மஹவ – ஓமந்தை ரயில் பாதைபுனரமைப்பு பணிகள் இந்திய உயர்ஸ்தானிகரால் ஆரம்பித்து வைப்பு

வடக்கு புகையிரத பாதையின் மஹவ – ஓமந்தை வரையான பாதையை புனரமைக்கும் பணிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மதவாச்சி புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக , அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரூ. 33 பில்லியன் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான சர்வதேச ஐஆர்சீஓஎன் இந்த ரயில்வே புனரமைப்புத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றது.

போலி தலதாமாளிகை இடித்தழிப்பு

குருநாகல், பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் எண் கோண மண்டபத்தை இடித்து அழிக்கும் பணிகள், ஞாயிற்றுக்கிழமை (08) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த போலி தலதா மாளிகை தொடர்பாக பௌத்த உயர்பீடம் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஒப்பமிட்ட கடிதம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டது.

உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி, பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாகவும் தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் சேபால் அமரசிங்க என்பவரால் வெளியிடப்பட்ட கருத்து பௌத்தர்களை காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்ததையடுத்து,  சேபால அமரசிங்க, சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சனிக்கிழமையன்று (07) குறித்த இடத்துக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, இன்னும் 2 வாரங்களில் இந்த இடத்துக்கு மீண்டும் வரும்போது கட்டடம் இடிக்கப்படாவிட்டால் அதனை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே மேர்வின் சில்வாவின் உத்தரவுக்கு அமைய ஜனக சேனாதிபதியினால் கட்டடத்தை இடித்து அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையால் மீண்டும் கொரேனாவைத் தாங்க முடியாது

தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவிலும் ஏனைய சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு வருகைதருவோர் குறித்து, கவனம் செலுத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கு கொரோனா தொழில்நுட்பக் குழு ஒன்று கூட வேண்டும் என்று சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சாமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனாவின் புதிய மாறுபாடு எதுவும் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வில்லை என்றும் கொரோனா அறிகுறிகள் மாறவில்லை என்றும் ஐடிஎச் வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

எனினும், சாத்தியமான நோய்த் தொற்றைத் தடுக்க உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வைத்தியர் குறிப்பிட்டார்

அரச வாகனங்களின் பாவனை தொடர்பில் விசாரணை

அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்பட்டதற்கு இணங்க வாகனங்கள் அரச நிறுவனங்களின் வசமுள்ளனவா? அல்லது குறித்த வாகனங்கள் உரிய வினைத்திறனுடன் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மட்டத்தில் தனித்தனியாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை- தாய்லாந்து இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) கொழும்பில் நடைபெறவுள்ளது.

அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) முற்பகல் நாட்டை வந்தடைந்தது.

தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அவுரமோன் சுப்தாவிதும் தலைமையிலான இந்தக் குழுவில் 26 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

பண்ட வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, மூல விதிகள், சுங்க ஒத்துழைப்பு, வர்த்தக வசதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கான ஏற்றுமதி 59 மில்லியன் டொலர்களாகவும், தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 355 மில்லியன் டொலர்களாகவும் இருந்தன.

தாய்லாந்துக்கு சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதோடு, தாய்லாந்துக்கான பிரவேசம் மூலம் நமது ஏற்றுமதிகளை தாய்லாந்து சந்தைக்கு மட்டுமின்றி மற்ற ஆசியான் சந்தைகளுக்கும் எமது ஏற்றுமதிகளுக்கான பிரவேசத்தை மேம்படுத்துவது மற்றும் தற்போதுள்ள வர்த்தகத்திற்கான வரி அல்லாத வர்த்தகத் தடைகளை குறைப்பது என்பன இப் பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகும்.

தாய்லாந்து சந்தையில் இலங்கையின் இரத்தினக்கற்கள், தேயிலை (கறுப்பு) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை செயல்படுத்துவதற்கும் வழிகள் திறக்கப்படும்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு, இலங்கை சார்பாக பங்கேற்பதோடு, வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு விவகாரங்கள் திணைக்களம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கைக்கு கனடா 3 மில்லியன் நிதியுதவி

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு 3 மில்லியன் (ஏறத்தாழ 817 மில்லியன் இலங்கை ரூபாய்) டொலர்களை கனடா வழங்குகிறது என்று இலங்கையிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் (IFRC) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த உதவி வழங்கப்படுகிறது.

அவசரகால உணவு உதவி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்கு, ஐ.நா மற்றும் IFRC மூலம் அவர்களின் உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து இந்த பங்களிப்பு வழங்கப்படும்.

மேலும், இலங்கையின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்தல் உட்பட இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கும் தொடர்ந்து சர்வதேச உதவித் திட்டங்களை கனடா முன்னெடுத்துள்ளது.

இந்த இக்கட்டான காலங்களில் அனைத்து இலங்கையர்களுடனும் கனடா தொடர்ந்து நிற்கிறது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இலங்கையை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது என்று உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவினால் பேருந்துகள் அன்பளிப்பு

”இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்” எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பஸ்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தனவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய உதவின்கீழ் 500 பஸ்கள் இலங்கைக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, அவர்களின் கடவுச்சீட்டுகள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், நாடு திரும்புவதற்காக இந்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தமிழரசு கட்சி பிரிந்து சென்றால் ஏனைய தமிழ் தரப்புக்களையும் கூட்டமைப்பில் இணைத்து போட்டியிடுவோம் – ஜனா எம்.பி

இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து பலமான தமிழ் தேசிய கூட்டமைப்பாக களமிறங்குவோம் என ரெலோ அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் கோவிந்தம் கருணாகரன் இதனை இணைய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசு கட்சி தனித்து செல்வதாக இருந்தால், தனித்து செல்லலாம். ஆனால் கூட்டமைப்பிலுள்ள மற்றைய கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென கூறுவதற்கு தமிழ் அரசு கட்சிக்கு எந்த அருகதையுமில்லை. நாங்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடுவோம்.

தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், இரா.சம்பந்தனிற்கு ரெலோ, புளொட் கட்சிகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகள், ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒரு பலமாக கூட்டாக உருவாக்கி போட்டியிடுவோம். வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள மக்கள், தமிழ் தேசிய பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒரு அணியில் திரள வேண்டுமென வலியுறுத்தியதற்காக மட்டுமல்ல, எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து பலமான ஒரு கூட்டணியை உருவாக்குவோம்.

தமிழ் கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பொதுவான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது ரெலோவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கட்சியாக பதிவு செய்யப்படும் – ரெலோ அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக உருவாகும் என்று அதன் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனை இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு எதிராக மேற்படி தீர்மானத்தைப் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசு நிறைவேற்றியிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டித்தார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக உருவாகும். யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம்” – என்று அவர் மேலும் தெரிவித்தார்.