பதவி விலகவுள்ள அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதியினை வழங்காத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அச்சகத்தின் தலைவர் திருமதி கங்கானி கல்பனா லியனகே புதிய அறிவிப்பொன்றை விடுத்தள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஊடக அமைச்சுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாக அரசாங்க அச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ந்தும் பணிபுரியுமாறு அமைச்சு அறிவித்தல் வழங்குமானால் அதற்கேற்ப பணியைத் தொடர்வதாகவும், மாறாக இடைநிறுத்தப்பட்டால், தானும் அதற்குத் தயாராக இருப்பதாகவும் திருமதி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் – தலைவிரித்தாடும் ஊழல் மோசடிகள்

நாட்டு மக்கள் இக்கட்டான நிலையில் தத்தளிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு சென்று உரை நிகழ்த்திக்கொண்டிருப்பதாக ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகை எப்படி ஆள்வது, சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்று உலகத் தலைவர்களுக்குப் பல்வேறு உபதேசங்கள் வழங்கப்படுகின்றன.

உலகத் தலைவர்களுக்கு உபதேசம் செய்யும் ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு உபதேசம் செய்ய முடியவில்லை ஏனெனில் இந்த அரசாங்கத்தில் உள்ள மோசடிகள், ஊழல்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், தோல்விகள் இவையனைத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி இவற்றையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எருவுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் கொடுக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் மோசடிகளும் ஊழல்களும் தலைவிரித்தாடியுள்ளன.

ஆனால் அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, வெளியிடப்படவில்லை.

மறுபுறம், அரசாங்கம் மோசடி மற்றும் ஊழல் சட்டமூலம் பற்றி பேசுகிறது. மோசடி, ஊழல் போன்ற சட்டமூலத்தை எடுத்துக்கொண்டாலும், மோசடி, ஊழல்கள் குறித்து வெளியாகியுள்ள அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாது என்று கூறுகின்றனர்.

சீன உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சீன குற்றக்குழுக்களின் கேந்திர நிலையமாக இலங்கை மாறும் அபாயம்

அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர்.

அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல்வேறு தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது, சீனப் பிரஜைகள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இணையவழி மோசடிக்காக சீன நாட்டவர்கள் வேறொரு நாட்டில் தடுத்து வைக்கப்படுவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். அதிகரித்து வரும் இந்த பிரச்சினையை சமாளிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட வேண்டும். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் ஒழிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம், இது அனைவருக்கும் பாதுகாப்பான இணையச் சூழலுக்கு வழிவகுக்கும்.

முன்னதாக, காத்மாண்டுவின் வௌ;வேறு பகுதிகளில் இதேபோன்ற நடவடிக்கைகளுக்காக 122 சீன பிரஜைகளை கைது செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது சீன நபர்களை நேபாள பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டவர்களிடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிராகரம், இந்த முறை, சந்தேக நபர்களுக்கு எதிராக இணையவழி மோசடி வழக்கைத் தொடர வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

சந்தேக நபர்கள் வாட்ஸ்அப் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும் சலுகைகளை வழங்குவார்கள், பின்னர் டெலிகிராம் மூலம் இணையவழி வகுப்புகளில் சேருவதற்கு அழைத்து அவர்களை நம்ப வைப்பார்கள் என்று பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளர்.

இந்த மோசடித் திட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 4.7 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு குறித்த பாதிக்கப்பட்ட நபரை 30சதவீதத்திற்கு மேல் நிகர லாபம் தரும் இணையவழி வணிகத்தில் முதலீடு செய்வதாகக் கூறியே ஏமாற்றியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற இணையவழி மோசடி சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிச் சுமை மட்டுமல்ல, உலகளாவிய இணையப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை செயற்படுத்துவதும் அவசியம். குற்றவாளிகளுக்கு எதிராக அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுப்பது மற்றும் அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியமாகின்றது.

சந்தேகநபர்களான சீனப்பிரஜைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோசடி செய்து, மில்லியன் கணக்கான மக்களை ஏமாற்றி, இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத சூதாட்டம் போன்ற சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் உள்நாட்டில் அதிகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சீன முதலீடுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளாக உள்வரும் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக அதிகளவான சீன பிரஜைகள் காணப்படுகின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்றாலும், சிறுபான்மையினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அண்மைய ஆண்டுகளில் பலரை கைது செய்து வருகிறது.

