மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு – பழனி திகாம்பரம்

“நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்.” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (08) தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அக்கரப்பத்தனை லக்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

அத்தோடு, கட்சியின் பொது செயலாளர் எஸ்.பிலிப், பிரதி பொது செயலாளர் பா. கல்யாணகுமார், நிதி செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், உப தலைவர்களான ராஜமாணிக்கம், சிவானந்தன், தேசிய அமைப்பாளர் நகுலேஷ்வரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், பிரதி தேசிய அமைப்பாளர் டி.கல்யாணகுமார் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” மலையக மக்களுக்காக உரிமை அரசியலை முன்னெடுப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கம் உருவாக்கப்பட்டது. அந்த கொள்கையின் அடிப்படையிலேயே சங்கம் தற்போதும் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு நான் அமைச்சராக பதவியேற்றேன். குறுகிய காலப்பகுதிக்குள் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையக மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தேன். அமைச்சராக நான் நேர்மையாக செயற்பட்டதால்தான் எனக்கு அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கி மக்கள் நாடாளுமன்றம் அனுப்பிவைத்தனர். மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக செயற்படமாட்டேன்.

நான் மற்றையவர்களைபோல வாயால் வடை சுடும் அரசியல்வாதி கிடையாது. சொல்வதை செய்து காட்டுவதே என் பழக்கம். அரசியலுக்கு வந்து சொத்துகளை இழந்துள்ளேன். மாறாக சேர்த்தது கிடையாது. எமது மக்களை முன்னேற்ற வைப்பதே எனது இலக்கு. மாறாக மக்களை வைத்து பணம் உழைக்க முற்படவில்லை.

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகின்றன. இதனை கொண்டாட முடியாது. ஏனெனில் மக்களின் வாழ்க்கை நிலை முழுமையாக முன்னேறவில்லை. இந்நிலைமையை இந்தியா, பிரிட்டன் மற்றும் இலங்கை அரசுகளுக்கு எடுத்துகூறுவதற்காக நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும். பெப்ரவரி 26 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டாவில் இந்நிகழ்வை நாம் நடத்தவுள்ளோம். ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எமது தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி அவர்களை முதலாளிகளாக்க வேண்டும்.” – என்றார்.

சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை அனைவருக்கும் உண்டு – வே.இராதாகிருஸ்ணன்

சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை இந்த நாட்டில் அனைவருக்கும் உண்டு என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் 1994ஆம் ஆண்டு தனி ஒருவராக அரசாங்கத்தை உருவாக்கினார். வட, கிழக்கு மக்களுடன் நல்லுரவை பேணினார். மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர அபிவிருத்தியை தோட்டங்களுக்கு கொண்டு வந்தார். எனவே அவரை நினைவு கூர வேண்டியது அணைவருடைய பொறுப்பாகும். அந்த செயல்பாடை மலையக மக்கள் முன்னணி கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. மலையக மக்கள் முன்னணியின் உண்மையான விசுவாசிகளே இங்கு இருக்கின்றார்கள்.

அவருடைய இறுதி சடங்கின் போது அவருடைய கொள்கையை கடடிக் காப்போம் என சத்தியம் செய்தவர்கள் கொள்கையை காட்டிக் கொடுத்து மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்படுகின்றார்கள். இது தான் அமரர். பெ.சந்திரசேகரனுக்கு செய்யும் நன்றிக் கடனா என வே.இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 13ஆவது சிரார்த்த தினம், ஞாயிற்றுக்கிழமை (டிச.1 )அன்று மதியம் 2 மணிக்கு, அட்டனில் மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜேசந்திரன், தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், நிதி செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பிரதி தலைவர் ஏ.லோறன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் பொது செயலாளர் கே.சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியை முன்னணியின் தலைவரும், எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன் செலுத்தினார். இதனையடுத்து முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட பொது மக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றியமையும் குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஷ்ணன்,

அமரர்.சந்திரசேகரன் இந்த நாட்டுக்கும் மலையக மக்களுக்கும் செய்த சேவையை யாராலும் மறக்க முடியாது. இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடியிருப்பார். இன்று அரசாங்கம் மக்களின் நன்மையை கருத்தில் கொள்ளாது தன்னியச்சையான முடிவுகளை மேற்கொண்டு மக்களுக்கு சுமையாக மாறியிருக்கின்றது.

