தபால்மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடக்கும்!

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 22-23-24 அன்று தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் திகதி மாத்திரமே தாமதமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் எவரும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைக்காக 38 மில்லியன் டொலர்களை வழங்கியது ஜப்பான்

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த உதவி கிடைப்பதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருளை குறிப்பாக டீசல் கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் நிதி வழங்கவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தபால் மூலமானவாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் முன்னதாக திட்டமிட்டபடி நாளை தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பின்போதே அரசியல் கட்சி செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே அவர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி எஸ். கே. கண்ணதாஸ ஆகியோருடனும், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை மாணவர்களுடனும் கனேடியத் தூதுவர் கலந்துரையாடி, நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பிணை

தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு 15 வருடங்களின் பின்னர் இன்று(திங்கட்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ, சரோஜா, பந்துல மற்றும் அஜித் ஆகிய 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 23 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 04 பிரதிவாதிகளுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான கந்தையா இளங்கோ, 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முதலாவது பிரதிவாதியால் வழக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற உண்மை விளம்பல் விசாரணையின் போது நீதமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2009 ஆம் ஆண்டு விமானப்படையால் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் முதலாவது பிரதிவாதி தனது வலது காலை இழந்துள்ளதுடன், 15 வருடங்களாக வழக்கு விசாரணை நிறைவு செய்யப்படாமை குறித்தும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு எடுத்துரைத்துள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த காலி மேல் நீதிமன்ற நீதிபதி, 04 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விஹாரையின் விஹாராதிபதி  அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று (13)  அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக   பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இந்த  துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு  இடம்பெற்றபோது அம்பிட்டிய சுமண  தேரர்  தனது அறையில்  இருந்தார் என்றும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை நண்பனான சீனாவுடன் இணைந்து செயற்படும் – அலி சப்றி

இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இலங்கை நண்பனான சீனாவுடன் இணைந்து செயற்படும் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இலங்கையின் வலுவான உறவு அதன் நாகரீகத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளிற்கும் இலங்கை தனது மண்ணில் அனுமதியளிக்காது என தெரிவித்தார் என டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

இந்தியா கவலைப்படவேண்டிய அவசியமில்லை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானது அது எங்கள் நாகரீகத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ள அலிசப்ரி எங்கள் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலுடனும் நாங்கள் ஈடுபடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவும் எங்கள் நண்பன்  நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எனினும் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பு ஏற்படாது இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் இதனை தெளிவாக  தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் குடும்ப பிணைப்பை போன்றவை பிரச்சினைகள் எழும்போது அவற்றிற்கு குடும்பத்திற்குள் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்களில் ஒருவர் 83 கலவரங்களின் போது தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்து சூறையாடியர் – ருகுணு பல்கலைக்கழக துணைவேந்தர் குற்றச்சாட்டு

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார்.

ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தரை ஏழு நாட்களுக்குள் பதவி நீக்க வேண்டும் எனக் கோரி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பில் பகிரங்க அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேனவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் ருகுண பல்கலைக்கழக வெலமடம வளாகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், ஏழு நாட்களுக்குள் துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி கடந்த 5 ஆம் திகதி தனது அலுவலகத்துக்குச் சென்ற சமயம், அவரது அறையிலிருந்து வழக்கத்துக்கு மாறான மணம் வந்ததாகவும், அது அவரைக் கொலை செய்யும் வகையில் பரவ விடப்பட்ட நச்சு வாயுக் கசிவு என்றும் துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவையனைத்தும் தன்னைப் பதவி நீக்கம் செய்வதற்காக வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ள துணைவேந்தர், தனக்கெதிரான சதியில் முன்னிற்போருக்கு எதிராகப் பல குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

இதேநேரம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தான் மறுப்பதாகத் தெரிவித்துள்ள துணைவேந்தர், மேலும் குறிப்பிடுகையில் றொகான் லக்சிறி, பேராசிரியர் நிரமல் ரஞ்சித் தேவசிறி மற்றும் பேராசிரியர் உப்புல் அபேரத்ன ஆகியோர் அரசியல் காரணங்களுக்காகவே என்னைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாடுபடுகிறார்கள்.

