பொலிஸாரின் தேர்தல் செலவு மதிப்பீட்டை பார்த்து தேர்தல்கள் ஆணைக்குழு அதிர்ச்சி

உள்ளூராட்சித் தேர்தலை விட மூன்று மடங்கு செலவோடு தேர்தலை நடத்துவதற்கு உதவுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கோரிக்கைக்கு மாறாக மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு சேவைகளை வழங்குவதற்கு 2.8 பில்லியன் ரூபாய் தேவை என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொடுப்பனவுகள், எரிபொருள் செலவுகள், வாகன வாடகை, தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு பொருட்கள், எழுதுபொருட்கள் மற்றும் இதர செலவுகளை உள்ளடக்கிய மதிப்பிடப்பட்ட செலவுகள் ஆறு மடங்கு அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த அதிகரிப்புகளில் வாகன வாடகை செலவு 138 மில்லியனில் இருந்து 745 மில்லியனாகவும் எரிபொருள் கட்டண மதிப்பீடுகள் 108 மில்லியனில் இருந்து 675 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட மதிப்பீடுகளை விட பொலிஸ் திணைக்களம் அனுப்பிய மதிப்பீடுகள் மிக அதிகமாக உள்ளது என்றும் செலவுகளுக்காக உரிய பத்திரங்களை வழங்கினால் மட்டுமே பணம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை தேர்தலுக்கு தயாராவதற்கு தேவையான 100 மில்லியனில் இருந்து 35 மில்லியனை மட்டுமே பெற்றுள்ளதாகவும் உரிய நேரத்தில் நிதி கிடைக்காததால் கவலைப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார்- பற்ரீஸியா ஸ்கொட்லன்ட்

நீங்கள் சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின் சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் குறிப்பிட்டுள்ளார்.

‘சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கான காரணம் தீர்க்கப்படாமல் உள்ளது!’

75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலையான அரசியல் தீர்வொன்றை இலங்கை கண்டடைவதை உறுதி செய்ய வேண்டும் என பிரிட்டன் அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரிட்டன் வாழ் தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில் நீதி, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை மற்றும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வினை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை முன்னிறுத்தி தமிழர்கள் ஆதீனத்தை புறக்கணித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான சம்பவங்கள், காணி அபகரிப்பு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்னமும் தொடர்வதாகவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நியாயமான ஆட்சி நிர்வாகத்தை உறுதிப்படுத்தி, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் நாட்டை முன்னகர்த்திச் செல்லக்கூடியவாறாக இலங்கையின் அரச கட்டமைப்பு மாற்றமடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்ற ரணில் சூழ்ச்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உறுதிமொழி மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தினார்.

எரியும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இந்த உரையாடலை ஆரம்பித்தார்.

எனவே, அவரின் இனவாதச் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றார்.

தற்போது தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. தேர்தலை நிறுத்தினால் பண விரயமே ஏற்படும்” – என்றார்.

’13’ தொடர்பில் ரணிலுடன் பேசிய இந்திய அமைச்சர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் நேற்று (04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள முரளிதரன் நேற்றுக் காலை இலங்கை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் இலங்கை தூதரகம் எதிராக திரண்ட மக்கள்

இலங்கைவின் 75 வது சுதந்திர தினத்தைக் கருப்பு நாளாக அறிவித்து, ஒற்றையாட்சிக்கெதிரான கோசங்களை எழுப்பியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அரசியற் தீர்வு கோரும் முழக்கத்தை எழுப்பியும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அணி திரண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பறை இசை முழக்கங்களுடன் ஈழ தேசிய கொடிகளைக் கைகளில் ஏந்தியவாறு “13 வது திருத்தச் சட்டம் தீர்வல்ல, ஒற்றையாட்சி அரசியல் யாப்பே இனவழிப்பிற்கு காரணம்”என்றும் சர்வதேசங்களை நோக்கி கோசங்களை எழுப்பினார்கள்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் லண்டனில் தமிழ் மக்களின் உரிமைக்காக அனைத்துத் தளங்களிலும் அரசியற் பணியாற்றிவரும் பல்வேறு அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் இணைந்து நின்று போராட்டத்தைப் பலப்படுத்தியதுடன் கருத்துரைகளையும் வழங்கினர்.