தொடர்ந்தும் மின்சார கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது. அப்படி அதிகரிக்கப்பட்டால் மலையக மக்கள் இருளில் மூழ்க வேண்டிய நிலைமை ஏற்படும். மண்ணெண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. மலையக மக்களின் வருமானம் குறைவடைந்துள்ளது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. எனவே எதிர்காலம் மிகவும் மோசமானதாக அமையும்.

சுகாதார அமைச்சர் தன்னிச்சயைான முடிவுகளை எடுத்து சட்டத்திற்கு புறம்பாக மருந்து பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இன்று அனேகமான வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது. தனியார் மருந்தகங்களிலும் மருந்துகள் இல்லை. இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது யாருக்கும் புரியவில்லை.

இன்று முதல் புதிய வரி அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் இலங்கையில் இருக்கின்ற அரச, தனியார்துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்றும் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

அரசை எதிர்த்து வாக்களிக்கத் தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஈழ, மலையக தமிழர்களின் பிளவுகளை கையாள அரசுக்கு இடமளிக்க மாட்டோம் – மனோ கணேசன்

ஈழத் தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருக்கின்றன எனக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட் டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் எம். பி.

இனப் பிரச்னை தீர்வு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு முன்னதாக மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில், “ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தேசிய இனப்பிரச்னை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலை யில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார். இது பற்றி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம். பி., சித்தார்த் தன் எம். பி. ஆகியோரும் என்னிடம் உரையாடி உள்ளனர். தமிழ் தேசிய கூட் டமைப்பு எம். பிகளின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு மற்றும் கருத்து இன்னமும் முழுமையாக தெளிவுபட எமக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்ற கருத்து பகிர்வுடன் அது நிற்கிறது. மாகாண சபை, பதின்மூன்று “பிளஸ்” என்று ஆரம்பித்து விட்டு, இடையில், மாவட்ட சபை என்றும் ஜனாதிபதி ரணில் கூறினார். பின்னர் மாகாண சபைக்கு மாற்றீடாக மாவட்ட சபையை ஜனாதிபதி கூறவில்லை என்று அவரின் அலுவலகம் விடுத்துள்ள விளக்கம் கூறுகிறது. முப்பது வருட கோர யுத்தம் காரணமாக கடும் மனித உரிமை மீறல்களை வட, கிழக்கு உடன்பிறப்புகள் சந்தித் துள்ளார்கள். வரலாற்றில் பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை – இந்திய ஒப்பந்தங்களிலும், சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் வட, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் நடத்திய பேச்சுகளின் போதும், ஈழத்தமிழ் தேசிய இனத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை வெவ்வேறு வார்த்தைகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, இந்த அடிப்படைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுகளுக்கு நாம் எமது தார்மீக ஆதரவை எப்போதும் வழங்கி வந்துள்ளோம் – இனியும் வழங்குவோம். நாம் ஒருபோதும், பேரினவாதத்துக்கு துணை போய், ஈழத்தமிழ் உடன் பிறப்புகளின் தேசிய அபிலாசைகளுக்கு இடை யூறாக இருக்க மாட்டோம் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நண்பர்கள் நன்கறிவார்கள். இதேவேளை வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே நிலவும் தென்னிலங்கை களநிலைமைகளுக்கு ஏற்ப எமது அரசியல் கோரிக்கைகள் மாறுபடுகின்றன. இதுபற்றிய தெளிவான புரிதல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பதை நான் நன்கறிவேன். சிவில் சமூகத்துடனான தீவிர கலந்துரையாடலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரித்துள்ள, “இந்திய வம்சாவளி மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாசைகள்” மற்றும் “நிலவரம்பற்ற சமூக சபை” ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணத்தை நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி, அதற்கான அவர்களது தார்மீக ஆதரவையும் கோர விரும்புகிறோம்.

சகோதர இனங்கள், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தார்மீக ஆதரவை வழங்கும் அதேவேளை, தத்தம் கள நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபட்ட கோரிக்கைகளுடன் அரசுடன் உரையாடுவதே சரியானது. தென்னிலங்கையில் நாம் முன் வைக்கும் கோரிக்கைகளை காரணமாகக் கொண்டு, ஈழத்தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது, வட, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அர சாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருப்பதாகக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட்டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும் – என்றுள்ளது.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம் – ஜீவன்

ஹொரண பிளாண்டேஷன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம்.

அடுத்த வாரம் இடம்பெறும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஹொரண பிளாண்டேஷனில் இடம்பெற்றுவந்த பல்வேறு தவறுகள் இடம்பெற்று வந்தன, அதனை நாங்கள் முன்சென்று பேசியும் நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றாேம்.

