சந்திதி ஆலய சூழலில் தேவலயம் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் தவிசாளர் நிரோஷ் மறுப்பு

சந்நிதி ஆலயத்திற்கு அருகில் தேவாலயம் அமைப்பதற்கு நான் அனுமதி வழங்கியதாக வெளியாகிய செய்திகளில் உண்மை கிடையாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். முறைப்படியாக வீடு ஒன்றிற்கே அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவ் அனுமதியின் பிரகாரம் அமைக்கும் வீட்டை தேவாலயமாக மாற்றினால் உரிய சட்ட நடவடிக்கையினை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபற்றி முழுமையான விபரம் வருமாறு, அச்சுவேலி ஊடாக சந்நிதி செல்லும் வீதியில் பிரதேச சபையில் விண்ணப்பித்து வீட்டிற்கான கட்டிட அனுமதி ஒருவரினால் பெறப்பட்டுள்ளது. அவ்வாறாக அனுமதி பெற்றவர் கட்டம் ஒன்றை அமைக்க முயற்சித்த போது, சந்நிதி ஆலய நலன்விரும்பிகள் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தேவாலயம் அமைக்கப்படுவதாக என்னிடம் முறையிட்டனர். அம் முறைப்பாடுகளில் ஒன்று தனது நெருங்கிய உறவினர் காணியில் மோசடியாக கட்டிடம் அமைக்கப்படுவதாகவும் அமைந்திருந்தது.

முறைப்பாடுகளின் பிரகாரம் எமது உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க சென்றபோது கட்டிடம் அமைப்பவர் முறைப்படி வீடு அமைப்பதற்கான அனுமதி பெற்றிருந்தமை தெரியவந்தது. ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்ட அனுமதியை முறைப்பாட்டின் பிரகாரம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியபோது, விண்ணப்பதாரி காணியை முறைப்படி பெற்றுள்ளமைக்கான ஆவணங்கள் எமக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கும் மேலதிகமாக, வீடு என்ற போர்வையில் தேவாலயம் அமைகின்றதா என ஆராயுமுகமாக, விண்ணப்பதாரியை நான் நேரில் அழைத்து சபையில் விளக்கம் கேட்டபோது – தான் ஒரு இந்து மதத்தினைச் சேர்ந்த முன்னாள் போராளி எனவும் தான் வாழ்வதற்காக பலரிடம் உதவி பெற்று தனக்கான வதிவிடம் ஒன்றை அமைப்பதாகவும் அவர் என்னிடம் உறுதியளித்திருந்தார்.

அனைத்து மதங்களின் உரிமைகளையும் மதிப்பவனாக கடமையாற்றும் நான் மேற்படி விண்ணப்பதாரியிடம், செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு அண்மையான பகுதி ஆலய திருவிழா காலங்களில் ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுத்தப்படும் முழுமையாக இந்துக்களைக் கொண்ட சமய சம்பிரதாயங்களுடனும் ஆலய நடவடிக்கைகளுடனும் தொடர்பான பகுதி என்பதன் அடிப்படையில் எனக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரமும் தாங்கள் அப்பகுதியில் தேவாலயம் அமைத்தால் அது சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்பதை தெரிவித்திருந்தேன். எனவே அவ்வாறாக எச் சந்தர்ப்பத்திலும் தாங்கள் செயற்பட முடியாது எனவும் அறிவுறுத்தியிருந்தேன். அதற்கு விண்ணப்பதாரி முழுமையாக தான் இணங்குவதாகவும் சட்டப்படி தான் குடியிருப்பதற்கான இல்லத்தினையே அமைப்பதாகத் தெரிவித்திருந்தார்.

தேவாலயம் அமைக்கப்படுவதாக சந்தேகித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதனால் விண்ணப்பதாரி சபையின் அனுமதிக்கு முரணாக எதாவது கட்டிட வேலைகளைச் செய்கின்றாரா என்பது பற்றி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பல தடவைகள் எனது அறிவுறுத்தலின் பிரகாரம் சோதனையிட்டுள்ளனர் என்பதுடன் எனது பதவி முடிவுற்றதன் பின்னர் சபையின் செயலாளரிடம் அப் பொறுப்பினை கையளித்துள்ளேன்.

எல்லோருடைய மத சுதந்திரங்களையும் நான் மதிக்கும் அதேவேளை சமயம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்க்கின்றேன். ஆகவே சில வேளை எவராவது வீடு ஒன்றிற்கு சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளியைப் பயன்படுத்தி அனுமதி பெற்றுவிட்டு அதனை தேவாலயமாகவோ அல்லது வேறு எந்த நோக்கம் கருதியதாகவே பிரதேச சபைச்சட்டத்தில் பயன்படுத்த முடியாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கின்றேன். அவ்வாறான நிலையில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க பொறுப்புடையது.

இந்த மேற்படி விண்ணப்பதாரி தேவாலயம் அமைக்கின்றார் என முறைப்பாடு கிடைக்கப்படுகின்றன என்பதை வைத்துக்கொண்டு, நாம் அவர் எதிர்காலத்தில் அக் கட்டிடத்தை தேவாலயமாகப் பயன்படுத்துவார் என்ற சந்தேகங்களின் அல்லது எதிர்வுகூறலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் முடியாது. தவறு இடம்பெற்றாலே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.
இந் நிலையில் தவிசாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தவிசாளரினாலேயே அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறப்படுவது அரசியல் நோக்கம் கொண்ட உண்மைக்குப் புறம்பான ஊடக தர்மத்திற்கும் அப்பாற்பட்ட முயற்சி என்பதையும் கேடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

உள்ளுராட்சி மன்றம் ஒன்று பிரஜை ஒருவர் வதிவிடத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்து சட்ட ரீதியிலான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த நிலையில் அனுமதிக்க முடியாது என கட்டிட அனுமதியை மறுக்க முடியாது. அது சட்ட மீறலும் மனித உரிமை மீறலுமாகும். அதேவேளை வதிவிடத்திற்கான அனுமதியைப் பெற்றவர் அதனை துஸ்பிரயோகம் செய்து வேறு ஒரு தேவைக்கு கட்டிடத்தினைப் பயன்படுத்துவாராக இருப்பின் அது சட்டரீதியில் தடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் அமைப்பதாயின் மத அலுவல்கள் அமைச்சின் பரிந்துரை கட்டிட அனுமதிக்கு அவசியமாகும் எனவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான பிரேரணை முன்வைக்க உள்ளதான செய்தி பொய்யான செய்தி – மனோ கணேசன்

ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (19.04.2023) மனோ கணேசன் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது திரித்துக் கூறப்படும் பொய்யான செய்தி. இச்செய்தி, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்ததாகும். அத்துடன், இச்செய்தி ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் வந்தது.

மற்றும், ஐக்கிய மக்கள் கூட்டணி சக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.

தேசிய அல்லது எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கு ஏற்றுமதிக்கும் தமக்கும் தொடர்பில்லை – சீன அரசாங்கம்

இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என்றும், எந்தத் தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பத்தை தாம் பெறவில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்த உறுப்பினராகவுள்ள சீனா, 1988 ஆம் ஆண்டின், அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சட்டம் அமுலாக்கத்தில் சிறந்த நாடுகளில் சீனாவும் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுச்சேவைக்கான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்; வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பால்மா விலையை மேலும் குறைக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக முகநூலிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடான மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னதாக நாட்டில் 170 இற்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.பண்ணை பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு தினத்தில் அன்று தீவக நுழைவாயிலில் நயினாதீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸாசாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சிலையுடனு தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு கட்டளை விடுதிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சிறிகாந்தா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸாரின் வழக்கீட்டு தகமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் குறித்து கேள்வி எழுப்பி இருவரும் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இதனை அடுத்து எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர், சட்டத்தரணி சிறிகாந்தா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கிறார் பாரதப் பிரதமர்

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் திபேத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவும் பங்கேற்பார் என எதிர்பார்ப்பதாகவும், இன்னும் அவரின் வருகை உறுதிச்செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கலாசார அமைச்சு மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 150 பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்து 171 பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் வியாழன் முதல் காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் சார்ந்த ஒன்றுகூடல்களுக்கு மாத்திரமே அனுமதி

கொழும்பு – காலி முகத்திடலை பொது மக்கள் இடையூறு இன்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை 220 மில்லியன் செலவில் காலி முகத்திடலை அபிவிருத்தி செய்யும் பணியை இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து புனரமைப்புக்காக 6.6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் அதிகளவில் கூடினால் காலி முகத்திடலின் அழகைப் பேண முடியாத நிலை ஏற்படும் என்பதால் 20ஆம் திகதி முதல் சமய நிகழ்வுகளுக்கு மாத்திரம் காலி முகத்திடலைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.