குருந்தூர் பகுதியில் விகாரை அமைக்க வேண்டுமென 46 அமைப்புக்கள் புத்தசாசன அமைச்சருக்கு கடிதம்

குருந்தூர் மலை விகாரை தொல்பொருள் பகுதியில் சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளுக்கு தடை ஏற்படுத்துவது நாட்டின் பொதுச் சட்டத்தையும், அரசியலமைப்பையும் சவாலுக்குட்படுத்தும். குருந்தூர் விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதியில் சட்டத்திற்கு முரணாக கோயில் ஒன்றை ஸ்தாபிக்க முயற்சிப்பது முற்றிலும் தவறானதாகும்.

குருந்தூர் மலை விவகாரம் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அளவிற்கு பாரதூரமாக செல்வதை தடுக்க பொறுப்பான தரப்பினர் சட்டத்திற்கமைய செயற்பட வேண்டும். இல்லாவிடின் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என பௌத்த மத அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளடங்களாக 46 அமைப்புக்கள் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

46 அமைப்புக்களை ஒன்றிணைத்த தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பு இந்த அறிக்கையை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் கட்சிகள் தலைவர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது. 46 பௌத்த மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாவது,

1933ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக சிலைகள் மற்றும் தொல்பொருள் சின்னங்களை கொண்ட குருந்தூர் மலை பகுதியின் 78 ஹேக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் காணி என அறிவிக்கப்பட்டது. அத்துடன் 1924ஆம் ஆண்டு நிலப்பரப்பின் விசேட தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த வரைப்படத்திற்குள் கோயில் மற்றும் தேவாலயத்தின் சிலை சின்னங்கள் விகாரைக்கு ஒதுக்கு புறத்தில் உள் குருந்தூர் குள பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

‘குருந்தக’ என்ற பெயரில் இந்த பௌத்த விகாரை கி.பி 100 – 103 காலப்பகுதியில் பல்லாடநாக என்ற அரசனால் நிர்மானிக்கப்பட்டது. மகாவம்சத்தின் சான்றுப்படி கி.பி 1055-1110 காலத்தில் முதலாவது விஜயபாகு அரசனால் இந்த விகாரை புனரமைக்கப்பட்டது. ஹென்ரி பாகரின் 1886 ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த தொல்பொருள் பூமி தொடர்பில் ‘ காலம் காலமாக நேர்ந்த அழிவுகளை காட்டிலும், இந்த பகுதிக்கு குடியமர்வதற்காக வருகை தந்த தமிழர்களினால் இந்த தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குருந்தூர் விகாரை மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதி முக்கியமான தேசிய மரபுரிமையாகும் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரை மற்றும் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் 1990 தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச கொள்கைக்கமைய இந்த இடத்தை தேசிய மரபுரிமையாக பாதுகாக்க மற்றும் இந்த பூமியின் அபிவிருத்தி பணிகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்துவது பொறுப்பான தரப்பினது கடமையாகும்.

தொல்பொருள் திணைக்களத்தின் சட்டப்பூர்வமான திட்டத்திற்கமைய விகாரையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.இதனை தொடர்ந்து இப்பகுதியின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்திற் கொண்டு தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறி அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்ட அரசியல் தரப்பினருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரச கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.பிரச்சனைகளை தோற்றுவிப்பவர்கள் பொது சட்டத்தை தமது கைகளில் எடுப்பது தவறான எடுத்துக்காட்டாக அமையும். இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இவர்கள் அடாவடித்தனமாக செயற்படுகிறார்கள்.

இதற்கு மேலதிகமாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நீதிமன்றத்திற்கும், சட்டமா அதிபருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது பாரியதொரு குற்றமாகும். சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட பௌத்த விகாரை உள்ள பூமியில் சட்டவிரோதமான முறையில் கோயிலை நிர்மாணிப்பதற்கு அவதானம் செலுத்தப்படுகிறது.

