காகிதமில்லா மின்கட்டண பட்டியல், பற்றுச்சீட்டு – காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் பிரதேச பொது முகாமையாளர்கள் மற்றும் ஏனைய பொது முகாமையாளர்களுடன் இணைய வழியில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர், தனது டுவிட்டரில் இன்று (07) தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை மின்சார சபைக்கான புதிய தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தெருவிளக்குகள் பொருத்துதல், தெருவிளக்குகளை இயக்குதல் ஆகியவற்றை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சபையால் செய்ய முடியாத வெளிச் சேவைகளை உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இ​.தொ.கா ஏற்பாட்டில் ’மலையகம் 200’ நிகழ்வுகள்

மலையகத் தமிழர்கள்  இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகபோகிறது. இதனையொட்டி பிரதேச, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல நிகழ்வுகளை நடத்துவதற்கு காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தோட்ட மட்டத்தில் கலாசார,  விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளும் , தோட்ட வாரியாக நடத்தப்படும். பாடசாலை மட்டத்திலும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். எமது வரலாறு தொடர்பான தேடலுக்காக கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் .

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னின்று நடத்தினாலும் அனைத்து தரப்பினரும் இதில் இணைந்து கொண்டு தமது ஒத்துழைப்புகளை வழங்கலாம் எனவும் ​தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி – ஆளுநர் நந்தலால்

டிசெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமை ப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால், ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2022 இல் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு இலங்கை தற்போது செயற்பட்டு வருகிறது. கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பொதுவான ஒருமித்த கருத்தைப் பெறுவதே முன்னுரிமை என்று குறிப்பிட்டார். நவம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தாமதத்தின் பின்னர் சீனாவுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீனாவின் உறுதிமொழிகளைப் பெறுவதில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு ஆதரவாக பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஏற்கெனவே உறுதி அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டினார். திட்டமிட்டபடி நவம்பரில் சீனாவின் உத்தரவாதம் கிடைத்திருந்தால், நிதி உதவிக்கான ஐ.எம்.எப் பணிப்பாளர் சபையின் அனுமதி டிசெம்பரில் கிடைத்திருக்கும் என்றார். எவ்வாறாயினும், சீனாவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தாமதம் இதனைத் தடுத்துள்ளது என்றும் டிசெம்பர் மாதத்துக்குள் சீனாவின் உறுதிமொழியைப் பெறுவதே இலங்கையின் முன்னுரிமை எனவும் தெரிவித்தார். அத்தகைய உடன்பாடு எட்டப்பட்டால், ஜனவரி மாதம் நிதி உதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

மின்சார சபையில் ஒரு தரப்பினர் மாபியாவாக செயற்படுகிறார்கள் – சம்பிக்க

இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை 18 கம்பனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 22 ஆக  வகைப்படுத்தி நிறுவனமயமாக்க இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆகவே அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (டிச.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்சார சபையின்முறையற்ற செயற்பாடுகளினாலும்,மின்சார சபை சங்கங்களின் தொழிற்சங்க போராட்டங்களினாலும் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளது என சமூகத்தின்மத்தியில் காணப்படும் நிலைப்பாடு உண்மையானதே, மின்சார சபையில் ஒரு தரப்பினர் மாபியாவாக செயற்படுகிறார்கள்.

இலங்கை மின்சார சபையை நிறுவனமயமாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை 18 கம்பனிகளுக்கும் 4 நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக 22 நிறுவனங்களாக வகைப்படுத்த இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2002 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையின் சேவை கட்டமைப்பு 6ஆக வகைப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு இலங்கை மின்சார சபையை முழுமையாக் கலைப்பதற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின்மின்னுற்பத்தி பொறுப்பபை லக்ஷபான மின்னுற்பத்தி நிலையம், மகாவலி நீர்மின் வளாகத்திற்கும் சமனலவாவி மின்நிலையத்திற்கும் புத்தளம்மின்நிலையத்திற்கும் களனி திஸ்ஸ. சபுகஸ்கந்த ஆகிய மின் நிலையங்களுக்கும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் உரிமத்தை திறைசேரிக்கு தற்காலிகமாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீர் மின்னுற்பத்தியை நிறுவனமயமாக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். லக்ஷபான நீர் மின்னுற்பத்தி நிலையம், மகாவலி நீர் மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவனமயமாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நீர்மின்னுற்பத்தி நிலையங்களை தனியார் மயப்படுத்தினால் மின்னுற்பத்திக்கு மாத்திமல்ல,குடிநீர் விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு குழுவினர்சமர்ப்பித்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில்மக்களின் அபிப்ராயம் கோரப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்க முடியும் – ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு

2023இல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எமக்கு எதிர்பார்க்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே பொருத்தமாகும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சிறந்த காலமாகும்.

இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (டிச.07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டி ஏற்படுகின்றது. தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவுகளை குறைத்துக்கொள்ளலாம்.

அதாவது, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற  தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்து முடியுமாக இருந்தால் நல்லது. இதன் மூலம் வீண் விரயங்களையும் குறைத்துக்கொள்ளலாம்.

அத்துடன் எந்த தேர்தலுக்கும் முகம்காெடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயார் நிலையிலேயே இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, தொகுதி அமைப்பாளர்களை தெரிவுசெய்யும் நேர்முகப்பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. அதிகமான இளைஞர்கள் இதில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே  ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் இருந்து வருகின்றது. எப்படி இருந்தாலும் 2023இல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எமக்கு எதிர்பார்க்க முடியும். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

அதன் மூலம் நாட்டின் தலைவராக யாரை தெரிவு செய்துகொள்வது என்பதை மக்களுக்கு தீர்மானித்துக்கொள்ளலாம். மக்கள் தேர்தல் ஒன்றை கோருவதாகவே எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது.

அதனால் அடுத்த வருடம் தேர்தலுக்கு நாங்கள் செல்வோம். ஆனால் நாட்டில் இடம்பெறும் பிரதான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துமாறே நான் ஜனாதிபதிக்கு தெரிவித்தேன்.

என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே தற்போதுள்ள நிலைமையில் சிறந்த தீமானம் என்றே நினைக்கின்றேன். ஏனெனில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி பதவி விலகினார். அதனால் மீண்டும் ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்துகொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

எனவே ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்தது. அடுத்த வருடம் நடுப்பகுதி அதற்கான சிறந்த காலமாகும் என்றார்.

உள்நாட்டில் பேசினால்தான் தமிழர்கள் தீர்வை பெறலாம்! பிரதமர் தினேஷ் குணவர்த்தன.

“இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப் பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேச மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“வடக்கு, கிழக்கு உட்பட தேசிய ரீதியில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே, இதைக் கவனத்தில்கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தமிழ்க் கட்சிகளிடம் மீளவும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

மாவீரர் நாள் 2022 உணர்த்துவது? நிலாந்தன்.

நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் கடந்த மாவீரர் நாளிலன்று பின்வருமாறு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார் “இன்று மாவீரர் நிகழ்வுக்குப் போனேன்.கடந்த வருடங்களில் எனது பிள்ளைகள் வந்தனர். இப்போது இல்லை. எனது தம்பிக்கு நான் மட்டும் மலர் தூவி அஞ்சலி செய்தேன்..இதை உங்களுடன் இன்று பகிர நினைத்தேன்…..இப்போது என் தம்பிக்கு நான்..இனி வருங்காலத்தில்…?யார் வருவார்…..என யோசித்தேன்‌.என் பிள்ளைகளின் பிள்ளைகள்….? “

இது மாவீரர் நாளுக்கு மட்டுமல்ல பொதுவாகவே தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைக் குறித்து உரையாடும் எவரும் சுட்டிக்காட்டும் ஒரு விடயம்தான்.என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்..” உன்னுடைய சகோதரன் உனக்கு உதவுவான். ஆனால் அவனுடைய பிள்ளை உன்னுடைய பிள்ளைக்கு உதவுமா?” என்று. இதே கேள்வியை வேறு ஒரு தளத்தில் நின்று இலங்கைக்கான முன்னாள் ஸ்கண்டிநேவியத் தூதுவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.” முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி இறக்கும்பொழுது இரண்டாம் தலைமுறை எந்தளவு தூரம் தாயகத்தை நோக்கி ஈர்க்கப்படும்?” என்று.

உண்மை ஆயுதப்போராட்டம் நடந்த காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பெரும்பாலான கவனம் யுத்த களத்தை நோக்கி குவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் தாம் விட்டுப்பிரிந்த தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு ஊர்வலம் போனார்கள், வீதிகளை மறுத்தார்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். தமது பெற்றோரின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து அடுத்த தலைமுறையும் அதனால் ஈர்க்கப்பட்டது.அக்காலகட்டத்தில் ஒடுக்குமுறை ஒரு கொடிய போராக இருந்தது. அந்த ஒடுக்குமுறையின் விளைவாக தமிழ்மக்கள் உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்தாலும், அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்றாக திரண்டு காணப்பட்டார்கள். ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நிலைமை அவ்வாறு இல்லை.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நிலத்தை கட்டுப்படுத்தியது. ஒரு கடலை கட்டுப்படுத்தியது. ஒரு கருநிலை அரசை நிர்வகித்தது. தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையை கொண்டவர்கள். அக் கடல் வழி ஊடாக தாயகமும் டயஸ்போறாவும் இணைக்கப்பட்டன. அந்தக் கடல் வழியூடாக ஆயுதங்கள் வந்தன, ஆட்கள் வந்தார்கள், மருந்து வந்தது, அறிவு வந்தது. ஆனால் 2009 ஒன்பதுக்குப் பின் தாயகத்தையும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தையும் இறுகப் பிணைக்கும் விதத்திலான இடை ஊடாட்டத் தளங்கள்,வழிகள் எவையும் கட்டி எழுப்பப்படவில்லை. மிகக் குறிப்பாக சட்டரீதியாக ஏற்புடைய ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்புகள் எவையும் கிடையாது. சில புலம்பெயர்ந்த தன்னார்வ அமைப்புகள் தாயகத்தை நோக்கி உதவிகளை வழங்குகின்றன. தனி நபர்களும் வழங்குகிறார்கள். ஆனால் அரசியல் அர்த்தத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஓர் இடையூடாட்டத்தளம் தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கும் இடையே கிடையாது.

ராஜபக்சக்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை ஒருவித அச்சத்தோடு பார்த்தார்கள். ஒரு பகுதி அமைப்புகளையும் தனி நபர்களையும் தடைப்பட்டியலில் சேர்த்தார்கள். அதனால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தோடு நெருங்கி உறவாடுவதில் இடைவெளிகள் அதிகமாக காணப்பட்டன.ஆனால் ரணில் விக்கிரமசிங்க தடைகளை நீக்குகிறார் மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக வைத்து அவர் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை தாயகத்தில் முதலீடு செய்யுமாறு அழைக்கிறார்.

அதாவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலான அழைப்பு அது. மாறாக தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில் ஒரு தேசத்தை கட்டி எழுப்புவதற்கான முதலீடு என்ற அடிப்படையில் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளோடு இடையூடாடக் கூடிய விதத்தில் பொருத்தமான கட்டமைப்புகள் எத்தனை உண்டு? தாயகத்தை நோக்கி உதவிகளைப் புரியும் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு இடையே இடையூடாட்டமும் குறைவு, ஒருங்கிணைந்த செயல்பாடும் குறைவு. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கடந்த 13 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் ஜெனிவாவை எவ்வாறு அணுகுகிறது என்பதுதான்.

