உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கவனிக்காது உலகம் சுற்றும் வாலிபனாக ரணில் : மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் – ஜனா எம். பி

உள்நாட்டிலேயே பல இருக்கும்போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதாக காட்டி காலத்தை கடத்துகின்றார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

11ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கை அனுசரணை கொடுத்து இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுக்கு பொறுப்பு கூறுவது தொடர்பாக பிரேரணை அங்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தையும், சர்வதேசத்தையும் தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரதி உயரஸ்தானிகர் ஒரு எழுத்து மூலமாக அறிக்கையை கொடுத்திருக்கின்றார்.

அந்த அறிக்கையில், இலங்கையிலே நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஒரு நியாயமான விசாரணை வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும், வடகிழக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு சர்வதேச அங்கீகரிக்க கூடிய சட்ட திட்டத்தை கொண்டு வரும் வரை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்கு மாறாக இந்தியாவின் வதிவிட பிரதிநிதி இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு இங்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக விவாதம் வர இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகள் அனைத்தும் இந்த நாட்டில் இருக்கும்போது அதை விடுத்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றது, உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டம் இருக்கின்றது, வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பு திட்டம் இருக்கின்றது, பல பிரச்சனைகள் இந்த நாட்டிலே இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் அனைத்துமே உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகம் சுற்றும் வாலிபனாக ஒவ்வொரு நாடாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றார்.

பிரித்தானியா செல்கின்றார்,பிரான்ஸ் செல்கின்றார்,ஜப்பான் செல்கின்றார், சிங்கப்பூர் செல்கின்றார் தற்போது கியூபா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல இருக்கின்றார். உண்மையில் உள்நாட்டிலேயே இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதுமாக காலத்தை கடத்துகின்றார்.

தற்போதைய உயிர்த்த ஞாயிறு பிரச்சனை தொடர்பாக மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இது விடயமாக விசாரித்து அந்த அறிக்கையை பாராளுமன்றத்திலே சமர்ப்பிப்பதாக இருக்கின்றார். ஆனால் பாராளுமன்றத்திலே இன்று இருக்கும் பொதுஜன பெரமுன கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி நிற்கும் போது ஜனாதிபதி மாத்திரம் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமான சேனல் 4 வெளியிட்ட வீடியோ சம்பந்தமாக விசாரித்து ஒரு அறிக்கையை தயாரிப்பது என்பது இந்த நாட்டு மக்களை மாத்திரம் அல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாக தன்னுடைய வழமையான பாணியிலேயே ஏமாற்றும் செயலாகவே இவர் செய்து கொண்டிருக்கின்றார்.

தென்னிலங்கையில் இருந்து விமல் வீரவன்ச குழுவினரும் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தமிழ் மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் குற்றம் சாட்டுவது என்பது உண்மையிலேயே நகைப்புக்குரிய ஒரு விடயம். விமல் வீரவன்சவை பொருத்தமட்டில் அவருடைய உடம்பிலே ஓடும் இரத்தம் இன வெறியுடன் சம்பந்தப்பட்ட இரத்தம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த இன துவேசத்தை இன வெறியை வைத்துக் கொண்டுதான் தன்னுடைய அரசியலை அவர் தக்கவைத்துக் கொள்கின்றார். எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் இந்த நிலையில் அந்த தேர்தலில் கூட தானோ அல்லது தான் சார்ந்தவர்களோ வெல்ல வேண்டுமாக இருந்தால் இப்படியான இன துவேச இன வெறி கொண்ட கருத்துக்களை விதைப்பது சர்வசாதாரண விடயம்.

அந்த வகையில் அவர் இந்த கருத்துக்களை சொல்லியிருப்பது மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே இருக்கும் சில தமிழ் பிரதிநிதிகள் தமிழ் கட்சிகள் கூட இந்த பிரச்சினையை ஒரு அரசியல் ரீதியாக அணுகப் பார்க்கின்றார்கள். உண்மையில் இந்த விடயத்தை உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் என்பது 250 க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட ஒரு சம்பவம் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்ட ஒரு சம்பவம் அது மாத்திரமல்ல இலங்கையின் நிலைப்பாட்டை வெளி உலகத்திற்கு உணர்த்திய சம்பவம்.

ஏனென்றால் கிட்டத்தட்ட 40 வெளிநாட்டவர்கள் உயிர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். அந்த வகையிலே இந்த சம்பவத்தை அரசியலுடனோ, தமிழ் தேசியத்துடனோ, தமிழ் மக்களுடனோ இணைத்து பார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக இன்று இரண்டு அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது. அதில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன். இந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை மாத்திரமல்ல நாட்டில் உள்ள நிர்வாக சீர்கேடு அது மாத்திரமல்லாமல் அமைச்சுகளில் உள்ள ஊழல்கள் சம்பந்தமாக நிர்வாகத்தை ஒழுங்காக கொண்டு நடத்த முடியாமல் இன்று பலரும் பல விடயங்களை முன்வைத்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என்கின்ற ஒரு பெரிய பிரளயமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த நாட்டில்.

அந்த வகையில் நேற்றைக்கு முதல் நாள் மதியம் இருந்து புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தத்திலே ஈடுபட்டிருக்கின்றார்கள.; இதன் காரணமாக புகையிரதத்திலே நெருசல் மாத்திரம் அல்ல இருப்பதற்கு இடமில்லாமல் புகையிரதத்துக்கு மேல் இருந்து பயணம் செய்த ஒரு பல்கலைக்கழக மாணவன் தலை துண்டிக்கப்பட்டு இறந்த ஒரு சம்பவம் என்பது இந்த நாட்டின் ஒரு சோகமான நிர்வாக கேட்டுன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது.

அந்த வகையில் அரச திணைக்கள ஊழியர்கள் அமைச்சையும் அமைச்சின் மேலதிகாரிகளையும் குற்றம் சாட்டுவதுடன் அமைச்சர்கள் ஊழியர்களை குற்றம் சாட்டும் ஒரு நிலை மாறி மாறி குற்றச்சாட்டு அளவுக்கு நிலை இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இந்த மரணத்திற்கு போக்குவரத்து அமைச்சு முழு பொறுப்பையும் எடுத்து உரிய விசாரணையை முன்னெடுத்து இந்த உயிர் இழப்பிற்கு ஒரு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆக்ரோசத்துடன் இந்த அமைச்சை கேட்டுக் கொள்கின்றேன்.

அரசாங்கம் குற்றம் சாட்டுவது அரசாங்கத்தை மாற்றுவதற்காக எதிரணிகள் எதிர்க்கட்சிகள் பின்புலத்தில் இருந்து இயக்கிக் கொண்டு இங்கே போராட்டங்கள் நடைபெறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகின்றது இதே போன்று தான் 2021 ஆம் ஆண்டுக்கு பின்பு இந்த பொருளாதார நெருக்கடி வந்ததன் பின்பு அரகல என்னும் போராட்டமும் நடைபெற்று இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படும் போது போராட்டங்களை செய்ய எத்தனிக்கும்போது அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் தலைமையில் இதனை திணிப்பது என்பது ஒரு புதிய விடயம் அல்ல.

அந்த வகையில் மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கடந்த வருடம் அரகலயின் மூலமாக அறிந்திருக்கின்றது தொடர்ச்சியாக இந்த அடக்குமுறை நீடித்தால் இது ஒரு பெரியதொரு போராட்டமாக வெடிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையினை பூர்த்தி செய்ய நடவடிக்கை – ஜனா எம்.பி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையாகயிருந்த இருதய சிகிச்சைப்பிரிவிற்கான இருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று(02.09.2023) அவரது மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி குறித்த இயந்திரத்தினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சரின் செயலாளரும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்று வேறுமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதனை பெறுவதற்கு பல்வேறு பிரயனத்தனங்கள் செய்து கொண்டுவரப்படாத நிலையில் இந்த இயந்திரத்தினை கொண்டுவர அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மாகாண அதிகாரங்களைப் பரவலாக்க நிபுணர் குழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் ஜனாதிபதியின் தந்திரம்: ஜனா எம்.பி

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மாத்திரமல்ல உலகத் தமிழர்கள் மத்தியிலும் இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம். இந்தப் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இலங்கை அரசியலமைப்பிலிருக்கும் இந்தச் சட்டம் இன்னும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் மாறி மாறி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும், தலைவர்களும் இலங்கையின் அரசியலமைப்பையே மீறிக் கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறுகின்றார். உண்மையிலேயே அன்று 1987ல் 6 இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்திலே தான் இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட அக்கட்சியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்கப் பிரதிநிதிகளை மாத்திரம் வைத்தே 6 இல் 5 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்குக் கொண்டுபோக வேண்டிய தேவை இருக்காது.

ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சிங்கள மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக இருக்கும் அரசியல்வாதிகளைத் தட்டியெழுப்பி இனங்களுக்கடையிலே மேதலை, முறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்;கும் சூழ்நிலைக்கு ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார் என்றே எண்ணத் தோணுகின்றது.

அதுமாத்திரமல்லாமல் தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் கூறுகின்றார்கள். இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கான சட்டம் அவர்களால் பாராளுமன்றத்திலே கொண்டுவரட்டும் அதற்குப் பின்னர் இந்த நாடு எந்த நிலைமைக்குச் செல்கின்றது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள்.

இந்தப் 13வது திருத்தச்சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதி அவர்கள் நீண்ட காலமாக இழுத்தடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களை ஆளக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும். ஆனால் இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாது மாகாணசபைகளுக்கு நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முயற்சிக்கின்றார். அதற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சில கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

மாகாணசபைகளுக்கு நிபுனர் குழுவை அமைப்பதென்பது மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்தரமே ஒழிய இதன் மூலம் வேறு எதுவுமே சாதிக்க முடியாது. மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த மாகாண நிபுனர் குழு அமைப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பது 13வது திருத்தச் சட்டத்திலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி, மத்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதி, அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி என மூவர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலருக்கு வரலாறு தெரியாது.

1988ம் ஆண்டு இறுதியிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையிலே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா அவர்களை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாசா அவர்கள் நியமித்திருந்தார்கள். அவரின் கீழே 3000 மாகாண பொலிசார்களை நியமிப்பதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு 13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

அந்த வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இன்றும் குருந்தூர் மலையிலே பெரிய களேபரம் நடக்க இருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் அங்கிருக்கின்ற இந்துக் கோவிலில் பூசை செய்ய விடாமல் தடுக்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கின்ற இந்துக்கள் இன்று அந்தக் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்ய இருக்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காக பௌத்தர்கள் செல்கிறார்கள். உதய கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளும் செல்கின்றார்கள். இவர்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவே நாங்கள் எண்ணுகின்றோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மாத்திரமல்லாமல், புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு இந்த நாடுஇஸ்திரமான நாடாக இருப்பதற்குமான வழியினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்படல் வேண்டும் – ஜனா எம்.பி

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னிலங்கையில் சரத் வீரசேகர, உதயகம்பன்பில, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை,

மாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தினை முழுமையான அமுல்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்ல முடியும்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம்.

அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை நாங்கள் விரும்புகின்றோம் என்ற வகையில் இந்திய பிரதமர் தனது பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஜனாதிபதி மகாநாடு ஒன்றை நடாத்தியுள்ளார். அதன் ஊடாக அமைச்சரவை உபகுழுவினை நியமித்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது அரசியல் படுகொலை துரையப்பா; அதை தூண்டியது அமிர்தலிங்கம்: ஜனா எம்.பி

அல்பிரட் துரையப்பாவே முதலாவது அரசியல் படுகொலையாகும். அவரை சுட்டுக்கொன்றது பிரபாகரன். அதனை தூண்டியது அமிர்தலிங்கம். யாழ்ப்பாணத்தில் மேடையில் ஒருமுறை அமிர்தலிங்கம் சொன்னார், துரையப்பாவிற்கு இயற்கை மரணம் நிகழாது என்றார். அதை தொடர்ந்து அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. பிரபாகரன் கடைசி அரசியல் படுகொலையென்பது துரதிஸ்டமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூற வரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி – நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது, இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.

அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.

1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.

அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

அன்று 13 திருத்த சட்டத்தை ஏற்று இருந்தால் இன்று அது பேசும் பொருளாக இருந்திருக்காது. இந்த 1987 மாகாணசபை மு​றைமை வந்தது தொடக்கம் 2009 மே 18 வரை ஜே. ஆர் ஜெயவத்தனாவின் கையை முறுக்கி பலாத்காரமாக அந்த ஓப்பந்தத்தில் கையொழுத்து இட வைத்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்த நாட்டிலே எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு கிழக்கிலே முதலாவது அரசியல் படுகொலை முன்னாள் யாழ். நகர மேஜர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அதை தூண்டியது அண்ணன் அமிர்தலிங்கம் அவர் யாழில் மேடை ஒன்றில் பேசும் போது அல்பிரட் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் கிடையாது என பேசியிருந்தார் அதை தொடர்ந்து தான் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. ஆனால் நாட்டிலே இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரதிஸ்டம்.

13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துமாறு கேட்கின்றோம். ஆனால் இறுதி தீர்வு மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் 13 இல் உள்ளடக்கப்படவில்லை. அது மேலும் செல்ல வேண்டும். எங்களை நாங்களே எமது பிரதேசத்தில் ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும். அதுதான் இறுதி இலக்கு. அதற்காகத்தான் அகிம்சை ரீதியில் போராடினோம். அது கிடைக்காததால் ஆயுதரீதியில் தனிநாட்டுக்காக போராடினோம். இன்று 13உம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

இந்திய பிரதமர் நரோந்திர மோடியை சந்தித்த ஜனாதிபதி ரணிலுக்கு நல்ல குளுசை கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்க வேண்டிய கடமையம் தேவையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. காரணம் இந்த ஆயுத போராட்டத்திற்கு தார்மீக ஆதரவும் அனுசரனையும் பயிற்சிகளையும் தந்தது இந்திய அரசாங்கம்.

அதேபோன்று 2009 ஆயுத போராட்டத்தை மௌனிக்க வைப்பதற்கு இந்திய அரசு முக்கிய காரணம். இலங்கை இந்திய சர்வதேச ஓப்பந்தத்தில் இந்தியா கையொழுத்து இட்டுள்ளது. அவர்களை நம்பிதான் நாங்கள் எல்லாம் ஆயுதங்களை ஒப்படைத்து இந்த நாட்டிலே அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளோம். எனவே இந்தியாவுக்கு கடமை இருக்கின்றது.

அவர்கள் ரணிலுக்கு நல்ல ஆலோசனை கூறியுள்ளார்கள் என நினைக்கிறேன். கடந்த புதன்கிழமை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் சந்தித்தபோது, 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துகிறேன், ஆனால் பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என்றார். நாம் அதை நிராகரித்தோம்.

பொலிஸ் அதிகாரத்தை தர மாட்டேன் என சொல்ல ரணிலுக்கு மாத்திரமல்ல, யாருக்கும் கிடையாது. ஏனெனில், இலங்கை அரசியலமைப்பில் அது உள்ளது. அரசியலமைப்பை மீற அவருக்கும் அதிகாரமில்லை.

ஜனாதிபதி 26ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசர சந்திப்பின் அர்த்தத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கை அரசு வடகிழக்கல் மாத்திரமல்ல தெற்கில் 1971 ஆம் ஆண்டும் 1988 இரண்டு தடவை ஜே.வி.பி ஆயுத கிளர்ச்சியை சந்தித்தது. அந்த கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியா உதவிகரம் நீட்டியதுடன் வடகிழக்கில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவிகரம் கொடுத்தது மாத்திரமல்ல தற்போதைய பொருளாதார ரீதியாக அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்ட போது முதல் முதலாக உதவிகரம் நீட்டியது.

சர்வதேச நாணய நிதியம் கூட இன்று 2.9 பில்லியன் கடன்களை நீண்டகால சலுகையில் கொடுக்க இருக்கின்றது. ஆனால் இந்தியா ஒரு வருடத்துக்குள் 4 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கின்றது. அப்படிச் செய்த நாடு இந்தியா.

வடகிழக்கு தமிழர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும் அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என ஜனாதிபதி ரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பல இனவாதிகளை கண்டிருக்கின்றோம் சிறில் மத்தியூஸ், ஆர்.எம்.பி. ராஜரட்ண, ஆர்.எம். சேனநாயக்கா போன்றவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு ஆளுக்குள் செலுத்தியதை போன்று இன்று சரத்வீரசேகர என்பவர் ஒரு இனவாதியாக தமிழின துரோகியாக கருத்துக்களை கூறிவருகின்றார்.

எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே கருத்தை கூற விட்டால் அந்த ஒற்றுமையின் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவர்கள் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டாம் என்றார்.

வடக்கு, கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் – ஜனா எம்.பி

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ம் ஆண்டு முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும்  திட்டங்களை செய்து வருகின்றனா் என வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி சனிக்கிழமை (24) அனுஸ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர்  உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை போராட்டத்திலே  பல நாட்டகள் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடுக்கள் நிறைந்த நாளாக இருக்கின்றது.

அந்த நாட்களின் ஒரு நாளாகவே 19 யூன் 1990 ம் ஆண்டு விடுதலைப் போரட்ட பாதையிலே ஒரு கறுப்பு புள்ளி விழுந்த நாளாகும்.

தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல ஆயுத போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து நாங்கள் தமிழினம் இரண்டாம் தர பிரஜைகளாக இந்த நாட்டிலே அழைக்கப்பட்டோம் .

இவ்வாறு தனி சிங்களசட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட 1957, 1958, 1978, போன்ற கலவரங்களை தொடர்ந்து மிகவும் மோசமாக83 கலவரத்தை உருவாக்கி கப்பல் மூலம் வட கிழக்கிற்கு சொந்த நாட்டிலே அகதிகளை அனுப்பிய வரலாறு ஆகும்.

இவ்வாறு தமிழர்கள் மீது நடந்தேறிய இனழிப்பிற்கு எதிராக அகிம்சை மூலமாக போரடிய எமது தலைவர்கள் அதில் நம்பிக்கையிழந்து உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் ஆயுத போராட்டத்திற்குள் தள்ளப்பட்டோம் அதனால் 1969 ஆயுத போராட்டம் முதல் முதல் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் அதில் பிரபாகரன் உட்பட போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் இருந்தார்கள்.

இந்த நிலையில் 83 கலவரத்தை அடுத்து ஈழவிடுதலை போராட்டம் ஒரு வித்தியாசமான பாதைக்குள் சென்றது. முன்னணியில் 5 போராட்ட இயக்கங்கள் இருந்தது அப்போது அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் எமது இலக்கை அடையமுடியும் என 1984 ம் ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணி என்று ஈரோஸ், ரொலே, ஈபிஆர்எல்எப். என மூன்றும் ரி.என்.எல்.எப். உருவாகியது பின்னர் விடுதலைப் புலிகளும் அதில் இணைந்தனர் என்பது வரலாறுகள்.

