1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை – கனடா தூதுவர் எரிக்வோல்ஸ்

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என  இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் விதத்தில்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது வருடங்களிற்கு முன்னர் இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை நாங்கள் நினைவுருகின்றோம்.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

இந்த பயங்கரமான நினைவுகள் இடம்பெற்றன என்பதை அங்கீகரி;ப்பதும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதும் இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய நிரந்தர செழிப்பிற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

இந்த இலககுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைவரையும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் என  கனடா தூதுவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை நினைவு தின புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது வருடத்தின் போது சந்திரகுப்த தேனுவர மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் கலை விசேட கண்காட்சியை நான் பார்வையிட்டேன் என அவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இந்த கலைப்படைப்புகள் கடந்த காலத்தின் காயங்களையும் அனைத்து இலங்கையர்களுக்குமான நியாயமான எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறன என அவர் தெரிவித்துள்ளார்.

தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ‘மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1983 கறுப்பு ஜூலை சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள். கொழும்பில் எமது பெரிய வீடு எரிக்கப்பட்டது. மோசடி செய்து கட்டிய வீடு அல்ல,எனது தந்தையின் கடின உழைப்பால் கட்டிய வீடு, இனகலவரத்தில் வீடும்,உடமைகளும் எதிர்க்கட்டது. நாட்டுக்குள் அகதிகளாக இருந்தோம். இவை மறக்க முடியாத சம்பவம்.நாட்டில் மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் தமது வீடுகள் எரிக்கப்பட்டதை பொதுஜன பெரமுனவினர் புலம்பிக் கொண்டு குறிப்பிட்டார்கள். வன்முறையை நாங்கள் கடுமையாக எதிர்கிறோம். தீயிடும் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.எமது இருப்புக்கள் வரலாற்றில் தீக்கிரையாக்கப்பட்டன. ஆசியாவில் சிறந்த தொன்மை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இவற்றையும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எமக்காக எவரும் அன்று குரல் கொடுக்கவில்லை என்பதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டோம்.

ஒரு நாடு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு பிறிதொரு சட்டம் என்று வேறுபாடு காணப்படுகிறது.ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் பேசப்படுகிறது.

கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்க்கப்பளிக்கப்பட்ட இராணுவ சார்ஜன் மேஜர் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். சுனில் ரத்நாயக்க 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த களத்துக்கு அப்பாற்பட்ட வகையில் மிருசுவில் பகுதியில் முகாமுக்கு அருகில் விறகு தேடி வந்த எட்டு வயது சிறுமி உட்பட எட்டு பேரை வெட்டிக் கொன்றார்.

விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியது, கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இவ்வாறான பின்னணியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள். இதனால் தான் அவர்கள் சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறார்கள்.

மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி அண்மையில் பொது மன்னிப்பு வழங்கினார். இந்த செய்தியை வெளியிட்ட ஒரு சில ஊடகங்கள் மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பள காணொளியை காண்பித்து நீண்ட விளக்கம் அளித்தன. இந்த ஊடகங்கள் கறுப்பு ஜூலை சம்பவத்தை காண்பிக்கவில்லை. இந்த ஒருதலைபட்ச செயற்பாடு தவறு. நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்குள் இருந்து செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வழங்க கூடியதையும், வழங்க முடியாததையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இந்திய விஜயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்துக்கு வருகை தந்து குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும்.அதற்கு முன்னர் அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு விவகாரத்தில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கடுமையாக விமர்சிக்கிறார். வரலாற்றில் இதுவே இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. தீர்வு திட்ட விவகாரத்தில் இரு அரசியல் கட்சிகளும் விளையாடிக் கொண்டன. இந்த விளையாட்டு இம்முறை செல்லுபடியாகாது.

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றார்.

