மாகாண கல்வி அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் இருந்து மீட்டெடுக்கும் போராட்டம் தொடரும் – கலாநிதி சர்வேஸ்வரன்

மாகாண பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் எண்ணத்திலிருந்து அரசாங்கம் சற்று பின்வாங்கியுள்ள நிலையில் முழுமையாக அத்திட்டத்தினை கைவிடும் வரை நீதிமன்ற சட்டப் போராட்டம் தொடரும் என முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (12.03.2023) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட கல்வி அதிகாரங்களைச் சட்ட விரோதமான முறையில் மத்திய அரசாங்கம் பறித்ததுக்கு எதிராக நான் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தொடுத்தேன்.

இலங்கை அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் சட்ட விரோதமான முறையில் பறித்துள்ளது. கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகள் சார்ந்து மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மாகாண நியதி சட்டங்களையும் மீறும் வகையில் பல விடயங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக மாகாண கல்வி அமைச்சை எடுத்துக் கொண்டால் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசிய பாடசாலைகள் ஆயுதப் படைகளின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக வரையறுக்கப்பட்டது.

வடக்கு கல்வி அமைச்சில் 19 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக இருந்த நிலையில் மாகாண கல்வி அமைச்சின் கீழே இருந்த மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு 22 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டது.

கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்தின் கீழ் வடக்கில் 51 பாடசாலைகளைத் தேசிய பாடசாலையாக்கும் முயற்சிகள் இடம்பெற்றது.

மாகாண பாடசாலைகளைப் பறிக்கும் முயற்சிக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தின்பால் பயணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உரிய அக்கறை காட்டாத நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தேன்.

கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரச தரப்பு சார்ந்து 16 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டது . வழகானது கடந்த 8 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சகலருக்கும் நீதிமன்றம் ஆணை அனுப்பியது.

இந்த சூழ்நிலையில், அரசாங்கம் தேசிய பாடசாலைகளாக்கும் வேலைத் திட்டத்தினை சற்று பின்வாங்கியதாக தெரியவரும் நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் அதனை ஒப்புக் கொள்ளும் வரை சட்டப் போராட்டம் தொடரும்.

ஆகவே, வழக்கின் முடிவுகள் ஏதுவாக இருந்தாலும் மாகாண அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பறித்தல் ,தமக்கு ஏற்ற வகையில் வியாக்கியானம் செய்தல், சில நிர்வாக நடைமுறைகள் ஊடாக பறித்தல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் தகுந்த பதிலை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது

கல்வி அமைச்சிற்குள் நுழைந்த ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டளர்கள் இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததுடன், சற்று நேரத்தில் கல்வி அமைச்சிற்குள் நுழைந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னரே பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் கல்வி அமைச்சிற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டக்காரர்களை வௌியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட பிக்கு மாணவர் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 பிக்கு மாணவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனாவால் பூர்த்தி

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி வந்துள்ளது என கூறியுள்ளார்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் கல்வியின் தரமும் மேம்பட வேண்டும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கான நடைமுறை திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை புகுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மாகாண கல்வி அமைச்சு, திணைக்கத்தினால் போலியான விசாரணைகள் முன்னெடுப்பு – ஆசியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணை செய்து முடிக்க வட மாகாண கல்வி அமைச்சும் வட மாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடிக் கும்பல்களை வைத்துக்கொண்டு வட மாகாண கல்வியை முன்னேற்ற முடியாது. பெற்றோர், பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் வசதிகள் சேவைக்கட்டணம் தவிர வேறெந்த நிதியோ அன்பளிப்போ பாடசாலையால் வசூலிக்க முடியாதென சுற்றுநிரூபம் இருக்கும்போது அதையும் மீறி நிதி வசூலிக்கப்படும்போது அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வட மாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வட மாகாண ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டதற்கிணங்க 100 பக்க முறைப்பாடொன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். ஆனால், ஒரு வருடமாகியும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் வட மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி, வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதன் பின்னராகவே விசாரணைகளை போலியான வகையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசில் விண்ணப்பங்களுக்கான கால எல்லை நீடிப்பு

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி ஏற்கனவே 2022-12-23 என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெற்றோரும் மாணவர்களும் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து 2022-12-30 ஆம் திகதிக்கு முன்னர் தாம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலையின் அதிபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

மேலும் 2022-12-23 ஆம் திகதி தொடக்கம் 2023-01-02 ஆம் திகதி வரையான காலப்பகுதி பாடசாலை விடுமுறை ஆகையால் இதற்காக பாடசாலை அலுவலகங்களை திறந்து வைக்கும்படியும் மாணவர்களால் கொண்டுவரப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி நிதியம் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 2022-12-30 வரை நீடிக்கப்பட்டுள்ளதே தவிர, விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் செயன்முறைக்காக நியமிக்கப்பட்ட கால வரையறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி நிதியம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி  கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன.

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக    நுலகர் சிவபாக்கியநாதன் கேதீஸ்வரன், சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன், சோமாஸ்கந்தா கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் புத்தூர் நுலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் புதுவை நாதம் நூலை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வெளியிட்டு வைக்க நூலின் முதற் பிரதியினை சித்த சுதேச வைத்தியர் இளையவன் செல்லத்துரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலுக்கான நயவுரையினை ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி ஆனந்தரட்ணம் ஆற்றியிருந்தார்.

இத் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதீதிகளின் உரைகள், அரிச்சுவடி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் என பலதரப்பட்ட தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் உள்ளுராட்சி நூலக வாரத்தினை முன்னிட்டு பிரதேச சபையின் நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

பிரதேசத்தில் சிறந்த வீட்டு நூலகத்தினை முகாமை செய்வதற்கான கௌரவம் ப. கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டதுடன்  சிறந்த வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
மேலும், நூலகங்களுக்கு இடையில் தேசிய நூலக மற்றும் சுவடிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுப் போட்டியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகம் நாடாளாவிய ரீதியில் 3 ஆம் இடத்தைப் பெற்றது.

இவ் விருதினை கடந்த வாரம் ஜயவர்த்தன பல்கலைக்கழக துணைவேந்தாரிடம் நூலகர் திருமதி கர்ஞனமாலா உதயகுமாரன் பெற்றுக்கொண்டார். அவ் விருதினை இந் நிகழ்வில் வைத்து பிரதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் சபையில் காட்சிப்படுத்துவதற்காக நூலகரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியாக கல்வி கற்கக்கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை – சுசில்

2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வியாண்டில் ஆரம்பப் பிரிவில் முதலாம் தவணைப் பரீட்சைகளை நடத்தாமல் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு மதிப்பெண்  அடிப்படையில் மாணவர்  மதிப்பீட்டு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்க கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக மேலதிக பயிற்சி,கல்வி  வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான மாற்றங்கள் செய்து வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். விடுமுறை நாட்களை குறைத்து அதிகளவில் வேலை செய்வதன் மூலம் அனைத்துப் பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மீளமைக்கப்படும்.

தேவையான சீருடைகள், பாடப்புத்தகங்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்குவது சிரமமானதாக இருந்தாலும்  குறித்த நேரத்தில் அவை மாணவர்களுக்கு  வழங்கப்படும். மேலும் மாணவர்கள் மத்தியில்  ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சீனாவினால் பாடசாலை சீருடைகள் நன்கொடை

பாடசாலை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சீருடைப் பொருட்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டில் முழு நாட்டின் 70% தேவையை பூர்த்தி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1வது தொகுதி முடித்த பொருட்கள் ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

“வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக ஆசியர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும் இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என்றனர்.

இரு பிள்ளைகளுக்கு ரூ.40 ஆயிரம் தேவை – ஹர்ஷ டி சில்வா

முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எங்களது எச்சரிக்கைகளைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாடு இந்நிலைமைக்கு வந்திருக்காது எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2020ஆம் ஆண்டு முதல் நாம் கூறியவற்றை இந்த அரசாங்கம் கேட்கவில்லை. அரசாங்கம் பயணிக்கும் பாதை சரியில்லை. இந்த முறையில் பயணித்தால் நாடு வீழும், பணவீக்கம் ஏற்படும், பொருள்களின் விலைகள் அதிகரிக்கும், வட்டி வீதங்கள் அதிகரிக்குமென எச்சரித்தோம். ஆனால், நாம் கூறிய எதனையும் கேட்கவில்லை. நாம் இவ்வாறு கூறும்போத சிரித்தார்கள். அரசாங்கம் திமிர் பிடித்திருந்ததால் சுயவிமர்சனத்தைக்கூட செய்யவில்லை. இறுதியில் நாம் எச்சரித்த அனைத்தும் நடந்தது.

நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாம் கூறியதை கேட்காத மொட்டுக் கட்சி அரசாங்கம், தமது கடந்தக் கால பயணம் தவறு புதியப் பாதையில் பயணிக்க வேண்டும். புதியப் பாதை சிரமமானதாக இருக்கும் என இப்போது கூறுகிறது. இவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. லீகுவான் வந்தாலும் இந்நாட்டைக் கட்டி யெழுப்ப முடியாது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் ஒன்றிணைய வேண்டுமென கேட்கிறார்கள் – என்றார்.