உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் வெளியாகும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று (03) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி இன்று தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திகதி தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை ரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நாடு பிளவுபடுவது ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தல்

நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விமானப்படைக்கு தெரிவான கெடட் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “இன்று நீங்கள் அதிகாரிகளாகும்போது, அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்.

விமானப் படையின் பதவிப் பிரமாணமும் செய்து கொண்டீர்கள். இந்த இரண்டு பிரமாணங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது உங்களின் முதன்மையான கடமை மற்றும் பொறுப்புமாகும்.

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், நாட்டைப் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பாகும். ஏனெனில் நாடு இல்லாமல் அரசியலமைப்பு இல்லை. ஒரு நாடு இல்லாமல், அரசியலமைப்பு வெறும் காகிதத் துண்டாகவே இருக்கும்.

ஒரு நாடு இருப்பதாலேயே அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நீங்கள் அளித்த சத்தியப் பிரமாணத்தின்படி, இந்நாட்டு அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும், குடியரசிற்கு விசுவாசமாகச் செயல்படவும் உறுதியளித்துள்ளீர்கள்.

நமது நாட்டின் அரசியலமைப்பின் முதல் சரத்து “இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், அரசியலமைப்பு இருப்பது குடியரசுக்காகத்தான். நாட்டின் ஒற்றையாட்சி பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அத்தியாயம், மக்கள் இறையாண்மையை செயல்படுத்தும் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் நமது தேசிய கீதம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. மற்ற அனைத்து அத்தியாயங்களும் இவற்றைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவே உள்ளன.

அப்படியானால், நாம் அதன்படி செயல்பட வேண்டும். முதலில் நாட்டை பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாடாக இருக்க வேண்டும்.

இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாட்டை அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்க இடமளிக்கக்கூடாது. அது நமது முக்கிய கடமை. அங்கு நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, இந்த நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு 1980 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அச்சந்தர்ப்பத்தில் முப்படையினரும் பொலிஸாரும் உயிர்த் தியாகம் செய்து அதனைப் பாதுகாத்தனர்.

ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாட்டு மக்களின் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

நாடு என்ற வகையில் நாம் ஒரு தனியாக எழுந்து நிற்க வேண்டுமாயின், இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் போன்று, அனைத்து மதத்தினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நாம் அனைவரும் நமது கலாசாரத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

அதேபோன்று, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை என்ற நிறுவனங்களினால் இலங்கையின் சட்டபூர்வ தன்மை  நிறுவப்பட்டுள்ளது. சட்டத்துறை இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதித்துறை செயல்படுகிறது.

இந்த அனைத்து நிறுவனங்களாலும் இலங்கையின் அரசியலமைப்பைப் பாதுகாப்பது தொடர்பான விடயங்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.

ஒரு அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. வீதிகள் என்பது நாடாளுமன்றத்திற்கான மாற்றுவழியல்ல.

கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றம் இல்லாத நாடுகள் அராஜக நாடுகளாக மாறலாம். ஏனெனில் நாடாளுமன்றம் இல்லையென்றால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போய்விடும்.

அதேபோன்று, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாடுகளும் அராஜகமாகின்றன. எனவே, ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல செய்திகளை கொண்டு வருவதற்காக, வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல அமைப்புகளுடன் கலந்துரையாடினோம்.

நாடும் நீங்களும் விரைவில் அதன் பிரதிபலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை இழந்தால் நாம் நாட்டை இழப்போம். நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட அடிப்படை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது உங்களின் பொறுப்பு ஆகும். இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டால், உங்களுக்கு ஒரு நாடு இருக்கும். மேலும், அரசியலமைப்பு வழங்கிய ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பும், நாடும் ஒன்றாகவே முன்னோக்கிச் செல்கின்றன. அதனைப் பிரிக்க முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பமானது யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி

வடக்கின் நுழைவாயில்..” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார். கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் இந்த சந்தை நடைபெறுகிறது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்பரீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பல வருடகாலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.

250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.

பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் அறிக்கையின்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு, கடந்த பெப்ரவரிக்குள் 23.5 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 2022 செப்டம்பரில் 94.9 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1 சதவீதம் ஆகக் குறைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உட்பட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி தடுத்துவைக்க முடியாது – உயர் நீதிமன்றம்

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி தடுத்துவைக்க முடியாது என திறைசேரியின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதியை வழங்காததன் மூலம் திறைசேரியின் செயலாளர் உட்பட்டவர்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என ரஞ்சித்மத்தும பண்டார தனது மனுவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீன உயர்ஸ்தானிகராலயத்தால் திருமலையில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

சீன – இலங்கை பெளத்த நட்புறவுச் சங்கம் மற்றும் சீன உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிங்களம், தமிழ் மற்றும் இஸ்லாம் ஆகிய இனங்களை சேர்ந்த 225 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நேற்று (2) உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிச்சமல் விகாரை வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது சீன உயர்ஸ்தானிகர் கிவ் சென்ஹொங், சீனா, இலங்கையின் நண்பன் என்ற அடிப்படையில் பல உதவிகளை செய்து வருவதாகவும், அதன் ஒரு கட்ட உதவியாக இந்த உணவுப்பொதிகளின் விநியோகம் அமைவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை கடினமான நிலவரங்களை சந்தித்தபோது அதிலிருந்து மீட்சிபெற ஆரம்பத்திலிருந்து இன்று வரை சீனா ஒத்துழைப்பு வழங்கிவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வணக்கத்துக்குரிய தேரர்கள், இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சீன உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம, குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதன், இலங்கை – சீன பெளத்த நட்புறவுச் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுக்கு இடையூறு; வினோ எம்.பியை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வினோநோகராதலிங்கம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகவேண்டுமென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கானது நேற்று (02)முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே நீதிபதியால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு மேலதிக விசாரணைகளுக்காக இவ்வழக்கானது எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவ் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், செல்வராஜாகஜேநனதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.

பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து B/688/22 என்னும் வழக்கிலக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், 10.11.2022அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிஸாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து உத்தரவிட்டிருந்ததுடன், 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டிருந்தார்.

அந்தவகையில் குறித்த வழக்குவிசாரணை 02.03.2022 இன்று நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகவேண்டுமென உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கானது எதிர்வரும் 08.06.2023ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதம் தாங்கிய படையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழில் கைது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி , இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட கோரிக்கை

நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.தேர்தலை நடத்த மகா சங்க சபையை கூட்டி சங்க பிரகடனத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி அஸ்கிரி, மல்வத்து, ஆகிய பீடங்களிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தேசிய பிக்கு முன்னணியினர் வியாழக்கிழமை (02) அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பு தொடர்பில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித தேரர் குறிப்பிட்டதாவது,

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசியலமைப்புக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுத்த போது ‘நாட்டில் தேர்தல் இல்லை, தேர்தலுக்கான அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக இல்லை’ என குறிப்பிட்டு நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் போது நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

வரலாற்றில் பல சம்பவங்கள் அவ்வாறு பதிவாகியுள்ளன. வாக்குரிமையை கோரி மக்கள் வீதிக்கு இறங்கும் போது அரசாங்கம் மிலேட்சத்தனமான தாக்குதலை மேற்கொள்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நாட்டு மக்கள் வாக்குரிமை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும். ஆகவே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.

இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஏற்கெனவே ஒரு வருடம் பிற்போடப்பட்டது. இந்த தேர்தலை மீண்டும் பிற்போட இடமளிக்க முடியாது.

உள்ளுராட்சின்றத் தேர்தலை விரைவாக நடத்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தி மகாநாயக்க தேரர்களிடம் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சகல பௌத்த மத பீடங்களையும் ஒன்றிணைத்து மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும், இரண்டாவது மாகாண மற்றும் உள்ளுராட்சிமன்ற அடிப்படையில் பௌத்த தேரர்களை ஒன்றிணைத்து விசேட கூட்டத்தை நடத்த வேண்டும் மூன்றாவது, செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தை சங்க பிரகடனமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

உள்ளுராட்சிமனற்த் தேர்தலை நடத்துமாறு ஆட்சியாளர்களுக்கு வழங்கும் யோசனைகள் செயற்படுத்தப்படாவிடின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு மகாநாயக்க தேரர்கள் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

குழந்தைகளுக்கு வழங்கும் உணவை குறைக்கும் இலங்கை குடும்பங்கள் – Save the Children

இலங்கையில் உள்ள அரைவாசிக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சேவ் தி சில்ரன்(Save the Children) மேற்கொண்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட பட்டினி நெருக்கடியால் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனைத் தடுப்பதற்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்கும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தற்போதிருந்தே செயற்பட வேண்டுமென சேவ் தி சில்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன் இலங்கை அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதிலிருந்து, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் நெருக்கடி, பற்றாக்குறை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகள் குடும்பங்களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

உலக வங்கியின் கூற்றுப்படி, உலகில் மிகவும் உயர்ந்த உணவுப் பணவீக்க உடைய நாடுகள் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது.

