கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் -ஜனநாயகப் போராளிகள்

அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன் தெரிவித்தார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்கள் இந்த நாட்டில் தங்களை தாங்களே ஆட்சி செய்து தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மாவீரர்கள் செய்துள்ளனர்.ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் உரிமையினை அடைவதற்கான அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்தது.அந்த அரசியல் ரீதியான நகர்வுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

அனைவரும் சிந்தக்கவேண்டும்.எமது மக்களின் அபிலாசைகளில் விளையாடாமல் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும்.தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே மாவீரர்களை பெற்றோர் தியாகம் செய்தார்கள்.

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் அனைத்தும் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளது.

இந்த அழைப்பானது தமிழ் தேசிய கட்சிகளை அடிப்படையாக கொண்டே விடுக்கப்படுகின்றது.தமிழ் பேசும் சிங்கள கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய கட்டாயும் தற்போது ஏற்பட்டுள்ளது.அதற்கான சமிக்ஞையை தற்போது அரசாங்கம் காட்டியுள்ளது.இதனை விடுத்து தனித்து செயற்படமுனைந்தால் மாவீரர்கள் என்ன காரணத்திற்காக அர்ப்பணித்தார்களோ அந்த இலக்கினை அடையமுடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.

தமிழ் கட்சிகளுடன் பேசத்தயார் என ஜனாதிபதி ரணில் அவர்கள் கூறியுள்ள நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாகும்போதே சாத்தியமான தீர்வினைப்பெறமுடியும்.நாங்கள் தனித்தனியா பயணித்தால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை நோக்கி பயணிக்கமுடியாத நிலையே ஏற்படும்.

இந்த ஆண்டில் அனைவரும் தீர்மானம் ஒன்றை அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டும்.இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நடைபெறும்.உங்களது பிள்ளைகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமையிருக்கின்றது.

மாவீரர்களை நினைவு கூரும் நாளில் நாங்கள் அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போகாமல் எமது இலக்கினை அடையக்கூடிய வழிவகைகளை நோக்கி பயணிக்கவேண்டும்.நாங்கள் அனைவரும் ஒருமித்து செயற்படவேண்டிய தேவையுள்ளது.

அனைவருக்கும் வாக்களிப்பதனால் தமிழ் தேசியம் உடைக்கப்படுகின்றது.நீங்கள் வாக்களிக்கும்போது உங்களது பிள்ளைகளை நீங்கள் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகள் எதற்காக மண்ணில் மரணித்தார்கள் என்பதை நீங்கள் நெஞ்சில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்.

எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் கொள்கைரீதியாக எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒன்றுபட்டுசெல்லவேண்டும்.மக்கள் வேறு திசைகள் நோக்கி பயணிக்காமல்,வேறு கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசியத்தினை வெல்லக்கூடிய கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டிய தேவையுள்ளது.அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்டது.

யாரின் ஏமாற்று பேச்சுகளுக:கும் இடமளிக்கவேண்டாம்.தெளிவான முடிகளை எடுத்து எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளவேண்டும்.

இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிக்க பங்களாதேஷ் ஆர்வம்

பங்களாதேஷிற்கும் தெற்காசிய நாட்டிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு இலங்கையுடன் நேரடி கப்பல் இணைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் A.K. அப்துல் மொமென் (A.K.Abdul Momen) வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் 22வது அமைச்சர்கள் கூட்டம் பங்களாதேஷில் இடம்பெறும் நிலையில், அங்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அலி சப்ரியுடன் பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஒரு சந்திப்பை நடத்தியபோது இந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இருதரப்பு உறவுகளின் பரந்த அளவைப் பற்றி விவாதித்த இரு தலைவர்களும் இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் பிராந்தியத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் இதன்போது, பங்களாதேஷில் இருந்து மலிவு விலையில் விவசாய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதை அதிகரிக்குமாறு இலங்கையை மொமன் வலியுறுத்தியுள்ளார்.

பங்களாதேஷுடன் நெருங்கிய பங்காளியாக செயற்படுவதற்கு தமது நாடு ஆர்வமாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரணிலின் கதைகள் எவ்ளவு தூரம் உண்மையானது? – சுரேஷ்

தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,நேற்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் ஒரு செய்தி முன்வைக்கப்பட்டிருந்தது. சுமந்திரன், இந்த அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை, இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை, குறிக்கப்பட்ட சில நாட்களுக்குள் பேச வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன அதனை பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக்கூறிய போது, அதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் தமிழ் தரப்பினர் ஒருமித்து வந்தால் பேசலாம் என்று கூறியிருந்தார். இந்த விடயத்தில் அவர்கள் உறுதியாக இருப்பார்களா என்பது எதிர்காலத்தில்தான் தெரியவரும்.