எவ்வாறாயினும், சீன நிதியுதவி திட்டங்களில் பணியாற்றுவதற்காக சீன குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவது தவறான முன்னுதாரணமாகின்றது. மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. வெளிநாட்டுப் பிரஜைகளின் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும், அது தொடர்ந்து கரிசனை செலுத்த வேண்டியதாக உள்ளது.

சீன நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு உதவ மலிவான தொழிலாளர்களை தேடுவது இந்த போக்குக்கு ஒரு காரணமாக இருக்கலாம். குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாராக இருக்கும் சீன குற்றவாளிகளை கொண்டு வருவதன் மூலம், இந்த நிறுவனங்கள் தொழிலாளர் செலவில் பணத்தை சேமிக்க முடியும்.

எவ்வாறாயினும், இந்த நடைமுறை நெறிமுறையற்றது மட்டுமல்ல, இது இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவே இலங்கையில் சீனக் குற்றவாளிகளின் ஊடுருவலுக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.

இந்தப் போக்கின் பின்னணியில் உள்ள காரணங்கள் எதுவாக இருந்தாலும், சீனக் குற்றவாளிகள் இலங்கையில் இருப்பது கவலைக்குரியது என்பது தெளிவாகிறது. இந்த நபர்கள் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம், மேலும் அவர்கள் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் பங்களிக்கலாம். அதுமட்டுமன்றி இலங்கையை குற்றச்செயல்களின் கேந்திரமாகக் கூட மாற்றலாம்.

இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் (Levan S. Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான எந்தவொரு கலந்துரையாடலுக்கும் விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான பிரிவில் சோதனை நடவடிக்கை தீவிரம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் VIP பயணிகள் முனையத்தில் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சிடம் இருந்து இந்த அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தற்போது உரிய பரிசோதனைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தை மக்கள் தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமைக்கு ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை டோக்கியோ நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வௌிநாடு அல்லது வேறு ஒரு தரப்பினரது தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய செயற்றிட்டங்களை இரண்டு தரப்பினரதும் இணக்கப்பாடுகள் இல்லாமல் நிறுத்துவதற்கு அல்லது இரத்து செய்வதற்கு முடியாதவாறு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக சட்டங்களை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அனைத்து பாரிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான யோசனைகள், அந்த செயற்றிட்டங்களின் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியதை கட்டாயமாக்குவதாகவும் ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக ஜப்பான் பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

இதனிடையே, ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான அமைச்சர் Taro Kono-வை ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை நகர்த்துவதற்கான திட்டம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையினரையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையின் 20 ஆவது ஆண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஆரம்பிப்பதற்காக தொழில் முயற்சியாளர்களின் பூகோள இயக்கமொன்றை உருவாக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு பிரித்தானியா தடை விதிக்க கோரி கையெழுத்து சேகரிப்பு

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது.

இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற நம்பகதன்மை மிக்க மனித உரிமை அமைப்பு ஜெனரல்சவேந்திரசில்வா குறித்த 50 பக்க ஆவணமொன்றை தயாரித்து 2020 ஜூலை மாதம் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் குறித்த பிரிவிடம் இந்த ஆவணங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ளது இந்த ஆவணம் 2020 ஜூலை ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தடை நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் ஏன் சவேந்திரசில்வாவை தடை செய்யலாம் என தெரிவிக்கின்றது எனவும் இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலங்களில் சவேந்திரசில்வா 58 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியவேளை உயிர்வாழ்வதற்கான உரிமை உட்பட மீறப்பட்டமை உட்பட இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்பு குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் ஆவணம் தெளிவாக தெரிவித்துள்ளது எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – சர்வதேச மன்னிப்புச்சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் இலங்கை பொலிஸாரினால் மே 18ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனசர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாங்கள் முன்னர் கரிசனை வெளியிட்டுள்ளபடி பயங்கரவாத தடைச்சட்டம் கண்மூடித்தனமான கைதுகளிற்கும் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் துணைபோகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சித்திரவதைகள் போன்றவற்றின் மூலம் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானிற்கு வழங்கிய தகவல்களின் படி அதிகாரிகள் மேலும் நால்வரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளனர் அவர்கள் தாங்களும் கைதுசெய்யப்படலாம் என அச்சம்கொண்டுள்ளனர் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவேளை இந்த விடயங்கள் கவலையை ஏற்படுத்துகி;ன்றன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான வரைவிலக்கணத்தை மேலும் விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்இவலுவான ஆதாரங்கள் இருந்தால் நியாயமான விசாரணை தரங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றத்திற்காக அவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் சர்வதேச மனித உரிமைகள்தரநிலைகளிற்கு இணங்க முன்னெடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழர் தரப்பில் போராட்டங்களுடன் ராஜதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனம்- சபா.குகதாஸ் ஆதங்கம்

