எதிர்ப்புக்கு மத்தியில் திருகோணமலை இலுப்பைக்குளத்தில் புதிய புத்தர்சிலைகள்

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் இன்று (06) காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் 09.09.2023 அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும்- சபா குகதாஸ் தெரிவிப்பு

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பர் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஆனால் ஐனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவதாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் அமைந்து வருகின்றது.

ரணிலின் எதேத்சதிகார போக்கை இராஐதந்திர ரீதியாக சமநிலைப்படுத்த தமிழர் தரப்பில் ஆளுமையான துணிச்சலான தலைமை  தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடையம்.

அத்துடன் தமிழ் புத்திஜீவிகள் தரப்பில் பலனமான குரல் இல்லை. புலம்பெயர் தரப்பிலும் வறிதாகவே உள்ளது. இதனால் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லையின்றி தமிழர்களின் அபிலாசைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளார்.

அத்துடன் தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டவே முயற்சிக்கின்றார். அண்மையில் ஐேர்மன் ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணல் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது.

தமிழர் தரப்பு பழைய பல்லவிப் போராட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் தமிழ் கட்சித் தலைமைகள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவதும் பலவீனப்பட்டு விரக்தி நிலையில் உள்ள மக்களின் வெறுப்பை அதிகரிப்பவர்களாகவும் மாறி உள்ளனர் இது தமிழ்த் தேசிய இருப்புக்கு சாதகமில்லை மிக ஆபத்தானது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக அதைவிட மேலும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார் ஐனாதிபதி.

எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் வடக்கு மீனவர்களுக்கு தீர்வு காணப்படாமல் தென்னிந்திய மீனவர்கள் வடக்கு கடலில் மீன் பிடியில் ஈடுபட ரணில் அரசாங்கம் அனுமதி வழங்க இருப்பதாக கூறும் அறிவிப்பு மேலும் வடக்கு மீனவர்களை நெருக்கடிக்கு தள்ளும் ஏற்கனவே இருந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இரட்டி மடங்காக்கும்.

தமிழர் தரப்பு மக்கள் ஆணையில் இருந்து ஒரு படி கீழிறங்கி சமஷ்டி தீர்வுக்கு முன்பாக அரசியல் அமைப்பில் உள்ள பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கோரினர்.

இதனை எதிர்பாக்காத ரணில் அதற்கும் ஒரு ஆப்பு வைத்தார். பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என கூறினார். உண்மையில் அரசியல் அமைப்பில் உள்ள அதிகாரத்தை பாராளுமன்ற முடிவு இல்லாமல் நினைத்தவுடன் ஐனாதிபதி தரமாட்டேன் என கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரி போல செயற்பட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பு, விகாரைகள் அமைத்தல் , சிங்கள குடியேற்றங்கள் அமைத்தல் , மேச்சல் தரைகள் அபகரித்தல் போன்றன கடந்த காலத்தை விட தற்போது வேகமாக நடைபெறுகின்றன.

நிகழ்நிலைக் காப்பு சட்டம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டம் நாட்டு மக்களுக்கான அடக்குமுறை என பலரும் கூறினாலும் தமிழர்களுக்கு மிக ஆபத்தானது.

இதற்கு காரணம் சட்டம் நிறைவேறினால் நில அபகரிப்பு ,சட்டவிரோத விகாரை அமைப்பு போன்ற வற்றுக்கான மக்கள் போராட்டங்கள் மற்றும்  நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நிரந்தர ஆப்பாகும். மீறினால் சிறைதான்.

அத்துடன் அரச செயற்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் பொய்யான செய்தியை பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையுடன் கூடிய தண்டனை.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களின் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் பார்க்க வேண்டிய ஐனாதிபதி பெரும்பாண்மை சிங்கள மக்களின் தலைவராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் சம நேரம் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் விரிவு படுத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றார். இச் செயற்பாடுகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அபிலாசைகள்  மேலும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும் என்றார்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு சீன தூதுவர் குழு விஜயம்

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத்தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர்.

இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் பழைய கச்சேரியை பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

 

வடக்கிற்கான விஜயத்தை ஆரம்பித்தனர் சீனதூதுவர் தலைமையிலான குழு

இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் இன்று முதல் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இன்றையதினம், காலை பத்துமணியளவில் வவுனியாவை வந்தடையவுள்ள அக்குழுவினர் வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவள்ளனர்.

அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் அக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரனிடத்தில் கையளிப்பதோடு வெலிஓயா பிரதேச செயலகத்திற்கான 250 வாழ்வாதாரப் பொதிகளை அக்குழுவினரே நேரடியான விஜயமொன்றை மேற்கொண்டு வழங்கவுள்ளனர்.

அதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அக்கழுவினர் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடத்தில் வாழ்வாதார பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

யாழில் தங்கியிருக்கும் குறித்த குழுவினருடன் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து நாளை 6ஆம் காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினைச்  சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நெடுந்தீவு மக்களின் வாழ்வாதார உதவியாக  500 வாழ்வாதரப் பொதிகள் கையளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு, குறித்த தினம் முன்னிரவில் சிவில் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தத்துறை சார்ந்தவர்கள் சிலரைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை மறுதினம் 7ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் குறித்த குழுவினா நாகவிகாரையில் வழிபாடுகளைச் செய்யவுள்ளதோடு அங்குள்ள பொது மக்களுக்காக 250 வாழ்வாதார பொதிகளை கையளிக்கவுள்ளனர்

பின்னர் அங்கிருந்து யாழ்.திரும்பும் அவர்கள் சிறிது நேரத்தில் மன்னாரிக்குப் பயணித்து 8ஆம் திகதி மன்னார் மாவட்டச்செயலாளர் அ.ஸ்ரான்லி டிமலைச் சந்திக்கவுள்ளதோடு அங்கும் பொதுமக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதோடு அன்றையதினம் மாலையில் வடக்கிற்கான விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு கொழும்பு நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமனம் பெற்ற தூதுக்குழு யாழ் விஜயம்

வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 பேர் கொண்ட தூதுவர் குழு இன்றைய தினம்(04)  யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தது.

இத்தாலிக்கான தூதர் சத்யஜித் ரோட்ரிகோ , எகிப்துக்கான தூதர் மதுரிகா வெனிங்கர், பங்காளதேசத்திற்கான உயர் ஸ்தானிகர் தரமபால வீரக்கொடி , சிங்கப்பூருக்கான உயர் ஸ்தானிகர் செனரத் திசாநாயக்க , பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவர் சந்தன வீரசேன, இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் க்ஷேனுகா செனவிரத்ன, பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகர்  அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேபாளத்திற்கான தூதுவர் எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன,கியூபாவுக்கான தூதுவர் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன,பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் அடங்கிய குழுவினரே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம், யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஆகிய இடங்களுக்கு சென்றதுடன் மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியால் தூதர்களுக்கான இரண்டு வார வழிகாட்டல் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் வடக்கு மற்றும் தெற்கு விஜயம் செய்து கள நிலைமைகளை அறிந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரணில் தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வை வழங்கியே தீர்வார் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல உறுதி

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீருவார் எனவும் இதை இலங்கை வந்திருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார் எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டும் என்று சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்கின்றோம். அதேபோல் அவர்களும் ஜனாதிபதியின் தேசிய ரீதியான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்தில் ஆளும், எதிரணி என இரு தரப்பினரும் இணைந்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலைக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும் – சபா குகதாஸ் தெரிவிப்பு

நாட்டின் மொத்த சனத்தொகையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் அவர்களது சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள் வலுப் பெறுகின்ற சம நேரத்தில் நாட்டில் சகல அடிப்படைப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கின்றன இவ்வாறான விலை அதிகரிப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ்தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பள உயர்வுக் கோரிக்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஊதியம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கான குறைநிரப்பு செயற்பாட்டை அடிப்படை பொருட்களின் விலை உயர்வு மூலமே அரசாங்கம் பெற முயற்சிக்கின்றது அத்துடன் அதிகரித்த சம்பளத்தை உடனடியாக பொருட்களின் விலை உயர்வு மூலம் பறித்தெடுக்கின்றது அரசாங்கம்.