இதுதொடர்பாக அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றது. பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம். இந்த தோட்டத்தில் பிரச்சினைக்கு பிரதான காரணம், அந்த பிரதேசத்தில் 25குடும்பங்கள் இருக்கின்றன.

அந்த குடும்பங்கள் அங்குள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்துவந்தனர். இவர்களில் 5குடும்பம் தோட்டத்தொழிலாளர்கள். ஏனையவர்கள் இவர்களின் பிள்ளைகள். இவ்வாறான நிலையில் அந்த பிரதேசத்தில் வெளியாளர்கள் விவசாயம் செய்வதாக தோட்ட முகாமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு வெளியாட்கள் யாரும் இல்லை. தோட்டத்தில் பிறந்து, வளர்ந்தவர்களே அங்கு இருக்கின்றனர். பல்வேறு தோட்டங்களில் இவ்வாறு தோட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்களை வெளியாட்கள் என ஒதுக்கி, அவர்களை மிருகங்களைவிட மோசமான முறையில்  நடத்திவருகின்றன.

இந்த மக்கள் விவசாயம் செய்த இடங்கள் பவவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன. என்றாலும் தொழில் அமைச்சருடன் கலந்துரையாடி அதனை மீள பெற்றுக்கொடுத்தோம்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷன் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக துரைமார்களுடன் கலந்துரையாட முற்பட்டபோதும் அவர்கள் அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஆனால் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தாவிட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று, தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு சிவில் உடையில் வந்த சிலர் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் யார் என விசாரித்தபோது குற்றப்புலனாய்வு விசேட பிரிவு என தெரிவித்துள்ளனர்.

இன்று பாடசாலைகளில் ஐஸ் பாேதைப்பொருளை தடுப்பதற்கு முடியாத இவர்கள், தொழிற்சங்க போராட்டத்தை தடுப்பதற்கு அங்குவந்து, தொழிலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷன் ஹெலீஸ் நிறுவனத்துக்கு கீழ் இருப்பதாகும். இதன் உரிமையாளர் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவாகும். நாட்டை பாதுகாப்பதாக பாராளுமன்றத்துக்கு வந்தவர்.தோட்டத்தொழிலாளர்களை பாதுகாக்க முடியாத இவர் எப்படி நாட்டை பாதுகாப்பார்? அத்துடன் இவர் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு எதிராக ஹட்டன், நோர்வூட் மற்றும் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அதேநேரம் ஹொரண பிளாண்டேஷனில் அவர்களின் தொழில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம்  தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கி்ன்றனர். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷனில் தொழில் புரிந்துவரும் சிவகுமார் என்பவர் மின்சாரம் தாக்கி, கண்டி வைத்தியசாலையில்  அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு பதிலளிக்க யாரும் இல்லை. துரைமார் அவரது மனைவியை இரகசியமாக அழைத்து, சிறியதொரு தொகையை தெரிவித்து, இந்த விடயத்தை கைவிடுமாறு தெரிவித்திருக்கின்றார்கள். தோட்டத்தொழிலாளி என்றால் அவ்வளவு கேவலமா என நாங்கள் கேட்கின்றோம். இந்த விடயத்தை நாங்கள் விடப்போவதில்லை என்றார்.

மூன்றாம் நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யத் தயார் – திலகர்

தனது முதலாவது நூற்றாண்டிலே அடிமைகள் போன்று நடாத்தப்பட்ட மலையக சமூகம் இரண்டாவது நூற்றாண்டிலே தன்னை அமைப்பாக்கம் செய்து அரசியல், தொழிற்சங்க, இலக்கிய பண்பாட்டுத் தளத்துக்கு உயர்ந்தது. ஆனாலும் குடியுரிமைப் பறிப்புக் காரணமாக அந்த இரண்டாம் நூற்றாண்டு அரசியல் பிரவாகம் பல ஏற்ற இறக்கங்கங்களைக் கொண்டது.

அத்தகையதொரு அரசியலே இப்போது நடைமுறையிலுமுள்ளது. அதே நேரம் மலையகம் 2023 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது நூற்றாண்டைத் தொடங்குகிறது. அடுத்த நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் அவசியம் உள்ளது. அதனையே இலக்காக்க் கொண்டே மலையக அரசியல் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பாட்டில் உள்ளது என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார் .

