சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இம்மாதம் கிடைக்காது – ஹர்ஷ டி சில்வா

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022ஆம் ஆண்டு மறக்க முடியாத பல நினைவுகளை பதிவு செய்துள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வரலாற்றில் முதல் முறையாக மக்களின் மாபெரும் எழுச்சி போராட்டத்தினால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களினால் இலங்கைக்கு எதிராக சர்வதேசம் ஒருசில கடுமையான தீர்மான்களை எடுத்தது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அரசாங்கம் இவ்வருடத்தில் எவ்வாறு தீர்வு காணும் என்பது நாட்டு மக்கள் மத்தியில் முக்கியமான கேள்வி உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத காலத்தில் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்றார்.

சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே முன்னேற்றம் – ஹர்ஷ டி சில்வா

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவற்றில் பெருமளவான தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது.

எனவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே ,  அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக ,சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ள விடயம் இன்று பேசுபொருளாகியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காணப்படுகின்ற பிரதான சவால் சீனாவாகும். சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான தெளிவானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எமது மொத்த வெளிநாட்டு கடனில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

அதிக அதிக தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாம் உண்மையில் கலந்துரையாட வேண்டிய ஒரேயொரு வங்கி சீன எக்சிம் வங்கி மாத்திரமேயாகும். எக்சிம் வங்கியுடன் ஏதேனுமொரு இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே , எம்மால் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

உலக நாடுகள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வருமானம் குறைந்த நாடுகள் ஜீ.20 பொது கட்டமைப்பின் கீழ் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன. எனினும் இலங்கை போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. எனவே இவ்வாறான நாடுகள் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ளப் போகின்றன என்பதற்கான புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

நாடு எந்த பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான பதில் இல்லை. வருடாந்தம் ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு , மத்திய வங்கியினால் வழிகாட்டல் வரைபடம் தயாரிக்கப்படும். எனினும் 2023 ஆம் ஆண்டுக்கான வரை படம் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த ஆண்டு நாம் பயணிக்கவுள்ளோம் என்பது கேள்விக்குரியாகும்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? இதற்கான பதிலையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். வழிகாட்டல் வரைபடமொன்று 2023 இல் எங்கு செல்கின்றோம் என்பது தெரியாமலேயே பயணிக்கவுள்ளோம்.

சர்வதேசம் எதிர்பார்க்கும் வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முடியாமல் போயுள்ளது. இதற்கான ஒரேயொரு மாற்று வழி புதிய அரசாங்கமொன்றாகும். புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டத்தை சர்வதேசமும் நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களால் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க முடியாத அரசாங்கத்தால் , எவ்வாறு நாட்டை நிர்வகித்துச் செல்ல முடியும்?

மக்களுக்கு மேலும் மேலும் சுமையை சுமத்தாமல் , அவர்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் காணப்படுகிறது. எனினும் மார்ச் மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு காணப்படுகிறது. அரசியலமைப்பின் படி அதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.

இரு பிள்ளைகளுக்கு ரூ.40 ஆயிரம் தேவை – ஹர்ஷ டி சில்வா

முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எங்களது எச்சரிக்கைகளைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாடு இந்நிலைமைக்கு வந்திருக்காது எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2020ஆம் ஆண்டு முதல் நாம் கூறியவற்றை இந்த அரசாங்கம் கேட்கவில்லை. அரசாங்கம் பயணிக்கும் பாதை சரியில்லை. இந்த முறையில் பயணித்தால் நாடு வீழும், பணவீக்கம் ஏற்படும், பொருள்களின் விலைகள் அதிகரிக்கும், வட்டி வீதங்கள் அதிகரிக்குமென எச்சரித்தோம். ஆனால், நாம் கூறிய எதனையும் கேட்கவில்லை. நாம் இவ்வாறு கூறும்போத சிரித்தார்கள். அரசாங்கம் திமிர் பிடித்திருந்ததால் சுயவிமர்சனத்தைக்கூட செய்யவில்லை. இறுதியில் நாம் எச்சரித்த அனைத்தும் நடந்தது.

நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாம் கூறியதை கேட்காத மொட்டுக் கட்சி அரசாங்கம், தமது கடந்தக் கால பயணம் தவறு புதியப் பாதையில் பயணிக்க வேண்டும். புதியப் பாதை சிரமமானதாக இருக்கும் என இப்போது கூறுகிறது. இவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. லீகுவான் வந்தாலும் இந்நாட்டைக் கட்டி யெழுப்ப முடியாது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் ஒன்றிணைய வேண்டுமென கேட்கிறார்கள் – என்றார்.

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது முறையற்றது – ஹர்ஷ

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சினை விரிவுபடுத்த முயற்சிப்பது எந்தளவிற்கு நியாயமானது.

வங்குரோத்து அடைந்துள்ள நாடுகளில் இந்தளவிற்கு அமைச்சுக்களும், இராஜாங்க அமைச்சுக்களும் கிடையாது. பொருளாதார சுமையை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளார்கள். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  மொத்த தேசிய உற்பத்தியில் 2.43 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 1.9 சதவீதம் மாத்திரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும்போது நாட்டில் 30 இலட்சம் பேர் ஏழ்மை நிலையில் இருந்தார்கள்.