13 இராணுவத்தினர் யாழில் கொல்லப்பட்டதாலேயே கறுப்பு ஜூலை தூண்டப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதால் தூண்டப்பட்டு 40 வருடங்களிற்கு முன்னர்  இலங்கை தனது சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான அத்தியாயத்தை சந்தித்தது என வெளிவிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

கறுப்பு ஜூலை குறித்த தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

40 வருடங்களிற்கு முன்னர் இன்று  கறுப்புஜுலை என அழைக்கப்படும் தினத்தில் இலங்கை தனது சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான அத்தியாயத்தை சந்தித்தது.

யாழ்ப்பாணத்தில் 13 படையினர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் இது தூண்டப்பட்டது. தீவிர காடையர் கும்பல் நாட்டின் தென்பகுதியில் வாழும் தமிழ் மக்களை அர்த்தமற்ற விதத்தில் பழிவாங்கின.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த -மேலும்  மூன்று தசாப்தகாலமாக இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாதம் வன்முறையில் உயிரிழந்த அனைத்து மக்களையும் நாங்கள் நிவைவுகூறுகின்றோம்.

மோதலின் போது 28000க்கும் மேற்பட்ட படையினரும் சட்டஅமுலாக்கல் பிரிவினரும் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காக உயிரிழந்தனர்.இலங்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டினர்.

எனினும் வன்முறை தீவிரவாதம் அந்த மோதலுடன் முடிவிற்குவரவில்லை நாங்கள் மேலும் துயரம் தரும் பயங்கரவாத தாக்குதல்களையும் தொடர்வன்முறைகளையும் சமீப வருடங்களில் எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கை ஜனாதிபதி தனது 75வது சுதந்திர தின உரையில் நாங்கள் கடந்தகாலங்களை ஆராய்ந்து பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் இதன் மூலம் அனைத்து இலங்கையர்களும் இனமத பேதமி;ன்றி அமைதி சமாதானம் கௌரவத்துடன் நாட்டின் எந்த பகுதியிலும் வாழக்கூடிய ஐக்கிய இலங்கை அடையாளத்தை கட்டியெழுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்துடன் நல்லிணக்கத்தில் முன்னோக்கி நகர்வதற்காக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,இது தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயங்களை ஆற்றுவதற்கும் உண்மையை கண்டறிவதற்குமான  சந்தர்ப்பத்தை வழங்கும்.

அதேவேளை இதற்கு சமாந்திரமாக இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கிய எதிர்கால பாதையில் உள்ளது,இது வடக்குகிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பலனளிக்கும்.

வடக்குகிழக்கிற்கான அபிவிருத்தி திட்டங்களில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக நல்லிணக்க நடவடிக்கைகளிற்கு அப்பால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான தனது நேர்மையான நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி 13 வது திருத்தம் உட்பட முழுமையான யோசனைகளை வடக்குகிழக்கு  மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்வைத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டால் மாத்திரம் இதனை நிறைவேற்ற முடியும்.

நல்லிணக்கத்திற்கான ஒரு சமிக்ஞையாக 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் சார்பிலும்   அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கையின் அனைத்து பிரஜைகள் ஆகிய எங்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்கும் பொறுப்பை நான் நிறைவேற்றுகின்றேன் என தெரிவித்திருந்தார்.

இது தாமதமானது என்றாலும் இன்னமும் இதற்கான நேரம் உள்ளது ( மன்னிப்பு கோருவதற்கு) என தெரிவித்திருந்த அவர் நாங்கள் ஒரு தேசமான குறிப்பாக இலங்கை அரசாக நாங்கள் முதிர்;ச்சியடையவேண்டும்,தேசிய மன்னிப்பை கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

முதலில் கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் முழு நாட்டிற்கும் நாங்கள் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுமிகவும் முக்கியமான நடவடிக்கை ஆனால் இதுவே போதுமானது இல்லை.

உலகின் அனைத்து பகுதிகளையும்போல மக்களை துருவமயப்படுத்த பிரிக்க நினைக்கும் சமூகமொன்று காணப்படும்.

ஆனால் இந்த நாட்டின் மக்கள் ஐக்கியப்பட்டு அமைதி ஐக்கியத்திற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது உரிய செயலாகும்.