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவும் வி. கே. வெள்ளையன் நினைவுப் பேருரையும் ஹட்டன் நகர சபை மண்டபத்தில் எந்த ஞாயிறன்று (27/11) நடைபெற்றது. அரங்கத்தின் 13 வது நினைவுப் பேருரையை மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் மெய்நிகர் முறையிலும், இளைஞர்களினதும் பெண்களினதும் அரசியல் பங்கேற்பு எனும் தலைப்பில் சட்டத்தரணி சஞ்சுளா பீட்டர்ஸும், ஓராண்டுச் செயலாற்றுகை எனும் அரங்கச் செயற்பாட்டு அறிக்கையை கிருஷ்ணகுமாரும் ஆற்றியுருந்தனர் . நிகழ்வுக்கு தலைமை வகித்து கொள்கை விளக்க உரையாற்றியபோதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலையக அரசியல் அரங்கம் தனது ஓராண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. அரசியலில் ஒரு ஆண்டு என்பது ஒரு கிழமை போன்றும் ஓடி மறையலாம் அல்லது ஒரு யுகமாற்றமும் நடந்து முடியலாம். இலங்கையப் பொறுத்த வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகள் என்பது ஒரு யுகமே. அத்தனை மாற்றங்கள் அரசியல் தளத்திலே இடம்பெற்ற இந்த இரண்டரை ஆண்டு காலகட்டத்தில்தான்

மலையக அரசியல் அரங்கமும் பிறந்தது.

மலையக அரசியல் அரங்கம் என்பது மலையகத்தின் புதிய யுகத்துக்கான அரசியலை முன்வைக்கும் சமூக அரசியல் தளம். இது ஒரு கட்சியல்ல. கூட்டணியும் அல்ல. நான்கு பிரதான இலக்குகளைக் கொண்டு அரங்கம் செயற்படுகின்றது. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடல் வெளியை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்பை வழங்குவது, மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுப்பது, அடுத்த தலைமுறையினருக்கான அரசியல் பாலமாகச் செயற்படுவது என்பனவே அந்த இலக்குகளாகும்.

மலையகத்தின் முதலாவது நூற்றாண்டு காலம் அடிமைத் தனத்துக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இரண்டாவது நூற்றாண்டிலே அரசியல் அமைப்பாக்கம் பெற்ற சமூகமாக மலையகத்தை நிமிர்த்திய பெருமை மலையக தேச பிதா கோ. நடேசய்யருக்குரியது. அவரது துணைவியார் மீனாட்சியம்மை யும் அந்த பயணத்தில் இணைந்து பெண்களும் அரசியலில் ஈடுபடும் முன்மாதிரியைக் காட்டியவர் .எனவேதான் அவர்கள் இருவரையும் மலையக அரசியல் அரங்கம் முன்னோடி அரசியல் செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்துகிறது.

அறிவார்ந்த அரசியல் உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் மலையகத்தின் மூன்றாவது நூற்றாண்டிலே முன்வைப்புச் செய்யவேண்டிய இருபத்து நான்கு (24) தலைப்புகளை நாங்கள் அடையாளம் கண்டு அவற்றை மாதாந்த உரையரங்க நிகழ்வாக நடாத்தி வருகிறோம். இந்த உரையரங்கத் தொடரில் இதுவரை 12 உரைகளை சமகால ஆளுமைகளைக் கொண்டு கடந்த கால ஆளுமைகளின் நினைவாக எதிர்காலத் தலைமுறையினருக்காக வழங்கி உள்ளோம். அவற்றை இணையத்தில் கேட்கலாம். ஆளுமைகளை நினைவு கூர்வதில் நாங்கள் கட்சி பேதம் பார்ப்பதில்லை.

அவர்களது செயற்பாடுகள் மீதான விமர்சனத்தை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. 200 ஆண்டுகால மலையகத்தின் 100 ஆண்டுகால அரசியலில் 60 ஆண்டுக்காலம் தலைவராகவும் 30 ஆண்டுகாலம் அமைச்சராகவும் இருந்த ஒருவரை இலகுவாக தவிர்த்துச் செல்ல முடியாது. அந்தச் சாதனையை நினைவுபடுத்தும் அதேநேரம் அறுபது ஆண்டு காலம் ஒருவர் தலைவராக,அமைச்சராக இருந்தும் மக்களுக்கு ஆனது என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டி உள்ளது.

