தமிழர்களின் நில அபகரிப்பு பிரச்னைக்கு தீர்வு அவசியம்; மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தல்

இலங்கையின் தமிழர் பகுதியான வடக்கு, கிழக்கில் தொடரும் நில அபகரிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் தொடர்பில் 42ஆவது மீளாய்வு நடக்கிறது. இதில் பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சைமன் மான்லி சி. எம். ஜி. இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

2020 செப்ரெம்பரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதங்கள் தொடர்பான ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப், கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வு கள் மீதான ஒடுக்குமுறையானது மீண்டும் மன உளைச்சல் மற்றும் அந்நியப்படுத்தலை – உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவுகளை – அனுபவங்களை நினைவுகூரும் வாய்ப்பை இது மறுக்கிறது. படையினரால் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் துக்கமடைந்த குடும்பங்கள், சீருடையில் இருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை புதைக்க அல்லது அழிக்க வேண்டிய அவசியம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர, இலங்கை தனது அனைத்து சமூகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்று மான்லி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான அடக்குமுறைகள் – கண்காணிப்புகள் இருப்பினும் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்காக வடக்கு – கிழக்கு முழுவதும் தமிழர்கள் ஒன்றுகூடி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் நில அபகரிப்பு செய்கின்றமை தொடர்பான கவலைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவில் இராணுவம் 16 ஆயிரத்து 910 ஏக்கருக்கும் அதிகமான பொது மற்றும் தனியார் காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. இந்த இடங்களில் குறைந்தபட்சம் 7 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 மார்ச்சி ஓக்லாண்ட் இன்ஸ்ரிரியூட் வெளியிட்ட அறிக்கை, முல்லைத்தீவில் அளம்பில் தொடக்கம் கொக்கிளாய் வரையான 15 கி. மீற்றர் தூரத்தில் 5 கடற்படைதளங்கள் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதாகக் கூறி இராணுவம், தொல்பொருள் திணைக்களம் தமது தாயகத்தை தொடர்ந்து கைப்பற்றுவதற்கு எதிராக தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் மான்லி வெளிப்படுத்தியுள்ளார்

அரசும் தேர்தல் திணைக்களமும் பொதுமக்களை ஏமாற்றக்கூடாது – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக்கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ரெலோ கட்சியின் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் தேர்தல் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறும், தேர்தல் நடத்துவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் இல்லை எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களம் தேர்தலை நடத்துவதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது. வேட்பாளர்கள் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சிந்தனையே உள்ளது.

ஆகவே, தேர்தல் திணைக்களம் தேர்தலை வைப்பதாயின் உடனடியாக தனது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும். தற் போது 9 ஆம் திகதி தனது கருத்தை சொல்வதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பது தெரியாமல் இருக்கு. தேர்தல் வருமா, வராதா என கட்சிகளும், வேட்பாளர்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் செய்யக் கூடாது. ஆகவே, இறுதி முடிவை 9ஆம் திகதியாவது அறிவிக்க வேண்டும் – என்றார்.

தேர்தலை பிற்போடும் உத்தியை சுமந்திரனிடமே ரணில் கற்றார் – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

கருணாவிடமிருந்து பெற்ற இரகசியங்களை விடுதலைப் புலிகளை அழிக்க அரசாங்கம் பயன்படுத்தியதை போல, சுமந்திரனிடமிருந்து கற்ற விடயங்களை கொண்டு ரணில் தேர்தலை பிற்போட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) . தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கள தலைவர்கள் எங்களிடமிருந்தே பலவற்றை கற்றுக்கொண்டு, எங்களிடமே பரீட் சித்துப் பார்க்கும் நிலைமையுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைப் பற்றி நாங்கள் அனைவரும் அறிவோம். அவர்களின் புலனாய்வுப் பிரிவு பரந்துபட்டு, மிகவும் வித்தியாசமாக இருந்தது.

