தமிழ் கட்சிகள் இந்திய மத்தியஸ்தத்தை கோரவேண்டும்?

இந்தியாவின் முக்கியத்துவம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். முள்ளிவாய்க்கால் அவலம் நமது அரசியல் புரிதல் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் பலவாறான கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்த பின்புலத்தில் ‘இந்தியா புலிகளை அழித்ததா’ என்னும் தலைப்பில், தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் காலச்சுவடு சஞ்சிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் பல அரசியல் நண்பர்கள் திருப்தியடையவில்லை. பலர் எனது நட்பையும் துண்டித்துக் கொண்டனர். இன்று காலம் 13 வருடங்களாக நகர்ந்துவிட்டது. இப்போது பலரும் புதுடில்லியுடன் எவ்வாறு நெருங்குவதென்று உரையாடிவருகின்றனர். ஒரு காலத்தில் இனிப்பாக நோக்கப்பட்ட இந்தியா என்னும் சொல், பின்னர் கசப்பானது. விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய படைகளுடன் மோதிய பின்னணியில்தான், அது கசப்பானது. அன்றைய சூழலில், இந்தியாவுடன் இணைந்துதான் பயணிக்க வேண்டுமென்று கூறியவர்கள் (துரோகிகளாக்கப்பட்டு) தூற்றப்பட்டனர். ஆனால் காலம் அனைத்தையும் செல்லாக்காசாக்கிவிட்டது. காலம் வலியதென்பார்கள். காலம் நமக்கு தரும் அனுபவங்களை எந்தவொரு ஏட்டறிவும் தந்துவிடப்போவதில்லை.

நான் இப்போது, இந்தியா தொடர்பில் பேசுவதற்கு ஒரு வலுவான காரணமுண்டு. அதாவது, ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு தொடர்பில் பேசிவருகின்றார். தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து வந்தால் தான் பேசுவதற்கு தாயராக இருப்பதாகவும் கூறுகின்றார். தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வழமைபோல் சமஸ்டியை உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் கட்சிகள் இவ்வாறுதான் பேசுமென்பதும் ரணில் அறியாத ஒன்றல்ல. ஏனெனில் தற்போதுள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகளில் ரணில் விக்கிரமசிங்களவிற்கு தமிழர்களின் பிரச்சினையை வேறு எவரும் அறியார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்திலிருந்து, ஒஸ்லோ பேச்சுவார்த்தை வரையில் பயணம் செய்தவர் ரணில். எனவே ரணில் விக்கிரமசிங்க புதிதாக தெரிந்துகொள்வதற்கு எதுவுமில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் தமிழ் கட்சிகளை பேச வருமாறு அவர் அழைக்கின்றார்.

தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு எளிய உண்மையுண்டு. அதாவது, தமிழர்களும் சிங்களவர்களும் உரையாடி பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால், தேசிய இனப்பிரச்சினையன்பது, ஒரு பழம் கதையாகியிருக்கும். அரசியல் தீர்வென்பது எப்போதோ முடிந்த காரியமாகியிருக்கும். கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக, தீர்க்க முடியாமல் இழுபட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினைக்கான தீர்வை, தான் அடுத்த ஆண்டுக்குள் காணப்போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். இது தொடர்பில் எந்தவொரு கேள்வியுமில்லாமல் சமஸ்டியடிப்படையில் பேசுவோமென்று தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்றனர். செல்வநாயகம் காலம் தொடக்கம், பிரபாகரன் காலம் வரையில், பல பேச்சுவார்த்தைகளை நாம் கண்டிருக்கின்றோம். இந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு பிரதான அம்சமுண்டு, அதாவது, சிங்களவர்களும் தமிழர்களும் பேசி பிரச்சினைகளை தீர்க்க முற்பட்ட அனைத்து சந்தர்பங்களும் தோல்வியடைந்திருக்கின்றது.

இந்த இடத்தில்தான் மூன்றாம் தரப்பின் தேவை உணரப்பட்டது. தமிழர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பினர் தலையீடு செய்த இரண்டு சந்தர்பங்களுண்டு. இதனை இரண்டு காலகட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, இந்திய தலையீட்டு காலம். இரண்டு, நோர்வேயின் மத்தியஸ்த காலம். முதலாவது பிராந்தியரீதியான தலையீடாகும். இரண்டாவது மேற்குலக தலையீடாகும். ஏனெனில், நோர்வேயென்பது மேற்குலக சமாதான முன்னெடுப்புக்களுக்கான முகவர் முகமாகும். இந்த இரண்டு தலையீடுகளுக்கும் ஒரு ஒத்த இயல்புண்டு. இரண்டு தலையீடுகளுமே, தமிழர்கள் ஆயுதரீதியான பலத்துடன் இருந்த காலத்தில் இடம்பெற்ற தலையீடுகளாகும்.

அதே வேளை, ஒரு அடிப்படையான வேறுபாடுமுண்டு. அதாவது, இந்தியா முதலில் தமிழ் இயக்கங்களை ஆயுதரீதியில் பலப்படுத்தி, அதன் பின்னரே நேரடியாக தலையீடு செய்தது. ஆனால் மேற்குலகோ, ஒரு எல்லைவரைக்கும் விடுதலைப்புலிகளை, இயங்குவதற்கு அனுமதித்துவிட்டு, அதன் பின்னரே தலையீடு செய்தது. அதாவது, விடுதலைப்புலிகள் இலங்கையின் இராணுவத்திற்கு சவால்விடுக்கக் கூடிய நிலையிலிருந்த காலத்தில்தான், நோர்வேயின் தலையீடு நிகழ்ந்தது. இதில் பிறிதொரு விடயமுண்டு. அதாவது, ராஜீவ்காந்தியின் கொலைக்கு பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. ஆனால் மேற்குலகத்தில் தடைசெய்யப்படவில்லை. 1990களுக்கு பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பு ஜரோப்பிய ஜனநாயக சூழலை பயன்படுத்தியே தங்களை வளர்த்துக் கொண்டது. ஆரம்பத்தில் தமிழ் நாடுதான், விடுதலைப் புலிகளுக்கான பின்தளமாக இருந்தது. பின்னர், அது ஜரோப்பாவாக மாறியது. இந்த பின்புலத்தில் நோக்கினால், 90களுக்கு பின்னரான விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு மேற்குலகத்தின் நெகிழ்வான அணுகுமுறையே பிரதான காரணமாகும். 1997இல், அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக தடைசெய்த போதிலும் கூட, 2006இல்தான், ஜரோப்பிய ஒன்றியம் புலிகளை தடைசெய்தது. கனடாவும் 2006இல்தான் தடைசெய்தது. அமெரிக்காவில் புலிகள் தடைசெய்யப்பட்ட போதிலும் கூட, அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையின் கடைக்கண் பார்வைக்குள் இருக்கும் கனடாவில், விடுதலைப் புலிகள் தடைசெய்யப்படவில்லை. அமெரிக்கா எண்ணியிருந்தால், கனடாவிலும் விடுதலைப் புலிகளை ஆரம்பத்திலேயே தடைசெய்திருக்க முடியும்.

இந்த பின்னணியில் நோக்கினால், மேற்குலகம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, ஒரு எல்லைவரையில் வளர்வதற்கு அனுமதித்திருந்தது. இதற்கு பிறிதொரு காரணமும் உண்டு. அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் கருத்தியல்ரீதியில் மேற்குலகிற்கு எதிரான நிலைப்பாடுடையதல்ல. ஒரு வேளை விடுதலைப் புலிகள் அமைப்பானது, ஒரு இடதுசாரி இயக்கமாக தன்னை முன்னிறுத்தியிருந்தால், மேற்குலகம் விடுதலைப் புலிகளுக்கு இவ்வாறான சலுகையை வழங்கியிருக்காது. இந்த பின்புலத்தில் நோக்கினால், தங்களுடைய நெகிழ்வான அணுகுமுறைகளால் வளர்சியடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதற்கானதொரு முயற்சியாகவே நோர்வேயின் தலையீட்டை நாம் நோக்க வேண்டும். அப்படி நோக்குவதுதான் சரியாகவும் அமையும். அதே வேளை இந்திய தலையீட்டிற்கும் நோர்வேயின் முகவர் தலையீட்டிற்கும் இடையில் ஒரு கொள்கைசார்ந்த உடன்பாடுண்டு. அதாவது, இரண்டு தலையீடுகளுமே தமிழ் மக்களுக்கான தனிநாட்டை ஆதரிக்கும், அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. மாறாக அதற்கு மாற்றான அரசியல் தீர்வொன்றை காண்பதற்கான தலையீடாகவே இருந்தது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, நோர்வேயின் பெறுமதி இல்லாமல் போய்விட்டது. இப்போது ரணில்-பிரபா உடன்பாடு ஒரு விடயமல்ல. ஏனெனில் பிரபாகரனும் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லை. ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இப்போதும் எப்போதும் விடயமாகவே இருக்கும். ஏன்? ஏனெனில், அது இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வலியுறுத்திவருகின்றது. அதே வேளை, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசிவரும் ஒரேயொரு நாடும் இந்தியா மட்டும்தான்.

எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்படும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாதது. தவிர்க்கவும் கூடாது. ஆனால் இந்த விடயத்தை சரியாக புரிந்துகொண்டு தமிழ் தேசிய கட்சிகள் செயற்படவில்லை. ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில், சம்பந்தன்- சுமந்திரன் தரப்பு, திட்டமிட்டே இந்தியாவை தவிர்த்துக்கொண்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம், இந்தியாவிடம் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள். இதன் காரணமாகவே, சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்தர்பத்தில், ஒரு முறை கூட, புதுடில்லிக்கு பயணம் செய்யவில்லை. இறுதியில் அரசியல்யாப்பு முயற்சிகள் படுதோல்வியடைந்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மேற்பார்வையில் விடயங்களை கையாண்டிருந்தால், இருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி சென்றிருக்கலாம். முன்னர் செய்த அதே தவறையே இப்போதும் தமிழ் தேசிய கட்சிகள் என்போர் செய்கின்றனர். இங்கு கருத்தூன்றி கவனிக்க வேண்டிய விடயமொன்றுண்டு. அதாவது, சமஸ்டியடிப்படையில் பேசுவதானால் இந்தியாவின் தலையீடு நிகழாது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலிருந்து முன்னோக்கி பயணிப்பதாயின், இந்தியாவினால் தலையீடு செய்ய முடியும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கர், கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, முன்னர் ஒரு முறை இதனை கூறியுமிருக்கின்றார்.

 

ஏன் மூன்றாம் தரப்பொன்றின் தலையீடு கட்டாயமானது. இந்தக் கட்டுரை மூன்றாம்தரப்பு என்பதால் இந்தியாவை மட்டுமே குறிப்பிடுகின்றது. இந்தியாவல்லாத எந்தவொரு நாட்டின் தலையீடும் தமிழர் விடயத்தில் சாதகமான பங்களிப்பை வழங்க முடியாது. பங்களிப்பு என்பதற்கும் சாதகமான பங்களிப்பு என்பதற்குமான வேறுபாடு கனதியானது. முன்னர் இடம்பெற்ற மூன்றாம் தரப்பின் தலையீட்டிற்கும் இப்போது இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடும் இந்திய தலையீட்டிற்கும் அடிப்படையான வேறுபாடுண்டு.

இந்த கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, முன்னர் இடம்பெற்ற இரண்டு தலையீடுகளும் தமிழர்கள் ஆயுத பலத்துடனிருந்த காலத்தில் இடம்பெற்ற தலையீடுகளாகும். அந்தத் தலையீடுகளின் போது, தமிழர்களுக்கு வலுவான குரலிருந்தது. தமிழர்களால் விடயங்களை அழுத்தி வலியுறுத்த முடிந்தது. ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழானது. தமிழர்கள் முற்றிலும் பலமற்றவர்களாக இருக்கும் சூழலில்தான் கொழும்புடன் பேசவேண்டியிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் சிங்கள தரப்பே எப்போதும் பலமாக இருக்கும். தமிழர்கள் விடயங்கள் கூறினாலும் அதனை செய்யவேண்டுமென்னும் நிர்பந்தம் அவர்களுக்கில்லை. அப்படியிருப்பதாக சிலர் கூறலாம். ஆனால் உண்மையான நிலைமை அப்படியல்ல. தமிழர் பிரச்சினைக்கான தீர்வை கண்டால்தான், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவோமென்று எந்தவொரு நாடும் நிபந்தனைகளை முன்வைக்கவில்லை. அப்படி அவர்கள் கூறப்போவதுமில்லை. இராணுவத்தை குறைக்குமாறு நாடுகள் நிபந்தனைகளை முன்வைத்ததாக நம்மில் சிலர் கூறிக்கொண்டிருக்கும் போதுதான், பொருளாதார நெருக்கடிக் காலத்தில் கூட, பாதுகாப்பிற்கு அதிக நிதியொதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அரசுகளுக்கிடையிலான உறவுகளை மிகவும் எழிமையாக விளங்கிக்கொள்வது தவறானது.