வழமைபோல் இல்லாது இந்த வருடம் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கையின் சிங்கக் கொடி இன்று பறக்கவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே கம்பத்தில் கறுப்பு பலூன்கள் ஆர்ப்பாட்டத்தில் நின்ற மக்களால் பறக்க விடப்பட்டன. அதேநேரத்தில் போராட்டக்காரர்களால் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பு தீயிட்டு எரிக்கப்பட்டு இருந்தது. இன்றைய முதன்மை உரைகளில் தாயகத்தில் வடக்கிலிருந்து கிழக்கு
நோக்கிய வடக்குக் கிழக்கு இணைந்த பல்கலைக்கழக மாணவர் போராட்டம் பற்றிப் பேரெழுச்சியோடு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ஜனாதிபதி!

ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று(சனிக்கிழமை) விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே,

நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தி, நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்.

75 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சுதந்திரம் பெற்றபோது, புகழ்பெற்ற “லண்டன் டைம்ஸ்” நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் இவ்வாறு கூறியது:

“இலங்கை விரைவில் கீழத்தேயத்தின் சுவிட்சர்லாந்தாக மாறுவதைக் காண்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” வேறு எந்த கீழத்தேய நாட்டைப் பற்றியும் அவர்கள் அத்தகைய எதிர்பார்ப்பை கொண்டிருக்கவில்லை.

ஆனால் தற்பொழுது எமக்கு என்ன நேர்ந்துள்ளது?

இன்று நாம் வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறானதொரு பாரதூரமான நிலையை நாம் எதிர்கொண்டதில்லை.

நமக்கு ஏன் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது? இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

நாம் உண்மையைப் பேசுவோம். இந்த நிலைக்கு நாம் அனைவரும் குறைவாகவோ அதிகமாகவோ பொறுப்புக் கூற வேண்டும். நாம் யாரும் விரல் நீட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல முடியாது. நாம் ஆரம்பத்திலிருந்தே தவறு செய்தோம். அந்த தவறை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. பாடுபட்டோம். ஆனால் நூறு சதவீதம் சரி செய்ய முடியவில்லை.

சுதந்திரம் பெறுவதற்கு டி.எஸ். பின்பற்றிய வழிமுறை, இலங்கையர் அனைவரையும் ஒன்றிணைப்பதாகும். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என யாராக இருந்தாலும் இலங்கையர்களாக நாம் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என அவர் அன்று தெரிவித்தார்.

ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு நாங்கள் பிளவுபட்டோம். இனம், மதம், பிரதேச ரீதியாக பிரிந்தோம். ஒருவரையொருவர் குறித்து சந்தேகம், வெறுப்பு ஏற்படும் வரை பிரிந்தோம். பல்வேறு குழுக்கள், அதிகாரத்தைப் பெறவதற்கு இந்தப் பிரிவைப் பயன்படுத்தின. அதிகாரத்திற்காக மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தினர். நாம் அவர்களை நிராகரிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு அதிகாரம் அளித்தோம்.

அரசியலில் உண்மையைச் சொல்லாமல் பொய் சொன்னார்கள். உண்மையைச் சொன்ன அரசியல்வாதிகளை மக்கள் நிராகரித்தனர். நாட்டின் உண்மை நிலையைச் சுட்டிக்காட்டி அதற்கான பரிகாரம் தேடுபவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பொய்களால் மகிழ்விப்பவர்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைத்தது. நாம் வாக்குறுதி அரசியலில் சிக்கிக்கொண்டோம். எங்களுக்குச் சொந்தமில்லாத கடன் வாங்கிய வளங்களை நம்பியிருந்தோம். மேலும் மேலும் கடன் வாங்கினோம்.

“அரசாங்கமென்பது வளங்களின் ஊற்று” என்ற மனப்பாங்கை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டோம். அந்த ஊற்றுக்களில் இருந்து கிடைக்கும் பல்வேறு வளங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதே ஆட்சியாளர்களின் கடமை என்று பலரும் நினைத்தனர். அதன்படி தொழில்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வளங்கள் விநியோகிக்கப்பட்டன. உபகரணங்கள் வழங்கப்பட்டன. பணமும் விநியோகிக்கப்பட்டது.

