உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளில் கலந்து கொள்வதில்லை – ரணில்

மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.

இரண்டு வருடங்களுக்குள் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதே தவிர, வாக்களிப்பதற்கு அல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரமே ஏற்பேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதனைத் தவிர உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு செயற்பாடுகளிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதானால் வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதமானோர் புது முகங்களாக இருப்பது பொறுத்தமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படும் நான்காயிரம் உறுப்பினர்களுக்கு மாத்திரமே சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எஞ்சியவர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இன்றி இலவசமாக பணியாற்றுவார்களா என்பதை தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்வுக்காக அரசியல் கட்சிகளை ஒன்றிணையக் கோரி நாவற்குழியில் போராட்டம்

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது. நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கப்பல் சேவை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் – யாழ் வணிகர் கழக தலைவர்

கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை பொருளாதாரத்தில் முன்னேற்ற கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.

இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் (தை மாதம்) இறுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நீண்டகாலமாக வணிகர் கழகம் இவ் காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்திய இலங்கை அரசாங்கம் தற்போது இணங்கி இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் கப்பல் சேவையிலே ஈடுபட இருக்கின்ற நிறுவனம் எதிர்வரும் சனிக்கிழமை 07ஆம் திகதி வணிகர் கழகத்திற்கு வருகை தரவுள்ளனர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுவரையில் யாழ்ப்பாண வர்தகர்கள் இந்தியாவில் இருந்து கொழும்பு ஊடாக பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை தற்போது காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

வட மாகாணத்தில் இருந்து தென்னை பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் இதேவேளை இந்தியாவினுடைய சந்தை நிலவரத்தை சரியாக அறிய வேண்டும் இந்தியா வர்த்தக சங்கங்கள் கூடி கலந்துரையாடி அது சம்பந்தமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முடியும்.

நீண்ட காலம் எதிர்பார்த்த இந்த நிகழ்வு தற்போதைய காலத்தில் நடைபெற இருக்கின்றது அதை நாங்க இந்திய இலங்கை சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் முக்கியமாக வர்த்தகர்களுக்கு விடுகின்ற வேண்டுகோள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதிலிருந்து முன்னேற வேண்டும் என்பதே வேண்டுகோள் ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை தயவுசெய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தற்போதய அரசாங்கம் ஒரு சில பொருட்களுக்கான தடைகளை விதித்துள்ளது தடை செய்யாத பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்யலாம் அத்துடன் தடை செய்யாத பொருட்களுக்கான இறக்குமதி கட்டளைக்குரிய டொலர்களை அவர்கள் வங்கி மூலம் விடுவிக்கிறார்கள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களுக்கான தடைகள் நீக்கப்பட்டும் வருகின்றது.

ஏற்றுமதி இறக்குமதிக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்

தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடாது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம் எனவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை திருத்த முயற்சிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரமான அமைப்பான தேசிய தேர்தல் ஆணையம் தனது செயல்பாடுகளை தொடர வேண்டும் என்றும், அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் கூறினார்.

‘எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தேர்தல்கள், தேர்தல் திகதி மற்றும் தேர்தல் செயல்முறைகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதன் மூலம், இந்த விவகாரங்களில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படும்’ என கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது கூட்டமைப்பின் இலட்சியம் இல்லை-செல்வம் எம்.பி

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் வைத்து நேற்று புதன்கிழமை(4) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் நாங்கள் சந்திக்க வேண்டும்.எனினும் தேர்தல் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த முறையானது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆளுகின்ற நிலை இல்லாத முறையாக இருக்கிறது.மக்களினுடைய எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் என்பது எமது நோக்கம்.
இந்த கால கட்டத்தில் இந்த தேர்தல் வருகிறது என்பதை பார்க்கின்ற போது அரசாங்கம் நடக்க இருக்கின்ற தேர்தலுக்கான நிதி யை உலக நாடுகளிடம் இருந்து பெற்று மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை மக்கள் செலுத்துகின்ற வாக்கின் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.

எனவே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.இந்த தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதும் எமது பிரதான கருத்து.

இத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும்.தேர்தலுக்கான அமைப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒற்றுமையாக எமது இனப்பிரச்சினை,மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றை நாங்கள் தட்டிக்கேட்கும்,அதனை செயல் படுத்துகின்ற விடையங்களை கையாளுகின்ற ஒரு அமைப்பாக தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்பட வேண்டும்.

