உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குவதான கடிதம் மீளப்பெறப்பட்டது

பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் அதிகாரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் மீளப் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சமர்ப்பணங்களை முன்வைத்து, பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் மீளப்பெறப்பட்டதாக நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் புதிய கடிதம் ஒன்றை வெளியிடுவதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக அரசாங்க சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மான் காசிம், இந்த மனுவை தாக்கல் செய்த பின்னரே குறித்த கடிதம் நீக்கப்பட்டதாகவும், எனவே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, அந்த மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி மீள அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

எவ்வாறாயினும், சட்டங்களை தனித்தனியாக திருத்துவதற்கு பதிலாக, புதிய தேர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

சீன கடலட்டை பண்ணைகள்: மோடியிடம் உதவிகோரும் வடக்கு கடற்தொழிலாளர்கள்!

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து இன்று (13) காலை கலந்துரையாடினர்.

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது. இதனால் கடற்றொழிலாளர்களும் மீன் சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவர்.

டொலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.

கடற்றொழில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து குறித்த மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கினர்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு மஹிந்த ராஜபக்ச தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் – சபா குகதாஸ்

மகிந்த ராஜபக்ச ஜனாபதியாக இருந்தபோது நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (12.06.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ்க் கட்சிகள் சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் நாட்டைக் குழப்பாமல் உள்நாட்டில் அரசுடன் கதைத்து அரசுக்கு நிபந்தனைகள் விதிக்காது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஊடகங்களுக்கு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதுவித நிபந்தனையும் இன்றி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இரண்டாவது தடவை இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதை மகிந்த மறந்திருக்கலாம் ஆனால் தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

தமிழர் தரப்பு முன்வைக்கும் உடனடிப் பிரச்சினைகளை நிபந்தனைகளாக தென்னிலங்கை மக்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யும் சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு மகிந்த போன்றோரின் அறிக்கைகள் சிறந்த எடுத்துக் காட்டு.

தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுகின்ற நல்லெண்ண வெளிப்பாட்டை ரணில் அரசாங்கம் நியாயமான முறையில் தீர்க்க முன் வராவிட்டால் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகொள்ள முடியாது.

தென்னிலங்கை மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் உள்ள இனவாத சிங்கள தலைவர்கள் இருக்கும் வரை நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது” என தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தகாலம் நிறைவடைந்ததாலேயே தொல்பொருள் திணைக்கள தலைவர் இராஜினாமா – விதுர விக்கிரமநாயக்க

பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு அண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டு வருவதோடு, காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கடந்த வாரம் இலங்கை தமிழரசுக்கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பில் ஆதரங்களுடன் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

விகாரைகளை அண்மித்த பகுதிகளில் தேவைக்கு அதிகமாக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறும் , அரச காணிகளையோ அல்லது தனியார் காணிகளையோ ஆக்கிரமிப்பதற்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதி கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட சர்ச்சைக்குரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்பாக ஊடகங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் வெளியான காணொளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையிலேயே பேராசிரியர் அநுர மனதுங்க தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.

இது தொடர்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொல்பொருளியல் தொடர்பில் வடக்கு , கிழக்கில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் எவ்வித தெளிவுபடுத்தல்களும் வழங்கப்படவில்லை. எனினும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகக் காணப்படுகின்றமையால் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நியமனம் பெற்றிருந்தார். அதன் பின்னர் அவரது ஒப்பந்த காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய மீண்டும் பேராசிரியராக தனது பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார் என்றார்.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேர்தல் சட்டங்களில் திருத்தம்

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 2023ஆம் ஆண்டின 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் வலுவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்திற்கான இடைநேர் விளைவான கருமங்களுக்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த திருத்தங்களை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி 23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் செவ்வாய்கிழமை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.

சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

கடந்த காலங்களில் நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த போதிலும் ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரியான திட்டங்களின் பலனாக சாதகமான மாற்றங்களை காண முடிவதாக சுட்டிக்காட்டிய அவர், சப்ரகமுவ மாகாணத்தின் அபிவிருத்திக்காக அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக சப்ரகமுவ மாகாண மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தும் அதேநேரம் அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ கடந்த 8ஆம் திகதி தனது பதவி விலகலை அறிவித்தார்.

கடந்த மே மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கிழக்கு, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிழக்கு ஆளுனராக செந்தில் தொண்டமான் , வடக்கு ஆளுனராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் வடமேல் மாகாண ஆளுனராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் புதிய ஆளுனர்களாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை பிரான்ஸ் மற்றும் லண்டனுக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உட்பட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.

