அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் மஹிந்த 13 பிளஸ் நிலைப்பாட்டிலேயே உள்ளார் – பிரசன்ன ரணதுங்க

அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டார். 13 ஆவது திருத்தம் குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி மாநாட்டில் முன்வைப்போம் என ஆளும் கட்சி பிரதம கொறடவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் பின்னர் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலேயே இருக்கின்றோம்.

அவர் எப்போதும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கு அமைச்சரவைக்கு வந்து அமர்வதற்கான வாய்ப்பை அவர் வழங்கியிருந்தார்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் மொட்டு கட்சியில் பிளவு என்று குறிப்பிட்டாலும் நாங்கள் அதிகார பகிர்வுக்காக கதைக்கின்றோம். 13 பிளஸ் தொடர்பிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ கதைத்திருந்தார். இதில் மறைக்க எதுவும் கிடையாது. ஜனாதிபதி தலைமையில் நடக்கும் சர்வகட்சி கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடுகளை முன்வைப்போம் மஹிந்த ராஜபக்‌ஷவின் அனுமதியுடனேயே இதனை கூறுகின்றேன் என்றார்.

13ஆவது அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணை இனமோதலுக்கு வழிவகுக்கும் – அதுரெலியே ரத்ன தேரர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைகள் நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களுக்கான வழியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதற்கு நாங்கள் விருப்பம் இல்லை. அதனால் சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இந்த சபையில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சுயநினைவுடன் பதிலளிப்பர் என்றே நினைக்கின்றேன். அந்தக் கட்சியினரின் கருத்துக்களுடனே நாங்கள் இருந்தோம். நாங்கள் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டு வர செயற்பட்டவர்கள். தற்போது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கும் விடயங்களின் பாரதூர நிலைமையை சபையில் உள்ளவர்கள் புரிந்துகொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உள்ளன. நிதி, கலாசார பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்கான இன விவகாரத்தை எடுக்க வேண்டாம். வடக்கிற்கான அதிகாரம், தெற்கிற்கான அதிகாரம், கிழக்கிற்கான அதிகாரம், முஸ்லிம்களுக்கு அதிகாரம் அல்ல. மில்லியன் கணக்கில் முதலீடுகளை மாகாண சபைகளுக்கு கொண்டு வர முடியும் என்று கூறுகின்றார்.

இதன் ஆபத்துக்களை இந்த சபை சிந்திக்க வேண்டும். ஏதேனும் மாகாணத்திற்கென அவ்வாறு முதலீட்டை கொண்டு வர முடியாது. சீனாவை உதாரணமாக கூறியுள்ளீர்கள். அது தனி கட்சி நாடு. அங்குள்ள நிலைமை வேறு. அதனை இங்கே ஒப்பிட முடியாது.

இப்போது மீண்டும் மக்கள் அலை ஏற்பட்டு, மோதல் நிலைமைகளுக்கு நாட்டை கொண்டு செல்ல முடியாது. மாகாண சபை முறைக்கு இப்போதும் நாங்கள் எதிர்ப்பு. ஆனால் மாகாண சபை முறைமையை நீக்குமாறு கோரவில்லை. அருகிலுள்ள இந்தியாவை கோபித்துக்கொண்டு மீண்டும் மோதல்களுக்கு செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய சூழ்நிலை 50 வீதம் உள்ளது. மிகுதி 50 வீதத்தை நாடு முழுவதும் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே தீர்க்க முடியும். இதனால் இந்த பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிட போகின்றதா? 13 ஆவது திருத்தத்தை வழங்கியதும் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் யுத்தம் நடைபெற்றது. நாங்கள் மீண்டும் இனவாத போராட்டத்திற்கு செல்ல தயாராக இல்லை. இதனால் நாட்டு மக்களின் கோபத்தை உண்டாக்க வேண்டாம். நீங்கள் செய்யும் இந்த செயற்பாடு மீண்டும் இனவாத மோதல்களுக்கான பாதையையே ஏற்படுத்தும். இதற்கு நாங்கள் விருப்பமில்லை.

சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவாருங்கள்.அதற்காக நாங்கள் வருவோம். முதலில் ஜனநாயகத்துக்காக தேர்தலை நடத்துங்கள் என்றார்.

காணி அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும் – சரத் வீரசேகர

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை.

காணி அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.

மாகாண சபை முறைமை வெள்ளையானை போன்றது. புதிய அரசியலமைப்புக்கே மக்களாணை உண்டு, ஆகவே மாகாண சபையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு குறித்து ஜனாதிபதி புதன்கிழமை (9) விசேட உரையாற்றினார். நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை பார்வையிட்டுள்ளேன்.

பௌத்த தொல்பொருள் மரபுரிமை வாய்ந்த வவுனியாவில் வெடுக்குநாறி பகுதியில் உள்ள பௌத்த மரபுரிமை சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காணி அதிகாரம் வழங்காத போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுரிமைகள் இவ்வாறு அழிக்கப்படும் போது காணி அதிகாரத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பது கேள்விக்கிடமாகவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த மரபுரிமை சின்னங்கள் காணப்படுகின்றன. அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே எங்களின் உரிமை இவை சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் சொந்தமானது.

பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு எதிர்மறையாக செயற்படும் அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பேசுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாடு பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரே அதிகார பகிர்வை கோருகிறார்கள்.

விடுதலை புலிகளின் ஆயுதமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. 30 வருடகால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாததை தற்போது தட்டில் வைத்து வழங்க முயற்சிப்பது முறையற்றது. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் பேர் உயிர் நீத்தார்கள், 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்கள் தமது உடல் அங்கங்களை அர்ப்பணித்தார்கள்.

மாகாண சபைகள் செயற்பட்ட போது 10 கல்வி அமைச்சர்கள்,10 விவசாய அமைச்சர்கள் என பல அமைச்சர்கள் இருந்தார்கள். நாட்டில் தற்போது கல்வி,சுகாதாரம்,விவசாயம் உள்ளிட்ட சேவைகள் முன்னேற்றமடைந்துள்ளதா இல்லை, மாகாண சபை முறைமை வெள்ளை யானை போலவே உள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே மக்களாணை உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை நீக்கி புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றம் மூலமே தீர்வைக் காண முடியும் – மிலிந்த மொரகொட

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்மிலிந் த மொராகொட இலங்கை இந்தியாவின் பாதுகாப்பை தனது பாதுகாப்பாக கருதுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது பூகோள அரசியல் மற்றும் மூலோபாய அரசியல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என மிலிந்தமொராகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பே எங்களின் பாதுகாப்பு எங்கள் மத்தியில் நீண்டகால நாகரீக உறவுகள் காணப்படுகின்றன நாங்கள் ஒரே இரத்தத்தை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளுக்கும் இடையில் அதிக தொடர்பாடல்களும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன அவை இலங்கைஜனாதிபதியின் விஜயத்தினால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து இந்திய பிரதமரின் கருத்து குறித்து டைம்ஸ்ஒவ் இந்தியாவிற்கு கருத்து தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட 13 வது திருத்தம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து எந்த சந்தேகமும் இல்லை,எனினும் இதற்கு நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைநல்லிணக்கம் குறித்த ஆர்வத்துடன் உள்ளது ஜனாதிபதி தொடர்புபட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் இலங்கை ஆழமாக துருவமயப்படுத்தப்பட்டுள்ள சமூகம் நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தான் என்ன செய்ய முயல்கின்றார் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார், உண்மை ஆணைக்குழுவை அமைப்பதன் மூலம் அவர் அதனை செய்ய முயல்கின்றார்,எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு சிங்கள சிறுபான்மையினர் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – விமல் வீரவன்ச

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினமாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து சபையில் பேசுவது இல்லை.

தமிழ்,முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவதை போல் சிங்களவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.

