இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முயற்சி

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ரேடார் தளம், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய சொத்துக்களை மதிப்பீடு செய்யும் என எக்கனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கையின் டோண்ட்ரா விரிகுடாவின் காடுகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை மேற்பார்வையை விஸ்தரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எச்சரிக்கையையும் மீறி கடந்த ஆண்டு, சீனக் கப்பலை எரிபொருள் நிரப்புதல் மற்றும் தளவாடப் பொருட்களுக்காக ஆறு நாட்கள் ஹம்பாந்தோட்டையில் நிறுத்த இலங்கை அனுமதித்தமை குறித்தும் இந்தியா கடும் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயற்சித்த ஒருவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சென்னையில் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தக மோசடியை ஒடுக்கும் நடவடிக்கையில், சென்னையில் சந்தேக நபர்களுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது ஏராளமான பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் தேசிய புலனாய்வு மையம் கைப்பற்றியுள்ளது.

2022 ஜூலை இல் இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை தொடங்கியது தேசிய புலனாய்வு மையம் இதுவரை 14 நபர்களை கைது செய்துள்ளது.

சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில் 6.8 மில்லியன் இந்திய ரூபாய், 1,000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் ஒன்பது தங்க கட்டிகளும் அடங்குவதாக தேசிய புலனாய்வு மையம் கூறியுள்ளது.

சோதனைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கை அகதி ஒருவரின் சார்பாக போதைப் பொருள் வர்த்தகத்தை நிர்வகித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் போன்று சீனா ஏனைய நாடுகளுக்கும் உதவ வேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு உதவியதை போன்று ஜாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுக்கும் சீனா உதவ வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த மாதம் சீனாவுக்குச் சென்றிருந்த கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சீனாவின் உயர்மட்ட பொருளாதார அதிகாரி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசிய அவர், கடன் நிவாரண விடயத்தில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி20 நாடுகளின் பொதுவான கட்டமைப்பின் கீழ் உதவி கேட்ட பொருளாதார சரிவை சந்தித்த நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் சீனா ஏற்படுத்திய தாமதம் அமெரிக்கா உள்ளிட்ட பிற மேற்கத்திய நாடுகளினால் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஜி20 கட்டமைப்பின் கீழ் உதவிக்கு தகுதியில்லாத நடுத்தர வருமான நாடான சாட் மற்றும் இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் துண்டாடுதல் ஆகியவை நிதி ஸ்திரத்தன்மை அபாயங்களை அதிகரிக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.

இலங்கை வாழ் இந்துக்களுக்காக டெல்லியில் போராட்டம்

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து தமிழ் சமூகத்தின் கலாசார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என இந்து இயக்கத்தின் சர்வதேச தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த பிரச்சினையை இந்திய அரசு உணர்ந்து, இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சிறுபான்மையினரை இலக்கு வைக்க உதவும்

தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டுவருவதாக உறுதியளித்தது,ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பதில் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணத்தை அதிகரித்துள்ளது ஒன்றுகூடல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமைதியான விதத்தில் தன்னை விமர்சிப்பவர்களையும் சிறுபான்மை சமூகத்தவர்களையும் இலக்குவைப்பதற்கான கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

உடன்படமறுப்பவர்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்போதைய பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் உத்தேச சட்டம் மூலம் உள்ள ஆபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கிலேயே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – சபா குகதாஸ்

ஆபிரிக்க நாட்டின் ஒருசில பகுதியிலுள்ளதுபோல இலங்கை மக்களும் அரசுக்கு எதிராக பேச முடியாத நிலையில் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு அமைவாகவே உத்தேச பயங்கரவாதச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாதச எதிர்ப்புச் சட்டம் மார்ச் மாதம் 22 ந் திகதி வர்த்கமானயில் வெளியிடப்பட்டதையிட்டு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவிக்கையில்

இந்த சட்ட மூலத்தில் சொல்லப்பட்டுள்ள சரத்துக்கள் என்னவென்றால் கடந்தகாலம் நடைமுறைக்கு வந்த பயங்கரவாதச் சட்டத்தைவிட மிக மோசமான சரத்துக்களை உள்வாங்கியிருப்பதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதை நோக்கும்போது இன்று இந்த அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டத்தை யாராவது முன்னெடுத்தால் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தைவிட இந்தச் சட்டம் ஒருபடி மேலாக காவல்துறை அதிகாரி ஒருவர் எவருக்கும் எதிராக இவர் அரசை விமர்சித்தார் என்ற வகையில் பிரதி மா பொலிஸ் அதிகாரியிடம் கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

பொலிஸ் மா அதிபரின் சிபாரிசில் ஒருவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க முடியும். இதில் அவர் குற்றவாளி எனக் காணப்பட்டால் சுமார் பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாக முடியும்.

இத்துடன் இவரின் சொத்துக்கள் அரச உடமைகளாக்கும் நிலையும் அத்துடன் ஒரு மில்லியன் ரூபா தண்டப்பணமாகவும் தண்டனை விதிக்க முடியும் என இந்த உத்தேச பயங்கரவாதச் தடைசட்டத்துக்குள் உள்ளடக்கப்ட்டுள்ளது.

ஆகவேதான் இது ஒரு ஜனநாயக அடக்கு முறையாக பார்க்கப்படுகின்றது. மேலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்தில் பத்தாவது சரத்தில் ஊடக அடக்குமுறையும் இதில் அடங்கியுள்ளது.

ஆகவே ஜனநாயக நாட்டில் அடக்குமுறை ஒன்று இச்சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறலாம். ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் மக்கள் அவற்றை சுட்டிக்காட்ட முடியாத நிலையே இவ் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாட்டில் ஒருசில பகுதிகளில் மக்கள் இவ்வாறான நிலையில்தான் இருக்கின்றார்கள். இவ்வாறுதான் இலங்கையிலும் மக்கள் இவ்வாறு அடிமைகளாக இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள் போலும்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டப் பின் தென் பகுதியில் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்துள்ளது. இதற்காகவே எதிர்காலத்தில் இவ்வாறான செயல்பாடு நடக்கக்கூடாது என்ற நிலையில் இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை அரசு 1979 ம் ஆண்டிலிருந்து 45 ஆண்டுகளாக தமிழர்களை எவ்வாறு அடக்குமுறையில் வைத்திருந்தார்களோ இப்பொழுது நாடடிலுள்ள ஒட்டுமொத்த மக்களையும் இவ்வாறு வைத்திருக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள காணி விடுவிப்பு போராட்டங்களைக்கூட முன்னெடுக்க முடியாத நிலைக்கு இச்சட்டம் தடையாக உள்ளது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சதி செய்து தந்திரமாக பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார் மகிந்த – நாமல் ராஜபக்ச

கோட்டாபயவை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த ராபக்சவை போராட்டக்காரர்கள் ஏன் முதலில் வெளியேற்றினார்கள் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

முகப்புத்தகத்தில் நடைபெற்ற நேரடிக் கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“கோ ஹோம் கோட்டா என்று நீங்கள் கூறும்போது பிரதமர், அடுத்ததாக அதிபர் பதவிக்காக வரிசையில் நிற்கிறார். அதனால் தான் கோட்டாபய பதவி விலகும் முன்னர் மஹிந்த பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தோன்றியது.

போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்கள் கட்சி சார்பற்றவர்கள் இல்லை. கோட்டாபய பதவி விலகும் போது பிரதமராக இருந்த மஹிந்த அடுத்தபடியாக அதிபராவார் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். அதனால் தான் அவர்கள் தந்திரமாக முதலில் மஹிந்த ராஜபக்‌சவை பதவி விலக்கினார்கள்.

ராஜபக்‌சாக்களை அதிகாரத்திலிருந்து நீக்குவது மூன்றாம் தரப்பின் சதிச் செயல். போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரும் மூன்றாம் தரப்பு சதியாளர்களின் கைக்கூலிகள். இதைப் பற்றி மக்கள் பின்னர் விளங்கிக் கொள்வார்கள்.

“இப்போதும் எங்களுக்கு போராட்டத்தைப் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரச்சினை உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மூன்றாம் தரப்பின் ஆட்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். போராட்ட காலத்தில் நீங்கள் மூன்றாம் தரப்பின் கைக்கூலியாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் பின்பு புரிந்து கொள்வீர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கச்சதீவை மீட்டெடுப்பதே முதன்மையான செயல்திட்டம் – தமிழக அரசு

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல் என தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்பதும், பாரம்பரிய கடற்றொழிலை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டமாக இருக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடக்கிறார்கள் என்று காரணத்தைக் காட்டி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளது. இது தமிழக கடற்றொழிலாளர் சமூகத்தினரிடையே கவலை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்பப் பெறுவதும், பாக்கு நீரினை பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டத்தில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஐ.நா மனித உரிமை சாசனங்களுக்கமைய இயற்றப்படவில்லை – அம்பிகா சற்குணநாதன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களுக்கோ சாசனங்களுக்கோ அமைய இயற்றப்படவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது அது நல்ல விடயம் என்று தான் நாம் கூற வேண்டும். இந்தச் சட்டமானது இரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது.

பல உரிமைகளில் தாக்கத்ததை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முதல் அச்சட்டம் இயற்றப்படும் போது மக்களின் அபிப்பிராயங்கள், சிவில் சமூகங்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நிபுணர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் எடுத்துதான் சட்டத்தை இயற்ற வேண்டும். ஆகவே இந்தச் சட்டத்திற்கு தற்போது அதற்கான நிலை எழுந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கத்திற்கு மக்கள், நிபுணர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று செவிமடுத்து, முக்கியமாக, எமது அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மீறப்படாமல், இதனை உருவாக்க கடமைகள் உள்ளன.

ஏனெனில் இலங்கை பல்வேறு ஐ. நா சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடமை இருக்கிறது.

இந்த சாசனங்களில் உள்ள உரிமைகளை இலங்கையில் நடை முறைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமாகும். இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை.

ஆகவே, அரசாங்கம் இதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வராமல், தற்போது இதை நிறுத்தி இவ்வாறான சட்டம் இயற்றுவது என்றால், வெளிப்படையான முறையில் நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனை பேரையும் இணைத்து அவர்களின் அபிப்பிராயங்களை எடுத்து சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு ஏற்றதான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்” – என்றார்.

மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை ; இராணுவம், கடற்படையால் நிர்மாணப் பணிகள்

இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை – மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும்.

இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் குழு ஒன்று இரவு வேளை சென்றிருந்தது. அங்கு புத்தர் சிலை ஒன்றை அவர்கள் வைத்துச் சென்றனர்.

மறுநாள் காலை இதை அவதானித்த அப்பகுதி மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் தலையீட்டில் அங்கிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டது.

எனினும், சில நாட்களின் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலயத்தை அண்மித்து – ஆலய வளாகத்திலேயே மீண்டும் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் “கெட்டியாராமை சிறீ பத்ர தாது ரஜ மகா விகாரை” க்கான நிர்மாணப் பணிகள் நடை பெற்றன.

இராணுவமும் கடற்படையும் இணைந்து இரவு – பகலாக இந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

திருகோணமலையில் ஏற்கனவே இந்துக்களின் முக்கியத்துவம் பெற்ற கன்னியா வெந்நீரூற்று முழுமையாக பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவு – குருந்தூர்மலை, வவுனியா – வெடுக்குநாறி மலை என இந்து ஆலயங்கள் பல பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.