியாக இருக்க வேண்டும் என்றால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் கொண்டு வந்து எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியை உருவாக்கினால் தான் இந்த நாடு உருப்படும். அவ்வாறில்லாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரத் வீரசேகர கூறியது போன்று தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இன்னமும் தனிநாடு, தமிழீழம் என்ற நினைப்பு விலகவில்லை, விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மெளலானா தெரிவு

கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் நசீர் அகமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைவதாக அலி சாஹிர் மௌலானா டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள தனது தொகுதி மக்களுக்கும், இலங்கைக்கும் உண்மையாக பணியாற்றவுள்ளதாக அலி சாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

மயிலத்தமடு ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! பொலிஸார் – பண்ணையாளர்கள் முறுகல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி பண்ணையாளர்கள் இன்று மட்டக்களப்பு – கொம்மாதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி மத்திய கல்லூரி நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் முறைப்பாடு செய்வதற்காகப் பண்ணையாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பொலிஸார் தடை ஏற்படுத்தியதால் பண்ணையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் அதிகளவிலான பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் வானில் ஹெலிகொப்டரும் வட்டமிட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பண்ணையாளர்களுடன் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.