நான் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இரண்டாவது தடவையாகத் திறமை அடிப்படையில் கூடிய புள்ளிகளைப் பெற்றுத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டவன். அரசியல் செல்வாக்கினால் பதவியைப் பெற்றவன் நானல்ல. இங்கு கலாநிதிப் பட்டத்துக்காக நிதியைப் பெற்று விட்டு 13 வருடங்களுக்கு மேல் பணத்தை மீளளிக்காமல் இருப்பவர்களும், ஆராய்சி ஒதுக்கீடுகள் மற்றும் பரீட்சைகளில் மோசடி செய்வோருமே எனக்கு எதிராக என்னைப் பதவி நீக்கம் செய்யத் துடிக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று பகிரங்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

13 ஐ நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது – பேராசிரியர் அ. சர்வேஸ்வரன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு பிளவுப்படும் என்ற சந்தேகம் நாட்டு மக்கள் இடத்தில் உள்ளது.

உண்மையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு நிச்சயம் பிளவுபடாது .  ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் சமஷ்டிக்கு சாத்தியமில்லை என்றுகொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

13 ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு பிளவு படுவதற்கான ஏற்பாடுகளும் அதில் இல்லை.

குறிப்பாக இன்று பலருக்கு 13 ஆவது திருத்தம் தொடர்பில் போதிய அறிவு இன்மையே இதற்கான காரணமாகும். அதாவது இந்த திருத்தத்தில் சகல அதிகாரங்களையும் மத்திய அரசு மீள பெற்றுக்கொள்ள கூடியதாகவும், மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த கூடியதாகவும் காணப்படுகிறது.

மாகண சபை முறைமையில் முதலமைச்சரை விட அதிகளவு அதிகாரம் கொண்டவராக ஆளுநர் காணப்படுகிறார்.  அவரை நியமிக்கின்றவர் ஜனாதிபதி. எனவே ஜனாதிபதி  தனக்கு விருப்பமான நபர் ஒருவரை ஆளுநராக நியமிக்க முடியும்.

நாடுப் பிளவுபட்டு விடும், இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும்,  இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை சென்று விடும் அல்லது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இந்தியாவுடன் இணைந்து விடும்

என்று பலரும் கூறுகிறார்கள். இந்நிலையில் இந்த 13 இல் என்ன இருக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாது.

குறிப்பாக காணி அதிகாரத்தை எடுத்துகொள்வோமாயின், காணி அதிகாரங்கள் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ளதா? என்பதே ஒரு கேள்வியாகும்.

இருப்பினும் இது தொடர்பில் முன்னர் சிக்கல் தோன்றி பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதன் தீர்ப்பு காணி அதிகாரங்கள் 13 க்கு சொந்தமானவையல்ல என்று நீதிமன்றம் தீரப்பு வழங்கியது. மத்திய அரசு காணிகளை மாகாண சபைக்கு வாங்கியிருந்தால் அதை பயன்படுத்த மாத்திரமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லாத ஒன்றை எவ்வாறு ஜனாதிபதி வழங்க போகிறார்? என்பதே எனது கேள்வியாகும்.

மேலும் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டிக்கு சாத்தியம் கிடையாது. இலங்கை என்பது ஒற்றையாட்சி  நாடாகும். சமஷ்டி என்பது அதிகாரங்கள் மத்திய அரசிற்கும்,

மாகாண அரசிற்கும் மாநிலங்களுக்கும் பகிரப்படவேண்டும். ஆனால் 13 ஆவது திருத்தத்தில் பகிரப்படவில்லை. மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றொரு திருத்தத்தை கொண்டு வந்து மீள பெற்றுக்கொள்ள முடியும். இங்கு அதிகாரங்கள்  பிரிபடவில்லை. ஆனால் சட்டவாக்க அதிகாரம் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் அடுத்த மட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அது அதிகார பரவலாக்கம் என்று கூறலாமே தவிர  அதிகார பகிர்வு என்று கூறமுடியாது.

சமஷ்டி எனும் போது அதிகாரப்பகிர்வும். அதாவது 13 ஆவது திருத்தத்தில் அதிகாரங்கள் பகிரப்படவில்லை. இலங்கை ஒற்றையாட்சி நாடாகும்.

இங்கு சமஷ்டிக்கு இடமே இல்லை.  ஆனால் தமிழ் மக்கள் சமஷ்டி என்பதே ஒரே தீர்வு என்கிறார்கள்.  இதற்காகவே பல தியாகங்களை செய்து இருக்கிறார்கள்.

தற்போது நாட்டில் அதிகாரமற்ற மாகாண சபை முறை ஒன்றே காணப்படுகிறது. தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு சமஷ்டி முறையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாகும்.

இருப்பினும் தற்போது உள்ள நிலையில் அதற்கு சாத்தியமில்லை. இன்று நாட்டில் 13 ஆவது திருத்தத்திற்கு நாட்டில் பாரியதொரு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சமஷ்டி என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும் என்றார்.