தேசிய தமிழ் அரசியல் டயஸ்போராக்களுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், போராட்டகாரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட தரப்பினருக்கும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி சாதகமாக உள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

குருந்தூர் மலை பகுதில் சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்லாவிடின் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்துள்ளோம். தேசிய மரபுரிமைகளை பாதிப்பிற்குள்ளாக்குபவர்கள் தேசிய மரபுரிமைகளை காட்டிக் கொடுத்தவர்களாக வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுவார்கள்

மரங்களை நடுகை செய்தல்,ஒரு தேசியச்செயற்பாடு – பொ. ஐங்கரநேசன்

கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டுமுதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு பூமி சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியுள்ளன. கடும் வறட்சி, காலம்தப்பிய பெருமழை, வேகமெடுக்கும் சூறாவளிகள், கடல்மட்ட உயர்வு, உயிரினங்களின் அழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்.

இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாயநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப்பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது.

மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஒர் அரசியற் சொல்லாடல் அல்ல. இது ஒரு இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது தமிழ்த்தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.

எனவே தமிழ்மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன்கூடிய ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும்.

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.

கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும். – இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்க ரெலோ தலைவர் கோரிக்கை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் மூலம் நேற்று (31.10.2022) பிரதமரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குமாறு நான் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இந்த விடயம் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேற்குறிப்பிட்ட விடயத்தில் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட சாதகமான முடிவு அனைவராலும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியதாகும்.

இந்த முடிவு இளைஞர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில் இந்த தீர்வை நான் சரியானதாகவே பார்க்கிறேன்.

இந்த முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது.

இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்திற்காகவும் போராட்டம் ஒன்றிற்கான அழைப்பினை இதன்பொழுது விடுக்கின்றோம்.

கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக வடகிழக்கில் தொடர்சியாக காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

இது தடுத்து நிறுத்தப்படவேண்டும் அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணியளவில் எமது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், எஸ் றாபின், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியா தொடர்ந்து உங்களுக்கு உதவி வழங்கும் – இந்திய தூதுவர்

மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் மனோ கணேசன் கூறியவாறு இலங்கையை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கி வருகின்றனர் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது. இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

வீடுகளின் நிர்மாணம் ஊடாகவும் புலமைபரிசில்கள் மற்றும் கல்வி ஊடாகவும் இந்தியா தொடர்ந்தும் உங்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது. நாங்கள் இங்கு வந்ததில் இருந்து இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றோம்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் இந்திய மக்கள் அறிவார்கள். நான் இன்று ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்திய மக்கள் இலங்கையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது வீடுகளை நிர்மாணிப்பதில் பழனி திகாம்பரம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று இந்தியாவின் உதவி மூலம் உணவு, எரிபொருள் மருந்து உரம், ஆகியவற்றுடன் அரசி மாத்திரமல்லாமல். கோதுமை மாவும் இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இளம் பிள்ளைகள், இளம் சிறுவர்கள், மற்றும் தாய்மாருக்கான பால்மாவை வழங்குவதற்கும் இந்தியா தயாராக உள்ளது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

அதேபோன்று நீங்கள் கேட்காமலேயே நண்பன் செய்வதை போன்று இந்தியாவும் உதவி வழங்கும். உங்களின் நண்பான இந்தியா இருக்கும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகின்றேன். இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கும் இடையில் மிகவும் பலமான உறவு காணப்படுகின்றது.

நீங்கள் கட்டாயம் இந்தியாவிற்கு வருகைதர வேண்டும். அடிக்கடி இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என கோருகின்றேன் என்றார்.

பேரினவாத முயற்சிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில், தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எந்த நோக்கத்துக்காக இந்த தகவல்கள் திரட்டப்படுகின்றன என்பது தொடர்பில் முன்னாள் போராளிகள் மட்டுமல்லது பொதுமக்களும் அச்ச உணர்விலேயே உள்ளனர். இது தொடர்பில் நீதி அமைச்சு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் அத்தோடு வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி மக்களுக்குத் தெளிவூட்டல் பெற்றுக்கொடுப்பதோடு பாதிப்பு ஏற்படும் எனின் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டான செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும்.

