முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளில் சில இடைநிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் மொபைல் போன் கட்டணங்களுக்கான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திற்கான செலவு விபரங்களை முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர், ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையில் சலுகைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, ஜனாதிபதி அலுவலகம் இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளின் எந்தவொரு செலவையும் தீர்க்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீர்ப்பின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம், வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எதிர்க்கட்சித் தலைவருடன் பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் சந்திப்பு

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல்,அரசியலமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

அரசாங்கத்தின் ஜனநாயகத்தின் அப்பட்டமான மீறல் போலவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசின் திறமையின்மை,ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்தாதது மற்றும் சட்டத்துறையில் எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் Julie J Chung ,நெதர்லாந்தின் தூதுவர் Bonnie Horbach, இந்தியா உயர்ஸ்தானிகர் Gopal Baglay, நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton, ஆஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் Paul Wesley Stephens, பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet, கனேடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh, ஐக்கிய இராச்சியத்தின் பதில் பிரதி உயர்ஸ்தானிகர் Lisa Whanstall, ரோமானிய தூதுவர் Victor Chiujdea, ஜப்பானிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி Katsuki Kotaro, இத்தாலிய பிரதி தூதுக்குழுவின் பிரதானி Dr. Francesco Perale, ஐரோப்பிய ஒன்றிய அரசியல் விவகாரப் பிரிவின் பிரதானி Anne Vaugier Chatterjee ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

வேண்டுமென்றே தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பாக தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மக்களின் பிரச்சினைகளில் அக்கறையின்மையால் அஸ்வெசும போன்ற வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் சுகாதாரத்துறை எவ்வாறு சீர்குலைந்துள்ளது மற்றும் தரமற்ற மருந்துகளால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தார்.

சட்டத் துறையில் பல சிக்கல்கள் உள்ளன என்றும்,சகல சட்டமூலங்களிலும் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் சட்டத்துறைக் கட்டமைப்பின் தரம் குறைந்துள்ளதாகவும் தூதுவர்களிடம் எடுத்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மனித புதைகுழிக்கு நீதிகோரும் ஹர்த்தாலுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பூரண ஆதரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஐயகுமார்,’வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதுடன், அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவினை வழங்குகின்றது. அந்த வகையிலே இன்று கறுப்பு ஜுலை வாரத்தை அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற வேளையிலும் எங்களுடைய தமிழ் மக்களுடைய பாரதூரமான பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த அகழ்வு பணியில் கூட காவல்துறையினர் மட்டுமே காணப்படுகின்றனர். மேலும் சர்வதேச அமைப்புகள் ஒன்றுமே காணப்படவில்லை. இந்த அரசு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

எங்களுடைய பிரச்சனையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாது தங்களுக்குள்ளே மறைத்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையிலே தமிழ் மக்களாகிய எங்கள் பிரச்சினைகள் வெளிப்படையாக தீர்வினை பெற வேண்டும். இன்றும் நாம் சுதந்திரமாக எமது நினைவேந்தல்களை கூட மேற்கொள்ள முடியாது இருக்கின்றோம்.

ஆகவே சரணடைந்த எங்களது காணாமலாக்கப்பட்ட உறுவுகளுக்கு நீதி வேண்டும் .அந்த வகையிலே அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவினை வழங்கவேண்டும் ” என்றார்.

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; சுதந்திரக் கட்சி உறுதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015, 2019 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்கும் பணிகள் இடம்பெற்றபோதும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும்போதுமட்டும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.

