தமிழர் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ! நாடாளுமன்றில் தனித்து இயங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பு சார்பில் நிறுத்துவது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் பங்காளிக் கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்றும் இது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது எனவும் முடிவு எட்டப்பட்டது. அத்துடன், இந்த உத்தியை கொண்டு சிங்கள தரப்புகளிடம் பேச்சு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசுக் கட்சி விலகிய போதிலும் அந்தக் கட்சியின் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பியே இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கொரடவாக உள்ளார். இதனால், பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தில் தமக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் தனித்து செயல்படவும் அந்தக் கட்சியின் எம். பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதே நேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் மீண்டும் பேசி இந்திய தூதுவரை சந்தித்து இது தொடர்பில் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.