சுதந்திர தமிழீழம் என்பது இந்தியாவின் நலனிலேயே உள்ளது – உருத்திரகுமாரன் வலியுறுத்தல்

சுதந்திரத் தமிழீழம் என்பது இந்தியாவின் நலனில் உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சர்வதேச அனுசரணையுடனான ஒரு வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்தேசியப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் எனவும் அதற்கு இந்தியாவே தலைமைதாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும், இதுவரை 13வது திருத்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

கடந்தகால இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் விளைவாக 300,000இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுக் களத்தை சமன் செய்ய இலங்கை மோசமான இராஜதந்திரத்தையும் போலித்தனத்தையும் பயன்படுத்துகின்றது.

இந்தநிலையில் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம். எனவே 13வது திருத்தக்கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம்:

மேலும் சுதந்திர அரசிற்கு அமைதியான முறையில் குரல் கொடுப்பதைக் கூட தடைசெய்யும் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தின் காரணமாக, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை முழுமையாக வெளிப்படுத்தும் நிலையில் இல்லை என்பதையும்உருத்திரகுமாரனின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் ஈழத் தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இதனை பன்மைத்துவத்தின் ஆரோக்கியமான அடையாளமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.

இறுதி முடிவெடுப்பவர்கள் ஈழத் தமிழ் மக்களே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசத்தின் இறையாண்மை ஒவ்வொரு தமிழனிடமும் உள்ளது.எனவே, இந்தப் பன்மைத்துவத்தைப் போற்றும் வகையில், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான சரியான தீர்மானம் ஈழத் தமிழர்களிடையே இந்தியாவால் சர்வதேச ஆதரவுடன் நடத்தப்படும் வாக்கெடுப்பு மாத்திரமே என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.

13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை:

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே என்பதை வெளிப்படையாக்கும்.

இது 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துக்களில் உள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும் இலங்கைத் தலைவர்கள் பலர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், 13வது திருத்தம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் அடிப்படையில் இலங்கையின் மகாவம்ச சிந்தனையுடன் இணைந்து, 13வது திருத்தத்தை சிங்கள அரசியல் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.

இந்தியாவின் அரசியல் செல்வாக்கு:

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இந்தியா தனது செல்வாக்கு மண்டலத்தில் இலங்கையை தக்கவைக்க, தொடர்ந்து சலுகைகளை அளித்து வருவதை உருத்திரகுமாரனின் அறிக்கை மேலும் எடுத்துக்காட்டியுள்ளது.

1) 1954 நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், 1964 ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974 சிறிமா-காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின் விளைவாக 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர், உகண்டாவிலிருந்து இடி அமீன் ஆசியர்களை வெளியேற்றியது போன்றது. இலங்கையில் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு காரணமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்.

2) 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு சிறீமா-இந்திரா கடல் எல்லை ஒப்பந்தத்தின் விளைவாக, ராமநாட்டு ராஜாவின் ஜமீன்தாரியின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவை விட்டுக்கொடுத்து, தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய மீனவர்களின் பாரம்பரிய உணவு உரிமைகளை இலங்கைக்கு தியாகம் செய்தது என்ற இரண்டு விடயங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கிய சலுகைகளாக ருத்திரகுமாரன் கோடிட்டுள்ளார் .

 சிங்களக் குடியேற்றங்கள்:

இந்தநிலையில் சிங்களக் குடியேற்றங்களுடன் தமிழர் தாயகத்தில் இலங்கையின் ஆக்கிரமிப்புக் குடியேற்றம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கு விரோதமானது, மற்றும் ஆபத்தானது என அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் போது, தீவின் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் தொகை 1.2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

இன்று கிழக்கு மாகாணத்தில் 29சதவீத சிங்களவர்கள் உள்ளனர் என்பதையும் உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது அரசியல் படுகொலை துரையப்பா; அதை தூண்டியது அமிர்தலிங்கம்: ஜனா எம்.பி

அல்பிரட் துரையப்பாவே முதலாவது அரசியல் படுகொலையாகும். அவரை சுட்டுக்கொன்றது பிரபாகரன். அதனை தூண்டியது அமிர்தலிங்கம். யாழ்ப்பாணத்தில் மேடையில் ஒருமுறை அமிர்தலிங்கம் சொன்னார், துரையப்பாவிற்கு இயற்கை மரணம் நிகழாது என்றார். அதை தொடர்ந்து அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. பிரபாகரன் கடைசி அரசியல் படுகொலையென்பது துரதிஸ்டமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூற வரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி – நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது, இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.

அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.

1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.

அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

அன்று 13 திருத்த சட்டத்தை ஏற்று இருந்தால் இன்று அது பேசும் பொருளாக இருந்திருக்காது. இந்த 1987 மாகாணசபை மு​றைமை வந்தது தொடக்கம் 2009 மே 18 வரை ஜே. ஆர் ஜெயவத்தனாவின் கையை முறுக்கி பலாத்காரமாக அந்த ஓப்பந்தத்தில் கையொழுத்து இட வைத்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்த நாட்டிலே எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு கிழக்கிலே முதலாவது அரசியல் படுகொலை முன்னாள் யாழ். நகர மேஜர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அதை தூண்டியது அண்ணன் அமிர்தலிங்கம் அவர் யாழில் மேடை ஒன்றில் பேசும் போது அல்பிரட் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் கிடையாது என பேசியிருந்தார் அதை தொடர்ந்து தான் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. ஆனால் நாட்டிலே இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரதிஸ்டம்.

13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துமாறு கேட்கின்றோம். ஆனால் இறுதி தீர்வு மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் 13 இல் உள்ளடக்கப்படவில்லை. அது மேலும் செல்ல வேண்டும். எங்களை நாங்களே எமது பிரதேசத்தில் ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும். அதுதான் இறுதி இலக்கு. அதற்காகத்தான் அகிம்சை ரீதியில் போராடினோம். அது கிடைக்காததால் ஆயுதரீதியில் தனிநாட்டுக்காக போராடினோம். இன்று 13உம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

இந்திய பிரதமர் நரோந்திர மோடியை சந்தித்த ஜனாதிபதி ரணிலுக்கு நல்ல குளுசை கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்க வேண்டிய கடமையம் தேவையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. காரணம் இந்த ஆயுத போராட்டத்திற்கு தார்மீக ஆதரவும் அனுசரனையும் பயிற்சிகளையும் தந்தது இந்திய அரசாங்கம்.

அதேபோன்று 2009 ஆயுத போராட்டத்தை மௌனிக்க வைப்பதற்கு இந்திய அரசு முக்கிய காரணம். இலங்கை இந்திய சர்வதேச ஓப்பந்தத்தில் இந்தியா கையொழுத்து இட்டுள்ளது. அவர்களை நம்பிதான் நாங்கள் எல்லாம் ஆயுதங்களை ஒப்படைத்து இந்த நாட்டிலே அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளோம். எனவே இந்தியாவுக்கு கடமை இருக்கின்றது.

அவர்கள் ரணிலுக்கு நல்ல ஆலோசனை கூறியுள்ளார்கள் என நினைக்கிறேன். கடந்த புதன்கிழமை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் சந்தித்தபோது, 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துகிறேன், ஆனால் பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என்றார். நாம் அதை நிராகரித்தோம்.

பொலிஸ் அதிகாரத்தை தர மாட்டேன் என சொல்ல ரணிலுக்கு மாத்திரமல்ல, யாருக்கும் கிடையாது. ஏனெனில், இலங்கை அரசியலமைப்பில் அது உள்ளது. அரசியலமைப்பை மீற அவருக்கும் அதிகாரமில்லை.

ஜனாதிபதி 26ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசர சந்திப்பின் அர்த்தத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கை அரசு வடகிழக்கல் மாத்திரமல்ல தெற்கில் 1971 ஆம் ஆண்டும் 1988 இரண்டு தடவை ஜே.வி.பி ஆயுத கிளர்ச்சியை சந்தித்தது. அந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியா உதவிகரம் நீட்டியதுடன் வடகிழக்கில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவிகரம் கொடுத்தது மாத்திரமல்ல தற்போதைய பொருளாதார ரீதியாக அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்ட போது முதல் முதலாக உதவிகரம் நீட்டியது.