இவ்வாறு தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் இடையே தாயகத்தை கட்டியெழுப்புவது என்ற ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில், இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல முதலாம் தலைமுறை புலம்பெயரிகள் வயதாகி மறையும் பொழுது தாயகத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடிய ஆபத்து உண்டா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவீரர் நாள் அந்த இடைவெளி அப்படி ஒன்றும் பாரதூரமாக இல்லை என்பதை உணர்த்தியது.கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த மாவீரர் நாள் தாயகத்திலும் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பரவலாகவும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது மாவீரர் நாள் என்ற உணர்ச்சிப்புள்ளியில் தாயகமும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்பீட்டளவில் ஒன்று திரண்டன.பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூர்வதற்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும்.மேலும்,அரசாங்கம் தமிழ்த்தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கும் ஒரு பின்னணியில்,நல்லெண்ணைச் சூழலை உருவாக்கவேண்டிய ஒரு நிர்பந்தமும் அரசாங்கத்துக்கு உண்டு.எனவே உணர்ச்சிகரமான நினைவு நாளை ரணில் ஒப்பீட்டளவில் தடுக்கவில்லை.அதனால், திட்டமிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பெருமளவுக்கு மக்கள் திரண்டிருக்கிறார்கள்.அது தானாக வந்த கூட்டம். அதை யாரும் வாகனம் விட்டு ஏற்றவில்லை. தண்ணீர் போத்தல்,சாப்பாட்டுப் பார்சல், சிற்றுண்டி கொடுத்து அழைத்துக் கொண்டு வரவில்லை.அது தன்னியல்பாகத் திரண்ட ஒரு கூட்டம்.அவ்வாறு மக்கள் திரள்வதற்குரிய ஏற்பாடுகளை கட்சிகளும் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் செய்து கொடுத்தார்கள்.அரசியல்வாதிகள் நினைவுநாட்களின் துக்கத்தையும் கண்ணீரையும் வாக்குகளாக ரசாயன மாற்றம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு அதைச் செய்யக்கூடும். ஆனாலும் தடைகள் அச்சுறுத்தல்களின் மத்தியில் அவர்கள் முன்வந்து ஒழுங்குபடுத்தும் போது மக்கள் திரள்வார்கள் என்பதே கடந்த 13 ஆண்டு கால அனுபவம் ஆகும்.

13 ஆண்டுகளின் பின்னரும் கண்ணீர் வற்றவில்லை;காயங்கள் ஆறவில்லை; கோபமும் தீரவில்லை என்பதைத்தான் நடந்து முடிந்த மாவீரர் நாள் உணர்த்தியிருக்கிறது. ஆனால் காலம் ஒரு மிகப்பெரிய மருத்துவர். அது எல்லாக் காயங்களையும் குணப்படுத்தக்கூடியது.நினைவுகளின் வீரியத்தை மழுங்கச் செய்யக்கூடியது.தமிழ் மக்கள் தமது கூட்டுத் துக்கத்தையும்,கூட்டுக் காயங்களையும்,கூட்டு மனவடுக்களையும் அரசியல் ஆக்கசக்தியாக மாற்ற வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறார்கள்.நீதிக்கான போராட்டத்தின் பிரதான உந்திவிசையே அதுதான்.நினைவுகூர்தல் என்பது நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒருபகுதி.இந்த அடிப்படையில் சிந்தித்தால்,காலம் துக்கத்தை ஆற்றுவதற்கு இடையில் துக்கத்தையும் கண்ணீரையும் எப்படி அரசியல் ஆக்கசக்தியாக மாற்றலாம் என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளில் காயமும் துக்கமும் ஆறாமல் இருப்பதற்குப் பிரதான காரணம் ஒடுக்குமுறைதான். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுதான்.மாறாக தமிழ்த் தரப்பின் திட்டமிட்ட செயலூக்கமுள்ள அரசியலின் விளைவாக அல்ல.நடந்து முடிந்த மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளர் ஒருவரிடம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..“மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு வழிகாட்ட அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியவில்லை” என்று. ஒப்பீட்டளவில் அதிக தொகை ஜனங்கள் திரண்ட ஒரு துயிலுமில்லத்தில் வைத்து கூறப்பட்ட வார்த்தைகள் அவை.அதுதான் உண்மை. ஒரு கூட்டுத் துக்கத்தை, கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டிய ஒரு மக்கள் கூட்டம், கடந்த 13 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது?

கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் காயத்தையும் பொருத்தமான விதங்களில் பொருத்தமான காலத்தில் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றத் தவறினால்,காலகதியில் காயங்கள் இயல்பாக ஆறக்கூடும், துக்கம்  இயல்பாக வடிந்துவிடும். நினைவு நாட்கள் நாட் காட்டிகளில் மட்டுமே மிஞ்சியிருக்கும் ஒரு நிலை வரக்கூடும்?தமிழ் மக்கள் காலத்தை வீணாக்கக் கூடாது.

பேச்சுக்குத் தயாராகுதல்? நிலாந்தன்.

ரணில் விக்கிரமசிங்க விசுவாசமாக ஒரு பேச்சுவார்த்தைக்குத் தயாரா இல்லையா என்ற சந்தேகம் தமிழ்த் தரப்பிடம் கடைசிவரை இருக்க வேண்டும். அவர் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய தேவை அவருக்கு உண்டு. மேற்கு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தை பிணை எடுப்பதென்றால் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக தெரிகிறது.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளும், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நகர்வுகளும் ஒரே பொதிக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வற்புறுத்துவதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியின் உரையிலும் அது கூறப்பட்டது. அதனால் அரசாங்கம் குறைந்தபட்சம் ஒரு தோற்ற மாயையாகவாவது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஆனால் ஒரு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய தேவை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். அதுபோலவே இந்திய உளவுப் பிரிவின் தலைவர் அண்மையில் இலங்கைக்கு வந்ததாகவும்,இந்தியா சமஸ்ரித் தீர்வுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் அரசாங்கத்திடம் தெரிவித்ததாகவும் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதுவும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். ஆனால் இந்திய உளவுப் பிரிவின் தலைவர் இலங்கை வந்த செய்தி உண்மையல்ல என்றும்,ஒரு ஆங்கில ஊடகம் முதலில் அதைப் பிரசுரித்தது என்றும், அச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கொழும்பு ஊடக வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா கிட்ட எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் பெரியளவிற்கு பலன் அளிக்கவில்லை என்பதும் தெரிகிறது. இந்தியாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உள்ள இடைவெளியும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். எனவே இப்போதிருக்கும் சூழலை வெற்றிகரமாக கையாள வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு. தமிழ் கட்சிகள் அதை எப்படிக் கையாளலாம்?

கடந்த வார கட்டுரையில் கூறப்பட்டது போல தமிழ்க் கட்சிகள் முதலாவதாக தங்களுக்கு இடையே ஓர் உடன்படிக்கைக்கு வந்து ஒப்பீட்டளவில் பொதுவான ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இரண்டாவதாக, பேச்சுவார்த்தைகளில் கட்சிகளை வழிநடத்தவும் ஆலோசனை கூறவும் ஒரு நிபுணர் குழுவை உருவாக்க வேண்டும். அதில் சிவில் சமூகங்களையும் உள்ளடக்க வேண்டும்.அந்நிபுணர் குழு பேச்சுவார்த்தைக்கான ஒரு நிகழ்ச்சி நிரலை கட்சிகளோடு இணைந்து உருவாக்கலாம். முடியுமானால் பேச்சுவார்த்தை மேசையில் கட்சிசாரா நிபுணர்களுக்கும் இடம் கொடுக்கலாம்.

இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்க் கட்சிகள் பெருமளவுக்கு சமஷ்ரித் தீர்வை அல்லது சமஷ்ரிப் பண்புடைய ஒரு தீர்வை வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்களக் கட்சிகள் அதற்குத் தயார் இல்லை.

ரணில் விக்ரமசிங்க தன்னிடம் என்ன தீர்வு உள்ளது என்பதனை வெளிப்படையாக இதுவரை கூறியிருக்கவில்லை. அவர் கூறவும் மாட்டார். ஆனால் நிச்சயமாக சமஷ்டிதான் தீர்வு என்று வெளிப்படையாகச் சொல்ல அவர் தயார் இல்லை என்று தெரிகிறது.

சஜித் பிரேமதாச, பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இந்த விடயத்தில் அவர் மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கட்சிக்குத் தலைமை தாங்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை அவர் அதைத்தான் கூறி வருகிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்புகளின் போதும் அவர் அதைத்தான் வலியுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ச பதிமூன்று பிளஸ் என்று கூறுகிறார். அவரும் பல ஆண்டுகளாக அதைத்தான் கூறி வருகிறார்.

எனவே தொகுத்துப் பார்த்தால், சிங்களத் தரப்பில் 13 ஐத் தாண்டி வரத் தேவையான அரசியல் திடசித்தம் கிடையாது. ஆனால் தமிழ்த் தரப்போ கூட்டாட்சியை கேட்கின்றது. அதாவது தமிழ் தரப்பின் கோரிக்கைகளுக்கும் சிங்களத் தரப்பு தரக்கூடியவற்றிற்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு. அதை கோட்பாட்டு அடிப்படையில் சொன்னால் நாட்டின் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பை மாற்ற சிங்களக் கட்சிகள் தயாரில்லை என்பதுதான்.

அவர்கள் 13ஐப் பற்றிப் பிடிப்பதற்கு காரணம் அதுதான். அதைவிட மேலதிகமாக ஒரு காரணம் உண்டு. ,இந்தியாவையும் இதில் சிங்களத் தரப்பின் பங்காளியாக்குவது. கடந்த பல தசாப்தங்களாக இந்தியா 13-வது திருத்தத்தைத் தான் வலியுறுத்தி வருகிறது. இந்தியா ஏன் 13வது திருத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது? அது தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதாலா? இல்லை. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சியிருக்கும் ஒரே உறுப்பு அதுதான். இந்திய-இலங்கை உடன்படிக்கையின்படி இனப்பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்குரிய வாசல் அதுதான். அதாவது இந்தியா இலங்கை இனப்பிரச்சினையில் தனது பிராந்திய நலன்களின் அடிப்படையில் தலையிடுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக அதைப் பார்க்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு தமிழ்த் தரப்பு எதிராக இல்லை என்ற செய்தியை மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அதை ஏற்கனவே கஜேந்திரகுமார் செய்துவிட்டார். அடுத்த கட்டமாக இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களின் கோரிக்கைகளை 13க்குள் முடக்க கூடாது என்பதையும் தமிழ்த் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

ரணிலுக்கும் புதுடில்லிக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக தெரிகிறது. ரணில் இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த பொழுதும் இந்தியா அவரை இன்றுவரை உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வரும் ஆண்டில் சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு தகவல் உண்டு. அதற்கு முன் இந்தியாவை திருப்திப்படுத்தும் நகர்வுகளை இலங்கை முன்னெடுக்க வேண்டியிருக்கும். பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பது, கலாச்சார மண்டபத்தைத் திறப்பது, காங்கேசன் துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே படகுப்பாதையைத் திறப்பது, சீனாவின் கடலட்டைப் பண்ணைகளைக் கட்டுப்படுத்துவது…. போன்ற பல விடயங்களிலும் இந்தியாவை திருப்திப்படுத்த வேண்டியிருக்கும்.

சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த நாட்டுக்கும் எதிராகவோ சிங்கள ஆட்சியாளர்கள் முதலில் வீரம் காட்டுவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் வெளிநாடுகளோடு தங்களை சுதாகரித்துக் கொள்வார்கள். இந்திய-இலங்கை உடன்படிக்கையில் ஜெயவர்த்தனா அதைத்தான் செய்தார்.இந்தியப் படைகளை வெளியேற்றும் விடயத்தில் பிரேமதாசவும் அதைத்தான் செய்தார். ஆட்சி மாற்றத்தின் போது 2015ல் மஹிந்த அதைத்தான் செய்தார். கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் அதைத்தான் செய்தார்.எனவே அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் வெளி அரசுகளோடு சுதாகரித்துப் போகும் ஒரு ராஜதந்திர பாரம்பரியத்தை கொண்டிருக்கிறார்கள். அரசுகளுக்கு வெட்கமில்லை. மானம் இல்லை. ரோஷம் இல்லை. எனவே ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை சுதாகரித்துக் கொள்ளமாட்டார் என்று கருதத் தேவையில்லை. பலாலி விமான நிலையம் அடுத்த வாரம் திறக்கப்படுமாக இருந்தால் அவர் இந்தியாவைச் சமாளிக்க முற்படுகிறார் என்று பொருள். இதுபோலவே யாழ்.கலாச்சார நிலையத்தை திறப்பதற்குரிய பேச்சு வார்த்தைகளை இந்த வாரம் அரசாங்கம் தொடங்கியிருக்கிறது.

