சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்தக் கோரிக்கை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்துத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு குறித்துக் கண்டனத்தை வெளிப்படுத்தி பேராசிரியர்களான ஜயதேவ உயன்கொட, அர்ஜுன பராக்கிரம, சுமதி சிவமோகன் ஆகியோர் உள்ளிட்ட 156 தனிநபர்களும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், சட்ட மற்றும் சமூக நிதியம், தேசிய சமாதானப்பேரவை உள்ளிட்ட 25 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையகாலங்களில் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் மற்றும் அச்சட்டப்பிரயோகத்தின் ஊடாகக் கருத்துச்சுதந்திரம் மீறப்படல் என்பன தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டுள்ளோம்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமென உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை மௌனிக்கச்செய்வதற்கும், அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்கம் பயன்படுத்திவருகின்றது.

அதன் ஓரங்கமாக அண்மையில் நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோர் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உள்நாட்டில் தனிச்சட்டமாக நிறைவேற்றப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்துவதென்பது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் சார்ந்த இலங்கையின் அணுகுமுறை தொடர்பான முக்கிய அளவுகோலாகும்.

அவ்வாறிருக்கையில் அண்மையகாலங்களில் இலங்கையினால் இச்சட்டம் பிரயோகிக்கப்படும் முறை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தது.

எனவே இச்சட்டத்தின் தவறான பயன்பாடு, அச்சட்டத்தின் ஊடாக இலக்குவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் தரப்பினருக்கு மாத்திரமன்றி, தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அதுமாத்திரமன்றி மனித உரிமைகளைக் கையாளும் முறைமை குறித்தும், இச்சட்டப்பிரயோகம் மீதான தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் பெருமளவுக்குக் கவனம் செலுத்தவில்லை என்பதை அண்மையில் இடம்பெற்ற கைதுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தேசிய ரீதியான அல்லது இன, மதரீதியான வெறுப்பைத் தூண்டுவதை கருத்துச்சுதந்திரத்தை நசுக்குவதற்கான ஆயுதமாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்திவருகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தனிநபர்களின் கருத்துக்களுக்காக அவர்களை இலக்குவைப்பதற்கும், பகிரங்கமாக அச்சுறுத்துவதற்குமான துணிச்சலை பேரினவாதக்குழுக்களுக்கு வழங்கியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா இடையே ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான உத்தேச திட்டம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் வியாழக்கிழமை (22) பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் இலங்கையில் விமான சேவைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல், வலுசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு உரிய நேரத்தில் நிதி உத்தரவாதத்தை வழங்கியமைக்கு இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கை மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச மேற்பார்வையில் விசாரணை அவசியம் என வலியுறுத்தல்

இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

கடந்தகால குற்றங்களை கையாள்வது குறித்து இலங்கை அரசாங்கம் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் தோண்டவேண்டும் என ஐந்து சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மனிதபுதைகுழிகள் குறித்து கடந்தகாலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐந்துஅமைப்புகளும் இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளில் எவ்வாறு தலையிட்டன என்பது குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெளிவான பார்வையில்-இலங்கையில் மனித புதைகுழியின் பின்னால் – உண்மையை தேடுதல் என்ற விவரணச்சித்திரமும் வெளியிடப்பட்டது – இந்த விவரணச்சித்திரம் காணாமல்போனவர்களின் உறவுகள் எவ்வாறு நீண்ட போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்பதை விபரிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றியவேளை- மாத்தளை பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள் அவ்வேளை அவர் அந்த பகுதியின் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அவரது பெயரையும் தனது விசாரணைகளின் போது குறிப்பிட்டிருந்தது என ஐந்து அமைப்புகளும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ பதவியேற்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகரிப்பு

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களுக்கான பாரிய பற்றாக்குறையை சந்தித்துள்ளது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுதல், சில நிபுணர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுதல், அத்தோடு சமீபத்தில் அரசு வெளியிட்ட சுற்றறிக்கை பிரகாரம் ஒய்வு பெரும் வயது 60 என அறிவிக்கப்பட்டமை என்பன இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 4,299 விஷேட மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

இடமாறுதல் பட்டியலின்படி, இருதயநோய் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், தோல்நோய் நிபுணர்கள், அவசரகால மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட 750 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் அவசரமாக நிரப்படவேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் உடனடியாகச் செயல்படத் தவறினால், அடுத்த ஆண்டுக்குள் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 1,000 இற்கும் அதிகமாகும் என்று இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி

சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது.

மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் தற்போது  கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.

அதன்படி, நினைவுச் சின்னம் அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களை கடலில் வீசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆமைகள் முட்டையிடும் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் தமிழக பாரதிய ஜனதாக கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்து வந்த  நிலையில் மத்திய பா.ஜ.க அரசு அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளுக்காக அலி சப்றி சீனா பயணம்

சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் நாளைய தினம் சீனா செல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியுதவி செயற்திட்டத்தின்கீழ் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றான கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கவேண்டிய கடப்பாட்டுக்கு இலங்கை உள்ளாகியிருக்கின்றது.

அதன்படி கடன்மறுசீரமைப்பு குறித்து முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர் நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளையும் தற்போது முன்னெடுத்துவருகின்றது.

அதனை முன்னிறுத்தி இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குழுவொன்றை உருவாக்கியுள்ளன.

நாட்டின் மிகமுக்கிய இருதரப்புக் கடன்வழங்குனரான சீனா பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் கண்காணிப்பாளராக பங்கெடுத்துவருகின்றது.

எனவே சீனாவில் எதிர்வரும் 25 – 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்குப் பயணமாகும் அமைச்சர் அலி சப்ரி, அங்கு முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார்.

அத்தோடு, சீன அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தல் குறித்தும் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும், இருநாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விரிவாக இதன்போது கலந்துரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள் மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன – ரணில்

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள்   மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன அவற்றை நான் தமிழ் அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளேன் என ஜனாபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நான் பிரதமராக பதவிவகித்தவேளை நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை நான் ஆரம்பித்தேன் அன்று முடித்த இடத்திலிருந்து நான் தற்போது தொடர்கின்றேன்.

தமிழர் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன் பலவிடயங்கள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளோம்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்,இந்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்திற்கும்  எதிர்கட்சிகளிற்கும் இடையி;ல் மூன்று விடயங்கள்தொடர்பில் கருத்துவேறுபாடுகள் காணப்பட்டன இவற்றில் இரண்டிற்கு தீர்வை கண்டுள்ளோம்.

வடக்குகிழக்கில் காணப்படும் காணி தொடர்பான விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் பல நடவடிக்கைகைள எடுத்துள்ளது.

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள்   மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன அவற்றை நான் தமிழ் அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளேன்

ஜூலை மாதத்திற்குள் முழுமையான செயல்முறையை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிருடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தின் 9வது பதிப்பை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயமும் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் ஒன்றிணைந்து புதன்கிழமை 21ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வொன்றினை ஒழுங்கமைத்திருந்தது.

யோகா தினத்தினை அனுஸ்டிப்பதற்காக 19 இந்திய கடற்படைக் கப்பல்கள் உலகளாவிய ரீதியில் பணிநிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 2023 சர்வதேச யோகா தினத்தினைக் குறிக்கும் தனித்துவமிக்க முயற்சியான பூகோள சமுத்திர வளையத்துடன் கொழும்பையும் இணைக்கும் முகமாக, இந்திய நீர்மூழ்கிக் கப்பலான வாஹிரிலும் அதற்கருகிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னே, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடல் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.எஸ்.டி.சில்வா, இலங்கை கடற்படையினர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள், ஐ.என்.எஸ் வாஹிர் மாலுமிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் ஒன்றிணைந்திருந்தனர்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், இந்தியா – இலங்கை இடையிலான பொதுவான பாரம்பரியமாகக் காணப்படும் யோகாவின் நிலைமாற்று சக்தி தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் உள்ள யோகா நிறுவனங்கள் மற்றும் யோகா ஆர்வலர்களின் வலுவான ஆதரவு மற்றும் உத்வேகத்துடன் கடந்த 50 நாட்களும் இந்திய உயர் ஸ்தானிகராலயமும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் இணைந்து நாடளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான யோகா சார்ந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்ததாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும், 2023 சர்வதேச யோகா தினத்தை அனுஸ்டிப்பதற்காக ஐ என் எஸ் வாஹிர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் விஜயம் மூலமாக நல்லெண்ணம் நட்புறவு மற்றும் தோழமையின் செய்தி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய கடற்படையின் கல்வாரி ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிர் அண்மையில் சேவையில் இணைக்கப்பட்டிருந்ததுடன் முதற்தடவையாக வெளிநாடொன்றின் துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

2023 ஜூன் 19 முதல் 22 வரை இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நின்ற காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள், சாரணர்கள், தேசிய காலாட்படையினர், இலங்கை கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இக்கப்பலுக்குள் விஜயம்செய்து பார்வையிட்டிருந்தனர்.

அதுமாத்திரமல்லாமல் வெளிக்கள நிகழ்வுகளாக கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களைச் சந்தித்திருந்த ஐ என் எஸ் வாஹிர் நீர்மூழ்கியின் மாலுமிகள், சில பாடசாலைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாஹர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய இந்திய கொள்கைகளின் அடிப்படையில் இரு அயல் நாடுகளினதும் கடற்படைகள் இடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒன்றிணைவினை இந்த விஜயம் மேலும் வலுவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம் – சபா குகதாஸ்

தமிழர்களின் தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க பல முனைகளிலும் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு  மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வியாழக்கிழமை (22) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இலங்கைத்தீவில் ஆரம்பத்தில் அனுராதபுரத்தை ஆண்ட முத்துசிவன் மன்னனின் மகன் தீசன் (தேவநம்பியதீசன்) என்கிற தமிழ் மன்னன் காலத்தில் தான் பௌத்தம் கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை மகாவம்சத்தின் பாளி மொழியிலான மூலப் பிரதி கூறியுள்ளதை மறைத்து உண்மையான தமிழ்ப் பௌத்த தொல்லியல் அடையாளங்களை சிங்கள பௌத்தமாக மாற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளையே பேரினவாத ஆட்சியாளர்களும் தொடரந்து மேற் கொள்கின்றனர்.

தீசன் என்ற பெயரை திஸ்ஸ என சிங்களத்தில் பிற்காலத்தில் மாற்றியது போலவே அனுராதபுரத்தில் இருந்து வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்ட போது சைவ ஆலயங்களுடன் தமிழ் பௌத்தமும் பரவி இருந்தது அவ்வாறான தொன்மைகளை தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்தமாக மாற்றியமைக்கும் செயற்பாடு தமிழின அழிப்புக்கு வலுச் சேர்க்கும்  பாரிய ஆபத்தாக தமிழர் தாயகத்தில் மாறியுள்ளது.

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடு சட்டத்திற்கு முரணானது என்பதை நீதிமன்ற தடையே மிகப் பெரும் ஆதாரம் அதனை மீறி இராணுவத்தை முழுமையாக பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதித்து விகாரையை கட்டி முடித்து இராணுவம் அமைத்ததாக பெயர்ப் பலகை இடப்பட்டுள்ளது என்றால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு நடைபெறும் அடக்கு முறைகளுக்கு மிகப் பெரும் ஆதாரம் ஐனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரச சர்வாதிகாரம் என அவர் மேலும் தெரிவித்தார்.