ஈழத்தமிழர் பிரச்சினையை விரைந்து தீர்த்து வைக்கவேண்டும்- நல்லை ஆதீன முதல்வர், ஆறுதிருமுருகன் வேண்டுகோள்

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் தீர்த்து வைக்கவேண்டும் என யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை அமைச்சர் எல்.முருகனிடமும் பா.ஜ.கவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நல்லை ஆதீன முதல்வரும் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனும் தெரிவித்தனர்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சரிய குருவையும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகனையும், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இந்திய தகவல் ஒலிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையும் இன்று (11) சனிக்கிழமை நல்லை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக நல்லை ஆதீன முதல்வரும் ஆறுதிருமுருகனும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

இலங்கையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுதான் சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் பல முயற்சிகள் எடுத்துள்ளன. அந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளன.

இந்தக் காலத்தை முறையாக பயன்படுத்தி இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் அனைத்து உரிமையுடன் வாழ்வதற்கு ஒரு தீர்வினை கண்டு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்கவேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலாசார நிலையம் யாழ்ப்பாண மக்களுக்குரியது. யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை வளர்ப்பதற்கு யாழ் மக்களிடம் தான் அதனை ஒப்படைக்க வேண்டும்.

திருகோணேஸ்வரத்தின் புனிதத் தன்மையை பாதுகாப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகள் நெருக்கடிகளை தீவிரப்படுத்தும் – சிவில் அமைப்புகளும், தனிநபர்களும் கூட்டறிக்கை

நாடொன்றின் சுதந்திரம் என்பது அந்நாட்டு மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு கொண்டிருக்கும் உரிமையிலேயே தங்கியிருக்கின்றது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது.

அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறைகள், நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் தீவிரமாக்கும் என்று 40 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும், 89 தனிநபர்களும் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி சமூகம் மற்றும் சமயத்துக்கான நிலையம், இலங்கை ஆசிரியர் சங்கம், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், மனித உரிமைகள் அலுவலகம், சட்ட மற்றும் சமூக நிதியம், மக்களுக்கான சட்டத்தரணிகள் பேரவை உள்ளிட்ட 40 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் 89 தனிநபர்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமையும் மீறப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிட்டு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் மீது வன்முறைக் குழுக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறிப்பாக, அரசாங்கத்தின் ‘சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள்’ இடம்பெறும் நாளில் ஆர்ப்பட்டங்கள் மற்றும் பேரணிகளை நடாத்துவது குறித்து நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய, எவ்வித குழப்பங்களோ அல்லது பொது மக்களுக்கான இடையூறுகளோ இன்றி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் ஊடாக அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்கள் கொண்டிருக்கும் உரிமை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அதுமாத்திரமன்றி, இத்தாக்குதல்களின்போது கைதுசெய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் மருத்துவ மற்றும் சட்ட உதவியை பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டதன் ஊடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

நாடொன்றின் சுதந்திரம் என்பது அந்நாட்டு மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு கொண்டிருக்கும் உரிமையிலேயே தங்கியிருக்கிறது. ஆனால், தற்போதைய அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக தற்போது நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை, வேலையிழப்பு, வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் தமது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நீண்ட கால யுத்தம் மற்றும் இனவாத அரசியலால் ஒடுக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்களும், மேலும் பலருக்கு கிடைத்ததாக கூறப்படும் ‘சுதந்திரத்தின்’ பின்னரும் தமக்குரிய அடிப்படை உரிமைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் துன்பப்பட்டு வருகின்றனர்.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்று, 75 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில் நாட்டு மக்கள் முகங்கொடுத்துவரும் இப்பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தாமல், அவை தொடர்பில் குரல் கொடுக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்க முயல்வது கவலைக்குரிய விடயமாகும்.

முன்னைய அரசாங்கங்கள் கடைபிடித்த தன்னிச்சையான, தான்தோன்றித்தனமான கொள்கைகளும் அடக்குமுறை நடவடிக்கைகளுமே நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் என்பதை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

எனவே, அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறைகள் இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் தீவிரமாக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தல் என்பன இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகும்.