ஆனால் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் ஏற்படக்கூடிய பகைநிலைதான் தமிழ் மக்கள் பெறக்கூடிய தீர்வின் பருமனைத் தீர்மானிக்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பேச்சு வார்த்தைகளில் இந்தியாவை ஒரு மத்தியஸ்த்தர் ஆக தமிழ்த் தரப்பு அழைக்க வேண்டும். மேற்கு நாடுகளோடு இணைந்த ஒரு இணைத் தலைமைக்குள் இந்தியாவுக்கு முதன்மை வழங்க வேண்டும். தமிழ் மக்களாகக் கேட்டு இந்தியா மத்தியஸ்தம் வகிக்குமாக இருந்தால் அது தமிழ் மக்களின் பேரத்தை அதிகப்படுத்தும்.

ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்த்தம் இன்றி இலங்கைத்தீவில் இரண்டு இனங்களும் உடன்பாட்டுக்கு வர முடியாது என்பது கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு. இலங்கைத் தீவில் ஒப்பீட்டளவில் அதிக காலம் நீடித்த இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய இலங்கை- உடன்படிக்கை முதலாவது.இதில் இந்தியப்படையின் பிரசன்னம் இருந்தது.இரண்டாவது, ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை. இதில், ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னம் இருந்தது. மூன்றாவது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். அதில் ஐநா ஒரு மூன்றாவது தரப்பாக இல்லை என்றாலும் ஐநாவின் கண்காணிப்பு அங்கே இருந்தது. அது ஒரு பலமான மத்தியஸ்தம் இல்லை என்பதனால் மூன்று ஆண்டுகளில் அதை மைத்திரி தோற்கடித்தார். இந்த மூன்று உடன்படிக்கைகளின் ஊடாகவும் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல், மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கைத்தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வை எட்ட முடியாது என்பதுதான். எனவே தமிழ்த் தரப்பு ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும். அது பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபந்தனை என்று ரணில் கூறக்கூடும்.அது நிபந்தனை அல்ல.அதுதான் இலங்கை தீவின் யதார்த்தம்.

– நிலாந்தன்.

காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் பணிப்புரை

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அறிவுறுத்தல்.

நகர அபிவிருத்தி அதிகார சபையானது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அதிக சந்தை பெறுமதியுடன் கூடிய சுமார் 1,008 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்களை வைத்துள்ளது.

அதிக சந்தைப் பெறுமதியுடன் கூடிய, இதுவரையில் அதிகபட்ச பாவனைக்கு உட்படுத்தப்படாத இவ்வாறான காணிகள் தேசியத் திட்டத்தின்படி அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுறவில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இப்போதும் நாடளாவிய ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சில காணிகள் பல்வேறு நபர்களினால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், காணி வங்கியொன்றை அமைத்து, காணிகளை உரிய முறையில் பட்டியலிடுவதன் மூலம், காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, அந்த காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் கீழ் காணி அபிவிருத்தியுடன் முதலீட்டு மாதிரிக்கு சில நெகிழ்வுத்தன்மையை வழங்குதல், நெகிழ்வான கொடுப்பனவுகளின் கீழ் முதலீட்டாளருக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்குதல் போன்ற பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட

2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளரான சந்தியாவின் கணவா் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தாா். தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரை போலவே காணாமல் ஆக்கப்பட்ட மற்றவர்கள் சார்பிலும் குரல் கொடுத்து வருகின்றாா்.

உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர ஸ்ரீஷா பண்ட்லா, உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளiமை குறிப்பிடத்தக்கது.