கொழும்பில் வெள்ளவத்தை போன்ற தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் வீடுகளில் தங்கி இருப்போர் தொடர்பாக பொலிஸார் தகவல் திரட்டுகின்றனர் எனவும், அவ்வாறான தகவல் படிவங்களை எவரும் நிரப்பி கொடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பகிரங்கமாகக் கூறியதோடு இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடனும், ஜனாதிபதியுடன் வினவுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழர்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தமிழர் பகுதியில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றன என்று கூறப்படுகின்றது. முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும்.

இது உள ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு சுயமாகவே முன்னாள் போராளிகள் தமது ஜனநாயகச் செயற்பாட்டை மட்டுப்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். இந்த விடயம் மனித உரிமை மீறலாகும். அண்மையில் அரசு கொண்டுவர முனைந்த புனர்வாழ்வு தொடர்பான திருத்தச் சட்டம் சமூகத்தில் எழுந்த சலசலப்பும் மக்களின் எதிர்ப்பும் சட்டச் சிக்கலும் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்தச் சட்ட அமுலாக்கத்தை வேறு வகையில் நிறைவேற்றுவதற்காக முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா. தெற்கின் போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாகப் பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிரான வீதிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சகாக்கள் மூன்று பேரையும் விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா. இத்தகைய தகவல் திரட்டும் ஏற்பாடு முன்னாள் போராளிகளின் ஜனநாயக ரீதியான மாற்று அரசியல் செயற்பாட்டையும் அது தொடர்பான சிந்தனையையும் தடுக்கும். இது அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் சுதந்திர நடமாட்டத்தைக் பாதிக்கும்.

அது மாத்திரமல்ல தற்போது மறைமுகமாகப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இயங்குகின்ற நிலையில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டும் செயற்பாடு நேரடியாகவே அரச படைகள் தமிழர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்கவும், தமிழர்கள் வாழும் கிராமங்களைத் திறந்த வெளி புனர்வாழ்வு கிராமங்களாக்கவும் பேரினவாதம் முயற்சிக்கலாம். இது உடனே தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒருங்கமைப்பில் யாழில் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை (ஒக் 31) நடைபெறுகிறது.

இந்த நடமாடும் சேவையானது யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் இடம்பெறுகிறது. இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

இச்சேவையில் நீதி அமைச்சர், நீதி அமைச்சரின் செயலாளர் வசந்த பெரேரா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மேலதிக செயலாளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த நடமாடும் சேவை நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்றியுள்ளன.

குறித்த நடமாடும் சேவையானது நாளை செவ்வாய்க்கிழமை (நவ 1) கிளிநொச்சி திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவை சேர்ந்தவர்களும், கிளிநொச்சியில் நாளை நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் தமது மேற்படி தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு

பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதி ஆகிய இரு தினங்கள் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

இரண்டாவது மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம், இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தமாக இன்று முதல் (31) அமுலுக்கு வருகிறது.

Posted in Uncategorized

நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவும் இந்தியாவும் தமது நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு முன்னர் இரண்டு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுமாறு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களான சீனா மற்றும் இந்தியாவுடனான கடனை மறுசீரமைக்காமல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முன்வைக்கப்பட்ட 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விடுவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், சீனாவுடனான ஆரம்பக் கருத்துப் பரிமாற்றத்தின் போது, ​​கடனை மறுசீரமைப்பதற்கு முன்னர், தம்முடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும் என, சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இலங்கை 1998ஆம் ஆண்டு இந்தியாவுடன் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், தங்களுக்கும் இதேபோன்ற வாய்ப்பு தேவை என்று சீனா கருதுகிறது.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னர் எக்டா உடன்படிக்கை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என இந்தியா இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நாட்டில் இந்திய முதலீடுகள் மற்றும் சேவை விநியோக வணிகங்களுக்கு வரி விலக்கு அளிக்கிறது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும் முடிவடையும் வரையில் சீனாவும் இந்தியாவும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்காது என்று தெரிய வந்துள்ளது.

இரு நாடுகளுடனான கடனை மறுசீரமைக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வழங்குவது மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளுக்கும் நீதி அமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச,

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையே பின்பற்றி வருகிறோம்.

அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.