பேச்சுவார்த்தைகளின் போது, ஒரு தரப்பு மிகவும் பலவீனமாக இருந்தால், ஒரு மூன்றாம்தரப்பிடமிருந்து அதிகாரத்தை கடன்பெறும் அணுகுமுறையுண்டு. இது ஒரு முரண்பாட்டு தீர்விற்கான அணுமுறையாக சொல்லப்படுகின்றது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் கூறுவதானாலும் கூட, பலவீனமான நிலையிலிருக்கும் தமிழர்கள், ஒரு மூன்றாம்தரப்பின் மேற்பார்வையின்றி, விடயங்களை அணுகுவது புத்திசாலித்தனமல்ல. இந்த சந்தர்பத்தில், தமிழ்கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவின் மத்தியஸ்தத்தை ஒருமித்து கோரவேண்டும். ஏற்கனவே இந்திய பிரதமரின் தலையீட்டை கோரி, கடிதம் அனுப்பியிருக்கும் கட்சிகள், இந்தவிடயத்தில் தடுமாற வேண்டியதில்லை. அந்தக் கடிதத்தில் கோரியது உண்மையாயின், இப்போது குறித்த ஆறு கட்சிகளும் கருத்தொருமித்து, இந்தியாவின் மத்தியஸ்தத்திற்கான அழைப்பை முன்வைக்க வேண்டும். ஆனால் மத்தியஸ்தத்தின் அடிப்படையாக இந்திய-இலங்கை ஒப்பந்தமே இருக்க வேண்டும். முன்னர் சம்பந்தன்-சுமந்திரன் செய்த தவறையே மீளவும் செய்தால், செய்ய அனுமதித்தால், மீளவும் சமஸ்டியுமில்லை, தீர்வுமில்லையென்னும் நிலைமையே ஏற்படும். அப்படியொரு நிலைமைதான் தொடர்ந்தும் ஏற்பட வேண்டுமென்று, தமிழ் கட்சிகளின் தலைவர்கள் விரும்பினால், செல்வநாயகம் கூறியது போன்று தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தமிழர்கள் என்பதால், ஏழை மக்கள் தொடர்பிலேயே இந்தக் கட்டுரை குறிப்பிடுகின்றது. கட்சிகளின் தலைவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை ஏனெனில், அவர்களிடம் கோடிகள் உண்டு.

அலி சப்றி அமெரிக்கா பயணம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (நவ. 29) அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இன்று முதல் டிசம்பர் 4 வரை அமெரிக்காவிற்கான இவ்விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் அலி சப்ரி தனது விஜயத்தின் போது இராஜாங்க செயலாளர் பிளிங்கன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

மீனவர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

அரச நிறுவன நிகழ்வுகளுக்கான செலவுகள் இரத்து

அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவுகளை இரத்து செய்து சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நிதி கட்டமைப்பிற்குள், அரச நிறுவனங்களின் துறைசார் நிகழ்வுகள் மற்றும் வௌி நிகழ்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்த கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

அதற்கமைய, அமைச்சுகள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், அரச தொழில்முயற்சியான்மை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச வங்கிகள், கடமைகளை பொறுப்பேற்றல் மற்றும் ஓய்வு பெறுவதுடன் தொடர்புடைய நிகழ்வுகள், சினேகபூர்வ சந்திப்புகள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட அ​னைத்து நிகழ்வுகளுக்கும் அரச நிறுவனங்களூடாக ஈட்டப்படும் நிதியை செலவிடுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த 100 புகைப்படங்களில் ஒன்றாக கோத்தபாயவின் சேதமாக்கப்பட்ட அறை

இவ்வருடம் ஜூலை 15ஆம் திகதி அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அலுவலகத்தை 2022ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களில் ஒன்றாக டைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளதுடன், அதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

100 புகைப்படங்களை டைம்ஸ் இதழின் 8 புகைப்பட ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டு பல்வேறு நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக உள்ளதனைக் காட்டவே இந்த 100 புகைப்படங்களை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

13+ க்கு செல்லும்போது ஒற்றையாட்சி ஐக்கிய என்ற வசனங்களில் தொங்ககக் கூடாது – டிலான் பெரெரா

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 பிளஸ் முறைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். அவ்வாறு 13 பிளஸ் திட்டத்துக்கு செல்லும்போது ஒற்றையாட்சி அல்லது ஐக்கிய இலங்கை என்ற வசனங்களில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

மாறாக எவ்வாறான அதிகாரப்பகிர்வு எமக்குக் கிடைக்கிறது என்பதையே இங்கு பார்க்க வேண்டும் என்று பொது ஜன பெரமுன விலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் காங்கிரசின் பிரதி நிதி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 பிளஸ் திட்டத்தின் ஊடாக தீர்வு காண்பதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

எனவே இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த நோக்கம் உண்மையானதாக இருக்கவேண்டும்.

இது வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையாக அமையக் கூடாது என்றும் உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இது தொடர்பில் வினவியபோதே பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

டிலான் பெரெரா இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்

தற்போது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இது ஒரு சிறந்ததொரு யோசனையாக காணப்படுகிறது.

ஆனால் இது உண்மையில் நேர்மையானதாக இருக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்டத்திற்கு கூட்டமைப்பின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இப்படி ஒரு அனுகுமுறையை முன்னெடுக்கக் கூடாது.

மாறாக உண்மையிலேயே பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சி இதனூடாக இடம்பெறவேண்டும். ஆனால் எப்படியோ இந்த இடத்தில் 13 பிளஸ் திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார்.

அப்படியானால் தற்போது 13 பிளஸ் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே 13 பிளஸ் என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வை நோக்கி செல்லும்போது ஒற்றையாட்சி ஐக்கிய இலங்கை என்று வசனங்களில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது ஒற்றையாட்சி என்பதில் தென்னிலங்கை தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதே போன்று ஐக்கியம் என்ற வசனத்தில் வடக்கு கிழக்கு தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

மாறாக எவ்வாறான ஒரு அதிகார பகிர்வு எமக்குக் கிடைக்கிறது என்பது தொடர்பாகவே இங்கு சென்று பார்க்க வேண்டும்.

ஆனால் ஒற்றையாட்சி என்ற தொங்கினால் 13 பிளஸ் என்ற திட்டத்திற்கு செல்ல முடியாது.

எனவே இங்கு ஏதோ ஒரு முறை யிலான ஒரு அணுகுமுறைக்கு அல்லது ஒரு திட்டத்துக்கு அனைவரும் செல்ல வேண்டும்.

அதேபோன்று 13 பிளஸ் எனும் போது அதில் ஒரு புதிய விடயத்தை இணைத்துக் கொள்ளலாம்.13 ஆம் திருத்தம் என்பது தற்போது அரசியலமைப்பில் காணப்படுகின்றது.

எனவே 13 பிளஸ் எனும் போது அதில் ஒரு புதிய விடயம் இணையவேண்டும். அந்த புதிய விடயமாக செனட் சபையை இணைத்துக்கொள்ள முடியும் என நான் கருதுகிறேன்.

அதாவது தற்போது இருக்கின்ற பாராளுமன்றத்துக்கு மேலதிகமாக மேலும் ஒரு சபையை உருவாக்கி அதில் மாகாண சபைகளின் உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் அங்கத்துவம் பெற முடியும்.

இதனூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

எனவே 13ஆம் திருத்தத்தின் ஊடாக செனட் சபையையும் இணைத்துக்கொள்ள முடியும் என்பதே எனது நிலைப்பாடு அமைந்திருக்கின்றது என்றார்.