நம்மில் பெரும்பாலானோர் வாக்களித்தது நாட்டுக்காக அல்ல. எங்களுக்கு தொழில் பெற பிள்ளையைப் பாடசாலையில் சேர்ப்பதற்கு. விலைமனுக் கோரலுக்கு அனுமதி பெற நாம் வாக்களித்தோம். தனிப்பட்ட ஆதயத்திற்காகவே நாம் தேர்தல் வேட்பாளர்களுக்காக பணியாற்றினோம்.

நம்மில் பெரும்பாலானோர் தேர்தலில் போட்டியிட்டது கூட நாட்டுக்காக அல்ல. தங்களுக்காக. அதிகாரத்தை பெறவும் சலுகைகளை அனுபவிக்கவும் மேலும் சம்பாதித்துக்கொள்ளவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

நாம் வாக்குறுதிகளில் சிக்கிக்கொண்டோம். கோசங்களில் சிக்கினோம். இவை அனைத்தினதும் விளைவாக நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கோசங்களில் தெரிவிக்கப்பட்டவற்றை உறுதிப்படுத்தவும் நாங்கள் மேலும் மேலும் கடன் வாங்கினோம்.

நாம் அதிகம் அதிகமாக முதலீட்டுக்காக அல்லாமல், நுகர்வுக்காகத்தான் கடன் வாங்கினோம். “கடன் முதலீட்டிற்காக அன்றி நுகர்வுக்காக அல்ல” என்று புத்தரின் போதனைகள் கூறுகின்றன. பௌத்தத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு புத்தரை வணங்கி பௌத்த தர்மத்தை தாண்டிச் சென்றுவிட்டோம்.

சிங்கப்பூரை மீளக் கட்டியெழுப்புவது பற்றி அறிந்து கொள்வதற்காக இலங்கை வந்த லீ குவான் யூ பல வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு கூறினார்.

“தேவையில்லாமல் அரசியலுக்கு முன்னுரிமை அளித்தமையே உங்கள் நாட்டில் இந்த நிலை ஏற்பட காரணம்.” உங்கள் நாட்டை முன்னுதாரணமாக கொண்டிருந்தால் சிங்கப்பூர் அழிந்திருக்கும்”.

உண்மையில், நாம் இப்போது அழிவு நிலையை நோக்கி சென்றுள்ளோம். இந்த காயத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்புபவர்களும் உள்ளனர். ஆனால் நான் அதனை விரும்பவில்லை. ஒரு சத்திரசிகிச்சை செய்து இந்த காயத்தை சுகப்படுத்திக் கொள்வோம். இது கடினமானது. வேதனையானது. கஷ்டமானது. ஆனால் அந்த சோகத்தையும் வேதனையையும் சிறிது காலம் அனுபவித்தால், காயத்தை முழுமையாக குணப்படுத்த முடியும்.

சில அரசியல் கட்சிகள் சுட்டிக் காட்டும் குறுக்குவழிகளால் இந்த நெருக்கடியிலிருந்து எமக்கு மீள முடியாது.

இந்த நெருக்கடியை சமாளித்து உண்மையான பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை அடைய வேண்டுமானால், நாம் செல்ல வேண்டியது ஒரே ஒரு வழிதான். இந்தக் குழியிலிருந்து ஏறுவதற்கு எமக்கு ஒரே ஒரு ஏணி தான் உள்ளது. அரசியல் நலன்களுக்காக இந்த ஏணியை ஒதுக்கித் தள்ளினால், நமக்கு ஒரு நாடு இருக்காது, நமக்கு நாளை இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தையும் ஆபத்தையும் இதற்கு முன்னரும் நான் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் முன்கூட்டியே கூறியுள்ளேன். இந்த இக்கட்டான சூழலை நாம் விருப்பமில்லாத நிலையிலும் கூட எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் நலனுக்காக நாம் அந்த இக்கட்டான நிலையை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் இனிப்புப் பேச்சுகளால் இந்நிலைக்குத் தீர்வு கிடைக்காது.

இலவசக் கல்வியினால் இந்நாட்டில் பெருமளவிலான மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தினராக மாறினாலும் இன்று அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத நாடாக மாறியுள்ளது. தோளோடு தோள் நின்று உழைக்க வேண்டிய இளைஞர்கள் இன்று கடவுச் சீட்டுகளைப் பெற வரிசையில் நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். அதை நாம் மாற்ற வேண்டும்.

அப்படியானால், நாம் இந்தப் பொருளாதாரத்தை நவீனமயமாக்கி, உலகிற்கு திறந்துவிட வேண்டும். மக்களை ஏமாற்றி அவர்களை நிரந்தர ஏழைகளாகவும், தங்கிவாழ்பவர்களாகவும் மாற்றும் ஊழல் அரசியல் வாதத்தையும் தோற்கடிக்க வேண்டும். இந்நாட்டு இளைஞர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “சிஸ்டம் சேன்ஞ்” என்ற முறைமை மாற்றம் இது தான்.

அதற்காக எனது அரசாங்கம் புதிய சீர்திருத்தப் பாதையில் பிரவேசித்துள்ளது. அதற்காக எடுக்கப்படும் முடிவுகள் சிலநேரம் வேதனை தருவதாக இருந்தாலும், இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர அந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டுமாயின், நாம் குறுகிய அரசியலில் இருந்து விலகிச் செல்ல வேண்டும். நாம் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். சவாலை வெற்றிகொள்ளும் பாதையை வலுப்படுத்த நம்மால் முடிந்த அளவு பங்களிக்க வேண்டும். அனைத்து வேற்றுமைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கையர்களாக நாம் அனைவரும் முன்னேறிச் செல்ல வேண்டும்.

அதன் மூலம் வலுவான புதிய பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான அடிப்படைப் பணிகளும், அடித்தளமும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான கடினமான பணிகளை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம். விரைவில் அவர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதால் மட்டும் எம்மால் திருப்தி அடைய முடியாது. ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த அரசியல் முறைமை, பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், அரச பொறிமுறை ஆகிய அனைத்து துறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும்.

இந்த மாற்றம் நாட்டுக்கும் நமக்கும் நல்லதாக அமைய வேண்டும். புதிய முறைமையில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கருத்துக்களுக்கும் பிரதிநிதித்துவங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இந்த முறைமை மாற்றத்துக்கு அவசியமான பல்வேறு சட்ட ஏற்பாடுகளை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.

அது போன்றே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் விசேடமான பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கான அமைச்சரவை உபகுழுவை ஏற்கனவே நியமித்துள்ளோம்.

அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்படும். அவர்களது கருத்துகளின்படி, அந்தப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.

காணிகளை மீளக் கையளித்தல், கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.

அது போன்றே ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

நான் முயற்சிப்பது மேலோட்டமாக தெரிகின்ற நோய்க்கு வலி நிவாரணிகளை வழங்க அல்ல. நோயின் மூலக்காரணியை நிவர்த்தி செய்யவே முயற்சிக்கிறோம். அது சிரமமானது.மிகவும் கடினமானது. எனினும் நாம் செல்ல வேண்டிய ஒரே வழி அதுதான்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து எனக்கு எடுக்க நேரிட்ட பல தீர்மானங்கள் பிரசித்தமான தீர்மானங்கள் அல்ல என்பதை நான் அறிவேன்.

ஆனால் அந்தத் தீர்மானங்களால், இன்று இந்த நாட்டின் எந்தக் குடிமகனும் எரிபொருள் வரிசைகளில் நீரின்றி இறக்கவில்லை. சமையல் எரிவாயு இல்லாமல் பட்டினியில் இல்லை. உரம் இல்லாமல் சாபம் இடவில்லை.

எனவே, அராஜக அரசியல் சக்திகள் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும், இந்த நாட்டை நேசிக்கும் பெரும்பான்மையான மக்களுடன் இணைந்து இந்தப் புதிய சீர்திருத்தத் திட்டத்தை முன்னெடுப்பேன்.