ஆனால் அவர் பதவி விலகும் போது நாட்டின் ஏழ்மை நிலை 90 இலட்சமாக அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த சனத் தொகையில் 60.3 சதவீதமான குடும்பங்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை கோரியுள்ளார்கள்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக மற்றும் ஏழ்மை நிலை 2023 ஆம் ஆண்டு பன்மடங்காக அதிகரிக்க கூடும்.

சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.ஆகவே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

சமுர்த்தி அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.சமுர்த்தி பயனாளர்களில் 50 சதவீதமானோர் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு உண்மையான தகுதி உள்ள 50 சதவீதமானோருக்கு சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறுவதில்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுப்படுபவர்களுக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இந்நிலைமை முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.நலன்புரி திட்ட சபை ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வெளிப்படை தன்மையுடனான திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சினை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் மாத்திரமல்ல,அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் 38 இராஜாங்க அமைச்சர்களும்,20 அமைச்சரவை அமைச்சுக்கள் 20 உள்ள நிலையில் எந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடுகள்,வங்குரோத்து நிலை அடைந்துள்ள நாடுகளில் இந்தளவு பரந்துப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் கிடையாது.

பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்கள் மீது சுமத்தி அமைச்சரவை விரிவுப்படுத்துவதால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர குறைவடையாது.

தனிநபர் வருமான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வருமான வரி விதித்தால் அவர்களால் எவ்வாறு வாழ முடியும்.

நாட்டில் இருந்து பெரும்பாலான மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.நாட்டை விட்டு வெளியேறுபவர்களை சட்டமியற்றி தடுக்க முடியாது.

தனிநபர் வருமான வரி அதிகரிப்பு ஊடாக 68 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.நாட்டில் 4 பிரதான நிலை கசினோ சூதாட்டங்கள் கடந்த 07 வருட காலமாக சுமார் 200 மில்லியன் ரூபா வரை வரி செலுத்தவில்லை.

இந்த வரிகளை முறையாக அறவிட்டால்,தனிநபர் வருமான வரியை அதிகரிக்க வேண்டிய தேவை கிடையாது,ஆகவே பொருளாதார பாதிப்பை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்த வேண்டாம் என்றார்.

எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஹர்ஷ

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தவில்லை என குறிப்பிடுவது பாராளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என அரசாங்க நிதி தொடர்பான  குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற அவதானம் செலுத்தவில்லை, ஆளும் தரப்பினரும் எதிர்தரப்பினரும் முன்கூட்டிய நடவடிக்கை தொடர்பில் பேசவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதாக செய்தி  வெளியாகியுள்ளன. இந்த செய்தியின் பிரதியை நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது.நாட்டின் பொருளாதார முகாமைத்துவம், அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்க்கட்சிகள் தான் முதலில் பாராளுமன்றத்திற்கு எடுத்துரைத்தது.

2020.08.21 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான விவாதத்தின் போது பொருளாதார பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்தோம்.

ஆகவே ஜனாதிபதியின் கருத்துக்கள் பாராளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் காலப்பகுதியில் குறிப்பிட்டேன்.ஆகவே பொருளாதார பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி  குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் – ஹர்ஷ

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும். எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உரையாடியதை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடன் மறுசீரமைப்பு மற்றும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினர் குறிப்பிட்ட விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் கோ ஹோம் சைனா என்பது பொருத்தமற்றது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆகவே இவ்விடயத்தில் முரண்பாடற்ற வகையில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

 

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் – ஹர்ஷ

வாழ்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

பாராளுமன்றில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினருக்கு செலவிடும் தொகையானது பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேவையற்ற செலவீனங்களை குறைத்து பொருளாதார மீட்சிக்கு அவதானம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டால் மாத்திரமே தலைவருக்கான கௌரவத்தை நாட்டு மக்கள் வழங்குவார்கள். நாட்டில் மேலும் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கான செலவீனங்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையில் தற்போது 60 அமைச்சர்கள் வரை பதவியில் உள்ளார்கள்.

மேலும் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கினால் அமைச்சர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வாகனங்கள், அதற்கான எரிபொருள் செலவீனம், அமைச்சர்களுக்கான நிர்வாக சேவையினருக்கு வேதனம், இவை அனைத்தையும் நோக்கும் போது இந்த பாதீடானது மக்களுக்கு அனுகூலமான பாதீடு அல்ல என்பது புலனாகின்றது.

அது மாத்திரமின்றி சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது.

மேலும் பணவீக்க அதிகரிப்பின் வேகம் குறைவடைந்துள்ள போதிலும், பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போது உணவு பணவீக்கமானது நூற்றுக்கு ஐந்து வீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது நூற்றுக்கு 95 வீதமாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. எனினும் உணவு பணவீக்கமானது தற்போது சீராக உள்ளதாகவும், ஆகையினால் வாழ்வதற்கு ஏற்றச்சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் பொருளாதார கணிப்பினை கேட்டுச் சிந்திக்கும் போது நகைச்சுவையாகவே இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.