மைத்திரி, ரணில் இருந்த கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் 4 வருடங்களாக பேசப்பட்டது. அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ காலத்தில் சர்வகட்சி உருவாக்கப்பட்டு பேசியும் அரசாங்கத்திற்கு தீர்வு திட்டத்தினை கொடுத்து இருந்தார்கள். அதனை மகிந்த ராஜபக்ஷ் கண்டுகொள்ளவில்லை.
பின்பு மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் தமிழ் தரப்பினருக்கும் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதிலும் எதுவும் நடக்கவில்லை. தற்போது இவர்களே இந்த விடயங்களை பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என்று கூறுகிறார்கள்.

நேற்றைய தினம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்திற்கான ஒரு சமஸ்டி அரசியலமைப்பு தொடர்பாக பேச வேண்டும் என்று தாங்கள் எடுத்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இதனை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழர் தரப்பு நிலைப்பாடு என்பது சமஸ்டி சம்மந்தமாக உள்ளது. அரசாங்கத்தை பொறுத்த வரையில் 13 க்கு மேலே போக தயாராக இருப்பார்களா அல்லது பேசுவதற்ககு முன்வருவார்களா என்ற கேள்வியும் இருக்கிறது.

மாகாண தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாத்திரம் அல்ல அரசாங்கம் தான் விரும்பியவாறு நியமனங்களை செய்கின்றது. வடக்கு மாகாணத்திற்கு சிங்கள உத்தியோகத்தர்களை நியமிப்பதனை தவிர்த்துக்கொண்டு தமிழ் உத்தியோகத்தர்களை நியமிக்கலாம். இவ்வாறு செய்தால் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும்.

தமிழர்களோடு உறவாடுவது போல் இவர்கள் காட்டிக்கொண்டாலும் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா ஆகியவற்றில் யுத்தத்திற்கு பிற்பாடு எத்தனை பௌத்த கோயில்கள் வந்திருக்கின்றன, எத்தனை இந்து கோயில்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த இடங்களில் எத்தனை சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களது இந்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது நிறுத்தப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

எனவே நல்லிணக்கத்தை உருவாக்க விரும்பினால் காணிகள் அபகரிப்பதனை ஜனாதிபதி நிறுத்த முடியும். இதற்கு குழுக்களை அமைப்பதாக கூறுகிறாரே தவிர நிறுத்துவதாக கூறவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், இனி இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலான தீர்வுக்கு இவர்கள் ஒத்துக்கொள்வார்களா? என்பது தான் தற்போது இருக்கக்கூடிய விடயம்.

ஜனாதிபதி தேர்தல்களை நடத்த மாட்டேன் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று கூறுகிறார். அடுத்த 1, 2 வருடங்கள் தேர்தல்களை நடத்தாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகிறோம் என்று மக்களை ஏமாற்றக்கூடிய விடயம் தான் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா என்பது பெரியதொரு கேள்வியாக இருக்கிறது.

ஏற்கனவே தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விட கூடாது.- என்றார்.

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்ரேலியாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கிம் வாட்ஸுடன் கலந்துரையாடியுள்ளார்.

23 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 22ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரு அமைச்சர்களும் பங்காளதேஷிற்கு சென்றுள்ளனர். இதன்போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார அபிவிருத்தி, கடல்சார் மற்றும் சுற்றுலா துறைகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இருதரப்பு நலன்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு கொடுக்கும் மரியாதையை மலையக தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்

போர்க்காலத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, மலையக தொழிலாளர் வர்க்க உழைப்பு வீரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என மலையக மக்களின் மாண்பை பாதுகாக்கும் அமைப்பின் ஆலோசகரான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று வெள்ளிக்கிழமை (நவ 25) வெளியிட்ட தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது,

பதுளை ஹாலிஎல மேற்பிரிவு தோட்ட மயான பூமி அகழ்வழிக்கப்பட்டமையானது மனித நாகரிக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. அது சட்டத்துக்கு முரணானதாகும்.

அத்தோடு புதைக்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவுகளையும் மட்டுமல்ல, மலையக மக்கள் சமூகத்தையே அவமதிக்கும் செயல் என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு, முறையான விசாரணை நடத்தப்பட்டு, காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதோடு, புதைக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் மன்னிப்பு கோரி, மயானம் பாதுகாக்கப்படல் வேண்டும் என மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பு வேண்டுகோள் விடுப்பதோடு, இனியும் இவ்வாறு நடக்க தோட்ட கம்பெனிகள் இடமளிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறது.

