இலங்கை மக்கள் மீட்சியடைவதற்குத் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் – ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி உறுதி

தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் முனைப்புடன் தனது பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ், நாட்டின் பொருளாதாரம் நிலைபேறான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அதிக அக்கறை செலுத்தப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாகக் கடமையாற்றிய ஹனா சிங்கர் ஹம்டியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய வதிவிடப்பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸினால் மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இலங்கையில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் அவர், கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தைப் பார்வையிட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியிட்டுள்ள காணொளியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘நான் இப்போது சுதந்திர சதுக்கத்தில் இருக்கின்றேன். இது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையை வெளிக்காட்டும் வகையில் மாத்திரமன்றி, இலங்கையர்கள் அனைவரும் ஒருமித்துச் செயற்பட்டால் எவற்றைச் சாதிக்கலாம் என்பதற்கான அடையாளமாகவும் விளங்குகின்றது’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி என்ற ரீதியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ள வரவேற்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொவிட் – 19 வைரஸ் பரவலாலும், பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும் இலங்கை மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ், தற்போது பூகோளக் காரணிகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்றனவும் இலங்கை மக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்நெருக்கடிகளிலிருந்து இலங்கையும், இலங்கை மக்களும் மீட்சியடைவதற்குத் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முனைப்புடனும், வலுவான நம்பிக்கையுடனும் தனது பணிகளை ஆரம்பிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், நாடு என்ற ரீதியில் நிலைபேறான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அதிக அக்கறை காண்பிக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் பிரான்சின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தவும்  ஒரு “வரலாற்று” பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த ஐந்து நாள் பயணம் ஜூலை 24 அன்று பிரான்ஸ்  தீவுக்கூட்டமான நியூ கலிடோனியாவில் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து வனுவாட்டு மற்றும் பப்புவா நியூ கினியாவில் நிறைவடையும்.

அதன் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜூன் மாதம் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் அரச தலைவர் அமர்வின் போது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடைசியாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்த நாடுகளின் குழுவில் பிரான்ஸும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்பு

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தமக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை என்பதைசுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கான பொருத்தமான முன்மொழிவுகளை தான் கொண்டு வருவதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் உள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாகாண சபை முறைமையை பேண வேண்டுமாயின், ஏற்கனவே உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திய அவர்,. விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற அடிமட்ட நடவடிக்கைகள் உட்பட தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

மத்திய அரசாங்கம் நாட்டுக்கான கொள்கைகளை வகுக்கும் அதே வேளையில் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபைகள் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளில் சில இடைநிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் மொபைல் போன் கட்டணங்களுக்கான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திற்கான செலவு விபரங்களை முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர், ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையில் சலுகைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, ஜனாதிபதி அலுவலகம் இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளின் எந்தவொரு செலவையும் தீர்க்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீர்ப்பின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம், வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவருடன் பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் சந்திப்பு

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல்,அரசியலமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

அரசாங்கத்தின் ஜனநாயகத்தின் அப்பட்டமான மீறல் போலவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசின் திறமையின்மை,ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்தாதது மற்றும் சட்டத்துறையில் எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் Julie J Chung ,நெதர்லாந்தின் தூதுவர் Bonnie Horbach, இந்தியா உயர்ஸ்தானிகர் Gopal Baglay, நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton, ஆஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் Paul Wesley Stephens, பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet, கனேடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh, ஐக்கிய இராச்சியத்தின் பதில் பிரதி உயர்ஸ்தானிகர் Lisa Whanstall, ரோமானிய தூதுவர் Victor Chiujdea, ஜப்பானிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி Katsuki Kotaro, இத்தாலிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி Dr. Francesco Perale, ஐரோப்பிய ஒன்றிய அரசியல் விவகாரப் பிரிவின் பிரதானி Anne Vaugier Chatterjee ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

வேண்டுமென்றே தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பாக தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மக்களின் பிரச்சினைகளில் அக்கறையின்மையால் அஸ்வெசும போன்ற வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் சுகாதாரத்துறை எவ்வாறு சீர்குலைந்துள்ளது மற்றும் தரமற்ற மருந்துகளால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தார்.

சட்டத் துறையில் பல சிக்கல்கள் உள்ளன என்றும்,சகல சட்டமூலங்களிலும் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் சட்டத்துறைக் கட்டமைப்பின் தரம் குறைந்துள்ளதாகவும் தூதுவர்களிடம் எடுத்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மனித புதைகுழிக்கு நீதிகோரும் ஹர்த்தாலுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பூரண ஆதரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஐயகுமார்,’வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதுடன், அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவினை வழங்குகின்றது. அந்த வகையிலே இன்று கறுப்பு ஜுலை வாரத்தை அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற வேளையிலும் எங்களுடைய தமிழ் மக்களுடைய பாரதூரமான பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த அகழ்வு பணியில் கூட காவல்துறையினர் மட்டுமே காணப்படுகின்றனர். மேலும் சர்வதேச அமைப்புகள் ஒன்றுமே காணப்படவில்லை. இந்த அரசு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

எங்களுடைய பிரச்சனையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாது தங்களுக்குள்ளே மறைத்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையிலே தமிழ் மக்களாகிய எங்கள் பிரச்சினைகள் வெளிப்படையாக தீர்வினை பெற வேண்டும். இன்றும் நாம் சுதந்திரமாக எமது நினைவேந்தல்களை கூட மேற்கொள்ள முடியாது இருக்கின்றோம்.

ஆகவே சரணடைந்த எங்களது காணாமலாக்கப்பட்ட உறுவுகளுக்கு நீதி வேண்டும் .அந்த வகையிலே அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவினை வழங்கவேண்டும் ” என்றார்.

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; சுதந்திரக் கட்சி உறுதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015, 2019 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்கும் பணிகள் இடம்பெற்றபோதும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும்போதுமட்டும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.

ஏனெனில், அது தெற்கு சிங்கள மக்களை பாதிக்கும் என்று தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் அவதானம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கட்சி என்ற ரீதியில் எமது நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தநிலைப்பாட்டுடன், நாம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்க பொன்சேகா எதிர்ப்பு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலாக மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவது போன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உள்ளக அரசியல் குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, பாலத்தால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கண்மூடித்தனமாக வளர்ந்த நாடுகளின் கருத்துக்களை பின்பற்ற வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – ஐ.நா பிரதிநிதியிடம் ஜனாதிபதி உறுதி

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

நாட்டின் நிதி தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் கடன் மறுசீரமைப்பிற்கும் ஐ.நா. ஒத்துழைப்பை வழங்குவதாக மார்க் ஆன்ட்ரே தெரிவித்தார்.
இதன்போது வடக்கு – கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐ.நா.. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காக எதிர்காலத்தில் நாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் நெருக்கமாக செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.