நிதி உள்ளிட்ட 4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிக்க தீர்மானம்

4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் உறுப்புரை 44(3) இன் கீழ், பிரதமருடன் கலந்தாலோசித்து, 4 அமைச்சுக்கள் தனது பொறுப்பில் இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர், தொழில்நுட்ப அமைச்சர், மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ஆகிய பொறுப்புக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிக்க தீர்மானித்துள்ளதாக, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குமாறு நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்கக் கோரி நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1987ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு வலியுறுத்தி, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகளும் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதன்போது ‘எமக்கு வேண்டும் தனி வீடுகள்’, ‘37000 வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கு’, ‘தோட்டத் தொழிலாளர் இந்த நாட்டின் பிரஜைகள்; அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும்’, ‘எமது நில உரிமையை உடனடியாக பெற்றுத் தாருங்கள்’, ‘பழமையான வீட்டு வாழ்க்கை போதும்’ போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 1987ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரொன்றில் கையொப்பங்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளும், நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடம், அஞ்சல் அலுவலகத்துக்கும் முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி ரணிலின் கட்டுப்பாட்டில் 4 அமைச்சுக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 4 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 44(3) பிரிவின் பிரகாரம், பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன ஜனாதிபதியின் கீழ் இயங்கும்.

இந்த 4 அமைச்சுக்கள் தவிர, பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் -நிமல் சிரிபால டீ சில்வாவுக்கு ரெலோ பதில்

பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் ரணில் அரசுடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும் என்று அண்மையில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் கு. சுரேந்திரன் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் என அறிக்கை ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படாமல் இருப்பதற்கு பிரதான காரணம் சிங்கள கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே. இதை தமிழ் மக்களுக்கு பாடம் எடுக்க முற்படும் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் பாராளுமன்றங்களில் முன்வைக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்தவர்கள் யார் என்ற வரலாற்றை இந்த நாடே அறியும். பல தசாப்தங்களாக ஆளும் கட்சிகள் ஒரு தீர்வை கொண்டு வருகின்ற பொழுது சிங்கள எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.

எதிர்க் கட்சிகள் தமிழர்களுக்கான தீர்வுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற பொழுது ஆளும் கட்சிக்குள் இரண்டாகப் பிரிந்து நின்று அதை எதிர்ப்பார்கள். தமிழ் மக்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள் இலங்கை அரசியலில் பிரதானியாக, தலைவராக, அமைச்சராக பதவியில் இருந்த பொழுது நடைபெற்ற விடயங்களே அதற்கு சான்றாக அமையும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ச அரசு காலத்தில் தமிழ் மக்களால் ஏகோபித்துத் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஜனாதிபதி இறுதி வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே தவிர்த்து வந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய தலைவராக அமைச்சராகப் பதவியில் இருந்தவரே நிமல் சிரிபால டி சில்வா.

அதேபோன்று நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடங்கியதாக ஒரு புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்படுவதாக இருந்தது. அந்த நேரத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையை சிதைத்து அரசியல் யாப்பு நிறைவேறாமல் குழப்பம் விளைவித்தது சிங்கள கட்சிகளே, தமிழர்கள் அல்ல என்பதையும் கோடிட்டு காட்ட விரும்புகிறோம். அப்போதும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்தரப்பில் மூத்த அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கக்கூடிய அதிகாரங்களை முற்று முழுதாக நடைமுறைப் படுத்துவதற்கு கூட சிங்களத் கட்சிகள் ஒற்றுமையாக முன் வருவார்களா? அதில் கூட தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பிரிந்து நின்று குரல் கொடுப்பவர்கள் சிங்கள கட்சிகளே.

இன்னும் வரலாற்றில் சிறது தூரம் பின் சென்றால் 1987ல் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அப்பொழுது ஆளும்கட்சியில் இருக்கும் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சியோடு சேர்ந்து நின்று எதிர்த்தார்கள். அது தமிழர்களுக்கான தீர்வு அல்ல. ஆனால் குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் தான் சிங்களக் கட்சிகள் குறியாக இருந்தன.

ஆக குறைந்தது உங்களோடு இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும் அதிகாரப் பகிர்வு கோரிக்கைகளையாவது நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா என்றால் அதுவும் இல்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சமக்ஷ்டி முறையில் அமைய வேண்டும் என்பதில் தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான அழைப்பு எந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டாலும் சமக்ஷ்டி முறையிலான தீர்வையே தமிழ் மக்களின் அனைத்து தரப்பினரும் அரசியல் தீர்வாக முன்வைத்திருப்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிறைவேற்றுவதற்கு சிங்கள கட்சிகளை ஓர் அணியில் வருவதே பிரதானம். ஆகவே அவர்களை ஒரணியில் வருமாறு கோரிக்கை முன்வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் விவாதம்

இலங்கை குறித்து மனித உரிமைகள் குழுவின் அடுத்த அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கமான, மனித உரிமைகள் குழுவின் நூற்று முப்பத்தி ஆறாவது அமர்வு நேற்று நிறைவடைந்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை அரசாங்கங்கள் செயற்படுத்துவதைக் கண்காணிக்கும், சுதந்திரமான நிபுணர்களின் அமைப்பாக மனித உரிமைகள் குழுவின்  நூற்று முப்பத்தி ஆறாவது  அமர்வு ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

 

அந்த அமர்வில், எதியோப்பியா, ஜப்பான், கிர்கிஸ்தான், நிகரகுவா, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு ஆகியன தொடர்பான அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மனித உரிமைகள் குழுவின் நூற்று முப்பத்தி ஏழாவது அமர்வு அடுத்த ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி தொடக்கம், மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில், இலங்கை, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் சாம்பியாவின் காலமுறை அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட காலத்தில் அதிபர் ரணில்விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவையின் அளவை அதிபர் 30 ஆக அதிகரிக்க முடியும்.

