சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ள முடியும் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால், அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (06) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அன்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எம்மிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டாம் கட்ட கடன் தொகையும் கிடைக்காது, கடன் மறுசீரமைப்பையும் மேற்கொள்ள முடியாது என்று பரவலாகப் பேசப்பட்டது. எனினும் இது பொய்யாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் கிடைக்கும் என்று நம்புகின்றோம். சீனா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்றார்.

எட்கா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு செய்ய உடன்பாடு

உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை 2024 மார்ச்சில் நிறைவு செய்ய இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தின் (எட்கா) 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் கடந்த ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

அதில் ஏற்புடைய பல துறைகள் தொடர்பாக இருதரப்பு செயற்பாட்டுக் குழு உடன்பாடுகளை எட்டியுள்ளது.

குறித்த உத்தேச ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்றுக் கலந்துரையாடலை 2024.01.08 தொடக்கம் 2024.01.10 ஆம் திகதி வரை இந்தியாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2024 மார்ச் மாதமாகும் போது தொழிநுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்களை நிறைவு செய்வதற்கும் இருதரப்பினரும் உடன்பட்டுள்ளனர். 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது – பிரிட்டன் அமைச்சர்

சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய விவகாரங்களிற்கான The Parliamentary Under-Secretary of State for Foreign Affairs அமைச்சர்களில் ஒருவரான லியோ டொச்செட்ரி தெரிவித்துள்ளார்

பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையின் மனிதஉரிமைகள் நிலவரம் குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்கின்றது குறிப்பாக தமிழர்களின் நிலைமை குறித்து.

அங்கு காணப்படும் நிலவரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனதை வருத்தும் விதத்தில் வலுவான விதத்தில் இங்கு முன்வைத்தார்கள்.

மனித உரிமைகள் விடயத்தில் முக்கிய பிரிட்டனின் கரிசனைக்குரிய 32நாடுகளில் ஒன்று இலங்கை பல விடயங்கள் தொடர்பில் நாங்கள் கரிசனை செலுத்துகின்றோம்

இலங்கையில் பல வருடகாலமாக காணப்படும் இன மத பதற்றங்களை தொடர்ந்து தமிழ் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவது ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது எங்கள் அனைவருக்கும் தெரியும்;.

பயஙகரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேசதராதரத்திலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக வாக்குறுதியளித்து வருகின்ற போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது- கடந்த வாரமும் பயன்படுத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும்..

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நினைவுகூரலிற்கு எதிரான பொலிஸாரின் கடுமையான நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் கண்காணித்தல்கள் மிரட்டல்கள் போன்றன இடம்பெறுகின்றன.குறிப்பாக இவை தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை இலக்குவைத்து இடம்பெறுகின்றன.

முன்னாள் போராளிகளும் காணாமல்போனவர்களின் உறவினர்களும் கண்காணிக்கப்படுகின்றனர் அச்சுறுத்தப்படுகின்றனர்.

பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரங்களை வழங்க முதல் மாகாண சபை தேர்தல்களை நடாத்த வேண்டும்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்கப்படுவதாக அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

அப்படியானால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் எவ்வாறு பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென எதிரணியின் சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புதிய பல்கலைக்கழங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இதில் முதலாவது பிரச்சினை , பல்கலைக்கழகங்களை உருவாக்கி அவற்றுக்கான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை வழங்கும் இயலுமை மாகாண சபைகளுள்ளதா என்பது அடுத்து பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படும் என்றால் அந்த மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள மாகாண சபைகள் அனைத்தும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அங்கு மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லை.இவ்வாறான நிலையில் மாகாண சபைகளினால் எப்படி பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும்? அவ்வாறு மாகாண சபைகளைக்கொண்டு பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்க விரும்பினால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

இதேவேளை இன்று மூளைசாலிகள் வெளியேற்றம் என்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ள மூளைசாலிகளின் வெற்றிடத்தை நிரப்ப எமக்கு இன்னும் இரண்டு பரம்பரை தேவைப்படும். முன்னர் பல்கலைக்கழக கலாநிதிகள்,பேராசிரியர்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் அவர்கள் 7,8 மடங்கு சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்து நாட்டிலிருந்து வெளியேற முற்படவில்லை.