சர்வதேச நாணய நிதியம் கூட இன்று 2.9 பில்லியன் கடன்களை நீண்டகால சலுகையில் கொடுக்க இருக்கின்றது. ஆனால் இந்தியா ஒரு வருடத்துக்குள் 4 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கின்றது. அப்படிச் செய்த நாடு இந்தியா.

வடகிழக்கு தமிழர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும் அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என ஜனாதிபதி ரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பல இனவாதிகளை கண்டிருக்கின்றோம் சிறில் மத்தியூஸ், ஆர்.எம்.பி. ராஜரட்ண, ஆர்.எம். சேனநாயக்கா போன்றவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு ஆளுக்குள் செலுத்தியதை போன்று இன்று சரத்வீரசேகர என்பவர் ஒரு இனவாதியாக தமிழின துரோகியாக கருத்துக்களை கூறிவருகின்றார்.

எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே கருத்தை கூற விட்டால் அந்த ஒற்றுமையின் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவர்கள் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டாம் என்றார்.

பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை அடுத்தவாரம் அளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்காக, 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார்.

இதில், பொலிஸ் அதிகாரத்தை சிறிது காலம் கழித்தும், ஏனைய அனைத்து அதிகாரங்களை உடனடியாக வழங்கவும் ஜனாதிபதி இணங்கியுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை இதுதொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வர, சர்வக்கட்சி மாநாடொன்றையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலத்திலிருந்து, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களையே அவர் செய்துள்ளார் என்பது, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் அனைவருக்கும் தெரியவரும்.

எனவே, மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்துச் செய்யும் வகையில், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபை நாம் தயாரித்துள்ளோம்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளடக்கிய சட்டத்தரணிகள் குழுவே இந்த வரைபை தயார் செய்துள்ளனர். இதனை நாம் அடுத்தவாரமளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம்” தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் கடிதத்தை மோடி சாதகமாக பரிசீலித்த பின்னரே ரணிலிடம் 13ஐ குறிப்பிட்டுள்ளார் – த.சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார். எமது கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையே, இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவரான த.சித்தார்த்தன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக சமஸ்டி அமைப்புக்கே வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக அடைவதே எமது இறுதி இலக்கு. அதற்கு இந்தியாவின் அனுசரணை எமக்கு தேவையென்பதை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த பயணத்தில் முதல்படியாக, 13வது திருத்தத்தை உடனடியாக- முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து கடிதம் அனுப்பியிருந்தன.

எமது கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி கூறியுள்ளர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென நரேந்திர மோடி வலயுறுத்தியுள்ளார்.

எமது கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார்“ என்றார்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் கடிதம் அனுப்பியிருந்தன. 13வது திருத்ததை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியிருந்தது. 13வது திருத்தத்தை கோர மாட்டோம் என தெரிவித்த இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை – கனடா தூதுவர் எரிக்வோல்ஸ்

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என  இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் விதத்தில்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது வருடங்களிற்கு முன்னர் இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை நாங்கள் நினைவுருகின்றோம்.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

இந்த பயங்கரமான நினைவுகள் இடம்பெற்றன என்பதை அங்கீகரி;ப்பதும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதும் இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய நிரந்தர செழிப்பிற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

இந்த இலககுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைவரையும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் என  கனடா தூதுவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை நினைவு தின புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது வருடத்தின் போது சந்திரகுப்த தேனுவர மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் கலை விசேட கண்காட்சியை நான் பார்வையிட்டேன் என அவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இந்த கலைப்படைப்புகள் கடந்த காலத்தின் காயங்களையும் அனைத்து இலங்கையர்களுக்குமான நியாயமான எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறன என அவர் தெரிவித்துள்ளார்.

தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ‘மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1983 கறுப்பு ஜூலை சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள். கொழும்பில் எமது பெரிய வீடு எரிக்கப்பட்டது. மோசடி செய்து கட்டிய வீடு அல்ல,எனது தந்தையின் கடின உழைப்பால் கட்டிய வீடு, இனகலவரத்தில் வீடும்,உடமைகளும் எதிர்க்கட்டது. நாட்டுக்குள் அகதிகளாக இருந்தோம். இவை மறக்க முடியாத சம்பவம்.நாட்டில் மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் தமது வீடுகள் எரிக்கப்பட்டதை பொதுஜன பெரமுனவினர் புலம்பிக் கொண்டு குறிப்பிட்டார்கள். வன்முறையை நாங்கள் கடுமையாக எதிர்கிறோம். தீயிடும் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.எமது இருப்புக்கள் வரலாற்றில் தீக்கிரையாக்கப்பட்டன. ஆசியாவில் சிறந்த தொன்மை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இவற்றையும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எமக்காக எவரும் அன்று குரல் கொடுக்கவில்லை என்பதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டோம்.