முன்னதாக, அரசாங்கத்தை நடத்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களை நியமிக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கிடைத்த தகவல்களின்படி, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.

சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு கேடு – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆவேசம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து கேள்வி எழுப்பிய கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதால் நாட்டிற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அடிபணிந்தால் இலங்கை எங்கே போய்நிற்கும்” என நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள், தங்கள் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உணர்திறன் இல்லாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

“நகர அபிவிருத்தி அதிகாரசபை (யுடிஏ) அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக ஒரு செய்தி வந்தது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கமானது வெளிநாட்டினருக்கு வீடுகளை நிர்மாணிப்பதா?

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அக்கறையற்றவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். இவர்களுக்கு வாக்களித்தால் என்னிடம் வீடுகள் கேட்டு வராதீர்கள்,” என்றார். தற்போது சொந்த வீடு இல்லாத பல குடும்பங்கள் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

கடன்வழங்குனர்களுடன் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளை இலங்கை பேணும் என உறுதியளிப்பு

இலங்கையின் கடன்வழங்குனர்களுடனான இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகளின்போது அனைத்து கடன்வழங்குனர்களுடனும் சமத்துவமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் தொடர்புகளைப் பேணுவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை மீள உறுதியளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்ட நிலையில், அதன்மூலமான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வது அவசியமாகும். அதற்கமைய கடன்களின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாதவையாகும்.

அந்தவகையில் அண்மையகால நுண்பாகப்பொருளாதார நிலைவரம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்கள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அதன் வெளியகக் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடன்வழங்குனர்களுடனான இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிகழ்நிலை முறையில் நடைபெற்றதுடன் இப்பேச்சுவார்த்தைகளுக்கு நிதியமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் தலைமைதாங்கினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ‘இப்போது இலங்கை மிகக்கடினமானதொரு காலப்பகுதியில் இருப்பதுடன் நுண்பாகப்பொருளாதார உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதற்காக இயலுமானவரை விரைவாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு முயன்றுவருகின்றோம் என்றார்.

Posted in Uncategorized

சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் – ஷங்காய் நகரில் வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமான ஐந்தாவது சீன சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி கண்காட்சியின் தொடக்க விழாவில் மெய்ந்நிகர் தொழிநுட்பத்தின் மூலம் காணொளியூடாக உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,

‘ எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர் சீன கம்யூனிசக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சீன சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி கண்காட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு ‘ஒரு பாதை – ஒரு மண்டலம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை இந்த கண்காட்சி வர்த்தக பன்முகப்படுத்தலிலும் மற்றும் உலகலாவிய ரீதியில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. இக்கண்காட்சி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சீன வர்த்தக சந்தைக்குள் நுழைவதற்கு முன்னெடுக்கும் முயற்சியின் ஆரம்பமாக அமையும். இதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆரம்பத்திலிருந்தே சீனா இதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. அது எமது நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பிரயோசனமாக அமைந்தது. எமது உணவு உற்பத்திகளை சீன சந்தைக்குள் ஸ்திரப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் கிடைக்கப் பெற்றது.

சீனாவுடனான எமது முதலாவது தொடர்பு இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் ஊடாகவே ஆரம்பமானது. அன்று அது மிக முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தமாக அமைந்தது. இவ்வாண்டுடன் அந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இவ்வாறு ஆரம்பமான தொடர்புகள் வர்த்தகம், முதலீடு, கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு, சுகாதாரம் என பல துறைகளில் விரிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு இரு அரசாங்கங்களுக்குமிடையிலான ஒட்டு மொத்த வர்த்தகப் பெறுமதி 3.4 பில்லியன் டொலர்களாகும். சீனாவானது இலங்கையின் பிரதான பொருளாதார மூலமாகும். இந்த தொடர்பினை மேலும் மேம்படுத்த வாய்ப்புள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தக் கண்காட்சியை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிந்தமை தொடர்பில் நான் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என்றார்.

இரட்டை குடியுரிமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் – பிரதி சபாநாயகர்

இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் உட்பட சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் இரட்டை குடியுரிமை உடையவர்களை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்ற நடவடிக்கை ஊடாக இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண முடியாது.குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு அரசியல் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆகவே இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பார்களாயின் இலங்கை பிரஜை எவரும் அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதாக பொது இடங்களில் குறிப்பிடுபவர்கள்,பொறுப்புடன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை பாராளுமன்றத்தின் ஊடாக வெளிப்படுத்த முடியாது என்றார்.