தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில

நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார்.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இதேவேளை பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்பாக, அதிகாரப் பரவலாக்கம் குறித்து அனைவரும் இணக்கத்திற்கு வரவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டதாக கூறினார்.

65 வருடங்களாக இது தொடர்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் இதன் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், மீண்டும் இதற்கான முயற்சிகளை எடுக்கும் இந்த அரசாங்கத்திற்கு உண்மையில் பைத்தியம் பிடித்துவிட்டதாகவே கருத வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

“வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக ஆசியர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும் இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என்றனர்.

இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு- ஜஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டனை தளமாக கொண்ட இலங்கை சட்டத்தரணி ஜயராஜ் பலிகவர்த்தனவிற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜயராஜ் பலிகவர்த்தன ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜஸ்மின் சூக்கா தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பக்கச்சார்பானவர் என தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட ஜயராஜ் பலிகவர்த்தன 47 தூதரகங்களிற்கு அதனை அனுப்பிவைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரிட்டனின் 2018 தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தரவு பாதுகாப்பு மனுவொன்றை தாக்கல் செய்த ஜஸ்மின் சூக்கா தனது தனிப்பட்ட கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இயல்பாகவே இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை, இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர் என்ற அடிப்படையில் எனது பணிகளிற்கு அவதூறு கற்பிக்கும் நோக்கத்தை கொண்டவை என ஜஸ்மின் சூக்கா நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாவலர்களை பயங்கரவாதிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தும் நடவடிக்கைளில் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்குமுறை அரசாங்கங்கள் ஈடுபட்டுள்ளன என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கையை சேர்ந்த சட்டத்தரணி தான் தனது அறிக்கையில் ஜஸ்மின் சூக்காவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை நீக்க மறுத்ததுடன் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இறுதியில் அவர் ஜஸ்மின் சூக்காவிற்கு குறிப்பிடத்தக்க இழப்பீட்டினை செலுத்த இணங்கியுள்ளதுடன் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதற்கும் இணங்கியுள்ளார்.

நீதிமன்றம் அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் இணையத்தில் மன்னிப்பு கோரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை , மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அபிவிருத்தி பணிகளை இலகுபடுத்துவதற்காக குறித்த இரு நகர சபைகளும் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள், மனித வளங்களை பயன்படுத்தி மேலதிக நிதியை செலவிடாமல் ஒரு சில மாவட்டங்களில் காணப்படுகின்ற நகரங்களை மாநகரங்களாக தரமுயர்த்தும் நோக்குடன் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

IMF கடன் வசதி இவ்வருடத்தில் சாத்தியமற்றது – ரொய்ட்டர்ஸ் தகவல்

சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் உதவி தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் உடன்பாடு எட்டப்படுமா என்பது சாத்தியமற்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாட்டின் நிதியத்தின் பிரதிநிதிகள் பரிமாறிக்கொண்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் IMF பிரதிநிதிகள் கடந்த ஜூன் மாதம் ஊழியர்கள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தனர்

திருக்கேதீஸ்வர ஆலயத்தை திறந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தினோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

“தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தை மீட்டதன் மூலம் இலங்கையில் இந்தியா மறு மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாக இந்திய மத்திய அரசு பிரகடனப்படுத்தியதை முன்னிட்டு, காசியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் மன்னாரில் உள்ள திருகேதீஸ்வரம் கோவிலை மீட்டுள்ளோம். பிரதமர் சில வருடங்களுக்கு முன்னர் சென்று அந்த ஆலயத்துக்கு சென்றிருந்தார். அந்த ஆலயம் 12 வருடங்கள் மூடப்பட்டிருந்தது. நாம் அந்த ஆலயத்தை புதுப்பித்து திறந்தோம். நாம் காட்டிய ஆர்வத்தால் அது சாத்திய மானது. பிரதமர் மோடி பதவியேற்றதன் பின்னர் எமது கலாசாரத்தையும் மரபுரிமையையும் பாதுகாப்பதோடு, இவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் வெளியுறவுதுறை அமைச்சில் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது- என்றும் கூறினார்.