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் பொலீஸார் விளக்குகளை உடைத்து அட்டகாசம்

கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை மயானத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸார் கலகமடக்கும் பிரிவினர் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கனத்தை மயான சுற்றுவட்டத்தில் பெருமளவு பொலிஸ் வாகனங்களை காணமுடிந்தது.

வீதியின் இருமருங்கிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கறுப்புஜூலை நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வு ஆரம்பமான சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரினவாத கருத்துக்களை தெரிவித்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புஜூலையை நினைவுகூறும் நிகழ்வை முன்னெடுத்தவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியுடன் செயற்படுபவர்கள் என விமர்சித்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜூலையை குறிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் பொறுமையை கடைப்பிடிக்கமுயன்றபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்- பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தனர்.

ஒரு கட்டத்தில் கலகமடக்கும் பொலிஸார் முன்னோக்கி நகர்ந்து கறுப்புஜூலை நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களை பின்னோக்கி தள்ள முயன்றனர் இதன்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சட்டத்தரணி சிறிநாத் பெரேரா உட்பட சிலர் நிலத்தில் தள்ளி விழுத்தப்பட்டனர் எனினும் பொலிஸார் அதனை அலட்சியப்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்டவர்களை பின்னோக்கி தள்ளுவதற்கு முயன்றனர்.

இதனை தொடர்ந்து கறுப்புஜூலை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை காணப்படும் பகுதிக்கு சென்று அங்கு சுட்டி விளக்குகளை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் அதனை அங்கு காணப்பட்ட சிறிய கும்பலை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர் இதனை தொடர்ந்து பொலிஸார் காலால் சுட்டிகளை மிதித்து உடைத்தனர் .

எனினும் கறுப்பு ஜுலை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் விளக்குகளை ஏற்றியவேளை பொலிஸார் அவர்களை கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றினர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுட்டிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள கறுப்பு ஜூலை நினைவுருவ படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்ததாக, 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தேர்தலுக்கான கால எல்லைகளை குறைப்பதற்கு அரசாங்கம் ஆலோசனை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லையை குறைக்குமாறு அரசாங்கம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஆலோசணை வழங்கியுள்ளது. இதற்கான திட்ட வரைபை  உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உட்பட மேம்பட்ட தேர்தல் முறைமைகளை கொண்ட நாடுகளை உதாரணமாக கொண்டு, வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லையை குறைக்கும் திட்டத்தை கால தாமதமன்றி தாயாரிக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்கவுக்கு  ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் ஒன்றை நடத்துவதாயின் அதற்கான கால எல்லை நீண்டதாக உள்ளது. இதனால் அநாவசியமன செலவீணங்கள் அதிகரிக்கின்றன. இதனை கவனத்தில் கொண்டே தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மறுப்புறம் தேர்தலை அறிவித்த பின்னர் அரசாங்கத்தின் மொத்த கட்டமைப்பும் சுயாதீனமான தேர்தலுக்காக செயல்பட ஆரம்பிக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில், வேட்புமனு தாக்கல் தொடக்கம் வாக்கெடுப்பு தினம் வரையிலான கால எல்லை மிக நீண்டதாக காணப்படுகின்றமையினால் அரச செலவீணம் பெரும் சுமையாகுகின்றது. மேலும் மக்களின் அன்றாட வாழ்வுக்கும் நெருக்கடியாகின்றது.

அதே போன்று பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மெதுவாக நாடு முன்னேற்றமடைந்து வருகின்றமையினால்  செலவீணங்களை குறைப்பது இந்த காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். எனவே தேர்தல் நடத்துவதற்கான கால எல்லையை குறைக்கும் திட்டம் குறித்து ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் முறைமை குறித்து அங்கு சென்று ஆராய்ந்து இலங்கைக்கு ஏற்புடைய திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு  தயாரிக்க வேண்டும். அத்துடன், அதற்கான ஒத்துழைப்புகளை ஜனாதிபதி செயலகம் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்ய சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை

நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான யோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு இக்குழு சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் 16 சிவில் சமூக அமைப்புக்களை உள்ளடக்கிய வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் ஆட்சிபீடம் ஏறிய பெரும்பான்மையின சிங்கள பெளத்த சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் சிறுபான்மையின சமூகங்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

வடக்கு,-கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்கள், மொழியுரிமை மீறல், தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள், நிர்வாக மற்றும் அரசியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள், அரசியல் அதிகாரம் மற்றும் ஆட்சி நிர்வாகம் என்பவற்றில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டமை என்பன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை கோருவதற்கு வழிவகுத்தன.

அதன் நீட்சியாக இடம்பெற்ற முப்பது வருடகாலப் போரில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இறுதிக்கட்ட போரின்போது யுத்த சூனிய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலங்கை அரசாங்கம் கொத்தணிக் குண்டுகளையும் போசுபராஸ் குண்டுகளையும் பயன்படுத்தியதுடன் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களிலும் ஈடுபட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மை மற்றும் நீதி, ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்புடனான நியாயமான உண்மையை கண்டறியும் பொறிமுறை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவரல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது.

குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் ஸ்தாபித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அதிகாரங்களை மாத்திரமே கொண்டிருந்ததுடன் அதனூடாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, பெளத்தமயமாக்கல், கலாசார உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன இன்னமும் தொடர்கின்றன. இம்மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்புவோர் கைதுசெய்யப்படுவதுடன் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

எனவே, நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஆகவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான யோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் இணை அனுசரணை நாடுகள், ஜப்பான், தென்னாபிரிக்கா மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர் ஆகிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை கண்காணிக்க இந்தியா ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு என்ற அடிப்படையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முழுமையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

எமது கடிதத்தில் தெரிவித்திருந்ததைப் போன்றே இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களும் இலங்கை ஜனாதிபதிக்கு மேற்கண்ட விடயங்களைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தது மாத்திரமல்லாமல், இலங்கை தமிழ் மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு அவர்களது அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும்.

அதற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபை தேர்தல்களை நடாத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன் அதனை இலங்கை அரசு செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்பு என்பவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்றும் இந்துமகா சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கும் அது முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையிலும் அதில் அடங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையிலேயே இந்தியா இருக்கிறது என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக டெல்லியில் ஒப்புக்கொண்டாலும் மாறிமாறி ஆட்சி செய்யும் இலங்கை அரசாங்கங்கள் அதனை இழுத்தடித்து வருவதையே நாங்கள் பல காலமாகப் பார்த்து வருகிறோம்.

பல்வேறு காரணங்களைக் கூறி அதை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தப்பித்து வருவதையும் பார்த்திருக்கின்றோம். இந்த முறையும் அவ்வாறில்லாமல், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு இந்தியா ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், குறிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம்.

மலையக தமிழ் மக்கள் இந்த மண்ணில் குடியேறி 200 வருடங்கள் முடிவடையும் இன்றைய காலகட்டத்தில் சரியான ஊதியமில்லாமல், வாழ்விடங்களில்லாமல் இன்னமும் லயன்களில் அடிமைகளாக வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுடைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 75 கோடி ரூபாய்களை வழங்குவது வரவேற்பிற்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும்.

மலையக மக்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் இந்தியா தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை ஜனாதிபதியும் தமிழ் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை காலம் கடத்தாது முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் வலியுறுத்திய 13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படும் – ஜீவன்

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியிருந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

அதன்பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதேபோல் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலையை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் வலுசக்தி திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.

குறிப்பாக மலையக சமூகம் 200 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது இந்தியப் பயணத்தின்போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேடமாக நாட்டினது பொருளாதார நெருக்கடி மற்றும் மலையக மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லியன் ரூபாவினை மலையகத்தினது வீட்டுத்திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஒதுக்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

விசேடமாக மலையகத்தின் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக இந்த நிதி பயன்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.