பொதுவாக புதைகுழிகள் அகற்றப்பட வேண்டுமாயின், அது தொடர்பில் நீதிமன்றில் முன் அனுமதி பெற்று புதைக்கப்பட்டவர்களின் எச்சங்கள் உரிய மரியாதையுடன் வேறிடமொன்றில் முறையாக புதைக்கப்பட்டதன் பின்னரே மயான பூமி வேறு தேவைக்காக பயன்படுத்தப்படலாம்.

இவ்வாறான முன் அனுமதியினை பதுளை ஹாலிஎல மேற்பரப்பு தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொண்டதா? இல்லையாயின், ஏன்?

மலையக மக்கள் எதிர்வரும் 2023ஆம் ஆண்டில் இந்நாட்டில் தமது 200 வருட வரலாற்று வாழ்வை பெருமையுடன் நினைவுகூரவுள்ள நிலையில் மயான பூமி அழிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்லர் என கூறுவதாகவே உள்ளது. இதுவே பேரினவாதம். இதுவே இன அழிப்பு.

மலையக மக்கள் மலையகத்தை நோக்கி ஆரம்ப காலங்களில் நடந்தே அழைத்து வரப்பட்டபோது வழியில் நோயின் காரணமாக கைவிடப்பட்டு இறந்தவர்கள் மிருகங்களின் உணவானதுண்டு. அத்தோடு சிலர் மிருகங்களின் தாக்கத்தாலும் கொல்லப்பட்டுள்ளனர். கடல் சீற்றத்தினால் மரணித்துள்ளனர்.

மலைப்பாங்கான பிரதேசத்தை உற்பத்தி பயிர் நிலங்களாக மாற்றும்போது நிலவிய காலநிலை மற்றும் வனவிலங்குகளின் தாக்கம் காரணமாக 1841ஆம் ஆண்டு வரை 70 ஆயிரம் பேரும், 1841 -1849 இடைப்பட்ட காலப்பகுதியில் 90 ஆயிரம் பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இக்காலகட்டத்தை தொடர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நூற்றுக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். எனினும், உயிரிழந்த இவர்களுக்கு கல்லறைகளோ மயான பூமிகளோ கிடையாது.

இவ்வாறு மறைந்தவர்களை கௌரவிக்கவுள்ள இக்கால சூழ்நிலையில் ஹாலிஎல தோட்ட சம்பவம் மிகுந்த மன வேதனையளிக்கிறது.

வடகிழக்கு எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் உரிய மரியாதையுடன் பாதுகாத்துவந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த ஆட்சியாளர்களால் முழுமையாக அழிக்கப்பட்ட போதும், வடகிழக்கு தமிழர்கள் அவர்களின் நினைவிடங்களில் வருடந்தோறும் உணர்வுபூர்வமாக விளக்கேற்றி நினைவேந்தல் நடத்துகின்றனர்.

இத்தகைய நினைவேந்தல் தியான வாரத்திலேயே ஹாலிஎல மேற்பிரிவில் மயானம் அழிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் உழைப்பு வீரர்களே. அவர்களது மயானங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் மேற்படி தோட்ட நிர்வாகம் மயானத்தை அழிக்கும் செயற்பாட்டினை உடன் நிறுத்தி நீதிமன்றில் முன் அனுமதி பெற்றிட வேண்டும்.

புதைக்கப்பட்டவர்களில் அடையாளம் தெரிந்தோரின் எச்சங்கள் உரிய கௌரவமளிக்கப்பட்டு வேறிடங்களில் புதைக்கப்படுவதோடு அடையாளம் தெரியாதோரின் எச்சங்கள் தனியாக பொது இடத்தில் புதைக்கப்படவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தோட்ட கம்பெனிகள் அனைத்து தோட்டங்களிலும் இறந்தவர்களை புதைப்பதற்கான தனியான இடத்தினை ஒதுக்கி, தோட்ட நிர்வாகமே அதனை பராமரிக்கவும் வேண்டும்.

அங்கு புதைக்கப்பட்டவர்களும் புதைக்கப்படுபவர்களும் தோட்டங்களில் வியர்வை சிந்தி உழைத்தவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித் தந்து, நாட்டை பாதுகாக்கும் தொழில் வீரர்கள்.

