IMF – இலங்கை உடன்படிக்கை : மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பிற்போடப்படும் என சில தரப்பினர் முன்வைக்கும் கூற்று அடிப்படையற்றது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு உரிய முன்மொழிவை சமர்ப்பிப்பதே மத்திய வங்கியின் இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த இலக்கை இழந்தால், 2023 ஜனவரியில் அதை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர

நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் வரலாற்றில் இருந்து செய்த உயிர் தியாகத்தை ஒவ்வொரு இனத்தின் தேவைக்காகவும், ஒருசிலரின் தேவைக்காகவும் விட்டுக் கொடுத்து நாட்டை பிளவுப்படுத்த முடியாது என நாடளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொட்பில் பாராளுமன்றத்தில் நேற்று அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அமுல்படுத்தியது. இலங்கையர்கள் அதனை கோரவில்லை.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, அதிகாரத்தை பிரயோகித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்,ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கும்,நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்பில்லை.

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை,அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம். ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை. சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள், தியாகம் செய்தார்கள். ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார்.

ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஒவ்வொருவரின் தேவைக்காக மலினப்படுத்த முடியாது. மாகாண சபைக்கு முழுமையாக எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

மாகாண சபை என்பது வெள்ளை யானை. ஒவ்வொரு இனத்தவரின் தேவைக்காக நாட்டை பிளவுப்படுத்த முடியாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும்” என்றார்.

இலங்கைக்கான சீனத் தூதுவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்துள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான கடன் பிரச்சினை, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், நேரடி முதலீடு, வரலாற்று உறவு, புதிய ஆற்றல், சுற்றுலாத் துறை மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வியட்நாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை!

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8ஆம் திகதி பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில் கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது யப்பான் மற்றும் சிங்கப்பூர் கடற்படையினர் காப்பாற்றி வியட்நாம் கொண்டவரப்பட்டு அவர்கள் அங்கு தற்காலிக அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்த நிலையில் அவர்களை காப்பாற்றி அந்த நாட்டிலுள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்ப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பாரிய தொகையொன்றை கோரி வருவதாகவும் வியட்நாமிலுள்ள இலங்கை அகதியொருவர் தெரிவித்தார்.

குருந்தூரில் சட்டவிரோத பெளத்த கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் பணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று இன்று (24) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (24) முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு இலக்கம் AR / 673 வழக்கின் மீதான கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில் தொல்லியல் ஆய்விக்கு எனும் பெயரில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டு பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதிவாதிகளாலும் வழக்கு தொடுனர்களாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளை நடைபெற்று வந்துள்ளது.

இதன் தொடர்சியாக இந்த வழக்கில் பல்வேறு கட்டளைகளை நீதிமன்றம் வழங்கி வந்த நிலையில் அந்த கட்டளைகளையும் மீறி பௌத்த கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்திருந்தன.

இதன்படி கடந்த 19.07.2022 அன்று மன்று கட்டளை ஒன்று வழங்கி இருந்தது. அதாவது 12.06.2022 அன்று எந்த நிலையில் குருந்தூர் மலை பிரதேசம் இருந்ததோ அங்கு இடம்பெற்றுவந்த கட்டுமானங்கள் இருந்ததோ அந்த நிலையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும் புதிதாக மேற்கொண்டு கட்டுமானங்களை செய்யமுடியாது என்றும் கட்டளை வழங்கி இருந்தது.

அத்தோடு கட்டுமானப்பணிகள் இடம்பெருவரும் குருந்தூர்மலைக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி . சரவணராஜா மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.

இருந்த போதிலும் அந்த கட்டளையினையும் மீறி அங்கு கட்டுமானப்பணிகள் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர்மலை பகுதியில் போராட்டம் செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகளும் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது .

இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக இன்று தவணையிடப்பட்டிருந்த நிலையில் 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையினை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

ஆனால் ஜூலை மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு மாறாக குருந்தூர்மலை பகுதியில் பௌத்த கட்டுமான பணிகள் பௌத்த பிக்கு மற்றும் இராணுவத்தினரின் அனுசரணையோடு தொல்லியல் திணைக்களத்தால் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவை பதவியில் அமர்த்தவே ஈஸ்டர் தாக்குதல்- சந்திரிகா குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே, 2019 இல் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

குற்றச்சாட்டுகளை நம்புவதாக கூறிய சந்திரிகா, இந்த விடயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துவிட்டு, அரசியல் ஆதாயத்திற்காக சுதந்திரக் கட்சியை பயன்படுத்த ராஜபக்ஷர்கள் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

ஆபத்தான நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வு – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் கடன் வழங்குநர்கள் விரைவில் பதிலொன்றை வழங்காவிட்டால், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அபாயத்தை எதிர்நோக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடன்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் இணங்குவது அவசியம் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனூடாக சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விரைவில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் மனித உரிமை மீறல்களை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச நாணய நிதியம் தனது நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியரின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய முன்னாள் அமைச்சர்

கொழும்பு 7 இல் உள்ள வீடொன்றின் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபையை சேர்ந்த ஊழியரின் கழுத்தை பிடித்து முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளியே தள்ளிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் பாரிய தொகை மின்கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பது தொடர்பில் பல தடவை தெரியப்படுத்திய நிலையில், கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மின்சாரத்தை துண்டிக்க சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்தில் நின்ற முன்னாள் அமைச்சர் மின்சார சபை ஊழியர் ஒருவரின்  கழுத்தைப் பிடித்து, அவரை வெளியில் தள்ளியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளை நோக்கி ரணில் அடித்த பந்து

புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில், அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்து வந்தால், பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இதன்மூலம், தமிழ்க் கட்சிகளை நோக்கி, பேச்சுவார்த்தை என்கிற பந்தை, ரணில் உதைத்திருக்கின்றார்.