இதனிடையே ஜனாதிபதியுடனான அழைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்ற சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் ஒற்றையாட்சியின் கீழ் அதிகார பகிர்வுக்கு ஒத்துழைப்பதாகவும் அறிவித்துள்ளார். Continue reading

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம், அராலி பகுதி கடலில் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் அட்டைப் பண்ணைகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். தற்கால பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

எமது கடலில் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

எங்களது கடல் சிறிய கடல். இந்தக் கடலில் பருவகாலத்திற்கு தான் நாங்கள் சிறப்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மற்றைய வேளைகளில் சாதாரண அளவிலேயே எமது மீன்பிடி நடவடிக்கைகள் அமைகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் அட்டைப் பண்ணைகள் இங்கே அமைத்தால் கடலில் உள்ள வளங்கள் அழியும் சந்தர்ப்பம் உள்ளது.

இறால், நண்டு, மீன் இனங்கள் போன்றன கடற்கரையோரங்களில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிலையில் கரையோரங்களில் அட்டைப் பண்ணைகளை நிறுவுவதால் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்கள் நீரோட்டத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தயவுசெய்து எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள். மீனவர்களை வாழ விடுங்கள்.

தம்பாட்டி, பூநகரி போன்ற கடல்கள் உட்பட பல கடற்பகுதிகளில் அட்டைப் பண்ணைகள் அமைத்ததனால் அப்பகுதி மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் பல நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களது குரல்களுக்கு செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையை எண்ணி வருந்துகின்றோம். அவர்களுக்கு எங்களது ஆதரவுகளை தெரிவிக்கின்றோம்.

எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது. எனவே உரிய தரப்பினர் மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றனர்.

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என விசாரிக்கப்பட வேண்டும் – ஹக்கீம்

வேண்டுமென்றே வெறுப்புணர்வைத் தூண்டி அதன் மூலமாக எங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோரி நிற்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் சனிக்கிழமை (நவ.26) தவிசாளர் விருது வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,

ஏப்ரல் 21 இன் பயங்கவாதக் கும்பலைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கும்பலின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லை. நினைவுகூரப்பட வேண்டியதுமில்லை. அந்தச் செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எங்களது முடிவு. அவர்கள் மேற்கொண்டது முஸ்லிம் சமூகத்திற்கான போராட்டமுமல்ல. இதற்குப் பின்னாலும் சில பெருந்தேசியவாதக் கழுகுக் கூட்டம் இருந்ததா என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை முஸ்லிம்கள் மீது தூண்டி அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பாடுபட்டவர்கள் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் படாதபாடு படுத்தினார்கள். கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் இவ்வாறு அவர்களது வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து சென்றது. இன்னமும் முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிரூபிக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், முள்ளிவாய்க்கால் சம்பவம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை இப்பொழுது சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள். இவ்வாறு நடந்த அநியாயங்களைக் கண்டறிவதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைனக்துழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

அதேநேரம் அடுத்து வரும் அரசியல் என்பது வித்தியாசமாக நடக்கப் போகின்றது. அந்த வித்தியாசமான அரசியலில் முஸ்லிம் சமூகமாக இருக்கட்டும் தமிழ் சமூகமாக இருக்கட்டும் நாங்கள் எல்லோரும் மிகக் கவனமாகக் காய்நகர்த்தி சரியான இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். என்னதான் பேசினாலும் துரோகச் செயல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவு காண முடியாது.

துரோகத்தைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தைக் கடத்துவதல்ல நோக்கம். தெற்கிலுள்ள சிங்கள சமூகத்தினரும் சிறுபான்மைச் சமூகத்தினரின் கோரிக்கைகள் நியாயமானது என்று நம்புகின்ற அளவக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்து கொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இதுவென நான் நம்புகின்றேன்” என்றார்.

அதிகார பகிர்வுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் மட்டத்தில் முன்னெடுப்பேன் – சரத் வீரசேகர

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதிகார பகிர்வு சாத்தியமற்றது என்பதை உறுதியாக குறிப்பிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சமர் வீரசேகர தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிம் அரசியல் தலைமைகள் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்களே தவிர,தமிழ் மக்களின் அடிப்படை பொருளாதார பாதிப்பு குறித்து அவதானம் செலுத்தவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் கோரவில்லை,இந்தியாவின் அழுத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஊரடங்கு சட்டத்தை பிரயோகித்து 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட்டன.ஆனால் வழங்கப்பட்ட அரசியல் உரிமைகளை தமிழ் தலைமைகள் பாதுகாத்துக் கொள்ளவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போடும் வகையில் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கு எதிராக செயற்படவில்லை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளினால் அவர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தாமல் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.அரசியல் உரிமை என குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கான உண்மையான அபிவிருத்தியை இவர்கள் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள்.