போர்க்காலத்தில் இறந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் மரியாதை இத்தொழிலாளர் வர்க்க உழைப்பு வீரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளது – அலி சப்ரி

இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை  உள்ளதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் மாநாடு பங்களாதேஷில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை பரஸ்பரம் முன்னேற்றுவதற்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்து சமுத்திர எல்லையிலுள்ள நாடுகளுடன் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் அர்ப்பணிப்பு இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றின் மையத்தில் இலங்கை மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகளுடனான இலங்கையின் பாரம்பரிய மற்றும் புராதன தொடர்புகள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் புவியியல் மையமானது குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக்கப்பட்டதுடன், பல நூற்றாண்டுகளாக கடல் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கு உதவியது என்பதை அனுபவ ஆதாரங்கள் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல் வளங்களை நிலையான மற்றும் திறமையான முறையில் பயன்படுத்துவதில் இலங்கையின் முயற்சிகள் மற்றும் கடல் மாசுபாடு சவால்கள் மற்றும் கரையோரப் பகுதியையும் இந்தியப் பெருங்கடலையும் பாதுகாப்பதற்காக செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் இதன்போது உறுப்பு நாடுகளுக்கு விளக்கினார்.

Posted in Uncategorized

சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் – சி.வி.விக்னேஸ்வரன்

நியாயமான அதிகார பரவலாக்கத்துடனான  சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும். ஒற்றையாட்சி முறைமை அமுலில் இருக்கும் வரை புலம் பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை, நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரவு செலவுத்திட்டத்தில் அவதானம் செலுத்தப்படாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக கருதப்படுகிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரவு செலவுத் திட்டத்தினூடாக 530 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கதிகமான இராணுவத்தினருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்காக அல்ல.

2009 க்கு பின்னர் இராணுவத்தினருக்கான செலவு குறையும் என்று எதிர்பார்த்தாலும் ஒவ்வொரு வருடமும் இது அதிகரித்துக்கொண்டே போகின்றது. கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு குறைந்தளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சமூக பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது இது தொடர்பில் கேள்வியெழுப்புகின்றனர். மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பு செலவீனம் வருடாந்தம் அதிகரிக்கின்றது. இவ்வாறு பாதுகாப்புக்கான செலவீனம் அதிகரிப்பதன் ஊடாக வடக்கு ,கிழக்கில் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்பதனையே காட்டுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் மக்களின் காணிகள், விவசாய காணிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மக்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் காணிகள் அதிகளவில் இராணுவத்தினர் வசமுள்ளது. மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

மாகாண சபைகள் மக்களுக்காக நல்ல வேலைத்திட்டங்களை கொண்டு வந்த நிலையில் இராணுவம் காணிகளை கைப்பற்றி செயற்படுகின்றது. மேலும் வடக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் சோதனை சாவடிகள் இருக்கின்றன. இங்குள்ள காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதேவேளை ஒற்றையாட்சிக்குள் இருந்துகொண்டு வெளிநாட்டு தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது. வடக்கு, கிழக்கிற்கு நீதி வழங்க வேண்டும்.

எங்களுடைய தேவைகள் எங்களுக்கு முன்னுரிமையதாகவே இருக்குமே தவிர மத்திய அரசுக்கு தேவையானதாக இருக்காது.

ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை செயற்படுத்த வேண்டும். இதன்படி சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் என்றார்.

மனித உரிமை என்ற போர்வையில் வன்முறைக்கும் அராஜகத்திற்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எந்த விதத்திலும் இடமளிக்க முடியாது.

அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன், வீதியில் நின்று போராட்டம் நடத்துவதால் பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் வன்முறைக்கு ஒருபோதும் இடம் கிடையாது. வீதியில் இறங்கி எவரும் நாடகமாடவும் முடியாது. அதேபோன்று அரசாங்கத்தை வீழ்த்த முற்படும் செயற்பாடுகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவும் முடியாது.

அரசியலமைப்பின் 9 ஆவது சரத்திற்கு இனங்க படையினர் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கான போராட்டம் என்ற போர்வையிலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அராஜகம், வன்முறை ஆகியவை மனித உரிமைக்குள் உள்ளடங்காது. அது மனித உரிமைக்கு முற்றிலும் எதிரானது. அந்த வகையில் மனித உரிமை என்ற போர்வையில் அராஜகத்திற்கும் வன்முறைக்கும் இடமளிக்க முடியாது.

அவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களை மனித உரிமை என தெரிவித்து பாதுகாக்கவும் முடியாது. அதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் எமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மீறி எவரும் செயற்பட முடியாது.

