13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் முன்மொழிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இன்றையதினம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்கவை நேரில் சந்தித்து முன்மொழிவுகளை கையளித்தனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாங்கள் ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக மேற்கூறியவை தொடர்பாக உங்கள் Ref PS/PCA/03-iii 2023 ஆகஸ்ட் 2 தேதியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி, எங்கள் கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்க விரும்புகிறோம்.

1. ஏற்கனவே 1988 இல் பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையுடன் 13A அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.
2. அன்றிலிருந்து நாடு முழுவதிலும் மாகாண சபைகள் நிறுவப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலை நடத்துவதற்காகக் கலைக்கப் படும் வரை செயல்பட்டன.
3. எனவே ஏற்கனவே இருக்கின்றதானதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதையும் நடைமுறைப்படுத்துவதற்கு கருத்துக்களை கோர வேண்டிய அவசியமில்லை.
எவ்வாறாயினும், 13A இன் கீழ் வழங்கப்பட்ட சில மாகாண சபை அதிகாரங்கள் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் அவ்வப்போது திரும்பப் பெறப்பட்டன.

மாகாண சபைகளில் இருந்து மீளப் பெறப்பட்ட அவ் அதிகாரங்களை மீண்டும் வழங்கி, காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் 13A ஐ அதன் அசல் வடிவில் நடைமுறைப் படுத்த நாங்கள் முன்மொழிகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது