கொழும்பு பேராயரின் மனுவை பரிசீலனைகு எடுத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த எழுத்தணை மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதன்போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்தது.

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவற்றை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளார்.

வெடுக்குநாறி மலை ‘வடமனான பர்வத விகாரை என பெயர் மாற்றம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமனான பர்வத விகாரை என பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பிற்பாடு மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்த போதும் அத்தடைகளை தாண்டி மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் 2018 ல் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட தடைவிதித்திருந்தனர்.

இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்பொருட் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்காள்ள அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்ற போது சிவலிங்கம் மற்றும் ஏனைய விக்கிரகங்கள் தூக்கியெறியப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்தது.

இந்நிலையில் குறித்த இடத்தின் பெயரும் வட்டமான பர்வத விகாரை என பௌத்த விகாரையின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சகல தரப்பினரின் ஒத்துழைப்பின்றி தனித்து தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழுத் தலைவர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமல்ல; எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தனித்து நடத்த முடியாது. அரசியலமைப்பு ரீதியில் தேர்தலுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். எனவே, சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எம் மீது மாத்திரம் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன எம்மை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் ஆணைக்குழு தயாராகவே உள்ளதாகவும் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்களில் தினம் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நிதியின்மை காரணமாக திட்டமிட்டபடி, தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தேவைக்காகவே ஆணைக்குழு இவ்வாறு செயற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் ஆணைக்குழுவை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து வினவியபோதே ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் ஆணைக்குழு என்பது அரசியலமைப்பு ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஏனைய நிறுவனங்களும் அவ்வாறே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்தலுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களும், திணைக்களங்களும் ஒத்துழைத்தாலன்றி தனித்து எம்மால் எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் பிரதான சிக்கல் நிதியின்மையாகும்.

உயர் நீதிமன்ற உத்தரவின் பின்னரும் நிதி அமைச்சினால் தேர்தலுக்கான நிதி விடுவிக்கப்படாமலேயே உள்ளது. அவ்வாறிருக்கையில் எவ்வாறு எம்மால் தேர்தலை நடத்த முடியும்? அரசாங்கத்துக்கு நிதி நெருக்கடிகள் காணப்பட்டால் வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்று தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லை.

வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மூலமொன்றோ அல்லது அமைச்சரவை யோசனையொன்றோ முன்வைக்கப்பட்டால் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ஆனால், நாட்டில் அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை. அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டுமெனில், அதற்கான நிதியையும் நிதி அமைச்சு அல்லது திறைசேரியிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், இதில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கவில்லை. எனவே, தனியார் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் நிதி நெருக்கடி தாக்கம் செலுத்துகின்றது. இவை தொடர்பில் சிந்திக்காமல் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதல்ல. உரிய காலத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு ஸ்திரமாகவுள்ளது என்றார்.

போர்க்குற்ற விவகாரம் – ஐ. நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழு கடும் அதிருப்தி

நாட்டில் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து தவிர கரிசைனை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு, அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் கடந்த 7 ஆம், 8 ஆம் திகதிகளில் நடைபெற்றது.இம்மீளாய்வின்போது இலங்கை தொடர்பில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்வருங்காலங்களில் இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய 12 பக்க இறுதி அறிக்கை மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவினால் வியாழக்கிழமை (24) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகச்சட்டம், 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டம், 2017 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம், 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீட்டுக்கான அலுவலகச்சட்டம், 2018 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம், 2022 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க காணி அபிவிருத்திச்சட்டம் ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த 2016 ஆம் ஆண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம் மற்றும் விசேட தேவையுடையோரின் உரிமைகள் தொடர்பான பிரகடனம் ஆகியவற்றிலும், கடந்த 2017 ஆம் ஆண்டு சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிகக்கொடூரமானதும் மனிதத்தன்மையற்றதுமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்திலும் இலங்கை இணைந்துகொண்டமையை மனித உரிமைகள் மீளாய்வுக்குழு வரவேற்றுள்ளது.

அதேவேளை இலங்கையில் தொடர்பான மீளாய்வின்போது அடையாளங்காணப்பட்ட கரிசனைக்குரிய விடயங்கள் மற்றும் அவற்றை நிவர்த்திசெய்வதற்கு அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய பரிந்துரைகளின் சுருக்கம் வருமாறு:

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையில் தொடரும் தாமதம் மற்றும் அதன் தற்போதைய நிலைவரம் குறித்து போதியளவு தகவல்கள் இல்லாமை என்பன கரிசனையைத் தோற்றுவித்துள்ளன.

எனவே அரசாங்கம் அதன் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்வதுடன், அதனூடாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதும் நிறைவேற்றதிகாரத்துக்கும் ஏனைய கண்காணிப்புக்கட்டமைப்புக்களுக்கும் இடையிலான நேர்த்தியான கடப்பாடு பேணப்படுவதும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அதேபோன்று மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் எதிர்காலத் திருத்தங்கள் ஊடாக இம்மறுசீரமைப்புக்கள் தன்னிச்சையான முறையில் நீக்கப்படாமலிருப்பதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

அடுத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ள போதிலும்கூட, உறுப்பினர்கள் நியமனத்தில் போதியளவு வெளிப்படைத்தன்மையும், பல்வகைமையும் பேணப்படாமையைக் காரணமாகக்கூறி தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டணியினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘பி’ நிலைக்குத் தரமிறக்கப்பட்டமை குறித்துக் கவலையடைகின்றோம்.

ஆகவே மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான தேசிய கட்டமைப்புக்களுக்குரிய நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுவதை உறுதிப்படுத்தவேண்டு;ம்.

மேலும் நாட்டில் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்துத் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம்.

நாட்டின் உள்ளக சட்டங்கள் போர்க்குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களையும், இனப்படுகொலையையும் குற்றமாக வரையறுக்காமை கவலைக்குரிய விடயமாகும்.

போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ள போதிலும், கடந்த 2006 – 2009 ஆம் ஆண்டுக்கிடையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை என இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளமையும், வவுனியாவில் இயங்கிய ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன தொடர்பில் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாமையும் கரிசனைக்குரிய விடயங்களாகவே இருக்கின்றன.

அதேபோன்று நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விசாரணை செயன்முறைகளில் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத்தரப்பினரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், தலையீடுகள் குறித்து விசனமடைகின்றோம்.

அத்தோடு போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முக்கிய நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் என்பன தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆயுதமோதலின்போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இறுதி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவான சட்டமொன்றின் ஊடாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் பாலினத்தை அடிப்படையாகக்கொண்ட மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டுவரல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், மரணதண்டனையை இல்லாதொழித்தல், அவசரகாலநிலையை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தைப் பாதுகாத்தல், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களிலும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMF உதவி இலங்கைக்கான நிரந்தர ‘பிணையெடுப்பு’ அல்ல – பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.

எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

‘அட்வகாட்டா’ அமைப்பு

இலங்கைக்கான 17ஆவது உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதி வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அல்லது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக கையிருப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உதவுவதே நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும்.

எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது.

ஆகவே, தற்போது சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைத் தொடர்ந்து முதலாவது கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதனையடுத்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்றிட்ட நிபந்தனைகள் என்பன பகிரங்கப்படுத்தப்படும். எஞ்சிய நிதி சுமார் 4 வருடகாலத்தில் வழங்கப்படும்.

இருப்பினும், அது நாணய நிதியத்தின் நிபந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இருப்பினும், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்வுதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று ‘அட்வகாட்டா இன்ஸ்டியூட்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பு

வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் பிரச்சினையின் அறிகுறிகளை தணிப்பதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்படும். மாறாக, அது அப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு தீர்வினை வழங்காது. அதேபோன்று இலங்கையை பொறுத்தமட்டில், இங்கு அடிப்படை பிரச்சினை நிர்வாகத்திலும், ஊழல் மோசடிகளிலுமே இருக்கின்றது என்பது தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிந்திருக்கிறது.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய செயற்றிட்டம் இப்பிரச்சினையை கையாள்வதற்கு தவறியிருக்கிறது என்று ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளியலாளர் ஸேர்கி லேனோ

இலங்கைக்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருப்பதுடன், முதற்கட்டமாக சுமார் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்றுக்கையிருப்பில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதுடன் அது அத்தியாவசிய பொருட்களின் உயர்வான இறக்குமதிக்கும், அதனைத் தொடர்ந்து மீட்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பொருளியலாளர் ஸேர்கி லேனோ தெரிவித்துள்ளார்.

பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க்

இலங்கைக்கு அடுத்துவரும் 4 வருட காலத்தில் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருக்கிறது.

கடந்த 1965ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன.

இலங்கைக்கு மீண்டுமொரு கடன் தேவையில்லை. மாறாக, கடந்த 1884 – 1950 வரையான காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்ற ‘நாணயச்சபை’ முறைமையே இலங்கையின் தற்போதைய தேவை என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் கழற்றி வீசப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்! அதிர்ச்சியில் மக்கள்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன.

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்தனர்.

இதன் பின்னர் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்தவருடம் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டதுடன், குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஆலயத்திற்கு சென்ற கிராமமக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு அழித்தெறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டிருந்தது. அத்துடன் பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியையும் கவலைகளையும், ஏற்ப்படுத்தியுள்ளது

வரிச்சீர்திருத்தங்களில் தலையிடப் போவதில்லை – சர்வதேச நாணய நிதியம்

அரசாங்க வருமானம் பாதிக்கப்படாத வகையில் வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம், இந்நாட்டின் தொழில் நிபுணர்களுக்கு உறுதியளித்துள்ளது.

வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதி தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

வரி சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை தொடர்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

குழுக்களை நியமிக்காமல் தேர்தலை முறையாக நடத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்டு செல்லும் நிலை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிரகாரம் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் பிரதம செயற்பாட்டாளர் டி.எம். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் குழுக்களை நியமிக்காமல் தேர்தலை முறையாக நடத்துவதற்கு தேவையான சூழலை தயாரிக்க வேண்டும் என ஐனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் விவகாரங்களை ஆராய்வதற்காக பிரதமர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் விவகாரங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிட்டடத்தக்கது.

மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காமல் நாணய நிதிய கடனுதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச ,சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை  உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இவ் உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இலங்கைக்கு கிடைக்கின்றது இதனால் சிறிது காலம செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி வெடிப்புக்களும் நடைபெறுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்பட்டமை இன,மதவாத்தின் உச்சக்கட்டம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்படுதல் என்பது இலங்கை அரசாங்கத்தின் இனவாதத்தினதும், மதவாதத்தினதும் உச்ச கட்டமாகவே தென்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது இல்லத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலார் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக குறிப்பிடுகையில்,

கச்சதீவானது இலங்கைக்கு திருமதி.இந்திராகாந்தி அவர்களால் கையளிக்கப்பட்ட பொழுது இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தல்,வலை காய விடுதல் மற்றும் ஓய்வெடுத்தல் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டதுடன் அங்கிருக்கும் அந்தோனியார் ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்துவது போன்ற ஏற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த ஆலயத்தின் திருவிழாவினை யாழ்ப்பாணம், பங்கு தந்தையர்கள் தலைமை தாங்கி நடத்துவதுடன் இலங்கையின் வடமாகாணம் மற்றும் திலகத்திலிருந்தும் மக்கள் பங்கேற்று வரும் நிலையில் இந்த முறை இடம்பெற்ற திருவிழாவில் என்றும் இல்லாதவாறு பௌத்த பிக்குக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கடற்படையின் உதவியுடன் அங்கு பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது அல்லது கட்டப்பட்டுக்கொண்டு வருவதுடன் வெடியரசன் கோட்டையும் பௌத்தர்களுடையது என கூறி கடற்படையினரால் அவற்றை பிரதிபலிக்கும் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக சிங்களவர்கள் வாழாத அல்லது செல்லாத கச்சத்தீவில் பௌத்த விகாரை கட்டப்படுவதானது வடக்கு கிழக்கில் மிக விரைவாக பௌத்தத்தினை பரப்புவதற்கான ஏற்பாடாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு இந்திய ஸ்வேரும் பார்வைர்வையாளராக இருக்குமாயின் எதிர்காலத்தின் கச்சத்தீவின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதில் உத்தரவாதம் இல்லை எனவும் ஐயம் வெளியிட்டுள்ளார்.

95 சதவிகிதமாக தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவது மற்றும் பௌத்த விகாரைகளை அமைத்து போன்ற விடயங்களை கட்டுப்படுத்த இந்தியா முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அனைத்து விடயங்களிலும் பாராமுகமாக இருக்கின்றதா என்ற கேள்வி இலங்கை தமிழர்களிடம் உள்ளதாகவும் அவ்வாறு இந்தியா அமைதி காத்தால் தமிழ் மக்களிடமிருக்கும் நம்பிக்கையும் பறிபோகும் எனவும் தெரிவித்துள்ளார்.