காணி அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும் – சரத் வீரசேகர

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை.

காணி அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.

மாகாண சபை முறைமை வெள்ளையானை போன்றது. புதிய அரசியலமைப்புக்கே மக்களாணை உண்டு, ஆகவே மாகாண சபையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு குறித்து ஜனாதிபதி புதன்கிழமை (9) விசேட உரையாற்றினார். நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை பார்வையிட்டுள்ளேன்.

பௌத்த தொல்பொருள் மரபுரிமை வாய்ந்த வவுனியாவில் வெடுக்குநாறி பகுதியில் உள்ள பௌத்த மரபுரிமை சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காணி அதிகாரம் வழங்காத போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுரிமைகள் இவ்வாறு அழிக்கப்படும் போது காணி அதிகாரத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பது கேள்விக்கிடமாகவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த மரபுரிமை சின்னங்கள் காணப்படுகின்றன. அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே எங்களின் உரிமை இவை சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் சொந்தமானது.

பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு எதிர்மறையாக செயற்படும் அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பேசுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாடு பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரே அதிகார பகிர்வை கோருகிறார்கள்.

விடுதலை புலிகளின் ஆயுதமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. 30 வருடகால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாததை தற்போது தட்டில் வைத்து வழங்க முயற்சிப்பது முறையற்றது. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் பேர் உயிர் நீத்தார்கள், 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்கள் தமது உடல் அங்கங்களை அர்ப்பணித்தார்கள்.

மாகாண சபைகள் செயற்பட்ட போது 10 கல்வி அமைச்சர்கள்,10 விவசாய அமைச்சர்கள் என பல அமைச்சர்கள் இருந்தார்கள். நாட்டில் தற்போது கல்வி,சுகாதாரம்,விவசாயம் உள்ளிட்ட சேவைகள் முன்னேற்றமடைந்துள்ளதா இல்லை, மாகாண சபை முறைமை வெள்ளை யானை போலவே உள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே மக்களாணை உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை நீக்கி புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றம் மூலமே தீர்வைக் காண முடியும் – மிலிந்த மொரகொட

இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்மிலிந் த மொராகொட இலங்கை இந்தியாவின் பாதுகாப்பை தனது பாதுகாப்பாக கருதுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது பூகோள அரசியல் மற்றும் மூலோபாய அரசியல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என மிலிந்தமொராகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பே எங்களின் பாதுகாப்பு எங்கள் மத்தியில் நீண்டகால நாகரீக உறவுகள் காணப்படுகின்றன நாங்கள் ஒரே இரத்தத்தை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளுக்கும் இடையில் அதிக தொடர்பாடல்களும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன அவை இலங்கைஜனாதிபதியின் விஜயத்தினால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து இந்திய பிரதமரின் கருத்து குறித்து டைம்ஸ்ஒவ் இந்தியாவிற்கு கருத்து தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட 13 வது திருத்தம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து எந்த சந்தேகமும் இல்லை,எனினும் இதற்கு நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைநல்லிணக்கம் குறித்த ஆர்வத்துடன் உள்ளது ஜனாதிபதி தொடர்புபட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் இலங்கை ஆழமாக துருவமயப்படுத்தப்பட்டுள்ள சமூகம் நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தான் என்ன செய்ய முயல்கின்றார் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார், உண்மை ஆணைக்குழுவை அமைப்பதன் மூலம் அவர் அதனை செய்ய முயல்கின்றார்,எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு ரணிலில் காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் இல்லையேல் எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் தீர்வு காணுங்கள்.

இல்லையென்றால் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் நீங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார்.இதனை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைகளை மீளாய்வு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். சாதக மற்றும் பாதக விடயங்களை ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை அறிவிப்போம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டு வரவில்லை நீங்கள் தான் (ஜனாதிபதியை நோக்கி) கொண்டு வந்தீர்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ் காந்தியுடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது நான் உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கோட்டை அரச மரத்தடியில் போராட்டத்தில் ஈடுபட்டோம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் (ஜனாதிபதியை நோக்கி) தீர்வு காணுங்கள்.

இல்லையென்றால் எங்களை போல் எமது பிள்ளைகள்,பேரப் பிள்ளைகளும் எதிர்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அவ்வாறு இடம்பெற்றால் நீங்கள் வாழ்ந்தாலும்,இறந்தாலும் நிம்மதி இல்லாமல் போகும்.ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.

Posted in Uncategorized

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மனோ கணேசன்

மாகாணசபை முறைமை நாட்டின் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் அதனை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. அத்துடன் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் அரசியலமைப்பில் ஓர் அங்கமாகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைந்துள்ளது. அதனால் மாகாண சபைமுறையை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. ஆனால் இதிலுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இப்போதும் 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்று ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தத் தேவையில்லை. இருக்கும் பிரச்சினைகள் போதும்.

