வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அவசியம்

கலாநிதி ஜெகான் பெரேராவில் எழுதப்பட்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஈழநாடு பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த வருடம் இலங்கையின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நாட்களில் தீர்வொன்றைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதை தமிழ் அரசியல் சமுதாயம் ஓரளவு சந்தேகத்துடனேயே நோக்கியிருக்கிறது. 1960 களில் இருந்து அடுத்தடுத்து பதவிக்குவந்த அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதிகள் முழுமனதுடன் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். ஜனாதிபதியின் முன்னைய ஆட்சிக்காலங்களும் எந்த வகையிலும் வித்தியாசமானவையாக அமையவில்லை.

2015 – 2019 காலப்பகுதியில் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டை உள்ள டக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதாக விக்கிரமசிங்க பிரத மர் என்ற வகையில் உறுதியளித்தார். ஆனால், 2018 பிற்பகுதியில் 52 நாள் சதி முயற்சியின்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவரை நியாயமில்லாத வகையில் பதவி நீக்கம் செய்தார். அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான போராட்டத்தில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இரா. சம்பந் தன், எம்.ஏ.சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் முன் னின்றார்கள். விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றபோது அரசியல மைப்பு சீர்திருத்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என்ற ஒரு எதிர் பார்ப் பும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் எதும் நடக்கவில்லை. மாகாணசபை தேர்தல்கள் கூட நடத்தப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முயற்சிகளுக்கு புறம்பாக புதிய உண்மை மற்றும் நல் லிணக்க செயன்முறையொன்றுக்கும் தலைமை தாங்கி வழிநடத்த விக்கிரம சிங்க முன்வந்திருக்கிறார். இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவொன்றை அமைப்பதற்கு தென்னா பிரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோ சாவை சந்தித்து அவர் கலந்துரையாடினார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தனது கோட்பாடு குறித்து சிவில் சமூக தலைவர்களுடன் அண்மையில் கருத்துக்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி யோசனைகளை முன்வைக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த ஆணைக்குழுவை வெற்றிகரமான தாக்குவதற்கான உறுதியான அரசியல் துணிவாற்றல் இருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஆயுதப்படைகளும் அவற்றின் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புவதனால் உண்மை ஆணைக்குழு கோட்பாட்டுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்சமயம் இலங்கை ஆயுதப்படைகளின் சகல பிரிவுகளுமே சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினாலும் சில வெளிநாட்டு அரசாங்கங்களினாலும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஆணைக்குழு வொன்று நம்பகத்தன்மையுடையதாக வும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடியதாகவும் அமைவதற்கு கருத் தொருமிப்பைக் காண்பதில் வெளியுறவு அமைச்சர் அக்கறை கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் தாங்கள் செய்வதை உண்மையில் அக்கறையுடனும் நேர்மையாகவுமே செய்வதாக பொதுமக்களை நம்பவைப் பதில் பெரும் சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. தென்னாபிரிக் காவின் நல்லிணக்கச் செய்முறைகளைப் பற்றி ஆராய தூதுக்குழுவொன்றை அந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன. அத்தகைய ஆய்வுகள் கடந்த காலத்தி லும் மேற்கொள்ளப்பட்டன.

சனத்தொகையில் ஒரு பிரிவினருக்கு ஒரு நேரத்தில் உண்மையையும் நல்லி ணக்கத்தையும் கொடுக்கமுடியாது. உண்மையையும் நல்லிணக்கத்தையும் பிரிவு பிரிவாக செய்யமுடியாது. அவற்றை தமிழர்களுக்கு கொடுத்து சிங்களவர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இல்லாமல் செய்யமுடியாது. இரு மாணவ தலைவர் களை நீண்ட நாட்களாக தடுத்துவைத் திருப்பது உண்மையும் இல்லை, நல்லிணக் கமும் இல்லை. அரசாங்கத்தின் நீதியுணர்வு சமத்துவமானதாக இருக்க வேண்டும். சகல சமூகங்கள் மீதுமான கடப்பாட்டை அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டியது அவசியம்.