அந்தவகையில், எமது 12 உரைகளும் பல்வேறு அரசியல் முன்வைப்புக்களைச் செய்துள்ளது. அதே நேரம் இருநூறு ஆண்டு காலம் நாட்கூலித் தொழிலாளர்களாக வாழும் எமது உழைப்பாளர் மக்களை சிறு தோட்ட உடைமாயளர்களாக்கி சுயாதீன உழைப்பாளர்களாக்குவதன் மூலமே அடுத்த தலைமுறை மலையகத்தையாவது நாம் அடிமைத்தளைகளில் இருந்து நீக்க முடியும் என்ற வலியுறுத்தலைச் செய்யவே அந்த விடயத்தை தலைப்பாகக் கொண்டு 13 வது நினைவுப்பேருரையை தொழிற்சங்கத் துறவி வீ.கே. வெள்ளையன் நினைவாக ஆற்றுகின்றோம்.

அதனை அர்த்தமுள்ளதான ஓர் உரையாக அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் அவர்கள் வழங்கி உள்ளார். அடுத்து வரும் 11 மாதமும் நாங்கள் மலையக மாவட்டங்கள் தோறும் மாதாந்த நினைவுப் பேருரைகளை நடாத்தத்திட்டமிட்டுள்ளோம். மலையகத்தின் இரண்டாம் நூற்றாண்டில் அரசியல் அமைப்பாக்கம் செய்த எங்கள் முன்னோடி நடேசய்யர் எதிர்கொண்ட சவால்களை நாம் கற்றறிந்துள்ளோம். அதேபோல மூன்றாவது நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் மலையக அரசியல் அரங்கத்தின் பணியை இன்றுபோல் எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மலையகம் வரும் போது போது பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -மனோ

இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார். வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள் உங்களை கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்கு பதிலளித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

ஜனாதிபதி கிழக்கு, மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட வேண்டும் – வே.இராதாகிருஷ்ணன்

நாட்டில் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பிரச்சினை இருக்கும் போது வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பது, வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது. மலையக மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு மலையக பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி அழைத்து கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் எதிர்பார்த்த வரவு- செலவுத் திட்டம் அமையவில்லை. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் நிலையில் நிவாரணங்கள் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இன்றைய பொருளாதார நிலையில் மத்திய பொருளாதார நிலையில் இருப்பவர் கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளார். கீழ் மட்டத்தில் இருப்பவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.

அத்துடன் கஞ்சாவுக்கும் கறுவாவுக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தேயிலைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. இன்று தேயிலை விலை அதிகரித்துள்ளது. உரம் இல்லாததால், உற்பத்தி குறைந்திருப்பதே இதற்கு காரணமாகும். ஆனால் தேயிலை மூலம் 1.3 பில்லியன் வருமானம் கிடைத்திருப்பதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் மலைய மக்கள் தொடர்பில் நன்கு அறிந்த ஜனாதிபதி, வரவு- செலவுத் திட்டத்தில் தோட்ட மக்களின் நலன் தொடர்பில் எந்த பிரேரணையைும் முன்வைக்கவில்லை. அது குறித்து எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், மலையக மக்கள் இந்திய வம்சாவளியாக தோட்டங்களுக்கு வந்து அடுத்த வருடம் 200 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை அந்த மக்களின் பிரச்சினை எதற்கும் முழுமையான தீரவு கிடைக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. லயனட அறைகளும் தொடர் மலசலகூடங்களுமே இருந்து வருகின்றன. பாடசாலை, வைத்தியசாலை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. இ்ப்படியான மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி எந்த பிரேரணையையும் முன்வைக்கவி்லலை.

அத்துடன் வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். வடக்கில் மாத்திரம் அல்ல, கிழக்கிலும் பிரச்சினை இருக்கின்றது. அதனால் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசவேண்டும். ஆனால் ஜனாதிபதி வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அழைத்திருப்பது வடக்கு கிழக்கை பிரிப்பதற்கா அல்லது வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் மலையக மக்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தரையாட மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடவேண்டும என்றார்.

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது : மனோ

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்றைய வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலக வங்கி, ஐநா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில் இலங்கையிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை.

  • உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம்மக்களின் இக்குறைபாடுகள் பற்றி தான் அறிந்துள்ளேன் என்பதை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும்.

அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள். தீர்வுகள் தாமதமாகி வரும் என ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.

ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு, தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போவதாக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனதுவரவு – செலவுத் திட்ட உரையில் கூறி உள்ளார்.

நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார்.

அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி. ஆனால், நாம் மறக்கவில்லை. நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம் கொல்லாமல் கொல்கிறது.

பெருந்தோட்டத்துறை தொடர்பில் ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன். பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் “வறுமை” பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது. அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் “உணவின்மை”, நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.

ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும். நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.

இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.