அரசாங்கம் வருமான மார்க்கங்கள்  யாவற்றையும் இழந்து அன்னியச் செலாவணியை பெறமுடியாத சூழ்நிலையில்  இருக்கின்ற போது சம்பள உயர்வு கோருவதால் அரசாங்கமே தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்  கொள்வதற்காக விலை உயர்வை கையில் எடுக்கின்றது.

சம்பள உயர்வு கோரல் மூலம் மேற் கொள்ளப்படும் விலை உயர்வு   அரச ஊழியர்களை மாத்திரமல்ல நாட்டின் ஏனைய இரண்டு கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும் மிகக் கொடூரமாக பாதிக்கும் இதனால் சம்பள உயர்வுக்கான போராட்டங்களை விட பொருட்களுக்கான நிர்ணய விலை கோரிய போராட்டங்கள் வலுப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார் .

மேலும் அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலையே பெரும் எண்ணிக்கையில் வாழும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்கு  ஆதாரமாக இருக்கும் எனவே அரசாங்கம் அடிப்படைப் பொருட்களின் விலைகளை நிர்ணய முறையில் பேண வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டங்கள் தென்னிலங்கையில் வலுவடைந்து வட இலங்கையிலும் பரவலடைய வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

சமாதான நீதவான்கள் 22 பேர் ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பியால் நியமனம்

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா அவர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 பேருக்கு முதற்கட்டமாக சமாதான நீதவான் பதவி நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற இச் சமாதான நீதவான் பதவியானது கோ.கருணாகரம் ஜனா அவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட சிலரில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டவர்களுக்கான நியமனத்தினை இன்றைய தினம் அவர் வழங்கி வைத்தார்.

இதன்போது பா.உ ஜனா கருத்துத் தெரிவிக்கையில்,

பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தற்போது உங்களுக்கு இந்த நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை மக்களைக் கருத்திற்கொண்டு சேவையாற்ற வேண்டும். இதனை வருமானம் ஈட்டும் செயற்பாடாகக் கருதாமல் மக்களின் குறைகளை நிவர்த்திக்கக் கூடியவாறு செயற்பட வேண்டும். இதன் கௌரவத்தினைப் பாதிக்காத வண்ணம் உங்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி

மலையக மக்களுக்கு 10000 வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறும் என இந்திய பாரதீய ஜனதாக்கட்சியின் உறுப்பினர் K.அண்ணாமலை  உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள சுகததாச உள்ளரங்கில்  நடைபெற்ற  “நாம் -200” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்தியாவிலிருந்து இந்திய பிரதமரின் சார்பாக இங்கே வந்த நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் அவர்கள் முக்கியமான விடயங்களை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து அறிவித்திருக்கிறார். குறிப்பாக மலையக தமிழர்களினுடைய நெடுநாள் கோரிக்கை நான்காயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருந்தாலும்  கூட இன்னும் நிறைய வீடுகள் வேண்டும் என்பது உங்களுடைய கோரிக்கை.

இந்திய அரசு 2020 இல் இந்த் அறிவிப்பை வெளியிட்டும் அது மூன்றாண்டு காலமாக கொரோனா காரணமாக அது நடைபெறாமல் அந்த திறப்பு விழா இன்று நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக 10000 வீடுகள், அதற்கான அந்த வீடுகளுக்கான foundation ஸ்டோனை  நடைபெறக்கூடிய விழாவில் நாங்கள் பார்த்தோம்.

கடந்த ஆண்டு மே மாதம் இங்கிருந்து நுவரேலியாவுக்கு வந்த பொழுது வந்து உங்களுடைய இல்லங்களை பார்க்கும் பொழுது நிச்சயமாக எனக்கும் தோன்றியது ஒரு தமிழனாக இந்த மக்களுக்கு அற்புதமான வீடுகள் தேவை என்று. இன்றைக்கு அது நடந்திருக்கிறது மிக வேகமாக அந்த 10000 வீடுகளும் கட்டி முடித்து உங்களினுடைய கைகளுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அதைத்தாண்டி மிக முக்கியமான முடிவுகளையும் இலங்கையினுடைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

உங்களுடைய நீண்டநாள் கோரிக்கையாக இருக்க கூடிய  நிலத்தினுடைய உரிமை அந்த முடிவையும் கூட அறிவித்திருக்கின்றார். நிச்சயமாக மலையக தொழிலாளர் அனைவரினுடைய கையிலே அவர்களுக்கு சொந்தமாக ஒரு பட்டா  நிலம் இருக்கும் என்பதும் கூட ஊர்யிதமாக இருக்கிறது. அதுவும் ஆண்டவன் அருளால் நிச்சயமாக முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணை இந்திய – சீன பலப்பரீட்சை களமாக மாறின் முதலில் அழியப்போவது தமிழர்களே- எச்சரிக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சி

பாக்கு நீரிணையில் இந்திய – சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின், முதலில் அழிவது ஈழத் தமிழர்கள்தான் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் இடம்பெறுவதாவது:

இந்து சமுத்திர அதிகார போட்டியில் மையப்புள்ளியாகும் பாக்கு நீரிணையும் தமிழர்களின் வாழ்வாதாரமும் 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அம்பாந்தோட்டையை கையகப்படுத்திய சீனா. தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

சீனா போன்ற ஒரு பெரிய தேசம் வடக்கில் மீன்பிடிக்க வரவில்லை. தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தமிழர்களை இடம்பெயரச் செய்து, பாக்கு நீரிணையை தம்வசப்படுத்தி தமிழர் தேசத்தை தமது பிராந்தியமாக்கி, அதனூடாக முழு இலங்கையையும் பாக்கு நீரிணையின் மறுபக்கமான தமிழகத்தையும் கேரளாவையும் தமது கட்டுப்பாட்டு பிராந்தியமாக்குவதே அவர்களது பிரதான இலக்காகும்.

அதன் ஆரம்ப கட்டம்தான், வடகடல் எங்கினும் மக்கள் தமது ஜீவனோபாயமாக சிறுகடல் தொழில் மேற்கொண்ட பிரதேசங்களை அவர்களிடம் இருந்து பறித்து, அட்டை வளர்ப்பு பண்ணைகளாக மாற்றியிருக்கிறார்கள்.

இன்று அட்டை வளர்க்கும் கடல் பிரதேசங்கள் தமது இயற்கை சமநிலைத் தன்மையினை இழந்து வருகின்றன. அந்த பண்ணைகளில் பாவிக்கப்படும் உயர் தன்மையுடைய வெளிச்சங்களால் மீன்களின் கருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் நில ஆக்கிரமிப்புக்கான நகர்வுகளை எமது மக்களின் இருப்பு, அவர்களின் பொருளாதாரம், எதிர்காலம் கருதி அவர்களது வருகையை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.

திருகோணமலையையும் பாக்கு நீரிணையையும் யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களால்தான் ஆசியாவையும் இந்துமா சமுத்திரத்தையும் கையாள முடியும். இதன் நிமித்தமே போர்த்துக்கீசர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் வந்தார்கள், வென்றார்கள், ஆண்டார்கள், சென்றார்கள்.

ஆனால், சீனாவின் நகர்வு வெற்றி பெறுமானால், ஒருபோதும் பாக்கு நீரிணையை விட்டுச் செல்லமாட்டார்கள். இந்துமாகடல் சீனமயமாகும்.

இந்தியா ஒரு மெத்தனப் போக்கோடு இலங்கையை எப்போதும் கையாளலாம் என என எண்ணுகிறது. அதன் வெளிப்பாடுதான் அண்மைய இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய நிதி அமைச்சர்களின் வருகையின்போதும் தமிழ் தலைமைகள் புறக்கணிக்கப்பட்டமை ஆகும்.

பிரதமரை சந்திக்க கடிதம் அனுப்பப்பட்டும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளமை, இந்துமா சமுத்திரத்தின் பலமான பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களும் கேரளமும் தங்கியுள்ளமையே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்.

ஈழத் தமிழினத்தின் வாழ்வும் வளமும் மிக்க பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின், முதலில் அழிவது ஈழத்தமிழர்கள்தான். அதனை ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்கப் போவதில்லை என்பதை வலுவாக பதிவு செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது