பாராளுமன்றில் எவருக்கும் 50% வாக்குப்பலம் இல்லை – ஜனாதிபதி

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனவே, தேர்தலுக்காக அன்றி பொருளாதார  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் நேற்று (02) நடைபெற்ற 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் ஓரங்கமாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவருவதாகவும், எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறும் அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் சானக பண்டார, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஓர் உறுப்புநாடு எனவும், ஆகவே மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்குத் தயாராகிவரும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் ஐ.நா உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்குத் தாம் கொண்டிருக்கும் உரிமையை ஊடகங்களின் வாயிலாகவே அனுபவிக்கின்றனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு முற்படுகின்றனர்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘ஊடகங்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் பொதுவானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் சர்வாதிகாரிகளால் எப்போதும் நாட்டை ஆளமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்துவிடுவார்கள்’ என்றும் சானக பண்டார எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரத்தின் 7 நாட்களும் விமான சேவைகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கடன் உதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

தையிட்டி சட்ட விரோத விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின் நான்காம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் யாழ். மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊடக பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டுப் பிரஜையை நாடு கடத்த நடவடிக்கை

கடவுச்சீட்டு மோசடி செய்ததாக குறிப்பிடப்படும் சீன நாட்டு பிரஜையை நாடு கடத்த உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்த சீன நாட்டுப் பிரஜை கடவுச்சீட்டு மோசடி செய்தார் என குறிப்பிடப்படும் விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள சீன தூதரகத்துடன் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நேரடியாக தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த சீன பிரஜையை நாடு கடத்த உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவரை நாட்டுக்குள் அனுமதித்தமை தொடர்பில் திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் திணைக்களத்தினால் எவருக்கும் பயணத் தடை விதிக்க முடியாது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஒரு நபர் வெளிநாடு செல்வதற்கு விமானச் சீட்டு பெற்றுக்கொள்ளும்போது அதனை திணைக்களம் அறிந்துகொள்ளும் தொழில்நுட்ப வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன் மீது தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் குறிவைத்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று நடத்திய கூட்டமொன்றை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் சென்ற புலனாய்வாளர்களுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.

சிவில் உடையில் வந்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்ட புலனாய்வாளர்களை, அடையாளம் காணும் முயற்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்ட போது, அவர்களை தாக்கி விட்டு, தப்பியோட புலனாய்வாளர்கள் முயன்றதால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்களுடன் தமிழ் பக்கம் பேசியபோது, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு-

மருதங்கேணி பொது விளையாட்டரங்கில் கிரிக்கெட் கிளப் ஒன்றின் கடினப்பந்து அணி உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது, இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, அருகிலுள்ள மரத்தின் கீழ் நின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொலிஸ் பாதுகாப்பை ஏற்காதவர். அவரது பாதுகாப்பில் எமது கட்சி உறுப்பினர்கள் அக்கறையுடன் இருப்பார்கள்.

எமக்கு அருகிலுள்ள மரத்தின் கீழ் நின்ற இருவரும் நடத்தையில் சந்தேகம் தோன்றியது. அவர்கள் இடுப்பில் பிஸ்டல் வைத்திருப்பதை போல தோன்றியது.

அதனால் அவர்களிடம் சென்று, இங்கு ஏன் நிற்கிறீர்கள் என கேட்டோம்.

அருகில் பரீட்சை நிலையம் உள்ளது. எமக்கு முறைப்பாடு கிடைத்தது. அதனால் பார்வையிட வந்தோம் என்றார்கள்.

பரீட்சை நிலையத்தை பார்வையிட இங்கு வந்து நிற்கும் நீங்கள் யார் என்றோம்.

தாம் சிஐடியினர் என்றார்.

அடையாளத்தை காட்டுமாறு கேட்டோம். அப்போது கஜேந்திரகுமார் எம்.பியும் அங்கு வந்து அடையாளத்தை காட்டுமாறு கேட்டார். ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை பிடிக்க முயன்ற போது கஜேந்திரகுமார் எம்.பியை தாக்கிவிட்டு தப்பியோடினார். அவரை விரட்டிப் பிடிக்க முயன்ற யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் தீபன் திலீசனை ஹெல்மெட்டினால் தாக்கிவிட்டு தப்பியோடினார்.

மற்றையவர் பிடிக்கப்பட்டார்.

இதன்போது, அருகிலுள்ள பாடசாலையில் இருந்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்தனர். அதில் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கெட்ட வார்த்தைகள் பேசி, தனது இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை உருவி, கஜேந்திரகுமாரை சுடுவதை போல மிரட்டினார் என்றார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவைக்கு அனுமதி!

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று அறியமுடிகின்றது.

இதற்கிடையில் பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜூலை இறுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வரும் வாய்ப்பு

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிதிக்கொள்கையை உறுதியாக பேண வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட மத்திய வங்கி ஆளுநர், பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், கடுமையான நிதிக் கொள்கை காரணமாக, செப்டம்பர் மாதம் 70% பண வீக்க அதிகரிப்பை தடுக்க முடிந்ததாகவும்
தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

பணவீக்கம் குறைந்ததால், அதிகரித்த வட்டி வீதத்தை ஓரளவு குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனவரி மாதம் திறைசேரி முறிகளின் மூன்று மாத வட்டி வீதம் 33 வீதமாகக் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பணவீக்கம் மிக வேகமாகக் குறைந்து ஜூலை மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறினார்.

பூர்வீக தொல்லியல் இடங்களை அடையாளங் காணமுற்பட்டால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும்

அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த,எஸ். சிவலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில், “ஒருசில சுயநலம் கொண்ட மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கத்தினை குழப்பக்கூடிய விடயங்களை பெரிதாக்கி வருகின்றனர். இது மிகப்பெரும் கவலைதரும் விடயம். சில அரசியல்வாதிகளும் இந்த மத குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுகின்றனர்.

வடக்கில் அரசாங்கத்திற்கு சார்பான தொல்பொருள் திணைக்களத்திற்கு கூறக்கூடிய விடயம் பூர்வீக தொல்லியல் இடங்கள் என தெரிவித்தால் இந்து சமயத்திலும் பல இடங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதேபோல் பௌத்த மதத்திலும் உள்ளது.

அவற்றையெல்லாம் கூறப்போனால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அவை தற்போதுள்ள மத நல்லிணக்கத்திற்கு குரோதமாகவே அமையும். எனவே தொல்லியல் திணைக்களம் இவ்வாறான விடயங்களை கைவிடுதல் வேண்டும். தற்போதுள்ள சம நிலையை பேணி பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது  யாழ் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி. ஜெபரட்ணம் கருத்து தெரிவிக்கையில், “மத நல்லிணக்கத்திற்கு எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

மற்ற மதங்களை மதிக்காத அன்பு செய்யாத ஏற்றுக்கொள்ளதா தன்மை எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற நிலை இருப்பது போல் தோன்றுகின்றது.

இதனால் பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சனைகளால் மதங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது. இந்த நேரத்தில் நாம் எங்கள் மதத்தை எவ்வாறு மதிக்கின்றோமோ அதேபோல் ஏனைய மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது நாட்டில் பல இன மக்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இருந்தபோதிலும் மக்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் திணிக்கப்படுகின்றன.

அதாவது ஒரு இனம் வாழும் இடத்தில் அந்த இனத்திற்கு தேவையில்லாத அந்த இனத்திற்கு ஒவ்வாத மற்றோர் இனத்திற்கு தேவையான ஒரு விடயத்தினை செய்கின்றபோது மக்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட காரணமாகிவிடுகின்றது. ஆகவே ஒவ்வாரு இனத்தவரும் வசிக்கும் இடங்கள் மதிக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய கலாசார சமய விழுமிங்கள் மதிக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறம்போது இவ்வாறான பிரிவினைகள் எற்படுவதனை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய மத குருமார் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

PNS SHAHJAHAN எனும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கடற்படைக கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

PNS SHAHJAHAN என்பது 134.1 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுவதோடு இதற்கு கேப்டன் Adnan Laghari TI தலைமை தாங்குகின்றார்.

இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது.

அத்துடன் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 04 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.