ஒரு நாடு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு பிறிதொரு சட்டம் என்று வேறுபாடு காணப்படுகிறது.ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் பேசப்படுகிறது.

கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்க்கப்பளிக்கப்பட்ட இராணுவ சார்ஜன் மேஜர் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். சுனில் ரத்நாயக்க 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த களத்துக்கு அப்பாற்பட்ட வகையில் மிருசுவில் பகுதியில் முகாமுக்கு அருகில் விறகு தேடி வந்த எட்டு வயது சிறுமி உட்பட எட்டு பேரை வெட்டிக் கொன்றார்.

விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியது, கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இவ்வாறான பின்னணியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள். இதனால் தான் அவர்கள் சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறார்கள்.

மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி அண்மையில் பொது மன்னிப்பு வழங்கினார். இந்த செய்தியை வெளியிட்ட ஒரு சில ஊடகங்கள் மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பள காணொளியை காண்பித்து நீண்ட விளக்கம் அளித்தன. இந்த ஊடகங்கள் கறுப்பு ஜூலை சம்பவத்தை காண்பிக்கவில்லை. இந்த ஒருதலைபட்ச செயற்பாடு தவறு. நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்குள் இருந்து செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வழங்க கூடியதையும், வழங்க முடியாததையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இந்திய விஜயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்துக்கு வருகை தந்து குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும்.அதற்கு முன்னர் அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு விவகாரத்தில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கடுமையாக விமர்சிக்கிறார். வரலாற்றில் இதுவே இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. தீர்வு திட்ட விவகாரத்தில் இரு அரசியல் கட்சிகளும் விளையாடிக் கொண்டன. இந்த விளையாட்டு இம்முறை செல்லுபடியாகாது.

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றார்.

13 இராணுவத்தினர் யாழில் கொல்லப்பட்டதாலேயே கறுப்பு ஜூலை தூண்டப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதால் தூண்டப்பட்டு 40 வருடங்களிற்கு முன்னர்  இலங்கை தனது சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான அத்தியாயத்தை சந்தித்தது என வெளிவிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

கறுப்பு ஜூலை குறித்த தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

40 வருடங்களிற்கு முன்னர் இன்று  கறுப்புஜுலை என அழைக்கப்படும் தினத்தில் இலங்கை தனது சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான அத்தியாயத்தை சந்தித்தது.

யாழ்ப்பாணத்தில் 13 படையினர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் இது தூண்டப்பட்டது. தீவிர காடையர் கும்பல் நாட்டின் தென்பகுதியில் வாழும் தமிழ் மக்களை அர்த்தமற்ற விதத்தில் பழிவாங்கின.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த -மேலும்  மூன்று தசாப்தகாலமாக இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாதம் வன்முறையில் உயிரிழந்த அனைத்து மக்களையும் நாங்கள் நிவைவுகூறுகின்றோம்.

மோதலின் போது 28000க்கும் மேற்பட்ட படையினரும் சட்டஅமுலாக்கல் பிரிவினரும் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காக உயிரிழந்தனர்.இலங்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டினர்.

எனினும் வன்முறை தீவிரவாதம் அந்த மோதலுடன் முடிவிற்குவரவில்லை நாங்கள் மேலும் துயரம் தரும் பயங்கரவாத தாக்குதல்களையும் தொடர்வன்முறைகளையும் சமீப வருடங்களில் எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கை ஜனாதிபதி தனது 75வது சுதந்திர தின உரையில் நாங்கள் கடந்தகாலங்களை ஆராய்ந்து பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் இதன் மூலம் அனைத்து இலங்கையர்களும் இனமத பேதமி;ன்றி அமைதி சமாதானம் கௌரவத்துடன் நாட்டின் எந்த பகுதியிலும் வாழக்கூடிய ஐக்கிய இலங்கை அடையாளத்தை கட்டியெழுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்துடன் நல்லிணக்கத்தில் முன்னோக்கி நகர்வதற்காக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,இது தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயங்களை ஆற்றுவதற்கும் உண்மையை கண்டறிவதற்குமான  சந்தர்ப்பத்தை வழங்கும்.

அதேவேளை இதற்கு சமாந்திரமாக இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கிய எதிர்கால பாதையில் உள்ளது,இது வடக்குகிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பலனளிக்கும்.

வடக்குகிழக்கிற்கான அபிவிருத்தி திட்டங்களில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக நல்லிணக்க நடவடிக்கைகளிற்கு அப்பால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான தனது நேர்மையான நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி 13 வது திருத்தம் உட்பட முழுமையான யோசனைகளை வடக்குகிழக்கு  மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்வைத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டால் மாத்திரம் இதனை நிறைவேற்ற முடியும்.

நல்லிணக்கத்திற்கான ஒரு சமிக்ஞையாக 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் சார்பிலும்   அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கையின் அனைத்து பிரஜைகள் ஆகிய எங்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்கும் பொறுப்பை நான் நிறைவேற்றுகின்றேன் என தெரிவித்திருந்தார்.

இது தாமதமானது என்றாலும் இன்னமும் இதற்கான நேரம் உள்ளது ( மன்னிப்பு கோருவதற்கு) என தெரிவித்திருந்த அவர் நாங்கள் ஒரு தேசமான குறிப்பாக இலங்கை அரசாக நாங்கள் முதிர்;ச்சியடையவேண்டும்,தேசிய மன்னிப்பை கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

முதலில் கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் முழு நாட்டிற்கும் நாங்கள் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுமிகவும் முக்கியமான நடவடிக்கை ஆனால் இதுவே போதுமானது இல்லை.

உலகின் அனைத்து பகுதிகளையும்போல மக்களை துருவமயப்படுத்த பிரிக்க நினைக்கும் சமூகமொன்று காணப்படும்.

ஆனால் இந்த நாட்டின் மக்கள் ஐக்கியப்பட்டு அமைதி ஐக்கியத்திற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது உரிய செயலாகும்.

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் பொலீஸார் விளக்குகளை உடைத்து அட்டகாசம்

கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை மயானத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸார் கலகமடக்கும் பிரிவினர் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கனத்தை மயான சுற்றுவட்டத்தில் பெருமளவு பொலிஸ் வாகனங்களை காணமுடிந்தது.

வீதியின் இருமருங்கிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கறுப்புஜூலை நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வு ஆரம்பமான சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரினவாத கருத்துக்களை தெரிவித்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புஜூலையை நினைவுகூறும் நிகழ்வை முன்னெடுத்தவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியுடன் செயற்படுபவர்கள் என விமர்சித்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜூலையை குறிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் பொறுமையை கடைப்பிடிக்கமுயன்றபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்- பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தனர்.

ஒரு கட்டத்தில் கலகமடக்கும் பொலிஸார் முன்னோக்கி நகர்ந்து கறுப்புஜூலை நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களை பின்னோக்கி தள்ள முயன்றனர் இதன்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சட்டத்தரணி சிறிநாத் பெரேரா உட்பட சிலர் நிலத்தில் தள்ளி விழுத்தப்பட்டனர் எனினும் பொலிஸார் அதனை அலட்சியப்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்டவர்களை பின்னோக்கி தள்ளுவதற்கு முயன்றனர்.

இதனை தொடர்ந்து கறுப்புஜூலை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை காணப்படும் பகுதிக்கு சென்று அங்கு சுட்டி விளக்குகளை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் அதனை அங்கு காணப்பட்ட சிறிய கும்பலை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர் இதனை தொடர்ந்து பொலிஸார் காலால் சுட்டிகளை மிதித்து உடைத்தனர் .

எனினும் கறுப்பு ஜுலை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் விளக்குகளை ஏற்றியவேளை பொலிஸார் அவர்களை கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றினர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுட்டிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள கறுப்பு ஜூலை நினைவுருவ படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்ததாக, 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.