ஜனாதிபதி தேர்தலை விரைந்து நடாத்த நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜீ. எல். பீரீஸ்

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் வகையில் எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சட்ட திருத்த பிரேரணை ஒன்றை முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரை பாரதூரமானது.

தேர்தல் தொடர்பில் மக்களுக்கு அக்கறையில்லை,தேர்தல் குறித்து கவனம் செலுத்த கூடாது என்பதே ஜனாதிபதியின் உரையின் உள்நோக்கமாக காணப்பட்டது.

தேர்தலற்ற சமூகம் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படாது.இலங்கை ஜனநாயக நாடு என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் அவசியமில்லை என அரச தலைவர் குறிப்பிடுவதை அலட்சியப்படுத்த முடியாது.மக்களின் விருப்பத்துக்கு அரசாங்கம் செயற்படும் போது அங்கு சர்வாதிகாரமே தோற்றம் பெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரையை அலட்சியப்படுத்த முடியாது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு திரைமறையில் ஜனாதிபதி மேற்கொண்ட சகல முயற்சிகளும் அவரது வார்த்தை ஊடாக தற்போது வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இருப்பினும் நாட்டின் இறுதியானதும் மேன்மை மிக்கதுமான உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மதிக்காமல் நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது.இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நிர்ணயிக்காமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசியல் நோக்கத்துக்காக பிற்போடப்பட்டுள்ள பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும்.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்திற்கு ஒரு திருத்தப் பிரேரணையை கொண்டு வரவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு சுதந்திர மக்கள் சபை என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.அத்துடன் ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.அதற்கு சுதந்திர மக்கள் முன்னணி முன்னிலை வகிக்கும் என்றார்.

Posted in Uncategorized

2048 இல் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்கும் திட்ட வரைபடத்தை முன்வைத்தார் ஜனாதிபதி

ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே எனது போராட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு முக்கிய தூண்களில் நாட்டை கட்டியெழுப்புவோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம். நாட்டை கட்டியெழுப்பும் பணியில் இளைஞர் சமூகம் மீது பெரும்நம்பிக்கை வைத்திருக்கிறோம். துரித பொருளாதார மறுசீரமைப்பு செயல்பாட்டில் அரச – தனியார் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க கூட்டாய்வு முறையை அமுல்படுத்துவோம். மோசடியை ஒழிக்க விசேட செயலணி உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘தேசிய நிலைமாற்றத்துக்கான திட்ட வரைபடம்’ என்ற திட்டத்தை முன்னிறுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த உரையின் முக்கிய அம்சங்கள் மட்டும் வருமாறு, நவீன உலகுக்கும், நவீன தொழில் நுட்பத்துக்கும் ஏற்றவாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்காவிட்டால் நாடு பின்நோக்கி செல்லும். அதன் முடிவாக நாடு பொருளாதார காலனித்துவமாக மாறிவிடும். எனவே, நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதற்கு அவசியமான துரித பொருளாதார மறுசீரமைப்புக்களை செயல்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்தல், கொள்முதல் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஊழலை முற்றிலுமாக நிறுத்துவதற்கும், டிஜிற்றல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்தவும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும். மறுசீரமைப்பு வேலைத்திட்டம், இலகுவான பணி இல்லை. என்றாலும், நாட்டுக்கு சிறந்த விடயங்களை மேற்கொள்ள அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. நாம் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு கடினமான மற்றும் வேதனையானதாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக அந்தக் கடினமான பாதையில் சரியான கொள்கைகளின்படி முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை மீண்டும் உயர்வடையச் செய்ய முடியும்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஓர் இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். 70வீதம் வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2 வீதம் வரை குறைக்க முடிந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயனை உணர ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை முன்னேற்ற முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் நாட்டை விற்கிறார்கள் என்று கோஷமிட்டு இதனை சிலர் குழப்ப முயல்கின்றனர். முன்னரும் இவ்வாறு தான் நடந்தது. இனி, இது போன்ற கோஷங்களுக்கு நீங்கள் ஏமாறமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும். நாட்டை முன்னேற்ற நாம் அனைவரும் கடுமையாக உழைத்து, நம்மை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. 2048 ஆம் ஆண்டுக்குள் உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது இலக்கை அடைய வேண்டும் என்றார். மேலும், நவீன உலகத்துக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நமது பொருளாதாரத்தை வடிவமைக்காவிட்டால், பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். இத்தகைய விலகலின் விளைவு, நாடு பொருளாதார காலனித்துவமாக மாறுவதுதான்.

தவறான கொள்கைகள், பலவீனமான நிகழ்ச்சிகள், தோல்வியடைந்த வேலைத் திட்டங்கள் ஆகியவற்றை ஓர் ஒழுங்கான பாதையில் முன்னெடுப்பதையே பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் நாம் மேற்கொள்கிறோம். பழைய பாரம்பரிய முறைகள் மூலம் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெ ழுப்ப முடியாது. நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் – என்றும் சொன்னார். மேலும் நாட்டின் அபிவிருத்தி- அரச நிதி மற்றும் மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு என்ற நான்கு தூண்களில் கட்டி யெழுப்பப்படும் என்று தெரிவித்ததுடன், அவை குறித்து விளக்கமும் அளித்தார்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஜனக ரத்நாயக்க

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமை இலங்கை மக்களிற்கு ஏற்பட்ட தோல்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தனது தோல்வியில்லை எனவும் இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி, இதனை பற்றி தனக்கு எந்த பிரச்சினையுமில்லை என்றும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என முன்னரே உறுதியாக தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க அழைத்தால் ஏற்பேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு இதுவரை யாரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், என்னைச் சந்திப்பவர்கள் எல்லாம் சொல்வது இப்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்றால் உங்களைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று.

நான் இப்போது அரசியல் செய்வது ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்குள் இருந்து அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் சீரழிவதற்குக் காரணம் ஊழல், மோசடிகள்தானே தவிர பொருளாதார நிபுணர்கள் அல்லர்.

ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவு பெற்ற ஊழல்மிக்க வர்த்தகர்களுமே இந்த நாட்டைச் சீரழித்தனர்.

இவர்களிடமிருந்து நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினார் என்பதற்காக இந்த நாடு முன்னேறிவிடாது” – என்றார்.

நாணய நிதியத்தின் 2ஆவது தவணை கடன் கிட்டியதும் ஜனாதிபதித் தேர்தல்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணை கடன் கிடைத்ததும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை விரைவுபடுத்தும் வகையில் அரசமைப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதையடுத்து, அதனை விரைவாக உருவாக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக் கொள்ளப்படும். இதன் பின்னர் மக்களுக்கு சலுகைகளை வழங்கி – ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண் டும்.

ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் மூன்று மூத்த சட்ட வல்லுநர்கள், அதற்கு தேவையான அடிப்படை செயல்பாடுகளை ஏற்கனவே தொடங்கி விட்டனர் என்றும் அறிய வருகின்றது.