தேர்தல்களை ஒத்திவைத்தல்

ஊழல், வளங்களின் முறைகேடான ஒதுக்கீடை ஒழிக்கக்கூடியதும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடியதுமான முறைமை மாற்றம் ஒன்றுக்கான போராட்ட இயக்கத்தின் கோரிக்கை பல்கலைக்கழக மாணவர்களுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வடிவில் வெளிப்படையாக காண்பிக்கப்படாவிட்டாலும் அந்த கோரிக்கை மிகவும் பரந்த ஒரு தளத்தைக் கொண்டதாகும். இரு மாணவ தலைவர்களையும் மற்றையவர்களையும் போன்று கைது செய்யப்பட்டு நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்படக்கூடும் என்ற பயத்தில் தான் தாங்கள் அண்மைய போராட்ட இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கவில்லை என்று மட்டக்களப்பில் சிவில் சமூக சந்திப்பொன்றில் கடந்தவாரம் மௌலவி ஒருவர் தெரிவித்தார்.

மாணவ தலைவர்கள் நீதியற்ற முறை யில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மிகவும் பெரியவையாக இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்றும் அவர் சொன்னார். இத்தகைய சூழ்நிலையில் மாற்றத்தை விரும்புகின்ற போதிலும் கைது செய்யப்படுவதை விரும்பாத மக்கள் தங்களது விருப்பங்களையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்த தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்த தேர்தல்களை மாத்திரமே எதிர்பார்த் திருக்கமுடியும்.

நாணய நெருக்கடி ஆபத்தில் இலங்கை ஜப்பானிய வங்கி எச்சரிக்கை

நாணய நெருக்கடியில் இலங்கை உட்பட 7 நாடுகள் ஆபத்தில் இருப்பதாக ஜப்பானிய வங்கி ஒன்று எச்சரித்துள்ளது.நொமுரா ஹோல்டிங்ஸ் என்ற ஜப்பானிய உயர்முகவரக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை,எகிப்து, ருமேனியா, துருக்கி, செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகியனவே நாணயப் பிரச்னையில் ஆபத்தில் இருப்பதாக குறித்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய வங்கி வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு, நாணய மாற்றுவிகிதம், நிதி உறுதிப்பாடு மற்றும் வரி விகிதங்கள் என்பன இதன்போது கருத்தில் எடுக்கப்படுகின்றன.

நொமுரா வங்கியின் மதிப்பெண்களின் அடிப்படையில், எகிப்துக்கு மோசமான மதிப்பெண்ணாக 165 வழங்கப்பட்டுள்ளது. ருமேனியாவுக்கு 145 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை, துருக்கி ஆகியவற்றுக்கு 138 மதிப்பெண்கள்வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், செக் மக்கள் குடியரசு, பாகிஸ்தான், மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு முறையே 126, 120 மற்றும் 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் அரசமைப்பு பிரதிநிதியாக சித்தார்த்தன் எம்.பி

அரசமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம சித்தார்த்தன் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் எடுத்திருந்தது.

21ஆவது திருத் தத்தின் மூலம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள அரசமைப்பு பேரவையில், 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். சபாநாயகர் இதன் தலைவராக செயல்படுவார். பதவி வழியாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதன் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பர். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தலா ஒரு பிரதிநிதியை பெயரிடுவர். பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும், சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் அரசமைப்பு பேரவையில் அங்கம் வகிப்பர்.

இந்த வகையில், பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில், அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினராக த. சித்தார்த்தனை நியமிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றகுழு ஏகமனதாக தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது

எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இருக்குமாயின் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை கொண்டு வரலாம் – பிரதமர்

அரசியலமைப்பின் பிரகாரம் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மக்களாணை இல்லை என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்க்கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை அவர்கள் தாராளமாக கொண்டு வரலாம்.

எந்நிலையிலும் பாராளுமன்ற ஐனநாயகத்திற்கு மதிப்பளித்து செயல்படுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்துக் கொள்வதற்கு அரச செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு,அரச செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த காலங்களில் சமூக கட்டமைப்பில் காணப்பட்ட எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசை யுகத்தை மறக்க முடியாது.

ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் அரச கட்டமைப்பிற்கு சவால் விடுத்தது. இவ்வாறான கடினமான சூழ்நிலைகளை ஒருபோதும் மறக்க முடியாது.

ஜனாதிபதி மாளிகை,ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதுவா ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது இவர்கள் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள்.

நாட்டு மக்களின் சர்வஜன வாககுரிமையை பாதுகாக்க அரசாங்கம் பெர்றுப்புடன் செயற்படுகிறது. நாட்டு மக்களின் வாக்குரிமையினால் தோற்றம் பெற்ற ஸ்தாபனங்களை பாதுகாக்க எதிர்க்கட்சியினர் ஒருமித்து செயற்படாமல் இருந்தமை கவலைக்குரியது. ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

பாதுகாப்பு தரப்பினரினால் பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவும், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல்களை பிற்போட்டவர்கள் தற்போது தேர்தல் உரிமை தொடர்பில் குரல் எழுப்புகிறார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குற்றஞ்சாட்ட முடியாது,ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறது,இருப்பினும் தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு உண்டு என்றார்.