ஆனால் விடுதலைப் புலிகள் மாத்திரம் வடகிழக்கிலே இந்த போராட்ட பாதையில் நின்று இருந்தாலும் 2009 மே 18 உடன் இந்த ஆயத போராட்டம் முற்று முழுதாக மௌனிக்கப்பட்டது இந்த போரட்டம் மௌனிக்கப்படும் முன்னர் பல தலைவர்களை இழந்திருக்கின்றோம் அதில் போரட்ட தலைவர்கள் மாத்திரமல்ல மிதவாத கட்சியான தழிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசு கட்சி போன்றவற்றின் தலைவர்கள் அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்களை இழந்திருக்கின்றோம்.

ஜே,ஆர். ஜெயவர்த்தனா காலத்திலே சமாதன பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்கினார் 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வடகிழக்கில் வித்தியதசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றது

அதுதான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்கவேண்டும் தமிழரின் குடிபரம்பலை எவ்வளவு வேகமாக மாற்றி அமைக்கவேண்டும் இணைந்திருந்த வடகிழக்கை வெலிஓயா குடியேற்றம் மூலம் நில தொடர்பற்ற மாகாணங்களாக இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது போன்ற நடவடிக்கையை திட்டமிட்டு செய்துவருகின்றது

தற்போதைய எதிர்கட்சி தலைவாரான சஜித் நல்லாட்சி காலத்தில் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது வடகிழக்கில் ஆயிரம் விகாரை அமைக்கவேண்டும் என்ற அவர் தற்போது இலங்கையிலே ஆயிரம் தாது கோபுரங்களை படிப்படியாக அமைக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ஆகவே தற்போது வடகிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் குறிபாக உயர்ந்த மலைகளில் அமைப்பது சுற்றுலா பயணிகள் கூட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்.

குருந்தூர் மலையிலே பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள் இன்று தொல்பொருள் என்று பெயரில் அபகரிக்கட்டுள்ளது சரத்வீரசேகர, உதயகம்பன்வெல, விமல்வீரன்ச போன்ற அரசியல்வாதிகள் தங்களது நிரச்சி நிழலுக்குள் செயலாற்றிக் கொண்டு வடகிழக்கு மாகாணங்கள் தமிழ் தாயகம் என தம்பட்டம் அடிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக சரத்வீரதேசகர தெரிவித்தார்

எனவே தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என அமைச்சருக்கு தெரியவேண்டும். அதேவேளை கோட்பாயாவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்த வெளிநாட்டு அமைச்சர் ஒரே இரவில் தீர்வை கொடுக்கமுடியாது கிடைப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவே இனப்பிரச்சனை தோன்றி எத்தனை ஆண்டுகள் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஒரே இரவில் இந்த பிரச்சனைக்கான தீர்வை கேட்கவில்லை

நாடு சுதந்திரமடைந்த காலம் இருந்தே தமிழர்கள் இனப்பரச்சனையை தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் தந்தை செல்வா பேச்சுவார்த்தை , பண்டா செல்வா ஒப்பந்தம்,  டட்லி செல்வா ஒப்பந்தம், மற்றும் திம்பு பேச்சுவார்த்தை, 2001 பேச்சுவார்த்தை 2009 பின் மகிந்தவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தை. உட்பட தற்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஒரு சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலே இந்த நாட்டை நடாத்துகின்றார் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது அதன் மூலம் உருவாகிய குறைமாத குழந்தையான மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது இந்த 13 திருத்த சட்டத்தை முற்று முழுதாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்காக யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை,

ஆனால் அரசியல் அதிகாரத்தில் ஆசையற்ற பத்மநாபா கிடைப்பதை எற்றுக் கொண்டு அதிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்வோம் என்ற அடிப்படையில் அந்த மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக் கொண்ட முதல் தலைவர் பத்மநாபா அதிகாரத்தில் ஆசையில்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை அப்படிப்பட்ட ஒரு தலைவரது ஞாபகாத்த தினம்தான் இந்த 19 யூன் என்பது.

எனவே நாங்கள் கிடைப்பதை பெற்றுக் கொண்டு எங்கள் மக்களுக்கு துரோகம் செய்வதற்கு நாங்கள் அரசியல் செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டடைப்பு விடுதலைப் புலிகள் இயங்கு நிலை இருந்த காலத்திலே 2001 உருவாக்கப்பட்டது அப்போது கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி இருக்கவேண்டு என்ற காரணத்திற்காக இந்த கூட்டமைப்பை உருவாகினோம்.

2009 ம் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அசைக்கமுடியத சக்த்தியாக இருந்தது 2004 தமிழ் விடுதலை கூட்டணி வெளியேறியது 2010 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது 2015 ஈபிஆர்எல்எப் வெளியேறியது அதேபோன்று 2023 தமிழரசு கட்சி வெளியேறியுள்ளது ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பலமான 5 கட்சிகள் கொண்ட அணியாக செயற்படுகின்றோம். என்றார்.

நெல் விலை நிர்ணயத்தில் விவசாயிகளது வாழ்வாதாரமே கவனமாக இருத்தல் வேண்டும் – ஜனா எம்.பி

நெல் விலை நிர்ணயத்தில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான இன்றைய (20) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

தோடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் ஜனா,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வரவு செலவுத்திட்டம் மூலமாக ஒதுக்கப்படும் நிதிகள் ஒதுக்கப்படாமல் நாங்கள் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் எமது மக்களுக்குச் செய்யமுடியாத சூழ்நிலையில் இருந்து கொண்டு இந்த வரவு செலவுத்திட்ட அலுவலகம் சம்பந்தமான விவாதத்தில் எப்படிப் பங்கு பெறலாம் என்று யோசிக்கின்றேன்.

இருந்தாலும் எனது மாவட்ட மக்கள் சம்பந்தமாக சில விடயங்களையும்; இந்த விவாதத்தில் எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக கடந்த 28.05.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தவேந்திரன் மதுசிகன் என்ற 20 வயது மாணவண் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையான 30 கிலோமீற்றர் கடலை நீந்திக் கடந்திருக்கின்றார். ஒரு சாதனை புரிந்திருக்கின்றார். அதுவும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகரிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், பின்விளைவுகளைத் தடுப்பதற்கும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகா, சிறுவயதில தற்கொலைக்குச் செல்லாத மனோநிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் சாதனைகளை நிறைவேற்ற வேண்டும என்ற சிந்தனையுடன் செயற்பட்டால் இவ்வாறான விடயங்களிலிருந்து விடுபடலாம் என்ற விழிப்புணர்வுகளுக்காக இந்த சாதனையைப் புரிந்துள்ளார். அந்தவகையில் இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக அந்த மாணவனுக்கு பாராட்டுக்களைச் தெரிவிக்கவேண்டிய கடமையிலிருக்கின்றேன்.

அது மாத்திரமல்ல இன்றைய விவாதத்தின் ஆராம்பத்திலே 27/2 கேள்வியின் மூலமாக இந்தச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஒரு கூற்றை முன்வைத்திருந்தார். உண்மையிலேயே விவசாயிகள் சார்பாக நான் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன். இன்று மட்டக்களப்ப மாவட்டம் மாத்திரமல்ல அம்பாரை போன்ற பிரதேசங்களிலும் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது;. ஆனால் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அவர்களுடைய நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது மாத்திரமல்லாமல் நெல்லுக்குரிய சரியான விலையைக் கூட இந்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

இன்றைய 27/2 கீழான கேள்விக்குக் கூட விவசாய அமைச்சர் அவர்கள் சரியான பதிலைக் கூறாமல் தாங்கள் கூடி முடிவெடுத்து அறிவிப்பதாகக் கூறியிருக்கின்றானர். இன்றைய பொருளாதார நிலைமையில் அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைகளில் கூட விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு கிலோ நெல்லை 95 ரூபாவுக்கு விற்ற பண்ணைகள், இன்று ஒரு கிலோ நெல்லை 200 ரூபாவுக்கு விற்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அதற்குரிய உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

உண்மையில் உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக இருந்தால் அரசாங்க விதை உற்பத்திகளுக்கு மாத்திரமல்ல ஏழை விவசாயிகளுக்கும் அந்த உற்பத்திச் செலவு அதிகரித்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நெல்வயல் செய்கை பண்ணுவதற்கு ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்யும் போது இன்றைய நெல்லின் விலை 75- 80ரூபாவுக்கு மேல் தாண்டவில்லை. எனவே இந்த அரசாங்கம் ஆகக்குறைந்தது நெல்லின் விலையை 120ரூபாவுக்காவது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாகப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே அவர்கள் அவர்களுடைய நெருக்கடியிலிருந்து மீள்வார்கள். ஒரு கிலோ அரிசி 200 ரூபாவுக்கு விற்கப்படுகின்ற நிலையில். அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லின் விலையை நிர்ணயிக்க முடியாது. அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலை நிர்ணயத்தில் அழுத்தம் கொடுக்கின்றார்கள். அரசாங்கம், அவர்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கவனத்திலெடுக்க வேண்டும் என்பதுடன் அதற்காக பாடுபட வேண்டும்.

அத்துடன் கடந்த சில வாரங்களாக அதிபர் சேவைக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆந்த அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் போது பல்கலைக்கழகப் பட்டம் அத்துடன் பட்டப் பின் கல்வி டிப்ளோமா இருக்க வேண்டும் அத்துடன் 5 வருட சேவைக்காலமும் இருக்க வேண்டும் அதைவிடுத்து கல்வியியல் கல்லூரி முடித்தவர்களுக்கு 6 வருட சேவை அனுபவம் இருந்தால் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சுற்றறிக்கை இருந்தது. ஆனால் அந்த கல்வி டிப்ளோமா பட்டம், பட்டப்பின் டிப்ளோமா, விஷேட தேவைகள் சார் பட்ட பின் கல்வி டிப்ளோமா பெற்றவர்கள் அந்தப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் நேர்முகப் பரீட்சையில் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மிகவும் துரதிஸ்டவசமானது. இலங்கை அதிபர் சேவை தரம் III ல் ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல் 2018.10.19 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 ஆம் திகதி கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும், அப்பிரமாணக்குறிப்பில் இதற்குப் பின்னர் மேற்கொள்ளும் திருத்தங்களுக்கும், அரச சேவையின் நியமனங்களை நிர்வகிக்கும் பொது நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரி இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படுவார்”

இந்த நியமனமானது 2023யிலேயே வழங்கப்படவுள்ளது. எனவே பரீட்சை ஏலவே நடைபெற்றிருப்பினும், 2023இற்கு முன்னர் அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமையவே நியமனம் வழங்கப்படல் வேண்டும் என்பது நியதியாகும். இதன் அடிப்படையில் 2255/55 ஆம் இலக்க 2021.11.26 ஆம் திகதிய அதி விஷேட வர்த்தமானி பத்திரிகையில் வெளியாகிய இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 4ஆவது திருத்தத்தின் படி விசேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் அமுல்படுத்தப்படும் திகதி குறிப்பிடப்படாமையினால் இது 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதியாகும்.

மேலும் 2010 இல் விஷேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவானது சாதாரண பட்டப்பின் கல்வி டிப்ளோமாவிற்கு சமமானது என கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும் குறிப்பிடுகின்றது. மேலும் திறந்த பல்கலைக்கழக உபவேந்தரினாலும் இது தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தி, அதன் அடிப்படையில் அவர்களையும் இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஜனா எம்.பியின் வேண்டுகோளுக்கிணங்க கதிர்காமப் பாதயாத்திரை காட்டுப்பாதை எதிர்வரும் 27ம் திகதி வரை திறந்து வைத்திருப்பதற்கு ஆளுநர் உத்தரவு

2ம் திகதி திறக்கப்பட்ட உகந்தை வழி கதிர்காமப் பாதயாத்திரை காட்டுப்பாதை எதிர்வரும் 25ம் திகதியுடன் மூடப்படவிருந்த நிலையில் மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியவர்களும் பாதயாத்திரையை மேற்கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காட்டுப்பாதையை எதிர்வரும் 27ம் திகதி வரை திறந்து வைத்திருப்பதற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்யை தினம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவிக்கையில்,நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட செயலகத்திலே கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து சில விடயங்கள் சம்மந்தமாகப் பேசியிருந்தோம். அதிலே முக்கியமாக கதிர்காம பாதயாத்திரை உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து காட்டுவழிப்பாதை நேற்றைய தினம் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம்.

எங்களுடன் இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட அரச அதிபர், லாகுகல பிரதேச செயலாளர், கிழக்கு மாகண பிரதம செயலாளர், கிழக்கு மாகண உள்ளூராட்சி ஆணையாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோத்தர்கள், உகந்தை முருகன் ஆலய தலைவர் உள்ளிட்ட இவ்விடயத்துடன் தொடர்பு பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாத்திரிகர்களின் நன்மை கருதி, அவர்களுக்குச் சாதகமாக இங்கு ஆளுநரின் தலைமையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

உகந்தையில் இருந்து கதிர்காமம் வரையான காட்டுப்பாதை சுமார் 56 மைல்கள் இருக்கும். இதனூடாக யாத்திரிகர்கள் செல்லும் போது பல அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றார்கள். அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தொடர்ச்சியாக குடிநீர் வழங்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும், நான்கு மைல்களுக்கு இடையிடையே தற்காலிக மலசல கூடங்கள் அமைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு இரவுகளிலும் தங்குமிடங்களுக்கு அருகே பெண்கள் உடைமாற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட வேண்டும் போன்ற முடிவுகள் இங்கே எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் இந்தப் பாதையாத்திரையுடன் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு மேலாக மட்டக்களப்பிலே மிகப் பிரபல்யமான களுதாவளை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட சில கோவில்களின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெற இருக்கின்றது. பாத யாத்திரிகர்களுக்காக 12ம் திகதி திறக்கப்பட்ட காட்டுப் பாதை எதிர்வரும் 25ம் திகதியுடன் மூடுவதாக ஏற்கனவே முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பின் ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தின் பின்னர் யாத்திரை செல்ல விரும்பும் அடியவர்களுக்கு இவ்விடயம் சாத்தியமற்றதாகக் கருதி திறக்கப்பட்ட காட்டுப்பாதையை மேலும் இரண்டு நாட்கள் நீடித்து எதிர்வரும் 27ம் திகதி மூடுமாறு இதன்போது என்னால் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டது.