கே. கே. எஸ். – பாண்டிசேரி கப்பல் சேவை ஜனவரியில் – அமைச்சர் நிமால் தெரிவிப்பு

இந்தியா – இலங்கை இடையே விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதல்கட்டமாக பாண்டிச்சேரி – காங்கேசன்துறை ஜனவரி மத்தியில் ஆரம்பிக்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவரின் அமைச்சில் நேற்று செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

தம்பதிவ யாத்திரைக்கு (இந்தியாவின் பௌத்த தலங்களுக்கான யாத்திரை) செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பெரும் நிவாரணமாக அமையும். ஒரு பயணிக்கான கட்டணம் 60 அமெரிக்க டொலர் என்பதுடன் 100 கிலோ எடையுள்ள பொருட்களை ஒருவர் எடுத் துச் செல்லமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நல்லிணக்கத்துக்கான நடைமுறைகளை ஜனவரி 31இற்கு முன்னர் நிரூபியுங்கள்! தமிழ் பேசும் தரப்புகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் நீடிக்கும் காணி ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணல், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், புதிய அரசமைப்பு தொடர்பில் ஏற்கனவே எட்டப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஓர் இணக்கப்பாட்டை அடைதல் ஆகிய விடயங்களை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தரப்பு செய்ய வேண்டும் என்று தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.இனப் பிரச்னைக்கு தீர்வு எட்டும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அழைப்பு விடுத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையகத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தென்னிலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள் கலந்து கொண்டன.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் தற்போதும் நீடிக்கும் காணிகள் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற விடயங்களை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் நீதி அமைச்சரும் இப்போதைய வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மூலமாக செய்யப்பட்ட விடயங்களை முன்வைத்தனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் சட்ட விவகாரங்களை கருத்தில் கொண்டே அவர்களை விடுதலை செய்ய முடியும். அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய முடியும் என்று கூறினர்.

வேண்டியது நீதியே

அவர்களின் கருத்துக்கு பதில் உரைத்த சம்பந்தன், “காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பதும் அதனைத்தான்…” என்று கூறினார்.

தொடர்ந்து, மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பிளவுபடாத இலங்கைக்குள் – உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு உச்ச அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று சம்பந்தனும், விக்னேஸ்வரனும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து இந்த அனைத்து விடயங்களையும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னதாக நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பந்தன் வலியுறுத்தினார்.

இதன்பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “13ஆவது திருத்தச் சட்டத்தை நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

 

13ஐ ஆதரித்த ஹக்கீம்

இதைத் தொடர்ந்து சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன் பின்னர் படிப்படியாக முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார். 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்ட மனோ கணேசன் மலையக தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேம தாஸ, 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்ததுடன், பிளவுபடுத்த முடியாத இலங் கைக்குள் – ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கூறினார்.

சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன், சமஷ்டி மூலம் இனப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண் டும். அதேசமயம், அபிவிருத்தி பணிகளும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப் பட வேண்டும் என்று கூறினார்.

நசீர் அஹமட் எதிர்ப்பு

சுற்றாடல் துறை அமைச்சரான நசீர் அஹமட் மாத்திரம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக்கூடாது என்று எதிர்ப்பைக் கிளப்பினார். சுமந்திரன் எம். பி, அரசமைப்பு விடயத்தை ஆரம்பத்தில் தொடங்க வேண்டியதில்லை. இது தொடர்பாக பல அறிக்கைகள் – இணக்கப்பாடுகள் – வரைவுகள் கூட இருக்கின்றன. அவற்றையெல்லாம் சேர்த்து ஓர் இணக்கப்பாட்டை எட்டி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். ஜனவரி மாதத்திலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனெனில் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சனைக்கு தீர்வு என்ற காலக்கெடுவை வைத்திருக்கிறார். எனவே, ஜனவரியில் முடிவு – இணக்கம் ஒன்று எட்டப்பட வேண்டும். இது மிகக் குறுகிய காலம் என்றாலும் அனைவரும் முயற்சிப்போம் – என்றார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனவரியில் ஒரு திகதியில் கூடிப் பேசுவது என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மகிந்த மௌனம் இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து மகிந்த ராஜபக்ஷ, சாகர காரியவசம் ஆகியோர் பங்கேற்ற போதிலும் அவர்கள் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை பிரதானி இலங்கைக்கு விஜயம் ; இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னாவின் அழைப்பின் பேரில், இந்திய கடற்படையின் பிரதானி அட்மிரல் ஆர் ஹரி குமார், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக திங்கட்கிழமை (12) கொழும்பை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், பாதுகாப்புச் செயலர், பாதுகாப்புப் படைத் தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

அத்தோடு வியாழக்கிழமை (15) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் பிரதம அதிதியாக கலந்து கொள்வுள்ளார்.

இதே வேளை புதன்கிழமை (14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சஹ்யாத்ரி கப்பல் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

இந்திய கடற்படை பிரதானியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் அடையாளப்படுத்துகிறது.

அத்தோடு இவ்விஜத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதோடு , பொதுவான பாதுகாப்பு அமைதியை உறுதி செய்வதற்கான திறனை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.