மேலும், இலங்கைக்கு உதவி வழங்கும் ‘பாரிஸ் கிளப்’ உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்களை ஜனாதிபதி முன்னெடுக்க உள்ளார். குறிப்பாக கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விடயங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான இலக்குகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கு ஆதரவைப் பெறுதல் என்பன ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று பிரான்ஸ் வாழ் இலங்கையர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். லண்டனில் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பிரான்ஸ் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளின் ஆதரவை முழுமையாக பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் விஜயத்தின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் பிரான்சில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பொருளாதார மூலோபாயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.

இதேவேளை, நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணிலுக்கும் பிரமர் மோடிக்கும் இடையிலான சந்திப்புகள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் முன்னரும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி சந்திப்புகள் இடம்பெறவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது டெல்லி விஜயத்திற்கான உத்தியோகப்பூர்வ அழைப்பிதழை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி ரணில் டெல்லிக்கு செல்ல வில்லை.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது.

மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என ஏனைய சமூக பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அழைப்பு விடுத்தது. நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒத்துவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தில் கலந்துக்கொள்ள உள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கான திகதிகள் குறித்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது – ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லைஎன ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் இராஜாங்க அமைச்சர் 2021ம் ஆண்டு பலவந்தமாக நுழைந்த விதம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆணைக்குழு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டு;;ம் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் குற்றச்சாட்டுகள் நிருபி;க்கப்படும்வரை இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுஜனபெரமுன இராஜாங்கஅமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என மோர்னிங் கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசத்திடம் வினவியவேளை பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளதால் கட்சி அவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் நிலையில்இல்லை என சாகரகாரியவசம்தெரிவித்துள்ளார்.

முதலாவது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனரா என்பது பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தாவிட்டால் அல்லது உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதியப்படாவிட்டால் கட்சியால் எதனையும் செய்ய முடியாது என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்துமாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது கட்சி அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த உறுப்பினர் கட்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம் எனவும் பொதுஜனபெரமுனவின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையிருக்கவேண்டும்,இராஜாங்கஅமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள்நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக இலங்கையின் தலைவர் பெளத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார். அதன்போது இலங்கை தீவின் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்க கருத்து கூறியுள்ளார்.

இப்படி ஒரு தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை சிங்கள தீவிரர்கள் எப்போதும் மறைக்க விரும்புகிறார்கள். அந்த விஜயன் வந்த இறங்கிய கதை பொய்யென்று என்னை தேடி வந்து வண. பிக்கு ஞானசாரர் சொன்னது போன்றும், இளவரசன் விஜயன் வரவை நினைவுகூர்ந்து, இலங்கை அஞ்சல் திணைக்களம் முத்திரை வெளியிட்டு, பின்னர் அதை இரண்டு வருடங்களில் வாபஸ் பெற்றதை போன்றும், வெறும் கைகளால் சூரியனை மறைப்பதை போன்றும், வரலாற்றில் தமிழர்களுக்கு உரிய இடத்தை இவர்கள் எப்போதும் மறைக்க முயன்று வருகிறார்கள்.

தமிழ் பெளத்த வரலாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் என்ற பூட்டுக்கு அது சாவியாக அமையும் என நான் நம்புகிறேன். இந்நோக்கில், 2018ம் வருடம் நான் அமைச்சராக இருந்த போது ஒரு காரியம் செய்தேன்.

பிரபல சிங்கள வரலாற்றாசிரியர், சினிமா எழுத்தாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றை பற்றி சான்றுகளுடன் எழுதிய, “தமிழ் பெளத்தன்” (தமிழ பெளத்தயா) சிங்கள நூல் நாட்டில் பாவனையில் இல்லாமல் இருந்தது. அந்த நூலை தேடி பிடித்து, பேசி, பேராசிரியரின் அனுமதியை பெற்று அதை எனது அமைச்சின் செலவில் மறுபிரசுரம் செய்து, நாட்டின் சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

அதன்பின் பேராசிரியர் ஆரியரத்னவை அழைத்து சில வண. பிக்குகள் கண்டித்துள்ளார்கள், என அறிந்தேன். என்னுடன் முரண்பட எவரும் வரவில்லை. இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போட்டு கிழிப்பார்களோ தெரியவில்லை. அவரை அந்த கெளதம புத்தனும், கதிர்காம கந்தனும் காப்பாற்றட்டும்.