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து செல்லும் வேளையில் தமிழ்த் தேசியத் தரப்புக்களிடம் வெறும் தேர்தல் அரசியலும் வெற்றுக் கோச போராட்டங்களும் ஆங்காங்கே கத்திக் கலைவதுமாக நடக்கிறதே தவிர போராட்டங்களுடன் ஒரு ராஜதந்திர நகர்வு எதுவும் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் தரப்பாக ஒன்று பட்டு போராட வேண்டிய நேரத்தில் தாயகத்தில் ஒரு தரப்பு ஒன்றுபடும் தரப்புக்களை விமர்ச்சிக்கும் நிலை ஆட்சியாளர்களுக்கும் பூகோள நலன் சார்ந்த நாடுகளுக்கும் அல்பா கிடைத்த மாதிரிப் போனதே தவிர தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியான பின்னடைவு தான் எஞ்சியுள்ளது.

தமிழர்களுக்கான நீதிக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கு உள் நாட்டு ஆட்சியாளர்களை இனியும் நம்புவது தமிழர் தரப்பின் பலவீனம் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச ரீதியாக அழுத்தங்களை இலங்கை அரசு மீது ஏற்படுத்தும் ராஐதந்திர நகர்வை தாயக புலம் பெயர் தரப்புக்கள் தொடர்ச்சியாக உருவாக்கவில்லை.

அறிக்கை அளவில் இனப்படுகொலை , சர்வசன வாக்கெடுப்பு, சமஷ்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  என்ற விடையங்களை பேசினாலும் இதனை அடைவதற்கான பொறிமுறை இராஐதந்திர நகர்வுகளை கையாள தவறியவர்களாக தமிழர் தரப்பு  உள்ளனர்.

இலங்கையில் நடந்தது தமிழினப் இனப்படுகொலை தான் என்பதை ஒரு நாடு அங்கீகரிப்பதற்கு உரிய செயல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற் கொள்ளாமையே இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை என காலத்தை கடத்துவதுடன் நீதியை நீர்த்துப் போகவும் செய்கிறது.

தற்போதைய சூழலில் அரசியல் அதிகாரத்தின் மூலம் தான் தமிழர் தாயக இருப்புக்களை தக்க வைக்க முடியும் என்ற உண்மையை விளங்கியும் வெற்றுக் கோசம் இடுவதையே சில தரப்புக்கள் முதன்மைப் படுத்துகின்றனர்.

கடந்த காலத்தில் இனப் பிரச்சினை தொடர்பாக முன்னெடுத்த அத்தனை போராட்டங்களிலும் எந்தத் தவறுகள்  காரணமாக பின்னடைவைச் சந்தித்தோம் அல்லது அதிகார சக்திகளை எப்படி கையாள தவறினோம் என்பதை மீள் பரிசீலனை செய்தால் அதுவே பிரச்சினைக்கு  சரியான பாதையைக் காட்டும்  இதனைத் தமிழர் தரப்பு ராஐதந்திர ரீதியாக இதுவரை கையாளவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக தமிழர் தரப்பு எடுக்கின்ற உறுதியான ராஐதந்திர நகர்வே தாயக இருப்பை பாதுகாக்கவும் பரிகார நீதிக்கான கதவுகளையும் திறக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியா எதிர்கொள்ளும் மூன்று சவால்கள் – ஜப்பான் உரையில் ஜனாதிபதி ரணில்

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் சவால்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்ற ஆசியாவின்  எதிர்காலம் என்ற நிக்கேய் போராத்தின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ஆசியா எதிர்கொள்ளும் இந்த மூன்று சவால்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறுபட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் மனித உரிமைகளின் வரையறைகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற வகையில் ஆசியாவின் முக்கியத்துவம் உலக சனத்தொகையில் 60வீதமான மக்கள் வாழ்வது  உலக பொருளாதாரத்திற்கு ஆசியாவின் மிகப்பெரிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் மீட்சி இந்தியாவின் உள்நாட்டு கேள்வி போன்றவற்றையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல் மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும், அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் குறித்து ‘நிக்கேய்’ மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது ஆசிய நாடுகளின் வெப்பநிலை உயர்வு, கடுமையான  வானிலை நிலைமைகள் மற்றும் கடல் மட்ட உயர்வு , ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் என வலியுறுத்தினார்.