வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது மாகாண சபைத் தேர்தலை நடாத்திக் காட்டுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனாதிபதிக்குச் சவால்

13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சாவால் விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்டமானது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு போதுமானது என்றும், புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கு வருகை தரவேண்டுமென்றும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடமாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு விடயங்களை கூறுகின்றார். அவருடைய கூற்றுக்களும், செயற்பாடுகளும் அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது பிரசாரத்தின் ஆரம்பத்தை வடக்கிலிருந்து தொடங்குகின்றார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானவை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து அடிப்படையற்றதாகும். நாட்டின் நீடித்த இனமுரண்பாடுகளை அடுத்தே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு. அவ்வாறான நிலையில், குறித்த திருத்தச்சட்டம் பொருளாதார அபிவிருத்திக்கானது என்று ஜனாதிபதி அர்த்தப்படுத்த முனைவது தவறானதாகும்.

அதேநேரம், மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான காலம் கடந்த நிலையில் இன்னமும் தேர்தல் நடத்தப்படாது தாமதிக்கப்படுகின்றது. முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் இயங்க வேண்டும். அப்போதுதான் மாகாண சபைகள் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

அதேநேரம், கடந்த காலங்களில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பல்வேறு வழிகளில் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆகவே அந்த அதிகாரங்களை மீள வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மாகாண சபைகளின் நிருவாகத்தினால் முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை முதலீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுகின்றார். புலம்பெயர் தமிழர்கள் தமது மாகாணங்களில் முதலீடுகளைச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை முதலில் உருவாக்கி அந்த அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.

அவ்வாறில்லாது, புலம்பெயர் தமிழர்கள் தென்னிலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு முன்வரமாட்டார்கள். ஏனென்றால் 1983ஆம் ஆண்டு தமிழர்களையும் அதற்குப் பின்னர் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அந்தந்த இனங்களில் பிரபல்யமான வர்த்தகர்களின் நிலைமைகள் எவ்வாறு மோசமடைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆகவே, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படுவது இங்கே முக்கியமானதாகின்றது. இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படாத வரையில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தென்னிலங்கையில் இல்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு இன்னமும் பொறுப்புக்கூறப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.

இவ்வாறான நிலையில், புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு வருகை தருவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்திக்க வேண்டும். ஆகவே, ஜனாதிபதி உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளையும், மாகாண சபைகளின் ஊடான அபிவிருத்தியையும் விரும்புபவராக இருந்தால் ஆகக்குறைந்தது வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்காகவாவது தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வருகை

நாட்டின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

நாட்டின் அண்மையகால பொருளாதார நிலைவரம் குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பீடு செய்வதற்காகவே இக்குழு வருகைதரவிருப்பதாக நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதலளித்தது. அதன்பிரகாரம் முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதலாம் கட்டளமதிப்பீட்டுக்கு கடந்த மாதம் 12 ஆம் திகதி அனுமதி வழங்கிய நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை, அதன்மூலம் இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர் நிதியை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இரண்டாம் கட்ட மதிப்பீட்டை இவ்வருடத்தின் முதல் அரையாண்டுக்குள் நிறைவுசெய்வதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.

அதேவேளை இரண்டாம் கட்ட மதிப்பீட்டுக்கு முன்பதாக இலங்கை அதன் உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வெற்றுப்பயணம் – தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே வட மாகாண விஜயம் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரட்ணாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யாத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை.

நான் கொழும்பிலிருந்து வருகை தரும்போது வடக்கு அதிகாரிகள் சிலருடன் கதைத்தேன் ஜனாதிபதி விஜயம் அவ்வாறு இருந்தது என அவர்கள் கூறினார்கள் வாகனப் பவனியை கண்டு இரசித்ததாகக் கூறினார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்தை எதிர்த்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் போராட்டம் நடைபெற்றது.

ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பை தெரிவித்த போராட்டக்காரர்களை பொலிசார் இழுத்துச் சென்றதையும் தாக்குதலுக்கு தயாராக இருந்த பொலிசாரையும் ஊடகங்களில் ஊடாகப் பார்த்தேன்.

நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி கதிரையிலிருந்து மக்கள் விரட்டியடித்த போது ரணில் விக்கிரமசிங்க பின் கதவால் ஜனாதிபதியானார்.

நாட்டை முன்னேற்ற போகிறேன் என கூறிக்கொண்டு நாட்டு வளங்களை வெளிநாட்டுக்கு தாரைவாக்கம் செயற்பாட்டில் ரணில் விக்கிரமசிங்காக ஈடுபட்டு வருகிறார்.

நாட்டை பாதுகாப்பதற்காக பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்பினர் மேற்கொள்ளும் போராட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் மூலம் அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என அரசியல் அமைப்பு கூறுகின்றது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கதிரையில் மீண்டும் அமர்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வடக்குக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

வட மாகாணத்தின் வளம் மிக்க பகுதிகளான மன்னார் பூநகரி தீவகம் போன்ற பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அப் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.

நாடு பொருளாதார ரீதியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாட்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சனையை தீர்க்க அல்ல எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரமே என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் விரைவில் பாரிய மாற்றம் – ரணில் விக்கிரமசிங்க

புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று சனிக்கிழமை (06) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதற்காக தற்போதுள்ள மனித வளப் பற்றாக்குறையைத் தீர்க்க தொலைக் கல்வி முறைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையையும், அதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற புலம்பெயர் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான திறனையும் ஜனாதிபதி விளக்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் விரிவுரையாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு மாணவர்களையும் கவரக்கூடிய வகையில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் (National Masters & Seniors Athletics) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அப்போட்டிக்கு முன்னர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 22 ஆவது ஆசிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான போட்டியில் பங்கேற்ற இவர், அதில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார்.

இவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பூநகரி பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம்

வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (05) பிற்பகல் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பூநகரி நகர அபிவிருத்திக்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, உரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூநகரி கோட்டையை பார்வையிட்டார்.

மேலும், பூநகரி பிரதேசத்தில் இயங்கிவரும் உயர்தர முந்திரி உற்பத்தி நிறுவனமான “வன்னி கெசு” முந்திரி உற்பத்தி நிறுவனத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்து அதன் செயற்பாடுகளையும் அவதானித்தார்.

இயந்திரவியல் பொறியாளரான யுவதி ஒருவரால் நடத்தப்படும் இந்த கைத்தொழில் நிறுவனம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் இங்கு அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுவதோடு, கஜு சுத்தப்படுத்தலில் இருந்து அதன் இறுதி செயற்பாடு வரையில் பயன்படுத்தப்படும் அனைத்து இயந்திரங்களும் குறித்த யுவதியால் தயாரிக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த தொழில் நிறுவனமானது தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, இது நாட்டின் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும் முன்னுதாரணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இக்கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டனர்.

ஒரே திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணம் அடுத்த 05 வருடங்களில் அபிவிருத்தி செய்யப்படும் – ரணில் விக்கிரமசிங்க

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் எஞ்சின் ஆக இயங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05 பிரதான எஞ்சின்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் இன்று (05) நடைபெற் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி,சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம்,குடிநீர், சுற்றுலா, வனவன பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி அவ்விடத்திலேயே அறிவித்தார்.

கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு எஞ்சின் மாத்திரமே உள்ளது. அதற்கு 50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றை மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு எஞ்சின்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும். அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன. வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும்.

தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன.

மேலும் வட.மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வட. மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வட. மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வட.மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயற்திறனும் கொண்டவர். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட.மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம் ” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன

நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதாளத்தில் விழுந்து கிடந்த போது நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியமை சிறப்புக்குரியதாகும்.

ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது சமயல் எரிவாயு இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை. மின் துண்டிப்பு தொடர்ச்சியாக நீடித்தது. வெளிநாட்டு கையிருப்பு முற்றாக தீர்ந்துப்போயிருந்தது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினார். அதனால் இன்று வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது. வட. மாகாணத்தின் வீதிக் கட்டமைப்புக்களை பலப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோல் போக்குவரத்து செயற்பாடுகளை பலப்படுத்தி சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படு வருகின்றன.

வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்

கடந்த முறை உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணம் பெற்றுக்கொண்டது. க.பொ.த. சாதாரண தர பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருந்தன. மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

வட. மகாண கல்வி அபிவிருத்திக்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து செயற்திறனுடன் பணியாற்றி வருகின்றனர். அது தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும். சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்திகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாய அபிவிருத்தி திட்டங்கள் பலவும் தற்போதும் ஆரம்பிக்கபட்டுள்ளன. குறிப்பாக இதுவரையில் பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான தலையீடுகளை மேற்கொண்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இப்பிரதேச விவசாயிகளின் அறுவடைகளை கொண்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த முறை எமது பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதும் இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இம்முறையும் ஜனாதிபதியை வரவேற்று நன்றி கூறுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை விவசாயத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், யானை வேலி பராமரிப்பு மற்றும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம்

ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சுமார் 12 அரசியல் கைதிகள் இன்னமும் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அல்லது பிணையில் விடுவிக்க விசேட அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

யுத்தம் நிறைவடைந்தாலும் வவுனியாவில் அபிவிருத்திப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார். காணி விடுவிப்புப் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளதால், அதற்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். நோஹரதலிங்கம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, சமூக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர மற்றும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி ஷெனுகா செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி ரௌபதி மோமுரிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, மிலிந்த மொரகொட அந்தப் பதவியை வகித்தார்.

அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது – சபா.குகதாஸ் கோரிக்கை.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச பொன்னாவெளி பகுதியை மையமாக கொண்டு சுண்ணாம்புக்கல் அகழ்வதற்கும் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அகழ்வுப் பணி நடைபெற்றது. பின்னர் வனவளத் திணைக்களம் தலையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஐந்து மாதங்களை கடந்து போராடுகின்றனர்.

சுண்ணக்கல் அகழ்வு தொடர்பாக தடுப்பதற்கு அரசியல்வாதிகள் மக்களுடன் நின்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது மட்டும் தான் நடைபெறுகிறது.

ஆனால் இதனை தடுப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மற்றும் புவியியல் சார்பான விளக்கங்கள் உரிய நிபுணர்கள் அல்லது விரிவுரையாளர்கள் போன்ற தரப்பால் இதுவரை அரசாங்கத்தை நோக்கியோ அல்லது பொதுவாகவோ முன் வைக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட புவியியல் சார்பு கல்விமான்கள் மௌனம் காப்பது நல்லதல்ல. புவியியல் ரீதியாக யாழ்ப்பாண பாறை அமைப்பு மயோசின் கால சுண்ணக்கல் வகைக்குரியதாகும்.

அத்துடன் இளமடிப்பு பாறை வகைக்கு உரியதாகவும் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் பாரிய அகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

இதனை மையமாக கொண்டு புவியியல் பேராசிரியர்கள் இவை தொடர்பான கருத்துக்களை வெளியிட வேண்டும் காப்பிரேட் கம்பனிகளினால் உலகில் பல இடங்கள் பாலை வனங்களாகவும் மக்கள் வாழ முடியாத பிரதேசங்களாகவும் மாறி வருவதை போன்று எதிர் காலத்திலும் பொன்னாவெளி பிரதேசம் மாறிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“லொகான் ரத்வத்தை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்தார்” – தமிழ்க் கைதி ஒப்புதல் வாக்குமூலம்

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னைதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதோடு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல்கைதியொருவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி பூபாலசிங்கம் சூரியபாலன் என்பவரே இந்த குற்றச்சாட்டை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

மேலும்,” சிறைச்சாலைகள் அமைச்சர் எங்களை சந்திக்க விரும்புகின்றார் விடுதலைக்கான கையெழுத்துக்களை பெறவிரும்புகின்றார் என சிறைச்சாலைகள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து, எங்களை வெளியில் அழைத்து சென்று வரிசையாக நிற்க செய்தனர். சிறைச்சாலை பிரதான அதிகாரி தலைமை சிறைக்காவலர் பல பொலிஸ் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர் ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் தன்னை முழங்காலில் இருத்தியதோடு உண்மையை சொல்லுமாறு துப்பாக்கியை தலையை நோக்கி நீட்டி மரண அச்சுறுத்தல் விடுத்தார் ” என அவநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தேகநபரான இராஜாங்க அமைச்சரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.