ஏனெனில், அது தெற்கு சிங்கள மக்களை பாதிக்கும் என்று தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் அவதானம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கட்சி என்ற ரீதியில் எமது நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தநிலைப்பாட்டுடன், நாம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்க பொன்சேகா எதிர்ப்பு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலாக மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவது போன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உள்ளக அரசியல் குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, பாலத்தால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கண்மூடித்தனமாக வளர்ந்த நாடுகளின் கருத்துக்களை பின்பற்ற வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – ஐ.நா பிரதிநிதியிடம் ஜனாதிபதி உறுதி

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

நாட்டின் நிதி தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் கடன் மறுசீரமைப்பிற்கும் ஐ.நா. ஒத்துழைப்பை வழங்குவதாக மார்க் ஆன்ட்ரே தெரிவித்தார்.
இதன்போது வடக்கு – கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐ.நா.. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காக எதிர்காலத்தில் நாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் நெருக்கமாக செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

சுதந்திர தமிழீழம் என்பது இந்தியாவின் நலனிலேயே உள்ளது – உருத்திரகுமாரன் வலியுறுத்தல்

சுதந்திரத் தமிழீழம் என்பது இந்தியாவின் நலனில் உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சர்வதேச அனுசரணையுடனான ஒரு வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்தேசியப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் எனவும் அதற்கு இந்தியாவே தலைமைதாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும், இதுவரை 13வது திருத்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

கடந்தகால இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் விளைவாக 300,000இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுக் களத்தை சமன் செய்ய இலங்கை மோசமான இராஜதந்திரத்தையும் போலித்தனத்தையும் பயன்படுத்துகின்றது.

இந்தநிலையில் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம். எனவே 13வது திருத்தக்கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம்:

மேலும் சுதந்திர அரசிற்கு அமைதியான முறையில் குரல் கொடுப்பதைக் கூட தடைசெய்யும் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தின் காரணமாக, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை முழுமையாக வெளிப்படுத்தும் நிலையில் இல்லை என்பதையும்உருத்திரகுமாரனின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் ஈழத் தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இதனை பன்மைத்துவத்தின் ஆரோக்கியமான அடையாளமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.

இறுதி முடிவெடுப்பவர்கள் ஈழத் தமிழ் மக்களே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசத்தின் இறையாண்மை ஒவ்வொரு தமிழனிடமும் உள்ளது.எனவே, இந்தப் பன்மைத்துவத்தைப் போற்றும் வகையில், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான சரியான தீர்மானம் ஈழத் தமிழர்களிடையே இந்தியாவால் சர்வதேச ஆதரவுடன் நடத்தப்படும் வாக்கெடுப்பு மாத்திரமே என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.

13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை:

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே என்பதை வெளிப்படையாக்கும்.

இது 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துக்களில் உள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும் இலங்கைத் தலைவர்கள் பலர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், 13வது திருத்தம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் அடிப்படையில் இலங்கையின் மகாவம்ச சிந்தனையுடன் இணைந்து, 13வது திருத்தத்தை சிங்கள அரசியல் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.

இந்தியாவின் அரசியல் செல்வாக்கு:

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இந்தியா தனது செல்வாக்கு மண்டலத்தில் இலங்கையை தக்கவைக்க, தொடர்ந்து சலுகைகளை அளித்து வருவதை உருத்திரகுமாரனின் அறிக்கை மேலும் எடுத்துக்காட்டியுள்ளது.

1) 1954 நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், 1964 ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974 சிறிமா-காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின் விளைவாக 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர், உகண்டாவிலிருந்து இடி அமீன் ஆசியர்களை வெளியேற்றியது போன்றது. இலங்கையில் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு காரணமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்.

2) 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு சிறீமா-இந்திரா கடல் எல்லை ஒப்பந்தத்தின் விளைவாக, ராமநாட்டு ராஜாவின் ஜமீன்தாரியின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவை விட்டுக்கொடுத்து, தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய மீனவர்களின் பாரம்பரிய உணவு உரிமைகளை இலங்கைக்கு தியாகம் செய்தது என்ற இரண்டு விடயங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கிய சலுகைகளாக ருத்திரகுமாரன் கோடிட்டுள்ளார் .

 சிங்களக் குடியேற்றங்கள்:

இந்தநிலையில் சிங்களக் குடியேற்றங்களுடன் தமிழர் தாயகத்தில் இலங்கையின் ஆக்கிரமிப்புக் குடியேற்றம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கு விரோதமானது, மற்றும் ஆபத்தானது என அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் போது, தீவின் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் தொகை 1.2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

இன்று கிழக்கு மாகாணத்தில் 29சதவீத சிங்களவர்கள் உள்ளனர் என்பதையும் உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது அரசியல் படுகொலை துரையப்பா; அதை தூண்டியது அமிர்தலிங்கம்: ஜனா எம்.பி

அல்பிரட் துரையப்பாவே முதலாவது அரசியல் படுகொலையாகும். அவரை சுட்டுக்கொன்றது பிரபாகரன். அதனை தூண்டியது அமிர்தலிங்கம். யாழ்ப்பாணத்தில் மேடையில் ஒருமுறை அமிர்தலிங்கம் சொன்னார், துரையப்பாவிற்கு இயற்கை மரணம் நிகழாது என்றார். அதை தொடர்ந்து அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. பிரபாகரன் கடைசி அரசியல் படுகொலையென்பது துரதிஸ்டமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூற வரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி – நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது, இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.

அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.

1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.

அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

அன்று 13 திருத்த சட்டத்தை ஏற்று இருந்தால் இன்று அது பேசும் பொருளாக இருந்திருக்காது. இந்த 1987 மாகாணசபை மு​றைமை வந்தது தொடக்கம் 2009 மே 18 வரை ஜே. ஆர் ஜெயவத்தனாவின் கையை முறுக்கி பலாத்காரமாக அந்த ஓப்பந்தத்தில் கையொழுத்து இட வைத்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்த நாட்டிலே எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு கிழக்கிலே முதலாவது அரசியல் படுகொலை முன்னாள் யாழ். நகர மேஜர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அதை தூண்டியது அண்ணன் அமிர்தலிங்கம் அவர் யாழில் மேடை ஒன்றில் பேசும் போது அல்பிரட் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் கிடையாது என பேசியிருந்தார் அதை தொடர்ந்து தான் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. ஆனால் நாட்டிலே இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரதிஸ்டம்.

13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துமாறு கேட்கின்றோம். ஆனால் இறுதி தீர்வு மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் 13 இல் உள்ளடக்கப்படவில்லை. அது மேலும் செல்ல வேண்டும். எங்களை நாங்களே எமது பிரதேசத்தில் ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும். அதுதான் இறுதி இலக்கு. அதற்காகத்தான் அகிம்சை ரீதியில் போராடினோம். அது கிடைக்காததால் ஆயுதரீதியில் தனிநாட்டுக்காக போராடினோம். இன்று 13உம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

இந்திய பிரதமர் நரோந்திர மோடியை சந்தித்த ஜனாதிபதி ரணிலுக்கு நல்ல குளுசை கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்க வேண்டிய கடமையம் தேவையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. காரணம் இந்த ஆயுத போராட்டத்திற்கு தார்மீக ஆதரவும் அனுசரனையும் பயிற்சிகளையும் தந்தது இந்திய அரசாங்கம்.

அதேபோன்று 2009 ஆயுத போராட்டத்தை மௌனிக்க வைப்பதற்கு இந்திய அரசு முக்கிய காரணம். இலங்கை இந்திய சர்வதேச ஓப்பந்தத்தில் இந்தியா கையொழுத்து இட்டுள்ளது. அவர்களை நம்பிதான் நாங்கள் எல்லாம் ஆயுதங்களை ஒப்படைத்து இந்த நாட்டிலே அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளோம். எனவே இந்தியாவுக்கு கடமை இருக்கின்றது.

அவர்கள் ரணிலுக்கு நல்ல ஆலோசனை கூறியுள்ளார்கள் என நினைக்கிறேன். கடந்த புதன்கிழமை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் சந்தித்தபோது, 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துகிறேன், ஆனால் பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என்றார். நாம் அதை நிராகரித்தோம்.