ஆனால், இந்த அரசாங்கம் தான்தோன்றித்தனமான முறையில் அந்த உரிமையை மீறுகின்றது. ஆகவே, நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமை உள்ளடங்கலாக அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக தீர்க்கமாக தலையிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தில் தீர்வையற்ற (Dutyfree) கடை திறந்து வைப்பு

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (11) தீர்வையற்ற கடை (Dutyfree) திறந்து வைக்கப்பட்டது.

தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

விரைவில் சென்னை- பலாலி இடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்தார்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தில் தீர்வைற்ற கடையினை திறந்து வைத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பலாலி விமானத்தின்ஊடாக பயணிக்கும் பயணிகளுக்காக மேலும் பல வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். தற்போது நான்கு விமான சேவைகள் மாத்திரமே வாரத்தில் இடம்பெறுகின்றன எதிர்வரும் காலங்களில் ஏழு விமான சேவைகள் ஒரு வாரத்தில் இடம் பெறுவதற்குரியவாறு எயாலைன்ஸ் நிறுவனத்தினருக்கு அறிவுறித்தியுள்ளோம்.

அதேபோல இரத்மனாலை பலாலிக்கிடையிலான உள்ளூர் விமான சேவையினையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் .

அத்தோடு பலாலி விமான நிலையத்தினை விஸ்திரித்து இங்கே பயணிக்கும் பயணிகளுக்கும் மேலும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம்.

வர்த்தக ரீதியில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது அதேபோல மேலும் பல கடைகள் இந்த அரசாங்கத்தின் அனுமதியோடு திறப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதில் அழகு சாதன பொருட்கள் மற்றும் மேலும் பல பொருட்கள் அடங்கிய தீர்வையற்ற கடைகள் இங்கே திறக்கப்படவுள்ளன.பலாலி விமான நிலையத்தை மேலும் விஸ்தரித்து பயணிப்போர் மிகவும் வசதியாக பயணிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

தீர்வையற்ற கடைகளுக்காக ஒரு தனியான கட்டட தொகுதியினை அமைக்கவுள்ளோம் அதேபோல் விமானத்திற்குள் உள் நுழையும் வெளியேறும் பாதைகள் விஸ்தரிக்கப்பட்டு பயணிகள் சௌகரியமாக பயணிக்கக் கூடியவராக ஏற்பாடுகள் மேற்கொள்ள உள்ளோம்.

அத்தோடு இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது அதேபோல மேலும் பல தீர்வை யற்ற கடைகளை திறப்பதற்கு யோசித்திருக்கின்றோம் அதற்கு ஒரு நடைமுறை உள்ளது குறிப்பாக சுங்கம் மற்றும் அரசாங்கத்தின் கேள்விகோரல் முறையின்படி உரியபடி விண்ணப்பித்து தீர்வையற்ற கடைகளுக்குரிய அனுமதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும் இந்த நடைமுறைகளை பின்பற்றி தீர்வையற்ற கடைகளுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

75 ஆண்டுகளாக இடம்பெறும் ஊழல் மோசடிகளே இலங்கையின் யாசகம் பெறும் நிலைக்கு காரணம் – பேராயர்

சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டது.

இலங்கை இன்று பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி, சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த நாடாக காணப்படுகிறது.

பொருளாதார சீர்குலைவால் மாத்திரமின்றி அனைத்து துறைகளினதும் சீர்குலைவின் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமது மக்கள் சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. நீதியை போன்றே சரியானவற்றை நடைமுறைப்படுத்துவதை இன்று மக்கள் மறந்துள்ளனர்.

தமக்கு ஏதேனுமொன்று கிடைக்கப் பெறும் என்ற எதிர்பார்ப்பிலேயே அனைத்தையும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

உயர் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எவரேனும் ஒருவரிடம் ஏதாவதொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பெப்ரவரி 4ஆம் திகதி என்ன சுதந்திர தினத்தை கொண்டாடினோம்?

21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, தேசிய கொடியேற்றப்பட்டு, வீதிகளில் மரியாதை அணிவகுப்புக்களை ஏற்பாடு செய்து, இது சிறந்த நாடு என்பதை தூதுவர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் காண்பித்தோம்.

ஆனால், மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

இதுவா சுதந்திரம்? புரட்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அது எமது சுதந்திரமா அல்லது ஜனாதிபதியின் சுதந்திரமா?

இலங்கை இதற்கு முன்னர் இழைத்துள்ள பல தவறுகளின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் பிரதானமானது திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியமையாகும்.

எமது நாட்டில் காணப்படும் பொருட்களுக்கான தட்டுப்பாடு இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. சீனாவுடனும் இவ்வாறான உறவே காணப்படுகிறது.

தற்போதுள்ள கடனை மீள செலுத்த முடியாமல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலும் கடன் பெறவுள்ளனர். நாம் எமது தாய்நாட்டை சீரழித்துள்ளோம் என்றார்.

வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம், உதவிக் கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன.

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காசோலைகளை கையளிக்கும் அடையாள நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

கடந்த 33 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகள் மீளக் கிடைத்ததையிட்டு ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வட மாகாணத்துக்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 17 பேர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தினர்.

அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.

குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று 27 ஆண்டுள்

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன.

வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்த போதும் அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை.

தற்போது நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்திலேயே இப்படுகொலை அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.கலாசார நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சர் கலாநிதி எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

யாழ்.கலாசார நிலையத்தில் இன்றையதினம் நிகழ்வுகள் இடம்பெற்ற மண்டபத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சரஸ்வதி மஹால் என்று பெயர் சூட்டப்பட்டது. யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட அதேவேளை, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள 5 மாவட்டங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வாகன பேரணியும் இடம்பெற்றது.


யாழ் கலாசார நிலைய நிர்மாணப்பணிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோசடியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னர் அதன் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.


11 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் 600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடம் , நவீன வசதிகளுடனான அரங்கம் மற்றும் நூதனசாலை உள்ளிட்ட விசேட அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை.மாணவர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறவுள்ளதால், அதனை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் சமூக அமைப்பினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டக் களத்தில் பெருமளவு கலகம் அடக்கும் கால்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவிலும் இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் செய்யவேண்டிய தேவை ஏன் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உப தலைவர் இ.தர்சனும் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்றைய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் – இந்திய அமைச்சர் எல்.முருகன்

அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார்.

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (11) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிலையமானது மக்கள் மத்தியில் கலை , கலாசார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கும். எனது இந்த விஜயத்தின் போது இலங்கை மக்கள் மீதான இந்தியாவின் பரந்துபட்ட அர்ப்பணிப்பை மாகாணங்களில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. துரையப்பா மைதானம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய புனர்நிர்மாணம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயல் நாட்டுக்கு முதலிடம்’ கொள்கையின் கீழ் இலங்கை முக்கியத்துவம் பெறுவது இயற்கையானது. ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்ற திருக்குறளுக்கமைய நட்பு நாடாக இந்தியா கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 4 பில்லியன் டொலர் கடன் உள்ளிட்ட ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்து மூலமாக நிதி உத்தரவாதத்தை வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். கொவிட் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளிலும் இந்தியா அதன் உதவிகளை முன்னின்று வழங்கியுள்ளது. இவ்வழியாக இரு நாட்டு தலைமைகளினதும் வழிகாட்டலில் எமது ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று உறுதியளிக்கின்றேன்.

யாழ் – சென்னை நேரடி விமான சேவை இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றங்களை விரைவுபடுத்தும். அது வர்த்தகம் மாத்திரமின்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இது உந்துகோலாக அமையும். அதேபோன்று உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவையை புதுப்பிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம். இது எம்மிரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி பொருளாதார, கலாசார ஈடுபாடுகளை ஆழப்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

அபிவிருத்தி குறிக்கோளுடன் இலங்கையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய அபிவிருத்தி பயணத்தில் இந்தியா தனது நட்பு நாடுகளை குறிப்பாக இலங்கையையும் அரவணைத்து முன்னேற்றிச் செல்லும் என்று உறுதியளிக்கின்றோம். இவ்வளர்ச்சி இரு நாடுகளுக்குமானதாக மாத்திரமின்றி மக்களுக்கானதாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.