2009இல் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது யுத்தத்தை நிறைவு செய்தது போன்று அதிகார பகிர்வை மேற்கொண்டு பிரச்சினைகளை முழுமையாக தீர்க்குமாறு கோரினேன். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இப்போதும் சந்தர்ப்பம் வந்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்வோம். ஜனாதிபதி முன்னெடுக்கும் இந்த விடயத்தில் நாங்கள் காலை பிடித்து இழுக்கப் போவதில்லை.

சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன். இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள் வேண்டும். நீங்கள் செய்யுங்கள். பிரச்சினைகளுக்கு தீர்வே முக்கியம் என்றார்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் என்னிடம் கேட்கின்றனர். இவ்விடத்திற்கு நான் அமைச்சரவைக்கு மட்டும் அறிவித்தே வந்துள்ளேன்.

ராஜபக்ஷவினருக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு அடிபணிந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். உண்மையான ராஜபக்‌ஷவாதிகள் அந்த பக்கமே இருக்கின்றனர். அதனால் 13 தொடர்பில் பொதுஜன பெரமுனவின் இரண்டு பக்கத்தில் இருப்பவர்களும் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பேசி தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

தமிழ் இளைஞர்களை பொலிசில் இணைத்தால் அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக இருப்பார்கள் – பொலிஸ் மா அதிபர்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களிடம் ஆயுதத்தையும் வழங்கினால் அவர்கள் தனிநாட்டு போரை ஆரம்பித்து விடுவார்கள் என தென்னிலங்கை தீவிரவாத தரப்புக்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களை அதில் இணைத்து, ஆயுதத்தை வழங்கினால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்பவில்லை. தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள். இப்போது அப்படித்தான் செயற்படுகிறார்கள்“. இதுதான் அவரது கருத்து.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது, இப்படி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய சந்திப்பில் – பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களிற்கு- வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஏன் தேவை?, இப்போதைய பொலிஸ் அமைப்பு தொடர்வதில் என்ன சிக்கல் என்பதை அறியவே டிரான் அலஸ் ஆர்வம் காட்டினார்.

ஏனைய அதிகாரங்கள் இருந்தாலும், பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால், மாகாண முதல்வரால் அவற்றை பிரயோகிக்கவோ, தீர்வை காணவோ முடியாது உள்ளிட்ட காரணங்களை- நிர்வாக ரீதியாக சுட்டிக்காட்டி தமிழ் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

13வது திருத்தத்தின்படி பொலிஸ் ஆணைக்குழுவில் முதல்வர் ஒருவரையே நியமிக்க முடியம் என்பதையும், மத்திய அரசே 2 பேரை நியமிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது, மாகாணங்கள் சுயாதீனமாக பொலிசை கையாள்வதல்ல என்பதை தமிழ் தரப்பினர் விளக்கமளித்தனர்.

இந்த சந்திப்பின் ஒரு கட்டத்திலேயே- இந்த பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தகவல்களை பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்புகிறீர்களா?“ என தமிழ் தரப்பினர் ஒரு கட்டத்தில் கேட்டனர்.

தான் அப்படி நம்பவில்லையென பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஆரம்ப காலத்தில் பல தமிழ் பொலிசார் கடமையிலிருந்தாலும், பா.நடேசன் (விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர்) ஒருவரே புலிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடியதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள் என்பதில் தனக்கு சந்தேகம் இல்லையென்றும், இப்பொழுதும் அப்படியே செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா தவறிவிட்டது – டி. ஆர் பாலு

இலங்கையில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இந்திய மத்திய அரசாங்கம் தவறவிட்டது என திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் அதில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதில் இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை . தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார்; ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை?

160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சங் பரிவார் எதிர்ப்பால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க முடியவில்லை.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ரூ.15 லட்சம் அனைவருக்கும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால். இதுவரை ரூ.15 கூட தரவில்லை.

பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது.

எனவும் அவர் தெரிவித்துள்ளார்

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் முன்மொழிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இன்றையதினம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்கவை நேரில் சந்தித்து முன்மொழிவுகளை கையளித்தனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாங்கள் ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக மேற்கூறியவை தொடர்பாக உங்கள் Ref PS/PCA/03-iii 2023 ஆகஸ்ட் 2 தேதியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி, எங்கள் கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்க விரும்புகிறோம்.

1. ஏற்கனவே 1988 இல் பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையுடன் 13A அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.
2. அன்றிலிருந்து நாடு முழுவதிலும் மாகாண சபைகள் நிறுவப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலை நடத்துவதற்காகக் கலைக்கப் படும் வரை செயல்பட்டன.
3. எனவே ஏற்கனவே இருக்கின்றதானதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதையும் நடைமுறைப்படுத்துவதற்கு கருத்துக்களை கோர வேண்டிய அவசியமில்லை.
எவ்வாறாயினும், 13A இன் கீழ் வழங்கப்பட்ட சில மாகாண சபை அதிகாரங்கள் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் அவ்வப்போது திரும்பப் பெறப்பட்டன.