எனினும், கருணா 2004இல் புலிகளில் இருந்து பிரிந்து சென்று, இலங்கை இராணுவத்திடம் அந்த புலனாய்வுத் தந்திரங்களை கூறியபடியால், இன்று இலங்கை பாதுகாப்பு பிரிவினர் மிகப் பலமான புலனாய்வு கட்டமைப்பை வளர்த் துள்ளனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் 5 வருடங்களாகவும், வட மாகாண சபை தேர்தல் 4 வருடங்களாகவும் நடக்கவில்லை. 2016ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சிக்குள் சுமந்திரன் போன்றவர்களுடன் முரண்பட்டதால், க. வி. விக் னேஸ்வரன் தமிழ் தேசிய கூட் டமைப்பை விட்டு வெளியேறியிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக இளைஞர் பட்டாளம் திரண்டு, அவரது பதவியைக் காப்பாற்ற போராடினார்கள்.

2018ஆம் ஆண்டு வட மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிந்ததும், அவர் மீண்டும் போட்டியிட்டால் பெரு வெற்றியீட்டுவார் என்ற காரணத்தால் இருக்கலாம் ரணில் பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 50-50 என தேர்தல் முறை மாற்றப்பட்டு, எல்லை மீள்நிர்ணய விவகாரத்தால் மாகாண சபை தேர்தல் நடத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை ரணிலுக்கு சொல்லிக் கொடுத்தது சுமந்திரன். அந்த சட்டமூலத்தை உருவாக்குவதற்கு முக்கிய பாத்திரமாக இருந்தவர் சுமந்திரன். அப்போது கற்றுக்கொண்டவற்றை வைத்து, இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற் போட ரணில் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் – என்றார்.

அரச அதிகாரிகளை அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் அவர்களை அழைக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் நேற்று (03) வழங்கிய தீர்ப்பிற்கமைய, நிதி அமைச்சு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி குறித்து எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அறிவிப்பதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இந்தியன் ஒயில் நிறுவன எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு நேற்று (03) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத திருகோணமலை எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையம் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை IOC முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா வரவேற்றதுடன், இந்தியன் ஒயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலக்கும் ஆலையையும் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

எண்ணெய் களஞ்சிய முனையத்தில் அமைந்துள்ள அதிநவீன ஆய்வுக்கூடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அண்மையில் மேம்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உள்நாட்டு கிரீஸ் உற்பத்தி ஆலையையும் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடாந்தம் 3,000 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட இந்த கிரீஸ் உற்பத்தி ஆலையானது நாட்டின் மொத்த கிரீஸ் தேவையையும் பூர்த்தி செய்யும் என்பதோடு, தற்போது கிரீஸ் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச்செலாவணியை சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்ல இந்தியன் ஒயில் நிறுவனம் மேற்கொண்ட அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF பாராட்டு

கொள்கை வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் குறித்த தீர்மானம் பொருத்தமான நடவடிக்கை எனவும், பணவீக்க இலக்குகளின் கீழ் அமைக்கப்பட்ட தமது நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இது அமைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத்தின் சிரேஷ்ட பிரதானி  Peter Breuer, இலங்கைக்கான செயற்றிட்டத்தின் பிரதானி Masahiro Nozaki ஆகியோர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கத்தின் வீதம் குறைவடைந்து வருகின்ற போதிலும், வறிய மக்களை  பாதிக்கும் வகையில் தற்போதும் உயர் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் நடப்பு போக்கினை மாற்றியமமைக்கக்கூடும் என்பதுடன், பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், கொள்கை வட்டி வீதத்தை அதிகரித்தமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பணவீக்கத்தை விரைவாகக் குறைக்கும் மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை வௌிப்படுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், ஒற்றை இலக்க பணவீக்கத்தை நோக்கி உறுதியாக நகர்வதை இது எடுத்துக்காட்டுவதாகவும் நாணய நிதியம் கூறியுள்ளது.

உறுதியான பணவீக்க வீழ்ச்சியானது சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க உதவிபுரியும் என்பதுடன், பாரிய வணிக நிறுவனங்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்குமான நிதி நிலைமைகளை இலகுபடுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதிய செயற்றிட்டத்தை இந்த மாதத்திற்குள் செயற்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நேற்றைய (03) நாணய மீளாய்வுக் கூட்டத்தின் போது நம்பிக்கை வௌியிடடமையும் குறிப்பிடத்தக்கது.

புலனாய்வு தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்: கம்மன்பில

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்’ ஒன்றை ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வந்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் உள்ளிட்ட 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அதில், இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ‘ஒன்றை ஸ்தாபித்தல், இரண்டாவது விஞ்ஞான பூர்வ குடியகழ்வு கட்டுப்பாட்டு முறைமையை இலங்கை விமான நிலையங்களில் ஸ்தாபித்தல், மூன்றாவது இலங்கையுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு தொலைபேசி வலையமைப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளல் மற்றும் சோபா ஒப்பந்தத்தை விரைவாக கைச்சாத்திடல் உள்ளிட்ட நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச தலைவர்களுக்கு வழங்காத உயர்பட்ச பாதுகாப்புடன் கடந்த மாதம் 14ஆம் திகதி, அமெரிக்காவின் 22 முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒரு வருடம் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சி – பவ்ரல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முறையை மாற்றுவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் மோசமான முறையில் தலையீடு செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டியதில்லை என குறிப்பிட்ட அவர், தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், அதனால் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இதன் மூலம் ஏற்படப்போவதில்லை என தெளிவுப்படுத்தினார்.

வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடம் இலங்கை – ஃபோர்ப்ஸ்

ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக தொடர்ந்து பலரதும் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.

உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும் தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேனப் கோடில் இருந்து டொமினிக்கன் குடியரசு வரை திமிங்கலங்களை பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் மாத்திரமே எளிதில் நீலத் திமிங்கலங்களை காண முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

13ஐ எதிர்க்கும் தேரர்களின் பின்னால் அந்நிய சக்திகள்! – அர்ஜூன் சம்பத்

அரசியலமைப்பின் 13ஆவது சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது, அதனை எரிப்போம் என்று கூறும் பௌத்த துறவிகளின் பின்னால் ஏதோ ஒரு அந்நிய சக்தி இருக்கலாம் என இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் நிறுவுனரும் அதன் தலைவருமான அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இந்திய திருநாடு இலங்கையிடம் முன்வைத்திருக்கின்றது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பாரத பிரதமர் நரேந்திர மோடி இவர்களெல்லாம் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஆனால், உடனடியாக இலங்கையில் அதற்கொரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இங்கு இருக்கக் கூடிய பௌத்த துறவிகள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என தெரிவித்து இங்கிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஓர் அழுத்தத்தை பிறப்பிக்கின்றார்கள்.

சொல்லப்போனால் ஒட்டுமொத்த பௌத்த மக்களினுடைய பிரதிநிதிகள் அவர்கள் மட்டுமே அல்லர். அதாவது 13ஆவது சீர்த்திருத்தத்தை எரிக்கின்றேன் என்று சொல்பவர்கள் மட்டும் அல்லர். அவர்கள் வேறு ஏதோ அந்நிய சக்திகளால் தூண்டி விடப்பட்டு இதனை செய்கின்றார்கள். இதற்குள் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கின்றது. உண்மையாக 13ஆவது திருத்தம் என்பது பௌத்தர்களுக்கு எதிரானதா என்று கேட்டால் கிடையாது. சிங்கள மக்களுக்கும் எதிரானது கிடையாது. இது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே ஒரு தீர்வு.

13ஆவது திருத்தம் வலியுறுத்தப்படுவது இன்று நேற்று அல்ல. ஜெயவர்த்தன அவர்கள் ராஜிவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாட்டினுடைய பிரதிநிதிகள் கையெழுத்திட் டுள்ளனர்.

எனவே இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது இலங்கையினுடைய பொறுப்பாகும், சில மத சார்பானவர்கள் ஏதோ சொல்கின்றார்கள் என்பதற்காக அதனை நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்க முடியாது- என்றார்.