இந்தப் பந்தை தமிழ்க் கட்சிகள் தங்களுக்கிடையில் எப்படி வெற்றிகரமாக கையாண்டு, ரணிலுக்கு எதிராக க ோலாக மாற்றப் போகின்றன என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதை, தென்இலங்கையின் ஆட்சித் தரப்புகள் எப்போதும் விரும்புவதில்லை. ‘ஒரே இலங்கை; ஒரே ஆட்சி; பௌத்தத்துக்கு முதலிடம்’ என்பனதான், தென்இலங்கையின் ஒற்றை நிலைப்பாடு. இதைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த முன்முயற்சிகளையும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நினைப்பார்கள்.

சர்வதேச ரீதியில் இலங்கை மீது பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டாலன்றி, உள்ளக இன முரண்பாடுகள் குறித்தோ, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்தோ, தென் இலங்கை ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தலைப்பட்டதில்லை.

சர்வதேச அழுத்தம் அல்லது போர் முனையில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களில், சமாதானப் பேச்சு என்கிற உத்தியைப் பயன்படுத்தி, நெருக்கடிகளில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பித்திருக்கிறார்கள். மற்றப்படி, தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய பேச்சுகள் எழுவதைக்கூட, அவர்கள் விரும்புவதில்லை.

இதற்கு தென்இலங்கையை ஆண்ட எந்தவோர் அரசியல் தலைவரும் விதிவிலக்கில்லை. டீ.எஸ் சேனநாயக்கா தொடங்கி இன்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க வரையில் இதுதான் நிலைமை.

இப்படியான நிலைமையில், தமிழ்க் கட்சிகள் எல்லாமும் இணைந்து ஒன்றாக வந்தால், அரசாங்கம் பேச்சுக்கு தயார் என்பது, இலகுவாகத் தப்பிக்கும் ரணிலின் உத்தியாகும். இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடித்திருக்கின்ற பந்தானது, தமிழ்ககட்சிகள் என்கிற பொதுப் பரப்பை நோக்கி அடிக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்பட்டாலும், அது உண்மையில், தமிழ்த் தேசிய கட்சிகளை நோக்கி அடிக்கப்பட்ட பந்தாகும்.

ஆட்சியில் பங்கெடுத்திருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோ, சிவநேசதுரை சந்திரகாந்தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளோ அரசாங்கத் தரப்பில் இருக்கக் கூடியவை. இவை, அரசியல் தீர்வு தொடர்பில் அக்கறை கொண்ட தரப்புகள் அல்ல. இந்தக் கட்சிகளின் அதிகபட்ச இலக்கு, பிரதேச அபிவிருத்தி என்பதுதான். அதற்கு ஆட்சியில் பங்காளியாக இருக்க வேண்டுமென்பது, இவர்களின் அரசியல் சித்தாந்தம்.

ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்கிற ஒற்றைப் புள்ளியைச் சார்ந்திருப்பது. அதுதான் அடிப்படை. அந்த அடிப்படைக்கு அப்பால் நின்று சிந்திக்க முடியாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியோ எதுவாக இருந்தாலும், அரசியல் தீர்வு பற்றி சிந்தித்து செயலாற்றியாக வேண்டும். ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாமும் ஒன்றுக்கொன்று, நேரெதிரான செயற்பாட்டு நிலைகளைப் பேணுபவையாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக, கூட்டமைப்பு மக்களை காட்டிக் கொடுப்பதாக கூறிக் கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களம் கண்டது. அதுபோல, கூட்டமைப்பை எதிர்த்து விக்னேஸ்வரன் களம் கண்ட போது, ஒரு கட்டத்தில் அவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரித்தது. அடுத்த சில மாதங்களில், முன்னணியும் விக்னேஸ்வரனும் முட்டிக்கொண்டு, தனித்தனியாகக் களம் கண்டன.

அது மாத்திரமன்றி, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயே, மூன்று பங்காளிக் கட்சிகளும் முரண்பாடுகளின் உச்சத்தின் நின்று மோதிக் கொள்கின்றன. இப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், அதன் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒவ்வொரு தரப்பும், நவக்கிரகங்கள் போன்று முகங்களை எதிர்த்திசையில் திருப்பிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் தீர்வு குறித்து பேச்சு நடத்த, கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தாலே, டெலோவும் புளொட்டும் வருவதில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவரே, “சம்பந்தனின் அழைப்பை கருத்தில் எடுக்கத் தேவையில்லை; யாரும் பேச்சுக்கு வர வேண்டாம்” என்று பங்காளிக கட்சிகளிடம் அறிவிக்கின்றார்.

அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்புடன் இணைந்து, பேச்சு மேசைக்கு கொண்டுவந்து சேர்ப்பது என்பது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம்.

அடிப்படையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள், தங்களை முன்னிறுத்துவதைத் தாண்டி, எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பதில்லை. இவர்களைத் தாண்டி, கட்சிகளைத் தாண்டி, தமிழ் மக்களுக்கான தீர்வு, அவசியமும் அவசரமுமானது என்பதுதான் நிலைமை.

ஆனால், தன்னால் முடியாது என்றால், மற்றவர்களாலும் எந்த அதிசயமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற மனநிலை, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களாக இருக்கின்றவர்கள் அனைவரிடத்திலும் வந்துவிட்டது.

ஒன்றாகக் கூடி, ஒன்றாக முடிவெடுத்து, மக்களிடம் அறிவித்துவிட்டு, அந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி இயங்கும் அரசியல்வாதிகளை, எந்தவொரு தரப்பினாலும் திருத்திவிட முடியாது. அவர்களைத் தேர்தல் என்கிற புள்ளியில் வைத்து, மக்கள் தோற்கடித்து வெளியேற்றினால் அன்றி, இவர்களை நேர்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

அரசியல் ஆர்வலர்கள், கட்சி அபிமானிகள், புத்திஜீவிகள் தொடங்கி யார் யாரோவெல்லாம், “தமிழர் நலனை முன்னிறுத்திய நிலைப்பாடுகளுக்கு ஒன்றிணைந்து வாருங்கள்” என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி விட்டார்கள்.

ஆனால், அவற்றையெல்லாம் இந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் கேட்டுக் கொண்டதில்லை. விமர்சனங்களை அவர்கள் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக்கொள்வதோடு, விடயத்தை கடந்துவிடுகிறார்கள்.

எம்.ஏ சுமந்திரனோ, சி.வி விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ பாராளுமன்றத்துக்குள் இனி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுகளை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று அழைக்க முடியாது. ஏனெனில், அதற்கான பதிலை ஏற்கெனவே ரணில் வழங்கிவிட்டார்.

பாராளுமன்றத்துக்குள், ஹன்சாட்டில் பதியப்படும் உரைகளை மாத்திரம் நிகழ்த்துவதோடு பணி முடிந்துவிட்டதாக, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களோ முக்கியஸ்தர்களோ விலக முடியாது. ரணில் இப்போது அடித்திருக்கின்ற பந்து கூட்டமைப்பையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையோ அல்லது இன்னொரு தமிழ்த் தேசிய கட்சியையோ நோக்கித் தனித்து அடிக்கப்பட்டதில்லை. மாறாக, அனைவரையும் நோக்கி அடிக்கப்பட்டு இருக்கின்றது.

இதனை, யாரும் தனித்துக் கையாளவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. அப்படி நடந்து கொண்டுவிட்டு, மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நின்று, அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட உணர்ச்சிபூர்வ உரைகளை நிகழ்த்த முடியாது. அதனால், பலனும் இல்லை.

அப்படியான நிலையில், ரணிலின் பந்தை அனைத்து தமிழ்க் கட்சிகளும் தலைவர்களும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு, காழ்ப்பு மனப்பான்மைகளைக் கடந்து நின்று கையாள வேண்டும். அதன்மூலமே ரணிலின் தந்திரத்தை கடக்க முடியும்.

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றும் இப்போது தனி நாட்டுக்கோரிக்கையோடு இல்லை. தேர்தல் மேடைகளில் கூட, சமஷ்டி தீர்வு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் பேசுவதில்லை.

வேறு விடயங்களில் அதீத உணர்ச்சிவசப்பட்ட உரைகளை நிகழ்த்தினாலும், தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற புள்ளியை தாண்டுவதில்லை. அப்படியான நிலையில், தங்களுக்கு இடையில் சமஷ்டித் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, எழுத்து வடிவிலான இணக்கத்தை தமிழ்க் கட்சிகள் காணுவதற்கு முயல வேண்டும்.

அதன்போது, சந்தர்ப்பங்களைக் கையாளும் உத்தி, இராஜதந்திர நோக்கு பற்றியெல்லாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதன்மூலம், தேர்தல்களில் மோதிக் கொண்டாலும், தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களின் வாக்குகளைக் பெற்ற கட்சிகளாக அவை நடத்து கொள்ள வேண்டும்.

அதுதான், ரணிலுக்கு எதிராக கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதற்படி. அது நிகழவில்லை என்றால், தீர்வு குறித்த அதிசயம் நிகழ்வதற்கான வாய்ப்புகளை, முளையிலேயே கிள்ளுவது போன்றதாகும்.

அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடையை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான அஜித் நிவாட் கப்ரால் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (24)  ஆஜராகியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கை தொடர முடியாது என முதற்கட்ட ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக எழுத்துமூலம்   டிசம்பர் 15 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனுவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவாட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.