மாகாண சபைகளில் இருந்து மீளப் பெறப்பட்ட அவ் அதிகாரங்களை மீண்டும் வழங்கி, காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் 13A ஐ அதன் அசல் வடிவில் நடைமுறைப் படுத்த நாங்கள் முன்மொழிகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்களை முட்டாளாக்கவே சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியால் முன்னெடுப்பு – ஜி.எல்.பீரிஸ்

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஆளும் தரப்புக்குள்ளேயே இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி மக்களை முட்டாளாக்கவே ஜனாதிபதி முற்படுகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஏதேனும் யோசனைகள் இருந்தால், இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலத்தினால் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது அர்த்தமற்ற ஒரு செயற்பாடாகும். மக்களை முட்டாளாக்கும் ஒரு விடயமே இது. நாம் எப்படி யோசனைகளை முன்வைக்க முடியும்?

சர்வக்கட்சி மாநாடு நடைபெற்றபோது, பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் இருந்த 7 ஜனாதிபதிகளால் இதனை செய்ய முடியாமல் போனது. இதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும்.

மக்கள் ஆணை உள்ள ஜனாதிபதிகளாலேயே இதனை செய்ய முடியாவிட்டால், மக்கள் ஆணை இல்லாத ஒரு ஜனாதிபதியால் எப்படி செய்ய முடியும்?

அத்தோடு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தான் நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது.

அந்தக் கட்சிக்கு இதில் உடன்பாடு இல்லை எனும் போது அரசாங்கம் இந்த செயற்பாட்டை எப்படி மேற்கொள்ளும்?
இந்த நிலையில், எமது யோசனைகளும் கோரப்பட்டுள்ளது.

யாரை ஏமாற்ற இதனை செய்ய வேண்டும்? இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக ஆரம்பிக்கும் முன்னர், அரசாங்கத்திற்குள் இணக்கப்பாடு ஏற்பாட வேண்டும்.

மாகாணசபைகள் அனைத்தும் இன்று செயலழந்துள்ளன. இதன் அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கீழ் வந்துள்ளன.

அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனில் முதலில் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், இப்போதைக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கும்போது, மக்களை முட்டாளாக்கும் வகையில்தான் ஜனாதிபதி இந்த செயற்பாட்டை மேற்கொள்கிறார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பொலிஸார் அரசியல் மயமாகியுள்ள நிலையில் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அச்சமான சூழ்நிலை உருவாகும்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது நாட்டுக்கு அச்சமான நிலைமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி பாராளுமன்றின் ஊடாகவே இறுதி தீர்மனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் எமக்கு தமிழ் மக்களுடன் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போதைய நிலையில் பொலிஸார் அரசியல் மயமாகியுள்ளதாக பொதுமக்கள் பாரிய குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

அவ்வாறானதொரு நிலையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது பொருத்தமற்றதாகும். ஏனென்றால் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர் இருப்பார்கள்.

அவர்கள் வெவ்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருப்பார்கள். பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்குகின்ற போது அந்த முதலமைச்சர்களே பொலிஸாரை நிர்வாகம் செய்யும் நிலைமையே காணப்படும்.

தற்போது தேசிய ரீதியில் ஒரு பொலிஸ் கட்டமைப்பே காணப்படுகின்றது. இதன்போதே பொலிஸ் கட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் ஒன்பது மாகாணங்களும் பொலிஸ் அதிகாரத்தை கையாளும்போது நாட்டின் நிலை என்னவாகும் என்ற கேள்வி ஏற்படுகின்றது.

ஆகவே, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதானது அச்சமான நிலையை ஏற்படுத்துகின்றது. எனவே, மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதித்தே இறுதி தீர்மானம் எடுப்பது பொருத்தமானதாகும் என்றார்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும், பறாளாய் வர்த்தமானியை மீளப்பெறவும் கோரி ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்ப முடிவு

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தும் படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.

13வது திருத்தம் தொடர்பில் ரெலோ, புளொட் என்பன தனித்தனியாக யோசனைகளை சமர்ப்பிக்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 கட்சிகளுடனும் கலந்துரையாடி, கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை 10 மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியுள்ளதால், அது தொடர்பில் மட்டும் குறிப்பிடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களுடனும் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜனாதிபதி ரணில் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு சம்பவங்களை பட்டியலிட்டும், பறாளாய் முருகன் கோயில் அரச மரத்தை உரிமை கோரும் முறையற்ற வர்த்தமானி உள்ளிட்ட- தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை அபகரிக்கும் வர்த்தமானிகளை மீளப்பெற வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.