மாகாண கல்வி அமைச்சு, திணைக்கத்தினால் போலியான விசாரணைகள் முன்னெடுப்பு – ஆசியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணை செய்து முடிக்க வட மாகாண கல்வி அமைச்சும் வட மாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடிக் கும்பல்களை வைத்துக்கொண்டு வட மாகாண கல்வியை முன்னேற்ற முடியாது. பெற்றோர், பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் வசதிகள் சேவைக்கட்டணம் தவிர வேறெந்த நிதியோ அன்பளிப்போ பாடசாலையால் வசூலிக்க முடியாதென சுற்றுநிரூபம் இருக்கும்போது அதையும் மீறி நிதி வசூலிக்கப்படும்போது அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வட மாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வட மாகாண ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டதற்கிணங்க 100 பக்க முறைப்பாடொன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். ஆனால், ஒரு வருடமாகியும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் வட மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி, வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதன் பின்னராகவே விசாரணைகளை போலியான வகையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசில் விண்ணப்பங்களுக்கான கால எல்லை நீடிப்பு

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி ஏற்கனவே 2022-12-23 என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெற்றோரும் மாணவர்களும் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து 2022-12-30 ஆம் திகதிக்கு முன்னர் தாம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலையின் அதிபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

மேலும் 2022-12-23 ஆம் திகதி தொடக்கம் 2023-01-02 ஆம் திகதி வரையான காலப்பகுதி பாடசாலை விடுமுறை ஆகையால் இதற்காக பாடசாலை அலுவலகங்களை திறந்து வைக்கும்படியும் மாணவர்களால் கொண்டுவரப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி நிதியம் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 2022-12-30 வரை நீடிக்கப்பட்டுள்ளதே தவிர, விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் செயன்முறைக்காக நியமிக்கப்பட்ட கால வரையறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி நிதியம் தெரிவித்துள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி  கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன.

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக    நுலகர் சிவபாக்கியநாதன் கேதீஸ்வரன், சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன், சோமாஸ்கந்தா கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் புத்தூர் நுலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் புதுவை நாதம் நூலை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வெளியிட்டு வைக்க நூலின் முதற் பிரதியினை சித்த சுதேச வைத்தியர் இளையவன் செல்லத்துரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலுக்கான நயவுரையினை ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி ஆனந்தரட்ணம் ஆற்றியிருந்தார்.

இத் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதீதிகளின் உரைகள், அரிச்சுவடி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் என பலதரப்பட்ட தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் உள்ளுராட்சி நூலக வாரத்தினை முன்னிட்டு பிரதேச சபையின் நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

பிரதேசத்தில் சிறந்த வீட்டு நூலகத்தினை முகாமை செய்வதற்கான கௌரவம் ப. கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டதுடன்  சிறந்த வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
மேலும், நூலகங்களுக்கு இடையில் தேசிய நூலக மற்றும் சுவடிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுப் போட்டியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகம் நாடாளாவிய ரீதியில் 3 ஆம் இடத்தைப் பெற்றது.

இவ் விருதினை கடந்த வாரம் ஜயவர்த்தன பல்கலைக்கழக துணைவேந்தாரிடம் நூலகர் திருமதி கர்ஞனமாலா உதயகுமாரன் பெற்றுக்கொண்டார். அவ் விருதினை இந் நிகழ்வில் வைத்து பிரதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் சபையில் காட்சிப்படுத்துவதற்காக நூலகரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியாக கல்வி கற்கக்கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை – சுசில்

2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வியாண்டில் ஆரம்பப் பிரிவில் முதலாம் தவணைப் பரீட்சைகளை நடத்தாமல் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு மதிப்பெண்  அடிப்படையில் மாணவர்  மதிப்பீட்டு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்க கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக மேலதிக பயிற்சி,கல்வி  வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான மாற்றங்கள் செய்து வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். விடுமுறை நாட்களை குறைத்து அதிகளவில் வேலை செய்வதன் மூலம் அனைத்துப் பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மீளமைக்கப்படும்.

தேவையான சீருடைகள், பாடப்புத்தகங்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்குவது சிரமமானதாக இருந்தாலும்  குறித்த நேரத்தில் அவை மாணவர்களுக்கு  வழங்கப்படும். மேலும் மாணவர்கள் மத்தியில்  ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சீனாவினால் பாடசாலை சீருடைகள் நன்கொடை

பாடசாலை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சீருடைப் பொருட்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டில் முழு நாட்டின் 70% தேவையை பூர்த்தி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1வது தொகுதி முடித்த பொருட்கள் ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

“வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக ஆசியர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும் இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என்றனர்.

