பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கம் இதற்கு தீர்வை காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமறுஆய்வு இல்லாததாலும் அரசியல் நோக்கங்களிற்காக அதனை பயன்படுத்தலாம் என்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தங்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பல அரசியல்வாதிகள்தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பது குறித்து இலங்கையின் பரந்துபட்ட மக்கள் மத்தியில் கருத்துடன்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப மாற்றுவதாக உறுதியளித்தது கடந்த வருடம் அரசாங்கம் முன்மொழிந்த மாற்றங்களை நாங்கள் வரவேற்றோம் ஆனால் அது போதுமானதல்ல  என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என முன்னைய அரசாங்கம் தீர்மானித்த போதிலும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் : மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் இறுதியில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

அத்துடன், இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும் எனவும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று 2023 பெப்ரவரி 7 ம் திகதி தமிழ் மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப் பிரகடனப்படுத்துகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இன்று பேரெழுச்சியாக எமது தென் தாயகத்தின் மையப்பகுதியாகிய மட்டக்களப்பு நகரில் ஒன்று திரண்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள எமது உறவுகளின் ஆதரவுடன் இன்று தாயகத்தில் பெருமெழுச்சியாக திரண்டுள்ள மாணவர்களும், மக்களும், மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளுமாக முன்னெடுத்துள்ள இன்றைய பாரிய எழுச்சிப் பேரணி தமிழ் மக்களது ஏகோபித்த குரலின் தெளிவான வெளிப்பாடாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் நகர்விலும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகள், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பின்வரும் ஈழத் தமிழர் வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

பேரெழுச்சிப் பிரகடனம்

யதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக, அவர்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே, மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்யும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடைய தனியான இறைமையை யாருக்கும் கையளித்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்தப் பேரெழுச்சியின் பிரகடனமானது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையானது அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன், பின்வரும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

  1. இந்த உடன்படிக்கையானது, ஏனைய விடயங்களிற்கும் மேலாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
  2. இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
  3. இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
  4. இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

  1. தொடர்ச்சியாக, திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் தேசம் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  2. தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமிழர்களின் தேசிய அடையாளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு தேசமாக இருத்தல் என்பவை சமரசத்திற்கு அப்பாற்பட்டதாகவும், உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
  3. முதலில், இரு தரப்பும் கூட்டாக பேச்சுவார்த்தை செய்வதற்கான தெளிவான வழிவரைபடத்தை சர்வதேச மத்தியஸ்தத்துடன் தயார் செய்ய வேண்டும். இது தெளிவான அடைவுகளையும் அதன் கால அட்டவணைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
  4. பேச்சுவார்த்தைகள் இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும் ஒன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மற்றையது இறுதி அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும்.
  5. உடனடிப் பிரச்சினைகள் குறித்துப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

5.1. தொல்பொருள் ஆராய்ச்சி, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்படுவதோடு அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீள ஒப்புடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

5.2. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

5.3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். 5.4. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மாற்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.

5.5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

5.6. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படவேண்டும்.

5.7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் கைதுசெய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

5.8. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்தவேண்டும்.

5.9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – ICC, சர்வதேச நீதிமன்றம்- ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப் படவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையால் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் விசாரணைப் பொறிமுறைகளும் அனுமதிக்கப்படவேண்டும்.

5.9.0. இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

திம்பு கோட்பாடுகள்

  1. இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்கு பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

6.1. இலங்கை அரசின் அரசியலமைப்பின் அடிப்படையாகிய ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும்

6.2. இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே ஆக்கப்பூர்வமாக நடாத்தப்பட வேண்டுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், பொங்கு தமிழ் பிரகடனம் ஆகிய வரலாற்றுப் பதிவுகள் ஊடாக தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட, அதி முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை மையப்படுத்தி, தமிழ் மக்களின் வேணவாவைப் பூர்த்தி செய்யும் தீர்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆவன: 1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல். 2) தமிழ் மக்களினுடையதாக அடையாளம் காணப்பட்ட, வரலாற்று ரீதியான மற்றும் பாரம்பரியமான தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்தல். 3) மேற்குறிப்பிட்ட உரித்துடைமையின் அடிப்படையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.

6.3. பேச்சுவார்த்தைகளின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் (பலதுறை நிபுணர்கள் குழு) சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

6.4. தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழல் ஏற்படும்பட்சத்தில், அது சர்வதேச மத்தியஸ்தத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

6.5. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்லாமியத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.

6.6. முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போல் அல்லாமல் நடுநிலையுடனும், நேர்மையுடனும் நடுவராகச் செயற்படுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே, எந்தவொரு நிதி வழங்கும் நாடுகளும் மற்றும் நிறுவனங்களும் சிறிலங்காவிற்கு பொருளாதார உதவி வழங்கத் தொடங்கவேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.

மரபுவழித் தாயகம்l

இறுதித் தீர்வை எட்டுவது என்பது, வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், இலங்கையில் நிலையான அமைதியை அடைவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கும் முக்கியமாக உள்ளதென்பதை இப்பிராந்தியத்தை அக்கறையோடு கையாளும் நாடுகள் உணர்ந்து செயற்படவேண்டும்.

ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேசத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.

அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சார்பாக இந்தப் பிரகடனம் உலகுக்கு அறிவிக்கின்றது.

பேரெழுச்சியுடன் நிறைவடைந்தது பேரணி; உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வட, கிழக்கு தமிழ் மக்கள்

கடந்த 04.02.2023 அன்று இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற கருப்பொருளின்கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பித்திருந்தனர். அவ்வாறு ஆரம்பித்தவர்கள் திங்கட்கிழமை(06) திருகோணமலைக்கு வந்து செவ்வாய்கிழமை வெருகல் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி ஆரம்பமானது.

இப்பேரணியை தொடர்ந்து அரச புலனாய்வாளர்கள் நோட்டமிட்டுக் கொண்ட இந்நிலையில் இப்பேரணி வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, ஊடாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது, அதுபோல் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இரு தொகுதியினரும், அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்; இறுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் கொள்கைப் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்து.

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ, பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

தேர்தலுக்கு நிதி இல்லையெனில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெறவும் – தவிசாளர் நிரோஸ்

தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றால் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தியாகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு இலங்கையினுடைய திறை சேரியாக இருக்கலாம் அல்லது நாட்டினுடைய வருமானங்களின் அடிப்படையாக இருக்கலாம் அதற்கான செலவினங்களை ஈடு செய்வதற்கான பணம் போதாது இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் ஆணைக்குழு எடுத்து வரும் முயற்சியை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த தேர்தல் ஒத்திவைக்காமல் நடத்தப்பட வேண்டும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒரு மக்கள் ஆணையை மீளவும் பெற வேண்டிய ஒரு சூழல் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இதற்கான பணம் போதாது என்கின்ற காரணம் காட்டப்பட்டு ஒத்துழைக்கப்படுமானால் நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கு ஒரு பகிரங்கமாக விடயத்தை முன்வைக்கின்றோம்.

இது உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்ற காரணத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை பெறலாம். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்கள் தனியாக வருமானம் ஈட்டும் ஒரு அரச கட்டமைப்பாக இருக்கின்றன, அவ்வாறான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு தேர்தலுக்கான செலவீனங்களை அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து பெறுவதற்கு உரிய சுற்று நிரூபம் ஊடாக முன்னெடுத்தாவது இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

ஏனெனின் தேர்தல்கள் என்பது கருத்து பெறுவதற்கும் கருத்து தெரிவிப்பதற்குமான சுதந்திரம் என்ற அடிப்படையில் ஜனநாயகத்துக்காக எங்களுடைய செலவீனங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

அதேநேரம் அதனை எங்களுடைய கௌரவ அதையும் ஏற்றுக்கொள்ளும். எங்களைப் போன்ற ஏனைய சபைகளும் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

அரசாங்கம் நிதியில்லை என்று சொல்லி தேர்தல்களை ஒத்தி வைக்குமானால் நிச்சயமாக இது ஒரு ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற செயல் என்கின்ற அடிப்படையில் சர்வதேசம் சில உதவிகளை இந்த தேர்தல்கள் நடத்துவதற்காக செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

நாளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாளை நாடு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாளை 08.02.2023 காலை 8 மணி தொடக்கம் 09.02.2023 காலை 8:00 மணி வரை இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதன் போது அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவை இடம்பெறாது.

மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் மேலும் 40 வரையிலான தொழிற்சங்கங்கள் இணைந்து இப்பணிப்பு புறக்கணிப்பினை மேற்கொள்கின்றன.

தேர்தலுக்கு திறைசேரி பணம் தராவிட்டால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் – தேர்தல் ஆணைக்குழு

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் உரிய பதில் அளிக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவ தெரிவித்தார்.

அரசாங்க அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்த கோரிக்கைகளுக்கு அமைய அடிப்படை செலவினங்களுக்காக திறைசேரி செயலாளரிடம் 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தலை இடைநிறுத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு தேவையான முன்பணம் பெறாவிட்டால், அறிவிக்கப்பட்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாது என்றும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் அச்சகத் திணைக்களமும் 100 மில்லியன் ரூபாவை முற்பணமாக வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போது 40 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் 60 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சடிக்கும் பணியை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமென திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தனியார்துறையினருக்கும் சுகாதார காப்புறுதி வழங்க சட்டத்தில் திருத்தம்

அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில், தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகவும், முன்மொழிவை செயல்படுத்துவதற்காக 1980ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை! – அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வேண்டியும், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்துள்ளார்கள். இதற்கு வலுச் சேர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து 500 இற்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டுள்ளோம். எமது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே திருக்கோவிலில் வைத்து எமது உறவுகளை தங்கவேலாயுதபுரத்திற்குச் செல்வதற்குப் புறப்பட்ட வேளை இருவர் முகமூடிகளை அணிந்து கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றனர். இதனால் சாரதி நூலிடையில் உயிர் பிழைத்துள்ளார். தற்போது நாம் தேடிக் கொண்டிருப்பது எமது உறவுகளைத்தான். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தங்கராசா செல்வராணியின் தலைமையில் பேரூந்துகளில் பொதுமக்கள் தமது காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் புகைப்படங்களைத் தாங்கியவண்ணம், செவ்வாய்கிழமை (07) நண்பகல் மட்டக்களப்பை வந்தடைந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

எனக்கு திங்கட்கிழமை(06) நள்ளிரவு 12 மணி வரையில் 6 நீதிமன்ற உத்தரவுகள் கிடைத்துள்ளது. செவ்வாய்கிழமை(07) நீதிமன்றிற்குச் சென்றுதான் தற்போது இப்போராட்டத்திற்குச் சமூகம் கொடுத்துள்ளேன். புலனாய்வாளர்கள் எம்மை மிகவும் துன்பப்படுத்துகின்றார்கள்.

நாங்கள் தேடிக்கொண்டிருப்பது எங்கள் உறவுகளைத்தான் நாங்கள் அயுதம் ஏந்திப் போராட வரவில்லை. தடிகளைக் கொண்டு வரவில்லை, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கேட்டு வருகின்றோம். எமது போராட்டம் வெற்றி பெறவேண்டும். 170 இற்கு மேற்பட்ட எமது உறவுகளை இழந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போதுள்ள உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். எமக்கான நீதி இந்த போராட்டத் தொடரில் வரவேண்டும் என இதன்போது அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் பதவி விலகல் கடிதம் ஏற்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்!; பௌத்த பிக்குகள் யாழில் அறிவிப்பு

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சற்று முன்னதாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே

பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் இதனை அறிவித்தனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.