மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரித்தானியா

டியகோ கார்சியா தீவில் தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக “The New Humanitarian” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியகோ கார்சியா தீவுக்கு சுமார் 200 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.அவர்கள்

உயிரைப் பணயம் வைத்து படகில் அங்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அந்த தீவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மற்றவர்கள் சிலர் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள “ரீ யூனியன்” தீவுக்கு படகுகளில் ஏறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜொன்சன் பதவி வகித்த காலத்தில், ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் இருந்தது, அது நீதிமன்றத்தால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டா நாட்டுக்கு அகதிகளை அனுப்பும் பிரித்தானிய அதிகாரிகளின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா விடுதலை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 300 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது மனைவி சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

அத்துடன் 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்ததன் மூலம் 13 வருடங்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. சட்டத்தரணிகளான அனிருத் சில்வா, கணேசராஜா, நீலகண்டன் சரவணன் ஆகியோரினால் இவ்வழக்கு நெறிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா தனது விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அம்மையாரின் அனுமதியுடனும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் சிபாரிசின் பேரில் எதுவித நிபந்தனைகளுமின்றி உடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எனது 22 வருட கால சிறைவாசத்திலிருந்து ஜனாதிபதி எதுவித நிபந்தனைகளுமின்றி என்னை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும் அனுமதி வழங்கியதுடன் நீதி அமைச்சரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

நான் சிறையில் இருந்தபோதும் எனது ஆன்மீக கடமைகளை செய்வதற்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், செயலாளர் மற்றும் பிரதித் தலைவர் தனபால் ஆகியோரும் எனக்கு பேருதவியாக இருந்துள்ளதுடன் எனது விடுதலைக்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இன்றைய இந்த விடுதலையை உறுதிப்படுத்தினார்கள்.

முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகங்கள், உணர்வாளர்கள் அனைவரும் எனது விடுதலைக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக கனடா டொரொன்டோவில் உள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோய் சமாதானம், லண்டனைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர் ராஜன் ஆசீர்வாதம் போன்றவர்களுடன் ஏனையவர்களும் எனது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் அவ்வப்போது பேசி வந்தார்கள்.

எனது இந்த விடுதலைக்கு முழுமையான காரணம் சிறைத்துறை அதிகாரிகளும் சிறை தலைமை செயலகமுமாகும். ஜனாதிபதிக்கு எனது ஆவணங்கள் முழுமையாக பரிசீலித்து எனது விடுதலைக்கான ஒழுங்குகளை செய்து தந்தார்.

எனது அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ  மற்றும் புளொட் ஆகியன  கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் எழுத்து மூலமாக கடிதமொன்றை புதன்கிழமை (16) அனுப்பி வைத்துள்ளனர்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூடுவதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பினும்  அது  தொடர்ச்சியாக பல காலம் நடைபெறாமலே இருப்பது கவலைக்குரியது.

இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையிலான கருத்து பரிமாற்றங்கள் சீர்குலைந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் தோன்றுவதனால் புரிந்துணர்வு அற்ற சூழலே காணப்படுகிறது.

இதைத் தவிர அங்கத்துவக் கட்சிகளுக்கு உள்ளே ஏற்படுகின்ற பூசல்களும் முரண்பாடுகளும் அக்கட்சிகளை மாத்திரம் பாதிக்காது ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பாதகமாக  உருவாகி வருகிறது.

இந்தச் சூழ்நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்களினுடைய எண்ணங்களில் சந்தேகமும் குழப்பமும் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது.  வெளிப்படையாகவே மக்கள் கூட்டமைப்பில் நிலவும் குழப்ப சூழ்நிலைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பகிரங்கமாகக்  கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையை தொடர விடாமல் தடுத்து நிறுத்துவதும்,  பாரிய தேசிய இயக்கத்தை தொடர்ந்து சிக்கலுக்கு உட்படுத்துகின்ற நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரவும் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதானிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை கூட்டுவது அவசியம் என்று  நாம் கருதுகிறோம்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மிக விரைவில் அதற்கான கால நேரத்தை அறியத்தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்  என்றுள்ளது.

தமிழக முதலமைச்சரை சந்தித்தார் இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர்  நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள  கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ள நிலையில், அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அம்மக்களுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இப்பிரச்சினைக் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தற்காலிகமாக அம்மக்கள் அக்குடியிருப்புகளில் இருப்பதற்கும், தமிழக அரசு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, TENTEA  தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு தமிழக அரசின் நிதிஒதுக்கீட்டில் 650 வீடுகள் இலவசமாக  அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு  விரைவில் வெளியிடும்  என  அறிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் இந்தியாவில்  PETA அமைப்பினால் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை  தமிழக அரசுடன் இணைந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கம்  சட்ட ரீதியாக இவ்வழக்கை சந்தித்து உரிய அனுமதியை பெற்றுக் கொடுத்தது.

மீண்டும் PETA அமைப்பினால் தற்போது ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இவ்விடயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு பெற்றுத்தர வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் இந்த வருடம் போன்றே எதிர்காலத்திலும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்  என தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பில் பாரதியார் கவிதைகள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இலங்கை தொழிலாளர் காங்கிர

முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல்’ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று (16) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்தது.

காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.

இதற்க்கு காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை இந்த நிலையில் இன்று(16) அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்துள்ளார்கள்.

தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்க வழங்கவேண்டும் என்றும் தமது சொந்த நிலத்தில் வாழவே விரும்புவதாகவும் இழப்பீடோ அல்லது மாற்றுக்காணிகளையோ தாம் கோரவில்லை எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காணி அளவீட்டு நடவடிக்கைக்காக எவரும் சமூகமத்திருக்கவில்லை ஆனால் இன்று(16) இரகசியமான முறையில் அளவீடுகள் எவையும் இடம்பெறுகின்றதோ என தாம் சந்தேகிப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் காணி உரிமையாளர்களோடு இணைந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.a

ஜனாதிபதி கிழக்கு, மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட வேண்டும் – வே.இராதாகிருஷ்ணன்

நாட்டில் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பிரச்சினை இருக்கும் போது வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பது, வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது. மலையக மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு மலையக பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி அழைத்து கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் எதிர்பார்த்த வரவு- செலவுத் திட்டம் அமையவில்லை. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் நிலையில் நிவாரணங்கள் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இன்றைய பொருளாதார நிலையில் மத்திய பொருளாதார நிலையில் இருப்பவர் கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளார். கீழ் மட்டத்தில் இருப்பவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.

அத்துடன் கஞ்சாவுக்கும் கறுவாவுக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தேயிலைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. இன்று தேயிலை விலை அதிகரித்துள்ளது. உரம் இல்லாததால், உற்பத்தி குறைந்திருப்பதே இதற்கு காரணமாகும். ஆனால் தேயிலை மூலம் 1.3 பில்லியன் வருமானம் கிடைத்திருப்பதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் மலைய மக்கள் தொடர்பில் நன்கு அறிந்த ஜனாதிபதி, வரவு- செலவுத் திட்டத்தில் தோட்ட மக்களின் நலன் தொடர்பில் எந்த பிரேரணையைும் முன்வைக்கவில்லை. அது குறித்து எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், மலையக மக்கள் இந்திய வம்சாவளியாக தோட்டங்களுக்கு வந்து அடுத்த வருடம் 200 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை அந்த மக்களின் பிரச்சினை எதற்கும் முழுமையான தீரவு கிடைக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. லயனட அறைகளும் தொடர் மலசலகூடங்களுமே இருந்து வருகின்றன. பாடசாலை, வைத்தியசாலை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. இ்ப்படியான மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி எந்த பிரேரணையையும் முன்வைக்கவி்லலை.

அத்துடன் வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். வடக்கில் மாத்திரம் அல்ல, கிழக்கிலும் பிரச்சினை இருக்கின்றது. அதனால் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசவேண்டும். ஆனால் ஜனாதிபதி வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அழைத்திருப்பது வடக்கு கிழக்கை பிரிப்பதற்கா அல்லது வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் மலையக மக்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தரையாட மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடவேண்டும என்றார்.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு ஒதுக்கீடு : எதிராக வாக்களிப்போம் – செல்வம் எம்.பி.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆகவே நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு பாரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், பாதுகாப்பிற்கு பெருமளவில் செலவழிக்காமல் இதுபோன்ற விடயங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிலையான நீண்டகால தீர்வுகளை இரு அமைச்சுக்களாலும் வழங்க முடியும் எனினும் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? : ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கேள்வி

வட மாகாண ஆளுநரால் அவரின் செயலகத்தில் நேற்று (15.11.2022) நடந்த கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயம் தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முப்படைகளையும் தனியாக அழைத்து கூட்டம் நடத்துவது நன்றாக இருக்காது. இராணுவத்தினுடைய பிரச்சினையை மாத்திரமே தீர்ப்பதற்காக இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது போல் தெரிகின்றது. நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கூட்டம் என்றால் அதை நாம் பரிசீலிக்க முடியும்.

ஆனால், இந்தக் கூட்டம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் கூட்டமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் ஆளுநர் இந்தக் கூட்டத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டியிருந்தால் அது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் முப்படைகளுக்கு காணிகளை வழங்கும் கூட்டமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் இந்த கூட்டம் நடந்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை நீண்டகால நோக்கில் எதிர்விளைவுகளைக் கொண்டுவரும்

– கலாநிதி ஜெகான் பெரேரா

 

ஏனைய சகல துறைகளுக்கும் செலவினங்கள் குறைக்கப்படுகின்ற ஒரு நேரத்தில் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை  அதிகாரத்தை இறுகப்பிடித்து அரசியல் உறுதிப்பாட்டு தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் பாதுகாப்பு படைகள் மீது எந்தளவுக்கு தங்கியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. மோசமான நிலைமை்இனிமேல் தான் வரப்போகிறது என்ற அரசாங்கத்தின் பயத்தையும் இது பிரதிபலிக்கிறது. முன்னென்றும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் நாடு விடுபடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களைப் பொறுத்தவரை இது தீமைக்கான அறிகுறியேயாகும்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்ததமை தொடர்பில் எழுந்த நியாயப்பாட்டு கேள்விகளுக்கு அப்பால் அவரின் வருகை அவருக்கு சர்வதேச முறைமைகளுடன் இருக்கும் பரிச்சயத்தின் ஊடாக சர்வதேச ஆதரவைப் பெற்று அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டுவருவதற்கு உதவும் என்ற எதிர்பார்ப்புடன் வரவேற்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு இன்னமும் நிறைவேறவில்லை. நாட்டுக்கு இறுதியாக கிடைத்த பெருமளவு உதவி இந்தியாவிடம் இருந்தே வந்தது.விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர்தான் இது நடந்தது.

நாட்டுக்கு தேவைப்படுகின்ற கடனுதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் என்றே தற்போது நம்பிக்கை வைக்கப்படுகிறது. அவ்வாறு கிடைக்கக்கூடிய கடனுதவி இவ்வருடம் மார்ச் மாதம் கடன்தீர்க்க வக்கில்லாத நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கையுடன் மீண்டும் அலுவல்களை ஆரம்பிக்க கடன்வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு பச்சைவிளக்காக அமையும்.சர்வதேச நாணய நிதியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார இலக்குகளை பிரதிபலிப்பதாக பட்ஜெட் அமையும் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளிப்படையாகவே கூறினார்.

இதுவரையில் இறுக்கமான இரகசியமாக இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை பகிரங்கப்படுத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார்.அந்த யோசனைகள் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரம் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கடுூமயான சந்தேகங்கள் பொதுவெளியில் கிளம்பியிருந்தன.சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள்  பொதுமக்களிடம் வேண்டிநிற்கும் தியாகம் தொடர்பில் மூளக்கூடிய கோபம் ஜனாதிபதிக்கு எதிராக திருப்பிவிடப்படக்கூடும்.தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டு மக்களை சிறப்பாக பாதுகாக்கமுடியும் என்று அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள (ஆட்சிக்கு வரும் ஆர்வம்கொண்ட ) தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

இத்தகைய பில்புலத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான எதிர்ப்பை மக்கள் தேர்தல்களின் மூலமாகவோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவோ காட்டுவதை ஜனாதிபதியும் அவரது குழுவினரும் விரும்பமாட்டார்கள்.உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்கும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைய அரைவாசியாக குறைப்பதற்கும்  தேசிய எல்லை நிர்ணய குழு தீடீரென்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இதை அரசாங்கம் கூறுகிறது.இது அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்படவேண்டியிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய தந்திரோபாயமாகவும் நோக்கப்படலாம். அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அபிப்பிராயம் தெரிவிக்கக்கூடிய வாய்ப்பை அது இல்லாமல் செய்யும்.சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியையும் விட கூடுதலானதாக இருக்கும் பாதுகாப்பு பட்ஜெட் அரசாங்கத்துக்கு எதிரான எந்த கிளர்ச்சியையும் ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படைகள் ஊக்கம் பெறுவதை உறுதிசெய்யும் எனலாம்.

நியாயப்பாட்டு நெருக்கடி 

இவ்வருடம் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கி மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கிய நேரத்தில் இருந்து அரசாங்கம் அதன் நியாயப்பாடு தொடர்பிலான நெருக்கடியொன்றை எதிர்நோக்கிவருகின்றது.அந்த நெருக்கடியை அரசாங்கத்தினால் அலட்சியம் செய்ய இயலாது.இவ்வருடம் மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவையின்்பதவி விலகல் அரசாங்கத்தை பெரும்்பீதிக்குள்ளாக்கி பாதுகாப்பற்ற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறது.இரு மாணவர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி பதாதைகளை ஏந்திய வண்ணம் வீதிப்போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசாங்கத்தின் இந்த பாதுகாப்பின்மையின் ஒரு அறிகுறியாகும்.

இவ்விரு பெண்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்திருக்கிறது.பெரும் எண்ணிக்கையான பொலிசார் பெண்களை சுற்றிவளைத்து வாகனத்தில் பலவந்தமாக ஏற்றியதை காணக்கூடியதாக இருந்தது.இந்த களேபரத்தில் பொலிஸ் அதிகாரிகள் பெண் பொலிசாரை கழுத்தில் பிடித்து கொடூரமாக நடத்தியதை சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளில் காணமுடிந்தது. அந்த பொலிஸ் அதிகாரிகள் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது பார்த்துக்கொண்டு நின்றவர்களுக்கும் தெரியவில்லை.

அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை மற்றவர்கள் எவ்வாறு நோக்குவார்கள் என்பதைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல் பாதுகாப்பு அக்கறைகளில் மூழ்கியிருக்கிறது.இது நாட்டையும் அரசாங்கத்தையும் பொறுத்தவரை துரதிர்ஷ்டமானது.இரு மாணவர் தலைவர்களை எந்த குற்றச்சாட்டும் சுமத்தாமல்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கும் கூடுலாக தடுத்துவைத்திருக்கும் அரசாங்கத்தின் செயல் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை மாத்திரமல்ல, நியாயமாக சிந்திக்கக்கூடிய எவரையும் கடும் சீற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த செயல் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பைக் கொண்டுவரக்கூடியதாகும்.இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பயனுடையதாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதா இல்லையா என்பது அடுததவருடம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவிருக்கிறது.ஐரோப்பிய ஒன்றியம் அந்த சலுகையை நீடிப்பது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை பொறுத்ததேயாகும்.இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும் தற்போது தொடருகின்ற மனித உரிமை மீறல்களும் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச அரங்குகளிலும் விவாதத்துக்கு எடுக்கப்படுகின்றன.இது நாட்டுக்கு பெரும் பாதிப்பைக் கொண்டுவரும்.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த வாரம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மக்கள் சபையில் (House of Commons) நடைபெற்ற விவாதத்தின்போது நாட்டில் தொடருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.இலங்கை மீது சில வகையான தடைகளை கொண்டுவரவேண்டும் என்று கோரிய அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை விவகாரத்தை பாரப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் என்றும் இராணுவச் செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு புதிய தலைமுறை தடைகள் திட்டமான உலகளாவிய மக்னிட்ஸ்கி  சட்டத்தை இலங்கைக்கு பிரயோகிக்கவேண்டும் என்று  ஒரு உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.இந்த சட்டம் தனிப்பட்ட நாடுகளை இலக்குவைத்து விதிக்கப்படுகின்ற பாரம்பரிய தடைகளுக்கு மாறாக, உலகம் பூராவும்  குற்றமிழைத்தவர்களுக்கு — அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் — எளிதாக பிரயோகிக்கக்கூடியதாகும்.

இராணுவ வரையறை

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை நீண்டகால நோக்கில் எதிர்விளைவுகளைக் கொண்டுவரப்போகிறது என்பது கவலை தருகிறது.அந்த அணுகுமுறையினால்  நெருக்கடியின் அறிகுறிகளை தற்போதைக்கு மாத்திரம் அடக்கிவைக்கமுடியும்.மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் ‘ இலங்கை ; பல்பரிமாண நெருக்கடி —  மனிதாபிமான தேவைகளும் முன்னுரிமைகளும் — ஜூன் — டிசம்பர் 2022 ‘ என்ற தலைப்பில் அறிக்கையொன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒரு கோடி 35 இலட்சம் மக்கள் — சனத்தொகையில் 61.1 சதவீதமானோர் — உணவு தட்டுப்பாடு  காரணமாக சமாளிப்பு யுக்திகளை கையாளுவதாகவும் 47.7 சதவீதமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை சமாளிக்கும் யுக்திகளை கையாளுவதாகவும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

8 நவம்பர் 2022  வெளியிடப்பட்ட அந்த அறிக்கை ,” சுமார் 53 இலட்சம் மக்கள் அல்லது சனத்தொகையில் 24 சதவீதமானோர் தங்களது உணவு வேளைகளை குறைத்திருக்கிறார்கள்.சனத்தொகையில் அதே சதவீதத்தினரில் வயதுவந்தவர்கள் பிள்ளைகள் சாப்பிடவேண்டும் என்பதற்காக தங்களது உணவைக் குறைக்கின்றார்கள்.குடும்பத்தில் பெண்களே இறுதியாக சாப்பிடுகிறார்கள்.2021 இறுதிப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஏற்றுக்கொள்ளமுடியாத உணவுவகைகளை சாப்பிடும் குடும்பங்களின் விகிதம் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது.” என்று கூறுகிறது.உண்மையிலேயே மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தேர்தல்கள் பின்போடப்பட்டு தங்களது நம்பிக்கைக்குரியவர்களை மக்கள் தெரிவுசெய்யமுடியாமல் போகும் பட்சத்தில் தாங்கள் அனுபவிக்கும் இடர்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதியால் இறங்கி போராடவே செய்வர்.விலைவாசி உயர்ந்து, எரிபொருட்களும் பசளை வகைகளும் கிடைக்காத நிலையில், தினமும் அரைவாசி நேரம் மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுந்து அறகலய போராட்டம் மூண்டது.அதேபோன்ற விரகத்தியான ஒரு கட்டம் மீண்டும் தோன்றி மக்கள் கிளர்ந்தெழுவார்களேயானால், பாதுகாப்பு படைகளினால் அதை அடக்க இயலும் என்று எதிர்பார்க்கமுடியாது.

நியாயபூர்வமான போராட்டங்களை ஒடுக்குவதை விடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம்  கிடைப்பதற்கு அரிதான அதன்  வளங்களை ஒதுக்குவதே தற்போதைய தருணத்தின் பிரதான தேவையாகும்.மறுபுறத்தில், அரசாங்கம் மக்களை அடக்கி எதிர்காலத்தில் கிளர்ச்சிகள் மூளாமல் இருப்பதை தடுப்பதற்கு பாதுகாப்பு படைகளில் தங்கியிருக்கிறது என்றே  தோன்றுகிறது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றில் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆயுதப்படைகள் மீது அரசாங்கம் ஏன் இந்தளவு கூடுதல் கவனத்தைக் குவிக்கிறது ? 2030 பாதுகாப்பில் ஏன் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது? என்று கேள்விகள் கிளம்பலாம் என்பதை ஒத்துக்கொண்டார்.” நாம்்பிறந்தபோது இந்து சமுத்திரத்தில் எந்த தகராறும் இருக்கவில்லை.ஒரு கட்டத்தில் இந்து  சமுத்திரம் ஒருவருக்கும் தேவைப்படவில்லை.இன்று அவ்வாறில்லை. நாம் தப்பிப்பிழைக்கவேண்டும் என்றால், ஆற்றல்களை, பாதுகாப்பு ஆற்றல்களை, மூலோபாய ஆற்றல்களை, எல்லாவற்றையும் பயன்படுத்தவேண்டியிருக்கும்” என்று ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின.

கடல் போக்குவரத்து சுதந்திரம் இல்லையென்றால் நாடு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையைக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இந்த பதில்  நம்பும்படியாக இல்லை.ஏனென்றால், பிரிட்டிஷ் அல்லது பிரெஞ்சு  இராணுவங்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கும் இராணுவத்தை பேணுவதற்கு பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும்பகுதி போகிறது.மக்களை தவறாக வழிநடத்திய இந்த வகையான கூற்றுக்களும் நியாயப்படுத்தல்களுமே சுதந்திரம் பெற்று 74 வருடங்களுக்கு பிறகு நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வந்தன.உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி அதன் மூலம் தெரிவாகின்ற அரசியல் பிரதிநிதிகளுடன் அடுத்து முன்னெடுக்கவேண்டிய திட்டங்கள் குறித்து பேச்சு நடத்துவதே பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான நிலைபேறான அரசியல் உறுதிப்பாட்டை அடைவதற்கான ஜனநாயக பாதையாகும்.

அரசியல் தீர்வு விடயத்தில் ஐ.நா பங்களிப்பு அவசியம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி பங்கேற்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே குரலில் வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் அடங்கலான குழுவினரை இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு எடுத்துரைத்தனர்.

கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் அரசியல் ஸ்தீரத்தன்மை அற்ற நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு பற்றியும் ஐ.நா குழுவினருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.