இரு பிள்ளைகளுக்கு ரூ.40 ஆயிரம் தேவை – ஹர்ஷ டி சில்வா

முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எங்களது எச்சரிக்கைகளைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாடு இந்நிலைமைக்கு வந்திருக்காது எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2020ஆம் ஆண்டு முதல் நாம் கூறியவற்றை இந்த அரசாங்கம் கேட்கவில்லை. அரசாங்கம் பயணிக்கும் பாதை சரியில்லை. இந்த முறையில் பயணித்தால் நாடு வீழும், பணவீக்கம் ஏற்படும், பொருள்களின் விலைகள் அதிகரிக்கும், வட்டி வீதங்கள் அதிகரிக்குமென எச்சரித்தோம். ஆனால், நாம் கூறிய எதனையும் கேட்கவில்லை. நாம் இவ்வாறு கூறும்போத சிரித்தார்கள். அரசாங்கம் திமிர் பிடித்திருந்ததால் சுயவிமர்சனத்தைக்கூட செய்யவில்லை. இறுதியில் நாம் எச்சரித்த அனைத்தும் நடந்தது.

நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாம் கூறியதை கேட்காத மொட்டுக் கட்சி அரசாங்கம், தமது கடந்தக் கால பயணம் தவறு புதியப் பாதையில் பயணிக்க வேண்டும். புதியப் பாதை சிரமமானதாக இருக்கும் என இப்போது கூறுகிறது. இவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. லீகுவான் வந்தாலும் இந்நாட்டைக் கட்டி யெழுப்ப முடியாது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் ஒன்றிணைய வேண்டுமென கேட்கிறார்கள் – என்றார்.

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் – ஜனா எம்.பி

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டின் கல்வித்துறை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் பெருமைப்படக்கூடியதாக அமைந்திருந்தது. கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர்கள் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சியடைந்துள்ளோமா என வினவுகிறேன்.சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியல் காலத்தில் வலு வேறாக்கல் கொள்கை முறையாக கடைப்பிடிக்கப்படு வந்தது.72 ஆம் ஆண்டு குடியரசான பின்னர் கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் அரசாங்க கட்சிகளின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள்நுழையத் தொடங்கியது. அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறல் கல்வித் துறையில் நடக்கின்றது.

கல்வியமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் தலைவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பின் அடிப்படையிலோ கல்வித் தகைமையின் அடிப்படையிலோ இன விகிதாசார அடிப்படையிலும் அல்ல. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். வட கிழக்கின் வாழ் கல்வித் திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. வட கிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தக் கூடியதாக மட்டுமே உள்ளது. பதவியிலுள்ளவர் அடுத்த பதவி உயர்வை எடுப்பதற்காக ஆளும் கட்சி அரசியல்வாதியின் காலில் விழுந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும். இப்படியான ஒரு கல்வியினால் எப்படி உயர்ந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கபடும் என்பதை வரவேற்கிறேன். தேசிய கல்வி நிறுவனம் 30 வருடங்களாக இயங்குகின்றது. தேசிய கல்வி நிறுவனத்தை வெளிநாடுகளில் காணப்படுவது போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பல்கலைக்கழகமாக இணைத்துக் கொள்ள வேண்டும். தேசிய கல்வி நிறுவனத்தில் பல கலாநிதிப் பட்டங்களை முடித்தவர்களும், பாரிய கட்டிடங்களையும் இதர வசதிகளையும் கொண்டிருப்பதால் இலகுவாக பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு பல்கலைக்கழமாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய கல்வி நிறுவகத்துக்கு 4000 மாணவர்களுக்குப் பதிலாக 8000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆசிரிய மாணவருக்கு 5000 ரூபா தான் ஒதுக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்பில் குறித்த தொகை போதாது. அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். ஜெய்க்கா திட்டத்தினூடாக விசேட தேவையுடையவர்களுக்கான கல்வி பயிலுநர்களுக்கான விண்ணப்பத்தை கோரி இருந்தார்கள். கல்வி அமைச்சுக்கு 09 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாகாண கல்வித்திணைக்களுக்கு 22 ஆம் திகதி நவம்பர் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விண்ணப்ப முடிவுத் திகதி 23 ஆம் திகதி ஒரு மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 23 ஆம் திகதி காலை 10 மணிக்கே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது . 03 மணித்தியால காலப்பகுதியினுள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? இது முழு நாட்டிலும் நடைபெற்றுளது. இதனூடாக அவர்கள் ஜெய்க்காவின் குறித்த கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது என தெரிவித்தார்.

தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது – இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்

தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால கல்வி வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டோம்.

2021 க.பொ.த உயர்தர பெறுபேறுகள், 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் கணிசமான மாற்றத்தை தந்துள்ளன. ஒப்பீட்டளவில் நாம் மீண்டெழ ஆரம்பித்துள்ளோம்.

இதனை நாம் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிட முடியாது. இதற்காக பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் அக்கறையுடனும் தொழிற்பட வேண்டும்.

கடந்த 2021 க.பொ.த உயர்தர பெறுபேற்றுக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, அதிபர்களின் விடாமுயற்சி, பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பன கணிசமான பங்கு வகித்தன. அதனாலேயே முதல் மூன்று இடங்களில் தமிழர் செறிந்து வாழும் மாகாணங்கள் முதல் நிலையில் வந்தன.

அதேபோன்று 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேற்றுக்கும் ஆசிரியர்களின் அளப்பரிய சேவை, அதிபர்களின் சீரிய மனப்பாங்கு, பெற்றோரின் வகிபாகம் என்பன காரணமாக அமைகின்றன.

தமிழர் செறிந்து வாழும் மாகாணங்களில் மாணவர்களுக்கான அரச பொதுப் பரீட்சைகளில் மாணவர்கள் எடுத்துள்ள பெறுபேற்று உயர்ச்சி எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை நாம் தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும். இன்னும் மேலெழ வழி தேட வேண்டும். எத்தகைய நெருக்கடிகள், தலையீடுகள், கலாசார பிறழ்வுகள், போதை கலாசாரங்கள், திணிப்புகள் எது வந்தாலும் நாம் அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.

கல்வி என்பது எமது சொத்து. அதனை நாம் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே எமது வாழ்வின் ஆதாரம். அதற்காக அதிபர்கள் தாம் பொறுப்பேற்றுள்ள கல்விக் காப்பகத்தின் கண்ணியத்தையும், அங்கு காக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அன்போடு அரவணைப்போடு அனைவரையும் ஒன்றிணைத்து, ‘எமது இலக்கு ஒன்றே’ என்ற வாசகத்தை மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

ஆயிரம் சுமைகள், துன்பங்கள். பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எம் தேசத்துக் குழந்தைகள் என்ற உணர்வோடு ஆசிரியர்களான நீங்கள் ஆற்றும் பணியை அனைவரும் மதிக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்!

இன்னும் நாம் எமது கடந்த கால இலக்குகளை அடையவில்லை. அவை அடையப்பட வேண்டியவை. அதுவும் எமது காலத்தில் அவை அடையப்பட வேண்டும். அதற்காக எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றுவோம்.

இறைவனின் ஆசியும், குழந்தைகளின் பெறுபேற்று வெற்றி, அவர்களின் உயர்ச்சி, அவர்கள் பெறும் பதவிகள், பட்டங்கள் என்பன உங்களுக்கு அணிகலன்களாக அமையும் என்பது உண்மை. உங்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

நாம் பல்லாண்டு காலம் கொடிய யுத்தம், அனர்த்தம் என்பவற்றை கடந்து வந்தவர்கள். அந்த காலங்களிலும் நாம் கல்வியை கைவிட்டதில்லை. அதற்காக அக்காலத்தில் யாரும் தடையாக இருந்ததும் இல்லை.

இன்று தடைகளும் திணிப்புகளும் எம்மை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. தலையீடுகள் பல எமது எதிர்கால குழந்தைகளில் கல்வியை சீரழிக்க முனைகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் இடம்கொடுக்க முடியாது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நீங்கள் மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Posted in Uncategorized

வேறு ஆடைகளில் பாடசாலைக்கு சமுகமளித்த ஆசிரியைகள் தொடர்பில் விசாரணை

பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அறிக்கையை வழங்குமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் பணியின் கண்ணியத்தை காக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஆசிரியர்கள் தாம் விரும்பிய ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தர முடியாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized