பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசமைப்புக்கு முரணானது என சுட்டிக் காட்டியுள்ள உயர்நீதிமன்றம், ஒருசில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றுக்கொள்வதுடன், மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.” என் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேற்படி சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறாகும்:-

• 3, 42, 53 மற்றும் 70 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அவை நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.

• 4 ஆம் வாசகம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருத்தப்படுதல் வேண்டும்.

• 72(1) ஆம் வாசகம் அரசியலமைப்புடன் இணங்காததுடன் விசேட பெரும்பான்மையுடனும் மற்றும் மக்கள் ஆணையின் போது மக்களினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும். அதற்கு இணங்க, 72(2) ஆம் வாசகமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.

• 75(3) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 4 (இ) உறுப்புரையை மீறுவதுடன் 2/3 பெரும்பான்மையுடனும் மக்கள் ஆணையின் போது அவை அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும்.

• 83 (7) ஆம் வாசகம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.

மேலும், உயர்நீதிமன்றத்தினால் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க மாத்திரம் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் சட்டமாக நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பொதுமக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கவேண்டாம் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த தனது அவதானிப்புகள் குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

பயங்கரவாதகுற்றம் என்பதற்கான வரைவிலணக்கத்தை கணிசமான அளவில் குறைக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பயங்கரவாத குற்ற சந்தேகநபருக்கு எதிராக பிறப்பிக்கப்படும் தடுப்பு உத்தரவு நீதித்துறையின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட எந்த சந்தேகநபருக்கும் எந்த நேரத்திலும் பிணைவழங்கும் அதிகாரம் நீதிபதிகளிற்கு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் சட்டத்தின் உதவியை நாடுவதற்கான உரிமை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த உரிமையை கண்மூடித்தனமான நியாயமற்ற நிபந்தனைகள் இன்றி வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கவேண்டாம் எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு நீதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பேராயர் மனுத் தாக்கல்

“அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி” உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் ”உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில், நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இராணுவம், காவல்துறை மற்றும் கடலோர காவல்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் உயர்நீதிமன்றில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார, தேர்தல்கள் நடக்கவிருக்கும் இந்த காலப்பிரிவில், எதிர்க்கட்சியின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமாகும்.

யுத்தமொன்று இல்லாத தேர்தல் காலத்திலயே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம்,பயங்கரவாதி யார் என்பது குறித்தான வரைவிலக்கணம் எதுவும் இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

எந்த ஒரு நபரையும் கைது செய்யலாம்.அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும், இந்நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமே தேர்தலை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இதை மேற்கொள்கின்றனர்.

இதனாலையே இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இச்சட்ட மூலத்திற்கு எதிராக மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் அடக்குமுறைக்குட்படுத்தவே தேர்தல் வருடமொன்றில் இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தையும், இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தையும் அரசாங்கம் கொண்டு வருகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளால் குறித்த கவனயீர்ப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.

பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய், அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே, மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசுடைய கடமையாகும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

Posted in Uncategorized

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதீத கவனம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, இலங்கை அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது இலங்கையின் உள்ளகப் பாதுகாப்பு தொடர்பிலான சிறந்த மறுசீரமைப்பின் ஒரு முயற்சியாகக் காணப்பட்டாலும்இ உத்தேச புதிய சட்டமூலம் ஊடாக கடந்த காலத்தில் இருந்து நிலவிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் அவ்வாறே இடம்பெறும் அபாயம் காணப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம்இ தடுப்புக் காவல் உத்தரவின் சட்டபூர்வத் தன்மையைச் சவாலுக்குட்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தடுப்புக் காவல் இடங்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற வாய்ப்புகளை வரையறுக்கும் விடயமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச மனித உரிமை கொள்கைகளுக்கு ஏற்றால் போன்று, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைத் திருத்தியமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் பொதுமன்னிப்பு

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்லத்துரை கிருபாகரன் ஆகிய கைதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதியால் தமிழ் அரசியல் கைதிகள் மன்னிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மதன்சேகர் மார்ச் 29, 2023 அன்று அவசரகால (இதர விதிகள் மற்றும் அதிகாரங்கள்) விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கிருபாகரன் குற்றவாளி என கண்டறியப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார், ஆனால் ஜூலை 20, 2022 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்தது.

நாட்டில் மாற்றுக் கருத்துடையோரை அடக்கவே பயங்கரவாதச் சட்டம் – விஜித ஹேரத்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் எப்போதும் மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்தி இருக்கிறது. அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலத்தில் பயங்கரமான பல விடயங்கள் இருக்கின்றன என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் அரசாங்கத்துக்கு எதிரக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அதன்போது அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அரசாங்கத்திற்கு எதனையாவது செய்யுமாறு கூறினாலோ, செய்ய வேண்டாமென்று கூறினாலோ பயங்கரவாதியென்று கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் மாற்று கருத்துடையவர்களை அடக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கவிதை எழுதியதற்காக இளைஞர் ஒருவரர் பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதேபோன்று அனைத்து பல்கலைக்கழக சங்கத்தின் தலைவர் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் 1983இல் ஜே.வி.பியினரை தடை செய்தனர். ஆனால் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்கின்றோம். வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தூண்டியது. மக்கள் வீதிக்கு இறங்கும் போது அவர்களை ஒடுக்க இதனை பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர். அதனால் எமது நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் உண்மையான பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இந்த சட்டம் பயன்படுத்துவதில்லை. மாறாக மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த வருடம்கொண்டுவந்தது. ஆனால அப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் அதனை அரசாங்கம் அன்று வாபஸ் பெற்றுக்கொண்டது. தற்போது மீண்டும் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்திருக்கிறது. இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பயங்கரமானவை. அரசாங்கம் இந்த சட்டத்தை எப்போதும் தனது எதிர் தரப்பினரை அடக்குவதற்கே பயன்படுத்தி வந்திருக்கிறது. எதர்காலத்திலும் அதனையே மேற்கொள்ளப்போகிறது. வரலாற்றில் இதற்கான அனுபங்கள் உள்ளன என்றார்.

‘கேக்’ விற்ற சிறுவன் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது; சபையில் ஜனா எம்.பி. ஆதங்கம்

பேக்கரியில் ”கேக் ”விற்ற ஒரு சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை   தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இந்த விவகாரத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் மட்டக்களப்பில் உள்ள பேக்கரியில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கியவர் அதனை கொண்டுபோய் அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என பெயர் எழுதியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிட்ட பேக்கரிக்கு சென்று சி.சி.டிவி கமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த சிறுவன் கேக்கை மாத்திரம்தான் கொடுத்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை.

ஆனால், அந்த பேக்கரியில் வேலைசெய்த குற்றத்துக்காக அந்த சிறுவன் பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்படியே செல்லுமாக  இருந்தால் இந்த நாடு அழிந்து போகும் என்றார்.

பரீட்சைக்குத் தோற்றும் இளைஞர் உட்பட 7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள், ஜெனரேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களை வாடகைக்கு எடுத்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டனர்,

மற்றவர்கள் நவம்பர் 27 அன்று சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தில் பயங்கரவாதம் என வரையறுக்கப்படாத வாகனங்களை வாடகைக்கு எடுப்பது கூட பயங்கரவாதமாக கூறப்பட்டுள்ளதாக என்றும் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நினைவு கூறுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது, அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் அவநம்பிக்கையை மேலும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized