பிரான்ஸின் போர்வையில் இலங்கையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முயற்சி

பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்து இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. திருகோணமலையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய புலனாய்வு சேவை கடுமையாக எதிர்த்துள்ளது என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

திருக்கோணமலை மாவட்டத்தில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை அமைக்க பிரான்ஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியின் குறுகிய நேர இலங்கை விஜயத்துக்கான நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பிரான்ஸ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை அமைக்கும் கோரிக்கையை தேசிய புலனாய்வு சேவை கடுமையாக எதிர்த்து இந்த யோசனை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பிரதான பேசுபொருளாக காணப்படும் பின்னணியில் பிரான்ஸுக்கு இடமளித்தால் அது தவறான எடுத்துக்காட்டாக அமையும்.

பிரான்ஸை தொடர்ந்து அமெரிக்கா, சீனா, உள்ளிட்ட பலம்வாய்ந்த நாடுகளுக்கும் இலங்கையில் முகாமிட அனுமதி வழங்க நேரிடும்.

திருகோணமலைக்கு பிரான்ஸ் வரவில்லை நேட்டோவில் பாதுகாப்பில் மேற்குலகில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. உலகில் அதிகாரமிக்க மையமான இந்திய பெருங்கடல் எதிர்வரும் காலங்களில் ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படும் என்று இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உலகிலும், ஆசியாவிலும் பலமான போட்டி நாடுகளாக இந்தியாவும் சீனாவும் காணப்படுகின்றன. இந்திய பெருங்கடலின் முக்கிய கேந்திரமாக இலங்கை காணப்படுவதால் பலமிக்க போட்டி நாடுகள் இலங்கையில் ஏதாவதொரு வழியில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள ஆரம்பத்தில் இருந்து முயற்சிக்கின்றன.

அமெரிக்கா 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எக்சா,சோபா மற்றும் எம்.சி.சி. ஆகிய ஒப்பந்தங்கள் ஊடாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தது. நல்லாட்சி அரசாங்கம் அதற்கு சார்பாக செயற்பட்டது. நாட்டு மக்களின் எதிர்ப்பை ஒன்றிணைத்து அமெரிக்காவின் முயற்சியை முறியடித்தோம்.

பிரான்ஸ் ஊடாக தனது நோக்கத்தை அடைய அமெரிக்கா முயற்சிக்கிறது. இலங்கையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை பிரான்ஸூக்கு கிடையாது. பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்துக் கொண்டு எம்மை ஏமாற்ற முடியாது என்பதை அமெரிக்காவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

இந்திய அரசினால் கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானம் இலங்கை விமானப் படைக்கு கையளிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய – இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின் வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிப்பதற்காக இன்று (16) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் 2022 ஓகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒரு வருடம் தொடர் சேவையை முன்னெடுப்பதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்ததோடு, விமானத்தின் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த விமானத்திற்கு மாற்றீடாக மற்றுமொரு டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,

‘‘நமது அயல் நாடான இந்தியா பெருமளவான உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது. இலங்கை பொருளாதாரச் சரிவை எதிர்கொண்ட போது இந்தியாவின் நட்புக்கும் அப்பாற்பட்ட சகோதரத்துவத்தை உணர முடிந்தது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்த இந்திய விஜயத்தின் பலனாக இருநாடுகளினதும் உறவு மேலும் வலுப்பெற்றது. அதற்கமைய எதிர்காலத்திலும் இருநாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்ற தீர்மானித்துள்ளன. தொடர்பு என்பது மிக முக்கியமானதாகும். அது விரிவான அர்த்தத்தை கொண்ட சொற்பதமாகும். அதனை வீதித் தொடர்புகள், மக்கள் இடையேயான தொடர்புகள், பொருளாதார தொடர்புகள், விநியோகத் தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்புகளாக இருக்கலாம்.

கடந்த காலத்தில் கடினமாக நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருந்த போது, எமது கடல்சார் பணிகளுக்கு அவசியமான எரிபொருளை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நமது விமானப்படைக்கும் கடற்படைக்கும் வழங்கியிருந்தன.

விமானங்கள் மற்றும் மற்றைய இயந்திரங்களையும் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்த நிலையில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மத்தியில் விமானப் படையின் தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினமாக அமைந்திருந்தது.

புதிய தொழில்நுட்பங்களுக்கு அமைய எமது விமானங்களையும் வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தாலும், எமது பொருளாதாரச் சரிவினால் அதனை செய்ய முடியவில்லை. அந்த வகையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

எமது கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் போது, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம், ஆயுத கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முக்கியமானதாக காணப்படுகின்றன. இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள நாடு என்ற வகையில் எமக்கு பெருமளவான பொறுப்புகள் காணப்படுகின்றன.

நாம் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள் தினமும் மாற்றமடைவதால், எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பணியாற்ற வேண்டும். இலங்கை கடற்படை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தற்போதுள்ள நெருக்கடிகள் இருக்கவில்லை. யுத்த காலத்தில் இலங்கை விமானப் படை மீது சார்ந்திருந்த பணிகள் வேறுபட்டவையாகும். புதிய தொழில்நுட்பம் மற்றும் காலத்துடனான மாற்றங்களுக்கு இணையாக நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும். அந்த நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் ஜனாதிபதியால் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக மணல் வியாபாரத்தை தடுக்கவும் வனவள கட்டமைப்பைப் பாதுகாக்கவும் அவதானம் செலுத்த வேண்டும். எமது நாடு சூரிய சக்தியும் காற்று வலுவும் நிரம்பிய நாடாகும். நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும். அந்த பணிகளில் படையினருக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.’’ என்று தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருடன் இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயமே – முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன்

சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பகுதியிலே பேசும் பொருளாக காணப்படுகின்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் விவகாரம் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. அவ் ஆலயத்தின் வரலாறு அதாவது எம் தமிழ் இந்துக்கள் இவ் ஆலயத்தினை எவ்வாறு வழிபாட்டார்கள் என்ற வரலாறு மிகப்பெரியது பழமையானது.

இருந்தும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையிலே அங்கு சென்று பொங்கல் வைத்து வழிபட முடியாத நிலை இந் நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் பக்தர்கள் மத வேறுபாடுன்றி அங்கு சென்று பல்வேறுபட்ட வழக்குகளையும் தொடர்ந்திருக்கின்றார்கள் .

அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற வழக்கிலே முல்லைத்தீவு நீதிமன்றம் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றது குருந்தூர் மலை ஐயனை நாம் எந்த தடையுமின்றி வழிபடவும், கலாசாரத்தை பேணவும் சகல உரிமை உண்டு என நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

எனவே நிர்மூலப்பட்ட எமது பாரம்பரியமான பொங்கல் நிகழ்வை தொடர்ந்து செய்ய எமது ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சரியாக 9 மணியளவில் மிக பிரமாண்டமான முறையிலே பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் எனவே இப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அன்றைய நாளை முழுமையாக எங்கள் வரலாற்றை, பண்பாட்டையும், குருந்தூரானுடைய வழிபாட்டு தன்மைகளை பேணுவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அதுமட்டுமல்லாது இம் மாவட்டத்திலே இருக்கும் சகோதர மதத்தவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி எமது வழிபாட்டை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

காணி விடுவிப்பு நல்ல விடயம்; மக்கள் அங்கே செல்லும் போது கைது செய்து நீதிமன்றம் அனுப்பக் கூடாது – செல்வம் எம்.பி

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.

இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றிருந்தது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முல்லைத்தீவிலே காணி விடுவிப்பு சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தின் முடிவிலே இடம்பெறும் பிரச்சினைகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கின்றபடியால் இன்றைய கூட்டம் இடம்பெற்றிருந்தது.

வனஇலாகா பொறுப்பதிகாரிகள் இங்கே அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையில் மாவட்ட செயலகம் கொடுத்த பல இடங்களில் தற்போது சில இடங்கள் விடுவிக்கின்ற முடிவை எட்டியிருக்கின்றன.

அதேபோல் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளாக இருந்தாலும் இங்கு இருக்கின்ற அதிகாரிகளினால் இயலாத ஒரு நிலை ஏற்படுகின்ற போது அதனை நடுவர் குழுவிற்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தமட்டில் இந்த விடயங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதனை பெரிதாக எதிர்பார்க்கின்றோம். ஏனென்றால் இது மக்களுடைய காணிகள் ஏற்கனவே திட்டமிட்டு அபகரிக்கின்ற நிலைகள் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது உண்மையிலே நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

கூட்டம் போட்டு பேசி முடிவுகளை எடுத்ததன் பின் மீண்டும் அந்த மக்கள் அங்கே செல்கின்ற போது கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்புகின்ற செயற்பாடுகள் இருக்க கூடாது என்பது எங்களுடைய எண்ணமாக இருக்கின்றது.

அந்தவகையிலே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் கோரியிருக்கின்றோம். பல விடயங்களை ஆராய்ந்து உடனுக்குடன் தீர்வுகளை கண்டிருக்கின்றோம். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இனவாதம் மதவாதத்தை தூண்டுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் – வஜிர அபேவர்தன

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம்.

ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. ஆனால் இவர்கள் இனவாதம். மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாடு தற்போது படிப்படியாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. சரவதேச நாணய நிதியம் நேற்று விடுத்திருந்த குறிப்பொன்றில், செப்டேம்பர் 15ஆம் திகதிக்கும் 27ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் இலங்கைக்கு வந்து, வங்குரோத்து நிலைமையில் இருந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதனால் ஊடகங்கள் நாட்டின் நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மை தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஏதாவது வழி இருந்தால்.

கடந்த மே மாதம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள கிடைப்பதும் இல்லை. ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள கிடைக்கப்பதில்லை.

அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த வழியும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவானதொரு வழி இருந்தமையாலே அவர் முன்வந்து நாட்டை பொறுப்பேற்றார்.

அத்துடன் நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்து இன மக்களும் ஒன்றாக இருந்து செயற்பட்டதுபோல் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும் நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்துக்காக ஒன்றிணைந்து செயற்பட்டாலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் காலத்துக்கு காலம் தேர்தல்களின் போது பொய் வாக்குறுதிகளை வழங்கி அதனை செயற்படுத்த முற்பட்டதன் பிரதிபலனாகவே இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட காரணமாகும்.

மேலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்துக்கு வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார்.

பொருளாதாரம் ஸ்திரமடையும் நிலை ஏற்படும் போது இனவாதத்தை தூண்டி, ஆட்சியை வீழ்த்தும் நடவடிக்கை 2000ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்று வந்திருக்கிறது. அதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் அதனை எவ்வாறு மீட்கமுடியும் என்பதையும் அரசியல் அனுவத்தால் ரணில் விக்ரமசிங்க தெரிந்து தெரிந்து வைத்திருக்கிறார்.

அதனால் தான் 2000ஆம் ஆண்டில் நாடு வீழ்ச்சியடையும்போது 2001 டிசம்பர் மாதம் நாட்டை பொறுபேற்று, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னுக்கு கொண்டு சென்றார்.

ஆனால் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் 2014 ஆகும்போது நாடு பொருளாதார ரீதியில் மீண்டும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

அதனால் 2017இல் நடத்த இருந்த ஜனாதிபதி தேர்தலை 2015இல் நடத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார்கள். என்றாலும் 2015 ஜனவரி 8ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டை பொறுப்பேற்று, நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவந்தார். இந்நிலையில்தான், உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்து 2019இல் 52 நாள் கலவரம் மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வரை இடம்பெற்றது.

எனவே நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீட்டு, நாட்டி கட்டியெழுப்ப அரசியல் கட்சிகளுக்கு வேலைத்திட்டம் இருக்கமானால் அவர்கள் தற்போதாவது முன்வைத்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

ஆனால் இவர்கள் இனவாதம். மாதவாதத்தை தூண்டி நாட்டை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதனை மக்கள் தடுக்க வேண்டும். இனவாதம் மதவாதத்தை தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.

அதனால் அனைவரும் இலங்கையர்களாக எமது பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேசிய ஐக்கியம் முக்கியமாகும் என்றார்.

பெளத்த சாசனத்தைப் பாதுகாக்க பெளத்தர்கள் குருந்தூர்மலையில் ஒன்றிணைய வேண்டும் – உதய கம்மன்பில

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும். இந்து – பௌத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.பௌத்த மரபுரிமைகள் முழுமையாக தமிழ் பிரிவினைவாதிகளால் அழிக்கப்படும்.

2200 ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட குருந்தூர் தூபியை இந்து கோயில் என தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.

நாளை (வெள்ளிக்கிழமை) குருந்தூர் மலையில் இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள.ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும்.குருந்தூர் மலையில் பௌத்த- இந்து மோதலை தடுக்கவும்,தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை சிங்களவர்களின் நாடு; தமிழர்களுக்குச் சொந்தமானதல்ல – மேர்வின் சில்வா

கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு வழந்த தமிழர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

இது சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் விரும்பும் இடங்களில் வாழலாம் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அப்பகுதியில் வாழ்பவர்களின் தலைகளை கொய்வேன் என்று குறிப்பிட்ட கருத்தை நீக்கிக் கொள்ளமாட்டேன், முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம். டயஸ்போராக்களின் நோக்கத்துக்கமைய அரசாங்கம் செயற்பட்டால் என் தலைமையில் மீண்டும் போராட்டத்தை தோற்றுவிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் எங்கும் வாழலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சிங்களவர்கள் வாழ்வதற்கும், விகாரைகள் அமைப்பதற்கும் தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

தென்னிந்தியாவில் இருந்து கொழுந்து பறிப்பதற்காகவே மலையகத்துக்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மறுபுறம் சோழர்களுடன் வந்த தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழந்தார்கள்.

அரச காலத்தில் இலங்கையில் இருந்த பெண்கள் அழகில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள அரசர்கள் தென்னிந்தியாவில் இருந்து தமிழ் இளவரசிகளை திருமணம் முடித்து நாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

தமிழ் இளவரசிகளுக்காக சிங்கள மன்னர்கள் கோயில்களை கட்டிக் கொடுத்தார்கள்.இவ்வாறான பின்னணியில் தான் தமிழர்கள் இலங்கையில் வாழ ஆரம்பித்தார்கள். பிற்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொன்மையான விகாரைகள் அழிக்கப்பட்டு அதன் மீது கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே தற்போது கோயில்களை இடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

தமிழர்கள் சிங்கள பௌத்தர்களுடன் முரண்பாடு இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழலாம் அதை எதிர்க்கவில்லை. ஆனால் பௌத்த மரபுரிமைகளை அழித்து இங்கு வாழ முடியாது. ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடு. கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்தவர்களுக்காகவும், சோழர்களுடன் வந்தவர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்கள் விகாரைகள், மகாநாயக்கர்கள் மீது கை வைத்தார். அவர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன் என்று குறிப்பிட்டதை ஒருபோதும் நீக்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு எதிராக எவரும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

டயஸ்போராக்களின் நோக்கத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நான் அரகலயவில் (போராட்டம்) ஈடுபடுவேன். பௌத்தத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்னுடன் இணைந்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார்.

13 ஐ முழுமையாக அகற்றினால் நீங்கள் இதுவரை திருந்தவில்லை என்பதை உலகம் அறியும் – மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

அதைவிட 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உமது கட்சி, பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும். அதன் அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், விமல் வீரவன்ச எம்பி தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவை நோக்கி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துக்கொண்ட கூட்டணி தலைவர் மனோ கணேசன், எம்பீக்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது;

நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப்பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் கட்சியின் சார்பாக, 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை, பாராளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். அதை இந்த பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது, எம்பீக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம். உலகமும் தெரிந்துக்கொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம்.

உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, சாளரம், கதவுகளை மூடி வைத்து இந்நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் இன்று இந்நாடு விழுந்து போய் கிடக்கிறது. ஆகவே இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்.

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

“சனல் – ஐ” குத்தகை அடிப்படையில் லைக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது – பந்துல

”சனல் – ஐ” யினை லைக்கா நிறுவனத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நஸ்டத்தில் இயங்கிவரும் “சனல்-ஐ” யினை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விபத்திர அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவாஹினிகூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சனல்ஐயை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குநிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு நீண்டகால அடிப்படையில் குத்ததைகக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இயக்குநர் சபை எடுத்ததீர்மானத்தின் அடிப்படையில் சனல்- ஐ யினை குறுகிய கால அடிப்படையில் லைக்கா நிறுவனத்திற்கு வழங்கதீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த போதிலும் சனல்ஐ நஸ்டத்தில் இயங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கை என்பதால்அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டதாக பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு லைக்கா நிறுவனத்திற்கு 25மில்லியனிற்கு அதன் ஒளிபரப்பு நேரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் – இலங்கை முதலீட்டுச் சபை இடையேயான ஒப்பந்தம் இரத்து

ஏற்றுமதி சந்தைக்காக மாத்திரம் நாளொன்றுக்க 420,000 பரல்கள் கொள்ளவுடன் கூடிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிறுவுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு தனியார் நிறுவனத்துக்கிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக 2019.09.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50 வருட நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் 1,200 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உத்தேச கருத்திட்ட மூலம் குறித்த காணி குத்தகை அடிப்படையில் பெறப்படாமையால், இதுவரை கருத்திட்ட அமுல்படுத்தப்படவில்லை.

கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் பற்றி கருத்திட்ட முன்மொழிவாளருக்கு பலதடவைகள் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருப்பினும், அதற்குப் பதிலளிக்கவில்லை. இருதரப்பினர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்ட முன்மொழிவாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால், குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.