வடக்கு மாகாண இளைஞர்களின் தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அரசியல் தீர்வுக்கான மதிப்பு இல்லாமல் போகும் என குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பிற நாடுகளில் உயர் கல்வியை கற்கிறார்கள்.சுகபோகமாக வாழ்கிறார்கள்.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளார்கள்.இதுவே உண்மை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளோம்.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.அதிகார பகிர்வு என்ற சொற்பதத்தின் ஊடாக நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மலினப்படுத்த முடியாது.

அதிகார பகிர்வு சாத்தியமற்றது,மாவட்டங்களுக்கான அதிகாரங்களை விஸ்தரிக்கலாம் .ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.அதிகார பகிர்வு என்ற இலக்கை அடைவதற்காக பொருளாதார நெருக்கடி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தப்பட்டு,அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தற்போது செயற்பாட்டில் உள்ள போது நாட்டு மக்கள் வழங்கிய ஆணை எவ்வாறு வலுவற்றதாகும்,ஆகவே மக்கள் வழங்கிய ஆணையை மதித்து அரச தலைவர்கள் செயற்பட வேண்டும்.

அதிகார பகிர்வுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் மட்டத்தில் முன்னெடுப்பேன்.நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பேன்.எதிர்வரும் நாட்களில் ஒன்றுப்பட்ட சக்தியாக இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவோம் என்றார்.

கோப்பாய் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தை விலக்கி மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசு இடமளிக்க வேண்டும் – -ரெலோ தவிசாளர் நிரோஷ் 

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை குறித்த பிரதேசத்தின் ஆட்சிக்குரிய உள்ளுராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைப்பதன் வாயிலாக எமது மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் போரில் ஆகுதியாகிய மறவர்களுக்கு நினைவஞ்சலிச் சுடரினை ஏற்றிய பின் கருத்துரைக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்.

சேமக்காலைகளை இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களே முகாமை செய்கின்றன. போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடங்களை போருக்குப் பின் அரச படைகள் கிளறி எறிந்து மானிட தர்மத்திற்கும் போரியல் விதிமுறைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒரு தாய் இறந்த தன் பிள்ளையை நினைவு கொள்ள முடியாது என்று அரசு கருதுமாக இருந்தால் அதையொத்த அரச அடக்குமுறையும் அரச பயங்கரவாதம் வேறு என்னவாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றோம். உண்மையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட சடலங்களைக்கூட கிளறி எறிந்து இனவெறியைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் இலங்கையின் அரச கட்டமைப்பில் வேறுண்டி இருக்கையில் நாடு முன்னேறிச் செல்வதற்கே இடமில்லை. மனித நேயமுள்ள சிங்கள தாய்மாரிடமும் சகோதரர்களிடமும் எமது மக்கள் மீது இளைக்கப்பட்ட அநீதிகளை கலந்துரயாட அழைப்பு விடுக்கின்றோம்.

உலக அளவில் எதிரியாக இருந்த போதும் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு கௌரவமளித்து தூபிகளைக் கூட உலக அளவில்  அமைத்துள்ளார்கள். ஆனால், இன்றும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் உள்ளட்ட பல துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்களாக உள்ளன. அங்கு இருந்த கல்லறைகள் சிதைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இவ்வாறான மிக அருவருக்கத் தக்க மானிட கௌரவத்திற்கு கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளை நிறுத்தி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை உள்ளராட்சி மன்றத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

தற்போது அந் நிலம் அரச திணைக்களமென்றிற்குச் சொந்தமான நிலமாக இராணுவ முகாமாக உள்ளது. இந்த இடத்தில் அரசாங்கம் இராணுவ ஒழுக்கத்தினை பின்பற்றி அந் நிலத்தில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதுடன் அந் நிலத்தினை உள்ளூராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைப்பதன் வாயிலாக உரிய வகையில் மக்களின் நினைவேந்தல் உரிமையினை நிலைநாட்ட முடியும். அதற்கான கோரிக்கையினை முன்வைப்பதுடன் உத்தியோகபூர்வ நடவடிக்ககளயும் முன்னெடுக்கவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்  தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.