மத்திய வங்கியில் ஏனையோரின் தலையீடுகளை நான் விரும்பவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது.

அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பொருளதார நெருடிக்களுக்கு மத்திய வங்கியே காரணமென்றும் அதன் விளைவாகவே மக்கள் துன்பத்தினால் அவதிப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

நாட்டு மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நிவாரணங்கள் சலுகைகளை மத்திய வங்கி வழங்க வேண்டும் என்கிறார்கள்.

இன்று நிதிக்கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொள்கையின் பிரகாரம் வேறொருவரின் விவனாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

அதேபோன்று சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மத்திய வங்கி செயல்பட வேண்டும். அதன் நிதி தொடர்பான முடிவுகளை பிறர் எடுப்பதை நான் விரும்பவில்லை.

ஆனால் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாராளுமன்றம் மற்றும் மத்திய வங்கி இரண்டினதும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

வரிகளை விதிக்கவும் செலவினை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதனால் தான் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றுவதைப் பார்க்கிறீர்கள். வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

அரசியலமைப்பிற்கமைய பொருளாதாரம் பாராளுமன்றத்திற்கு உரித்துடையது. எனினும் அனைத்து பலமும் காணப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கு பொது நிதி தொடர்பில் மாத்திரமே அதிகாரம் உள்ளது. மத்திய வங்கி தொடர்பில் சிலருக்கு புரிதல் குறைவாகவே உள்ளது என்றார்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட இடங்களை பார்வையிட 800 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை வர தீர்மானம் – ஹரின்

பழங்கால புராணமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை பார்வையிடுவதற்காக 78 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, இந்த பயணிகள் ஏனைய பிரசித்தி பெற்ற இந்து மதத் தலங்களுக்கும் செல்லவுள்ளனர்.

அத்தகைய 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு குழுக்களாக வருகை தரவுள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடலட்டைப் பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் கைது

கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடிக் கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாக தெரிவித்து குறித்த கடல் அட்டை பண்ணைக்கு எதிராக கடந்த 55நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று பி.ப 2.30 மணியளவில் கிராஞ்சி இலவங்குடா மீனவர்கள் இருவர் ஜெயபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தினாதர், மற்றும் மகேந்திரன் எனப்படும் இருவரே அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக செயற்பட்டதாக அரச அதிகாரிகள் முறைப்பாடு செய்தவிடத்து இவ்வாறு குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த போராட்டத்தை முடக்குவதற்காகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

ஜப்பான் அரசாங்கத்தால் சம்பூரில் குளம் புனரமைப்பு

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ” சமூக அடிப்படையிலான சிறு குள புனரமைப்பு” திட்டத்தின்கீழ் சம்பூர் பகுதியில் உள்ள பெரியகுளம் எனும் குளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை (23) விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் உதவிச் செயலாளர்கள் கலந்து கொண்டு குளத்தை விவசாயிகளின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இக்குளத்தை “பீஸ் விண்ட்ஸ்” நிறுவனம் முன்னின்று சிறப்பாக புனரமைப்புச் செய்திருந்தது.

இக்குளம் புனரமைப்புச் செய்யப்பட்டதன் மூலம் சம்பூர் பகுதியைச் விவசாயிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சம்பூர் கமநலசேவை நிலையப் பொறுப்பதிகாரி, மூதூர் பிரதேச செயலக உயரதிகாரிகள் ,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய றோ அமைப்பின் தலைவர் ரணில் இடையே சந்திப்பு!

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சென்றுள்ளார் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சுகளை நடத்தியிருக்கின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘றோ’ இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதி செயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும்.

முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கின்றது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் ஆவார். இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ‘றோ’ அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், பிரதமருக்கும் தனது அறிக்கைகளை நேரடியாக அனுப்புவார்.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘றோ’ வின் தலைமை நிர்வாகி ரணிலுடன் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அலி சப்ரி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை நீண்ட காலமாக கடனை திருப்பும் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில் இது கடனாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை சீனா நன்கு அறிந்துகொண்டிருக்கும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய போராட்டங்கள் மக்கள் ஆதரவின்றி நடத்தப்படுவதாகவும், போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றாலும், மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் அலி சப்ரி ஒவ்வொரு முறையும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கும் போது போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.