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மனதில் கொண்டு ஒற்றுமையுடன் திட்டமிட்டு முன்னேறினால் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறலாம். உலகில் வேறு எந்த நாட்டிடமும் கையேந்தாத அபிவிருத்தி அடைந்த நாடாக மாறலாம். உண்மையான சுதந்திரத்தையும் அடைய முடியும்.

நமது பிள்ளைகள் உலகுடன் போட்டி போடும் வகையில் புதிய நாட்டை உருவாக்குவது நம் அனைவரதும் பொறுப்பாகும். எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தை வெற்றிகொள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் ஒன்றுபடுவோம்! கைகோர்ப்போம்!

அவ்வாறு கைகோர்த்து எதிர்வரும் 25 ஆண்டுகளுக்காக நாம் தயாரித்துள்ள திட்டத்திற்கமைய ஒன்றுபட்ட பயணத்தை மேற்கொள்வோம். அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கும் ஏற்ப அந்தத் திட்டத்தை மேம்படுத்துவோம். மேலும் வலுப்படுத்துவோம். அவற்றை மேலும் முறைமைப்படுத்தி நெறிப்படுத்துவோம்.

இந்த முயற்சியில் இணைந்து கொள்ள வேண்டியது, இலங்கை வாழ் மக்களான நாம் மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கையர்களும் இந்தப் பயணத்திற்குத் தோள்கொடுக்க வேண்டும். ஒன்றிணைய வேண்டும். இந்த இலக்குகளை அடைய அனைவரும் முடிந்தவரை பங்களிக்க வேண்டும்.

எனவே நாம் அனைவரும் ஒன்றாக முயற்சி எடுப்போம். ஒற்றிணைந்து அர்ப்பணிப்போம்.

ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒன்றுபடுவோம்.

நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2048 ஆம் ஆண்டின்போது எமது நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவோம்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.

பொலிஸாரின் தடையை மீறி யாழ்.பல்கலையில் பேரணி ஆரம்பம்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது.

பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பேரணி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.

இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

காணிகளை விடுப்பதாக கூறிக்கொண்டு காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்திலும் அரசாங்கம் தீவிரம் – தவிசாளர் நிரோஷ்

வலி. கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் கடற்படையினர் காணியை அடையாளப்படுத்துதல் மற்றும் அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்த நிலையில் அவ்விடத்திற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விரைந்து செல்வதற்கிடையில் கடற்படையினர் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கையில், கடற்படையினருக்கு பிரதேச சபையின் காணியை தான் வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்திருந்தார். அவ்வாறாக அறிவிப்புக் கிடைத்தவுடன் அவ்வாறாக குறித்த காணியை வழங்க முடியாது என நான் மறுத்திருந்தேன். இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (03.02.2023) இரகசியமாக பிரதேச சபைக்குச் சொந்தமான சுற்றுலா வலயத்திற்குள் நுழைந்த கடற்படையினர் அளவீடுகளை மேற்கொண்டு புகைப்படங்களையும் எடுக்கின்றனர் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. நான் பரிதொரு கூட்டத்தில் இருந்து அவசரமாக குறித்த கடற்கரைக்கு விரைந்து சென்ற போது அங்கிருந்து ஏற்கனவே கடற்படையினர் விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் கருமம் முடித்துச் சென்றார்களோ, அல்லது நான் வருகின்றேன் என தகவல் அறிந்து சென்றார்களோ தெரியவில்லை.

பின்னர் நான் குறித்த பிரதேசத்தை பார்வையிட்ட போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் நுழைவுச் சிட்டை பெற்று மக்களோடு மக்களாக நிலைமைகளை அவதானித்துக் கொண்டு நின்றனர். அடிப்படையில் இந் நிலம் உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சியில் காணப்படும் நிலம். இதில் பிரதேச செயலாளர் முடிவுகளை இராணுவத்திற்’கு வழங்குவதற்கு முடிவுகளை எடுக்க முடியாது. மேலும் மில்லியன் கணக்கில் எம்மால் முதலீடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவமயப்படுத்த முடியாது. எமது மக்களின் காணிகளை விடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும் காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்தினை முற்கொண்டு செல்வதிலும் அரசாங்கம் தீவிரம் காட்டியே வருகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார்.