பொலிஸ் அதிகாரத்தை தர மாட்டேன் என சொல்ல ரணிலுக்கு மாத்திரமல்ல, யாருக்கும் கிடையாது. ஏனெனில், இலங்கை அரசியலமைப்பில் அது உள்ளது. அரசியலமைப்பை மீற அவருக்கும் அதிகாரமில்லை.

ஜனாதிபதி 26ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசர சந்திப்பின் அர்த்தத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கை அரசு வடகிழக்கல் மாத்திரமல்ல தெற்கில் 1971 ஆம் ஆண்டும் 1988 இரண்டு தடவை ஜே.வி.பி ஆயுத கிளர்ச்சியை சந்தித்தது. அந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியா உதவிகரம் நீட்டியதுடன் வடகிழக்கில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவிகரம் கொடுத்தது மாத்திரமல்ல தற்போதைய பொருளாதார ரீதியாக அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்ட போது முதல் முதலாக உதவிகரம் நீட்டியது.

சர்வதேச நாணய நிதியம் கூட இன்று 2.9 பில்லியன் கடன்களை நீண்டகால சலுகையில் கொடுக்க இருக்கின்றது. ஆனால் இந்தியா ஒரு வருடத்துக்குள் 4 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கின்றது. அப்படிச் செய்த நாடு இந்தியா.

வடகிழக்கு தமிழர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும் அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என ஜனாதிபதி ரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பல இனவாதிகளை கண்டிருக்கின்றோம் சிறில் மத்தியூஸ், ஆர்.எம்.பி. ராஜரட்ண, ஆர்.எம். சேனநாயக்கா போன்றவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு ஆளுக்குள் செலுத்தியதை போன்று இன்று சரத்வீரசேகர என்பவர் ஒரு இனவாதியாக தமிழின துரோகியாக கருத்துக்களை கூறிவருகின்றார்.

எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே கருத்தை கூற விட்டால் அந்த ஒற்றுமையின் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவர்கள் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டாம் என்றார்.

பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை அடுத்தவாரம் அளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்காக, 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார்.

இதில், பொலிஸ் அதிகாரத்தை சிறிது காலம் கழித்தும், ஏனைய அனைத்து அதிகாரங்களை உடனடியாக வழங்கவும் ஜனாதிபதி இணங்கியுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை இதுதொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வர, சர்வக்கட்சி மாநாடொன்றையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலத்திலிருந்து, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களையே அவர் செய்துள்ளார் என்பது, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் அனைவருக்கும் தெரியவரும்.

எனவே, மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்துச் செய்யும் வகையில், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபை நாம் தயாரித்துள்ளோம்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளடக்கிய சட்டத்தரணிகள் குழுவே இந்த வரைபை தயார் செய்துள்ளனர். இதனை நாம் அடுத்தவாரமளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம்” தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் கடிதத்தை மோடி சாதகமாக பரிசீலித்த பின்னரே ரணிலிடம் 13ஐ குறிப்பிட்டுள்ளார் – த.சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார். எமது கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையே, இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவரான த.சித்தார்த்தன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக சமஸ்டி அமைப்புக்கே வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக அடைவதே எமது இறுதி இலக்கு. அதற்கு இந்தியாவின் அனுசரணை எமக்கு தேவையென்பதை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த பயணத்தில் முதல்படியாக, 13வது திருத்தத்தை உடனடியாக- முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து கடிதம் அனுப்பியிருந்தன.

எமது கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி கூறியுள்ளர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென நரேந்திர மோடி வலயுறுத்தியுள்ளார்.

எமது கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார்“ என்றார்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் கடிதம் அனுப்பியிருந்தன. 13வது திருத்ததை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியிருந்தது. 13வது திருத்தத்தை கோர மாட்டோம் என தெரிவித்த இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.