இவர் இன்றுதான் பிரச்சினைகள் தொடர்பில் ஆரம்பித்துள்ளார். ஆகவே சிங்களவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம், பிரச்சினையொன்றும் இல்லை என பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அப்பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பிரதிநிதிகளுக்கு ஏதும் பிரச்சினை இல்லையா, திஸ்ஸ விகாரை பிரச்சினை, முல்லைத்தீவு குருந்தூர் பிரச்சினை என பல பிரச்சினை காணப்படுகிறது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன அடிப்படையில் வேறுபாடு காண்பிக்காமல் சகல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகளை ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம். அது தவறு இப்பிரதேசங்களில் சிறுபான்மையினத்தவர்களாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்த சபையில் எவரும் பேசுவது இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்களவர்களை புறக்கணிக்க வேண்டாம் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் பிரச்சினைகள் குறித்து என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் தான் இன்று விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று தான் இவர் ஆரம்பித்துள்ளார். ஆகவே சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் அதில் பிரச்சினையொன்றும் இல்லை என்றார்.

13 ஆவது திருத்தத்துக்கு ரணிலில் காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் இல்லையேல் எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் தீர்வு காணுங்கள்.

இல்லையென்றால் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் நீங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார்.இதனை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைகளை மீளாய்வு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். சாதக மற்றும் பாதக விடயங்களை ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை அறிவிப்போம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டு வரவில்லை நீங்கள் தான் (ஜனாதிபதியை நோக்கி) கொண்டு வந்தீர்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ் காந்தியுடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது நான் உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கோட்டை அரச மரத்தடியில் போராட்டத்தில் ஈடுபட்டோம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் (ஜனாதிபதியை நோக்கி) தீர்வு காணுங்கள்.

இல்லையென்றால் எங்களை போல் எமது பிள்ளைகள்,பேரப் பிள்ளைகளும் எதிர்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அவ்வாறு இடம்பெற்றால் நீங்கள் வாழ்ந்தாலும்,இறந்தாலும் நிம்மதி இல்லாமல் போகும்.ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.

வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படல் வேண்டும் ; ஹக்கீம் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரையைத் தொடர்ந்து அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது ரவூப் ஹக்கீம் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகாரப் பகிர்வு நல்லிணக்கம் உட்பட முக்கிய பல சிறந்த விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் உரையாற்றினார். அது தொடர்பில் பிரிதொரு தினத்தில் விவாதம் நடத்த முடியும்.

சர்வ கட்சி மாநாடு தொடர்பில் தெரிவிக்கையில், சில கட்சிகள் அது தொடர்பான தப்பபிப்பிராயங்களை முன் வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்கள் அங்கு முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.

அதனை கருத்திற்கொண்டு வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதே வேளை, உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கனவே பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

நாம் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் முன் வைக்கும் கோரிக்கை என்னவெனில், உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும் வரை அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் அவர்களது கடமையை ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட அலுவலகங்களில் முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறான பேச்சு வார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கு நான் தயார்.

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு அந்த பேச்சு வார்த்தையை நடத்த முடியும்.

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை நியமித்துள்ளோம். வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டும் என்றால் நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்றார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மனோ கணேசன்

மாகாணசபை முறைமை நாட்டின் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் அதனை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. அத்துடன் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் அரசியலமைப்பில் ஓர் அங்கமாகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைந்துள்ளது. அதனால் மாகாண சபைமுறையை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. ஆனால் இதிலுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இப்போதும் 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்று ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தத் தேவையில்லை. இருக்கும் பிரச்சினைகள் போதும்.

2009இல் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது யுத்தத்தை நிறைவு செய்தது போன்று அதிகார பகிர்வை மேற்கொண்டு பிரச்சினைகளை முழுமையாக தீர்க்குமாறு கோரினேன். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இப்போதும் சந்தர்ப்பம் வந்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்வோம். ஜனாதிபதி முன்னெடுக்கும் இந்த விடயத்தில் நாங்கள் காலை பிடித்து இழுக்கப் போவதில்லை.

சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன். இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள் வேண்டும். நீங்கள் செய்யுங்கள். பிரச்சினைகளுக்கு தீர்வே முக்கியம் என்றார்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் என்னிடம் கேட்கின்றனர். இவ்விடத்திற்கு நான் அமைச்சரவைக்கு மட்டும் அறிவித்தே வந்துள்ளேன்.

ராஜபக்ஷவினருக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு அடிபணிந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். உண்மையான ராஜபக்‌ஷவாதிகள் அந்த பக்கமே இருக்கின்றனர். அதனால் 13 தொடர்பில் பொதுஜன பெரமுனவின் இரண்டு பக்கத்தில் இருப்பவர்களும் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பேசி தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

’தெமலோ’ இனவாதத்தை குறிக்கும் சொற்பதம், தமிழர் அல்லது திரவிடர் என்றே அழைக்க வேண்டும் – டயனா கமகே

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

தமிழர்களை ‘தெமலோ’ என்று குறிப்பிடுவதன் ஊடாகவே இனவாதம் வெளிப்படுகிறது. தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’என்று அழைக்க வேண்டும்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

ஆகவே 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் உயரிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாத காரணத்தால் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்று நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது.

ஆகவே நடைமுறைக்கு சாத்தியமான வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

நாடு என்ற முதலில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் இனவாதத்தை இல்லாதொழித்து தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். அப்போது தான் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ் நபர் ஒருவரை பார்த்து ‘தெமலோ’ என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.அங்கிருந்து தான் இனவாதம் தோற்றம் பெறுகிறது.

தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’ என்று குறிப்பிட வேண்டும்.

அடிப்படை விடயங்களில் இருந்து மாற்றாத்தை ஏற்படுத்தினால் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இனவாதம்,மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

இளம் தலைமுறையினர் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்,அதற்கமைய அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது நாட்டை பிளவுப்படுத்தும்,சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நாட்டின் சுயாதீனத்தை உறுதிப்படுத்திய வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

தமிழ் இளைஞர்களை பொலிசில் இணைத்தால் அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக இருப்பார்கள் – பொலிஸ் மா அதிபர்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களிடம் ஆயுதத்தையும் வழங்கினால் அவர்கள் தனிநாட்டு போரை ஆரம்பித்து விடுவார்கள் என தென்னிலங்கை தீவிரவாத தரப்புக்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களை அதில் இணைத்து, ஆயுதத்தை வழங்கினால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்பவில்லை. தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள். இப்போது அப்படித்தான் செயற்படுகிறார்கள்“. இதுதான் அவரது கருத்து.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது, இப்படி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய சந்திப்பில் – பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களிற்கு- வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஏன் தேவை?, இப்போதைய பொலிஸ் அமைப்பு தொடர்வதில் என்ன சிக்கல் என்பதை அறியவே டிரான் அலஸ் ஆர்வம் காட்டினார்.

ஏனைய அதிகாரங்கள் இருந்தாலும், பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால், மாகாண முதல்வரால் அவற்றை பிரயோகிக்கவோ, தீர்வை காணவோ முடியாது உள்ளிட்ட காரணங்களை- நிர்வாக ரீதியாக சுட்டிக்காட்டி தமிழ் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

13வது திருத்தத்தின்படி பொலிஸ் ஆணைக்குழுவில் முதல்வர் ஒருவரையே நியமிக்க முடியம் என்பதையும், மத்திய அரசே 2 பேரை நியமிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது, மாகாணங்கள் சுயாதீனமாக பொலிசை கையாள்வதல்ல என்பதை தமிழ் தரப்பினர் விளக்கமளித்தனர்.

இந்த சந்திப்பின் ஒரு கட்டத்திலேயே- இந்த பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தகவல்களை பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்புகிறீர்களா?“ என தமிழ் தரப்பினர் ஒரு கட்டத்தில் கேட்டனர்.

தான் அப்படி நம்பவில்லையென பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஆரம்ப காலத்தில் பல தமிழ் பொலிசார் கடமையிலிருந்தாலும், பா.நடேசன் (விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர்) ஒருவரே புலிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடியதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள் என்பதில் தனக்கு சந்தேகம் இல்லையென்றும், இப்பொழுதும் அப்படியே செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.