ஏனெனில் பணியில் அவர்களுக்கு திருப்தி இருந்தது. ஆனால் தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கு சம்பளம் போதாது. அத்துடன் பாரிய வரி விதிப்புக்களினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அது மட்டுமன்றி அவர்கள் தமது பணியில் திருப்தியடைய முடியாதவாறு பல்கலைக்கழகங்களில் பெரும் வளப்பற்றாக்குறைகளும் உள்ளன.

அமெரிக்கா, கனடா போன்று இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பிரிட்டன் தடை விதிக்க வேண்டும்

அமெரிக்கா கனடாவை பின்பற்றி இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சவேந்திரசில்வா ஜகத்ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கலாம் என லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட்டேவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து இடம்பெற்றுவரும் விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதற்காக சர்வதேச நாணயநிதிய செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வர்த்தக உடன்படிக்கைகள் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு இலங்கையை பிரிட்டன் கேட்டுக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று காசாப் போரை நிறுத்துமாறு கோருவோர் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி

இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என ரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் இன்று கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். ஏனெனில் அப்பாவிப் பொதுமக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர். அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு முன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தமை மாத்திரமல்ல, போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியமையை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.

இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஐபக்ஷாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது, அன்று இதே நாடாளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியமையைப் பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர்.

இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீன் மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஐபக்ஷ அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியா விட்டாலும், இன்று காசா மீது காட்டும் மனிதாபிமானத்தை அன்று ஈழத் தமிழர்களுக்கும் காட்டினீர்கள் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.

இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை. – எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கே வடக்கில் போதை வியாபாரம் தீவிரம் – வினோ எம்.பி. குற்றச்சாட்டு

இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள், வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது, யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், “மன்னார் மாவட்டத்தில் நறுவிலிக்குளம் பிரதேசத்தில் பொது மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு காரணங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டு இன்று வரை அந்த பணிகள் நிறைவு பெறவில்லை.

ஏறக்குறைய 50 சதவீத நிதி ஒதுக்குகைகளுக்கன வேலைத்திட்டங்கள் நடந்தேறியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதான பணிகள் 9 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்திலும் இதே போன்றே ஓமந்தையில் இருக்கின்ற பொது மைதானபணிகள் ஏறக்குறைய பூர்த்தியாகி விட்டது. ஆனால் மின்சார இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

அதனால் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த மைதானம் இன்னும் கையளிக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக இந்த மைதானங்களை வீரர்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொறுப்புக்கொடுக்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

முல்லைத்தீவில் மாவட்டத்திற்குரிய மைதானம் இல்லை. ஒரு மைதானத்திற்குரிய காணியை இனம் காண்பதற்கு எல்லோருமே தடையாக இருந்துள்ளார்கள்.

3 இடங்களில் காணி பார்த்தார்கள் ஆனால் ஒரு மைதானத்தை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஒவ்வொரு காரணம் கூறி காலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

அண்மையில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த 72 வயதான அகிலத்திரு நாயகி என்ற வீராங்கனை பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

வன்னியில் 72 வயதிலும் சாதிக்கக்கூடிய வீர, வீராங்கனைகள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இளைஞர்,யுவதிகளுக்கு விளையாட்டுக்களில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் பட்சத்தில் தேசிய, சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பார்கள்.

அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொடுங்கள். வடக்கு மாகாணத்தில் இன்று இளைஞர்கள் போதைப் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர்.

அவர்கள் வேறு திசைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள் கூட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள்
இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள்,வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை.

போதைப்பொருள் புழக்கத்திற்கு அங்கு காவல்துறையினர் உடந்தையாக உள்ளனர். போதைப்பொருள் விற்போர், வாங்குவோரை காவல்துறையினருக்கு தெரியும்.