பணவீக்கத்தின் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சராசரி குடும்பச் செலவு 18 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இந்தக் கால கட்டத்தில் குடும்பங்களில் 23 வீத அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் பெரும்பாலான அல்லது அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது போனதாகவும் இலங்கையில் 9 மாவட்டங்களில் உள்ள 2,308 குடும்பங்களில் சேவ் தி சில்ட்ரன் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இவ்வாறான நிலையில், அதிகமான குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கான வேறு தேவைகளை நாடவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர்.

கடந்த காலங்களில் குடும்பங்களில் 24 வீத அதிகரிப்பையடுத்து, வீட்டுச் செலவுகளை ஈடுசெய்வதற்காக கடன் வாங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளதாகவும், உணவுகளை கடனுக்கு பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீட்டு உபயோகப் பொருட்களை பணத்திற்கு விற்கும் நிலையில் 28 வீதமான குடும்பங்கள் காணப்படுகவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பெண்கள் கடத்தல் அல்லது சுரண்டல், கூடுதல் நேரம் வேலை செய்வது மற்றும் சில சந்தர்ப்பங்களில் வேலைக்காக இடம்பெயர்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால்,  குழந்தைகள் தனிமையில் விடப்பட நேருவதால், அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என சேவ் தி சில்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரைவாசிக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவு உட்கொள்ளும் அளவைக் குறைப்பதாகக் கூறினாலும், 27 வீதமானவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கான உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர். பத்தில் ஒன்பது குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு போசாக்கான உணவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளன.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 70 வீதமான  குடும்பங்கள் தங்களது வருமான ஆதாரங்களில் அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றை இழந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இவற்றில், அரவாசிக்கும் மேற்பட்ட அதாவது 54 வீதமான குடும்பங்கள் தற்போது தங்களது  குடும்ப வருமானத்தை பருவகால தொழில்களின் அடிப்படையிலும் ஒழுங்கற்ற வேலைகளின் மூலமும் பெற்றுக்கொள்கின்றன. இந்த உறுதியற்ற தன்மை குழந்தைளுக்கான அடுத்தவேளை உணவுகளை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்று என்று தெரியாத ஒரு ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்வதாக சேவ் தி சில்ரன் அமைப்பு குறிப்பட்டுள்ளது.

 

இது குறித்து சேவ் தி சில்ட்ரனின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா கூறுகையில்,

“ இந்தப் புள்ளிவிபரங்கள், இலங்கையின் நெருக்கடி எவ்வாறு கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது என்பதையும், எந்தவொரு நெருக்கடியையும் போலவே, குழந்தைகள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம், போஷாக்கு மற்றும் எவ்வாறு சுமைகளைத் தாங்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

கல்வி நடவடிக்கைகள் ஆபத்தில் உள்ளன. இந்த குழந்தைகள் நாட்டின் போருக்குப் பிந்தைய தலைமுறையாக நம்பிக்கையுடன் பிறந்தனர் ஆனால் நாங்கள் மீண்டும் தோல்வியடையும் அபாயத்தில் இருக்கிறோம் என்பதை காட்டுகின்றது.

 

“ இங்கு நாம் காணும் அனைத்தும் ஒரு முழுமையான உணவு நெருக்கடியின் உண்மையான ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை அரசாங்கம் சில குடும்பங்களுக்கு நலன்புரி திட்டங்கள் மூலம் மிகவும் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது, ஆனால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் சமூக பாதுகாப்பு அமைப்புகளை விரைவாக கட்டியெழுப்ப வேண்டும். இது ஒரு அவசர காலநிலை என்பதுடன் இதற்கு அவசரமாக பதில் தேவைப்படுகிறது.”

அனைத்து மனிதாபிமான தலையீடுகளின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதற்கு சமூகங்களின் பாலின இயக்கவியலில் காரணியாக இருக்க வேண்டும் என  சேவ் தி சில்ட்ரனின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா  மேலும் கூறினார்.