அத்துடன், மனித உரிமை பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளில் டொலர்களைப் பெற்று நாட்டில் நெருக்கடி நிலையை உருவாக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது.

வீதியில் நின்று போராட்டம் நடத்துவதால் நான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை. ஒரு சில குழுக்களே இவ்வாறு செயல்படுகின்றன. பெரும்பாலானோர் அமைதியாகவே உள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் எவரையும் நாம் கைது செய்து சிறையிலடைக்க வில்லை. வசந்த முதலிகே  இத்தனை வருடங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றார்? அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரா? என்ற கேள்வியே எழுகிறது.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முற்படும் பொலிசாரை மனித உரிமை என்ற போர்வையில் சிறையில் அடைக்கப் பார்க்கின்றனர்.

அன்றாட செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வீதிகளில் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

அவ்வாறு தடுக்கும் போது அவர்கள் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர். அது தொடர்பில் நான் கவனம் செலுத்தியுள்ளதுடன் அரசியலமைப்பின் 15 ஆவது சரத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் சட்டமா அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

எனது வீட்டுக்குத் தீ வைத்தனர். எனது பிரதான பாதுகாப்பு அதிகாரியை வேலை நீக்கம் செய்ய முயற்சித்தனர்.

மனித உரிமை என்ற போர்வையில் அநாவசியமான தலையீடுகளை  மேற்கொள்ள முடியாது. அரசாங்கத்திற்கு ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சியும் அவசியம்.

அதேபோன்று நாட்டுக்காக சேவை செய்ய அனைத்து அதிகாரிகளும் வேண்டும். அத்துடன், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டைப் பாதுகாப்பதில் சிறு பதவிகளில் உள்ளவர்கள் முதல் பீல்ட் மார்சல் பதவியில் உள்ளோர் வரை அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

25,000 பேரை வீதியில் விட முடியாது படையினரின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும் பதவி உயர்வுகள் அதிகரித்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்புக்கான செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இன்று பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்பதற்காக எதிர்காலத்தைப் பற்றியும் அவ்வாறு நாம் சிந்திக்க முடியாது. நிலைமை மாறிவிடும். உலக அரசியல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்து சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் . எமது கடல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 2040 ஆம் ஆண்டிற்குள் கடற் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எமது பொருளாதாரம் நூற்றுக்கு எட்டு வீதமாக அதிகரிக்குமானால் பாதுகாப்புக்கான செலவுகளையும் அதிகரிக்க முடியும்.

யுத்தக் கப்பல்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். அதற்கான செயற்பாடுகளில் எமது கடற்படையை ஈடுபடுத்தலாம்.

தேசிய பாதுகாப்பு செயலகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நாம் மேலும் சிறந்த இராணுவ வீரர்களை உருவாக்குவது அவசியம்.

பொலிஸ் துறை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் அதற்காக பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் புதிய விடயங்களை உள்ளடக்க வேண்டும். அதனை புதிதாக தயாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

குறிப்பாக பாராளுமன்றத்தை பாதுகாக்க முன்வந்த இராணுவ படையினருக்கு நான் விசேட நன்றியை தெரிவிக்கின்றேன். அவர்கள் செயற்பட்டிருக்காவிட்டால் இன்று இந்த நாட்டில் பாராளுமன்றம் ஒன்று இருக்காது.

அதனால் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வீதிக்கி இறங்கி வருபவர்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரினருக்கு பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவது பாதுகாப்பு பிரிவினரின் கடமை என்றார்.

எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்துள்ளது என்கிறார் மைத்திரி

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு 2019ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் இறுதியில் எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்தது. பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது பயனற்றது, பாதுகாப்புத்துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 410 பில்லியன் ரூபாவில் 100 பில்லியன் ரூபாவை கல்வி அமைச்சுக்கு மேலதிகமாக வழங்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் என சபையில் ஜனாதிபதிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  மற்றும் தொழில்நுட்ப அமைச்சு  ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை 2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வேகமாக அபிவிருத்தி அடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதற்கு உப்பு, காரமாக என்னால் கருத்து குறிப்பிட முடியும், ஆனால் நேரம் இல்லாத காரணத்தினால்   இன்றைய  நாளுக்கான விடயம் தொடர்பில் கருத்துரைக்கிறேன்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக நான் பதவி வகிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு 280 பில்லியன் அல்லது 285 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் தற்போது 410 பில்லியன் குறிப்பாக இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை, பொலிஸார் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். அத்துடன் பொருளாதார பாதிப்பையும் பொலிஸார் எதிர்க்கொண்டுள்ளார்கள்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கியுள்ள 410 பில்லியன் நிதியில் இருந்து 100 பில்லியன் ரூபாவை குறைத்து அதனை கல்வி அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகிறேன். இலவச கல்வியை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், கல்வியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் 160 ரூபா உணவு கொடுப்பனவு தற்போதைய நிலைக்கு போதுமானதல்ல எற்றார்.