நாங்கள் முன் வைத்த கோரிக்கை மட்டக்களப்பில் இடம் பெற இருக்கும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன்.
ஒற்றுமையை வலியுறுத்துகின்ற வகையில் எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின் நாங்கள் என்ன செய்வது என்ற நிலைப்பாட்டை தெரிவித்துக் கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் போர்ட் சிற்றிக்கு விஜயம்

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு போர்ட் சிட்டிக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு போட்டிசிட்டியின் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிகுலர் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் நிறுவன விவகாரங்களிற்கான இயக்குநர் விந்தியா வீரசேகர, போட் சிட்டி கொழும்பின் முகாமைத்துவ பணிப்பாளர் யாங் லு ஆகியோரை சந்தித்த டேவிட் கமரூன் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் திட்டத்தின் தனியார் கூட்டான்மை மற்றும் பங்களிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுக வீரக்கோனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

சோலர் பெனல்களுக்கான வரிகள் நீக்கம்

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலர் பெனல்களுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரி இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ. நா உதவிச் செயலாளர் நாயகம் – பிரதமர் இடையே கலந்துரையாடல்

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன , ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவி நிர்வாகியும், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (03) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார். இதன் போது கன்னி விக்னராஜா சமூக அரசியல் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தார். ‘இலங்கை சரியான திசையில் மீள்வதை நாங்கள் பாராட்டுகிறோம்,’ என்று தெரிவித்த அவர், தமது  தொடர்ச்சியான உதவியையும் உறுதிப்படுத்தினார்.

இதன் போது கன்னி விக்னராஜா அண்மையில் உதவிச் செயலாளர் நாயகமாக பதவி உயர்வுபெற்றமைக்காக பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பேண்தகு அபிவிருத்தி இலக்குகள், பசுமைப் பொருளாதாரம், சமூக ஒற்றுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அவர் பிரதமரை சந்தித்தார்.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் அவருக்கு விளக்கியதுடன், நல்லிணக்கச் செயற்பாட்டின் முன்னேற்றம் பற்றியும் விளக்கினார். பெரும்பாலான கைதிகள் விடுவிக்கப்பட்டு, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விவசாய மற்றும் கடற்றொழில் வாழ்வாதாரங்கள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, நாட்டின் முன்னுரிமைகள் பற்றிய சிறந்த விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதும் இலங்கைக்கு உதவுவதற்கான புதிய வழிகள் குறித்து ஆராய்வதும் குறிப்பாக சமூக பொருளாதார மீட்சிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்த பின்தொடரலில் கவனம் செலுத்துவதுமே தனது நோக்கம் என குறிப்பிட்டார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை – விஜயதாஸ

இனங்களுக்கிடையில் சிதைவடைந்திருக்கும் நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப எடுக்கும் நடவடிக்கை மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக உளப்பூர்வமாகவே மேற்கொள்வதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்  என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்காத மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் தாமதம் ஏற்படும் நாடு என எமது நாட்டுக்கு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலை இருக்கும்போது முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அது தடையாக இருக்கின்றது. அதனால் இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள்வதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உட்பட பல நிலைமைகள் காரணமாக நீதிமன்றங்களில் 11இலட்சம் வழக்குகள் குவிந்துள்ளதுடன் 26ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பது பாரிய நிலைமையாகும்.

மேலும் கடந்த காலங்களில் தலைதூக்கி இருந்த பொருளாதார பிரச்சினை காரணமாக அராஜக நிலையில் இருந்த நாட்டை பொறுபெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலைமையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஓரளவு ஆறுதலான சூழல் ஏற்பட்டு, நாடு ஸ்திர நிலைக்கு மீண்டு வந்துகொண்டிருக்கின்றது.

அத்துடன் நீதி கட்டமைப்பை புதுப்பிப்பதற்காக 22 புதிய சட்ட மறுசீரமைப்புகளுக்கு கடந்த 6மாதங்களுக்குள் அனுமதித்துக்கொண்டுள்ளோம். சட்டங்களை இயற்றுவதுபோல் அதனை செயற்படுத்துவதற்கும் குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். நாட்டின் தற்போதைய நிலைமை தாெடர்பில் ஆராய்ந்து பார்த்து சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக ஊழல் எதிர்ப்பு சட்டத்தை விரைவாக அனுமதித்துக்கொள்ள இருக்கின்றோம்.

அத்துடன் இனங்களுக்கிடையில் சிதைவடைந்துள்ள நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பாரிய பொறுப்பு நீதி அமைச்சுக்கு சாட்டப்பட்டிருக்கின்றது. இன ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது மக்களை ஏமாற்றுவதற்கு அல்ல.  மாறாக உளப்பூர்வமாகவே மேற்கொள்வதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.