பாவனையாளரை காவல்துறையினருக்கு தெரியும். ஆனால் யுத்தத்தில் எவ்வாறு இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ அதேபோன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மூலமும் அழிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

யாழ்.பல்கலை. நினைவுத்தூபி தொடர்பில் மாணவர் ஒன்றியத்தினரிடம் விசாரணை

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (04) விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன.

பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல், முள்ளிவாய்க்கால் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இம் முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

தூபி அமைப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களால் நிதி  சேகரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன், அதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளையும், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் இன்றைய தினம் நண்பகல் விசாரணைகளுக்குச் சமூகமளிக்குமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சிரேஷ்ட பொருளாளரும், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர் ஒருவரும், தூபி அமைக்கப்பட்ட வேளையில் இருந்த மாணவர் ஒன்றியத் தலைவரும் இன்று நண்பகல் 1.00 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள விசாரணைகளுக்காகச் சென்றுள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் ஜனாதிபதி

காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை” சனிக்கிழமை (02) முன்மொழிந்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர். அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng Jane Ruth) ஆகியோரின் ஆதரவுடனேயே ஜனாதிபதி மேற்படி யோசனையை முன்மொழிந்தார்.

காலநிலை நீதிமன்றம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றுபட்ட முயற்சிக்காக அனைத்து தரப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் அர்பணிப்புக்கான முதற்கட்டச் செயற்பாடாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இது அரசாங்களினால் மாத்திரம் முன்னெடுக்ககூடிய செயற்பாடு அல்லவென்றும் அதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்றும், நட்டம் மற்றும் இழப்பீட்டுக்கான நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடவும் அதிகமான தொகை இஸ்ரேல் மற்றும் காஸா எல்லைகளில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள செலவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றங்களுக்காக நிதி ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான நிலையான தீர்வாகவே காலநிலை நீதிமன்றத்தை முன்மொழிந்திருப்பதால், அதனுடன் இணைந்துகொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இலங்கை முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான பங்குதாரர்களுடன் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம், ஐரோப்பிய சங்கத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒன்கர் அண்டர்சன், காலநிலை அனர்த்தங்களுக்கு எதிராக போராடுவதற்கு அவசியமான செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முயற்சிகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பெரும் சக்தியாக காலநிலை நீதிமன்றம் செயற்படும் என்றும் அதனை வரவேற்பதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல

காலநிலை அனர்த்தங்களுக்கு வலுவாக ஈடுகொடுப்பதற்கு காலநிலை நீதிமன்றம் போன்ற முன்னெடுப்புக்கள் அவசியம் என வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான தற்போது முன்னெடுக்கப்பட்டும் கலந்துரையாடல்களுக்கு மேலதிகமான பல்வேறு முயற்சிகள் அவசியப்படுகின்றன. நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய களத்தை அமைப்பதற்காக காலநிலை நீதிமன்றம் தொடர்பான யோசனையை இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் உள்ளடக்கவுள்ளோம் என சுட்டிக்காட்டினார்.

காலநிலை நீதிமன்றத்தை அன்பாக ஏற்றுக்கொள்வதாகவும் காலநிலை அனர்த்தங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு, இதன்மூலம் வலுவான தலைமைத்துவத்தை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக, மதுர விதானகே, அஜித் மானப்பெரு, எம்.ரமேஸ்வரன் ஆகியோருடன் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சுற்றாடல் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி, நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சாண்ட்ரா பெரேரா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வங்கிகளில் கடனாகப் பெற்ற 8000 கோடிகளை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்

இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க இதனை வெளிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் அதிக தொழில் செய்து அரசியல் பாதுகாப்பை பெற்று சம்பாதித்த பணத்தை அந்தந்த இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாகவும், இலங்கை வங்கிக்கு 5,000 கோடி ரூபாவையும் மக்கள் வங்கிக்கு 3,000 கோடி ரூபாவையும் இவர்கள் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.