தமிழ்தரப்பிடம் மாவீரர்பெற்றோர்களை பாதுகாக்கக்கூடிய எந்தவிதமான திட்டமும் இல்லை- ரெலோ க.விஜிந்தன்

முள்ளியவளை பிரதேசத்துக்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில், மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஏற்பாட்டு குழுவினால் நேற்று (23) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக முள்ளியவளை முதன்மை வீதியில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இருந்து மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் பொதுச்சுடரினை முன்னாள் போராளி அச்சுதன் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரர் நினைவுரையினை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளருமான க.விஜிந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், பிரதேச சபைஉறுப்பினர்களான க.தவராசா, கெங்காதரம், மற்றும் முன்னாள் போராளிகளான மாதவமேஜர்,அச்சுதன், சமூகசெயற்பாட்டாளர்களான சிவமணிஅம்மா,சைகிலா,சகுந்தலா ஆகியோர் நிகழ்தியுள்ளார்கள்.

இதன் போது உரையாற்றிய ரெலோ மத்திய குழு உறுப்பினரும், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளருமான க.விஜிந்தன் புலம் பெயர்ந்து இருப்பவர்கள் உள்நாட்டில் இருப்பவர்களுடன் இணைந்து மாவீரர்களின் பெற்றோருக்கு உதவக்கூடிய ஒரு சிறந்த கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்கு ஒரு இன விடுதலை வேண்டும். எங்களுக்கு உரிமை வேண்டும் நாங்கள் இலங்கையில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களைப் போல் கெளரவமாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு வடிவங்களில் போராடி வந்தோம். எங்களுடைய போராட்டம் இன்னமும் தோற்றுப் போகவில்லை. நாங்கள் விடுதலையை நோக்கியே மென்மேலும் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இங்கே இருக்கின்ற பெற்றோர்களுக்கு தான் வலியும் வேதனையும் தெரியும். ஒரு தேச விடுதலைக்காக போராடிய போராளியின் வலி இன்னொரு போராளிக்கு தான் தெரியும். பல்வேறுபட்ட அடக்குமுறைகளைப் எம் மீது பிரயோகித்து எதுமற்ற நிலையில் ஏதிலிகளாக எம்மை நாட்டை விட்டு விரட்டினார்கள் எங்களுடைய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தொடர்ச்சியாக தடை விதித்தார்கள். பல மாவீரர்களின் பெற்றோர் தாங்கள் மாவீரர் குடும்பம் என சொல்ல பயப்படுகின்றார்கள். நீங்கள் அதனை துணிந்து சொல்வதில் பெருமை கொள்ள வேண்டும். இன்று தமிழினத்துக்கு ஒரு முகவரி கிடைத்திருக்கின்றது என்றால் அது உங்களின் உறவுகளினாலே கிடைத்தது. நீங்கள் இந்த மண்ணிலே போற்றப்பட வேண்டியவர்கள். பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். எத்தனையோ பெற்றோர்கள் இன்று மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எம்முடைய சமுகத்திலே இப் பெற்றோர்களைப் பாதுகாக்கக் கூடிய இவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கக் கூடிய எவ்வித திட்டமும் இல்லை என்பது வெட்கக் கேடானாது. புலம் பெயர்ந்து இருப்பவர்கள் உள்நாட்டில் இருப்பவர்களுடன் இணைந்து மாவீரர்களின் பெற்றோருக்கு உதவக்கூடிய ஒரு சிறந்த கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். நாங்கள் இப் பெற்றோர்களை சிறந்த முறையில் கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதே அவர்களை பெருமைப்படுத்தும். எதிர்வரும் 27 ஆம் திகதி எந்த விதமான தடைகள் வரினும் முள்ளியவளை துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை சிறப்பாக நடாத்துவோம் என குறிப்பிட்டு அழைப்பு விடுத்தார்.

இதன்போது 150 வரையான மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பதற்காக, அழைத்து வரப்பட்ட போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள படைமுகாமில் இருந்து படையினர் காணொளி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.