அந்த விடயத்தை முறையாகப் பரிசீலித்து அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எனவே மேற்குறிப்பிட்ட ஆலயங்களின் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளும் அடியவர்கள் கூட கதிர்காமம் பாதயாத்திரையை முன்னெடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் பண்ணப்பட்டிருக்கின்றது.

இவ்வேளையில் இக்காட்டுவழிப்பாதை திறந்திருக்கும் ஒவ்வொரு நாட்களிலும் தங்களுக்கு சுமார் ஒன்றில் இருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவாகுவதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அதில் ஒரு பங்கை நாங்கள் பொறுப்பெடுத்து அப்பாதையை மூடும் நாட்களை இரண்டு நாட்கள் பிற்போட்டுள்ளோம்.

அரச அதிகாரிகள் தங்களின் வேலை பழுக்கள் காரணமாக இந்த விடயத்திற்கு பின்டித்த நேரத்திலே ஆளுநர் அவர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி கட்டாயம் 27ம் திகதி சவவரை காட்டுப் பாதை திறந்திருக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். எனவே பாதயாத்திரை செல்லும் அடியவர்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை காட்டுப்பாதையூடாக யாத்திரையைத் தொடரலாம் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் என்று தெரிவித்தார்.

இன்று பாக்குநீரிணையினை நீந்திக்கடந்து சாதனை படைத்தார் ஈழத்தமிழன் மதுஷிகன்

மட்டக்களப்பு – புனித மிக்கேல் கல்லூரி மாணவனான தேவேந்திரன் மதுசிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான இவர் இச் சாதனையினை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும்.

20 வயதுடைய ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மதுஷிகன் இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ மீற்றர் தூரத்தை இன்று அதிகாலை நீந்தத் தொடங்கி இன்று பிற்பகல் 03.05 மணியளவில் நாட்டின் தலைமன்னாரை வந்தடைந்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க வேண்டும் என்பது நீச்சல் வீரர்கள் பலரினதும் அபிலாஷையாக இருந்து வருகின்றது. ஆனால் இதை நீந்திக் கடக்கின்றமை என்பது மிகப் பெரிய சவால் ஆகும்.

ஏனெனில் இந்நீரிணை பூராவும் கடல் பாம்புகள், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதையும் தாண்டி மட்டக்களப்பை சேர்ந்த இந்த மாணவன் சாதித்திருப்பது பெரிய விடயமே காரணம் இத் தூரத்தை நீந்திக்கடக்க முயன்ற பலர் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலை மன்னாரை வந்தடைந்த மதுசிகனை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரன்(ஜனா), மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மட்டக் களப்பு மாவட்ட சாரணர் சங்க பிரதிநிதி கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் உட்பட பலரும் வரவேற்று பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

எழுவான்கரை – படுவான்கரை பாதைப்போக்குவரத்தை இலவச சேவையாக்குமாறு ஜனா எம்.பி கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா இன்றைய தினம் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஆளுநரிடம் முதற் கோரிக்கையாக அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த எழுவான் கரையில் இருந்து படுவான் கரைக்கான பாதைப் பயணத்திற்கு பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடும் விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

முன்னாள் ஆளுநனர் ஏற்கனவே பொருளாதர நிலையில் நலிவுற்றிருக்கும் மக்களைக் கருத்திற் கொள்ளாமல் பாதைப் போக்குவரத்துக்கு கட்டணம் அறவிடுவதற்கான உத்தரவினைப் பிறப்பித்திருந்தார்.

தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கும் தாங்கள் வறிய நிலை மக்களுக்குள் இருந்து அவர்களின் நன்மை தீமை அனைத்தையும் அனுபவித்து இன்று இந்நிலைக்கு உயர்ந்துள்ள ஒருவர். எனவே எமது மக்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முன்னாள் ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இப்பாதைப் போக்குவரத்திற்கு கட்டணம் அறவிடுகின்ற விடயத்தை நிறுத்தி முன்னர் இடம்பெற்றது போன்றே இலவச சேவையினை வழங்க வேண்டும் என்று பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததற்கமைவாக இவ்விடயத்திற்குக் கொள்கை அளவில் ஆளுநரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமானது வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் முன்நிறுத்தி கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது