வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி  கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன.

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக    நுலகர் சிவபாக்கியநாதன் கேதீஸ்வரன், சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன், சோமாஸ்கந்தா கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் புத்தூர் நுலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் புதுவை நாதம் நூலை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வெளியிட்டு வைக்க நூலின் முதற் பிரதியினை சித்த சுதேச வைத்தியர் இளையவன் செல்லத்துரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலுக்கான நயவுரையினை ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி ஆனந்தரட்ணம் ஆற்றியிருந்தார்.

இத் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதீதிகளின் உரைகள், அரிச்சுவடி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் என பலதரப்பட்ட தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் உள்ளுராட்சி நூலக வாரத்தினை முன்னிட்டு பிரதேச சபையின் நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

பிரதேசத்தில் சிறந்த வீட்டு நூலகத்தினை முகாமை செய்வதற்கான கௌரவம் ப. கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டதுடன்  சிறந்த வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
மேலும், நூலகங்களுக்கு இடையில் தேசிய நூலக மற்றும் சுவடிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுப் போட்டியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகம் நாடாளாவிய ரீதியில் 3 ஆம் இடத்தைப் பெற்றது.

இவ் விருதினை கடந்த வாரம் ஜயவர்த்தன பல்கலைக்கழக துணைவேந்தாரிடம் நூலகர் திருமதி கர்ஞனமாலா உதயகுமாரன் பெற்றுக்கொண்டார். அவ் விருதினை இந் நிகழ்வில் வைத்து பிரதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் சபையில் காட்சிப்படுத்துவதற்காக நூலகரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீனா இந்தியாவின் கடன் உத்தரவாதங்களிற்காக காத்திருக்கின்றோம் – நந்தலால் வீரசிங்க

இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக இலங்கையின் மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

தசாப்த காலங்களில் இல்லாத வகையில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை செப்டம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவிக்கான இணக்கப்பாட்டிற்கு வந்தது.

இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை நிறுத்தியதுடன் பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்ட பல மாதங்களின் பின்னர் இது இடம்பெற்றது.

எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் உறுதியளிக்கப்பட்ட ஐ.எம்.எப் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளிடமிருந்து உரிய உத்தரவாதங்களை பெறவேண்டும் .

கொழும்பு 2.9 மில்லியன் டொலரை எப்படியாவது பெறவேண்டிய நிலையில் உள்ளது – அது மிகப்பெரிய தொகை என்பதற்காக இல்லை – இலங்கை அந்த நிதி உதவியை வைத்துக்கொண்டு இரண்டு மாதங்களிற்கே இறக்குமதியில் ஈடுபடமுடியும்.

ஆனால் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பயன்படுத்தி சர்வதேச அளவில் மேலும் கடனை பெறுவதற்கு இலங்கை தகுதி பெறக்கூடும்.

இலங்கை பொதுமக்களை பல மாதங்களாக வீதிக்கு தள்ளிய மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளது.

பாரிய ஆர்ப்பாட்டங்கள் ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றின.

நாடாளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப போவதாக உறுதியளித்துள்ளார்.

அதேவேளை இதற்காக கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இலங்கைதனக்கு கடன்வழங்கிய சீனாஜப்பான் இந்தியா ஆகிய நாடுகளுடன் அவர்களிற்கு வழங்கவேண்டிய மில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

நாங்கள் இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் வெளிப்படையான திறந்த ஒப்பிடக்கூடிய விதத்தில் பரிமாறியுள்ளோம் என இலங்கையின் பிரதான வங்கியின் ஆளுநர் இந்துவிற்கு செவ்வாய்கிழமை வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இனி அவர்கள் இது குறித்து ஆராய்ந்து தங்கள் முடிவுகளை தீர்மானித்த பின்னர் எங்களிற்கு பதிலளிக்கவேண்டும் – விரைவில் அவர்கள் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கி;ன்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் ஆரம்ப கட்ட உடன்படிக்கையை செய்துகொண்ட தருணத்திலிருந்து இலங்கையிடம் கடன் வழங்குபவர்களின் சமத்துவம் மற்றும் வெளிப்படைதன்மையின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது கொழும்பு எந்த கடன் வழங்குநர்களிற்கும் முன்னுரிமை அளிக்க கூடாது எனவும்இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிவாரணத்தை இந்த வருட இறுதிக்குள் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை- இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீடிப்பதே இதற்கு காரணம்.

சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் சிறிது தாமதமாகின என தெரிவித்துள்ள இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர்ஒக்டோபரில் இடம்பெற்ற சீன கம்யுனிஸ்ட் கட்சியின் வருடாந்த காங்கிரஸ் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் தாமதமாகின என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் உடன் உதவி தாமதமாவதற்கு சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் மாத்திரம் காரணமில்லை என குறிப்பிட்டுள்ள அவர்ஜப்பானும் பாரிஸ் கிளப்பும் கடன் மறுசீரமைப்பு குறித்து நன்கு அறிந்துள்ளன பல வருடஙகளாக அவை அந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன இதன் காரணமாக அவை தமது ஈடுபாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன,அவர்கள் இலங்கை நிலையை ஆய்விற்கு உட்படுத்தி பாரிஸ் கிளப்பில் இடம்பெறாத இந்தியா சீனா போன்ற நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளன இனி கடன் அந்த நாடுகளே இது குறித்து தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் உத்தரவாதம் கிடைத்த பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி கிடைப்பதற்கு நான்குமுதல் ஆறு வாரங்களாகும் எனவும் நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி – ரணில் இடையிலான முறையற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ்க்கட்சிகள் அதிருப்தி சொல்ஹெய்மை இணைத்தால் இந்திய பிரதிநிதியை இணைப்போம் என்றும் எச்சரிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையற்ற சந்திப்புடனான இந்த சந்திப்பிற்கு தமிழர் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை இணைய ஊடகம் ஒன்றிற்கு இது தொடர்பில் அவர் தெரிவித்தார்.

ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, முறையற்ற ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு, தமிழர் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தம்மால் வர முடியாதென தெரிந்தும் சுமந்திரன் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் சார்பிலும் தான் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலாளருக்கும் கடிதம் அனுப்பியதாக க.வி.விக்னேஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

அத்துடன், எரிக் சொல்ஹெய்மை இந்த பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து எமது சார்பில் ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வருவோம் என க.வி.விக்னேஸ்வரன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, வரும் ஜனவரி 5ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது

கடன் வழங்குநர்களுடான பேச்சுவார்த்தையில் குழப்ப நிலை. IMF கடனுதவி மேலும் தாமதமாகும் – செஹான்

நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான சர்வதேச பேச்சுவார்த்தைகளின் குழப்பமான நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் எக்கனமி நெக்ஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.

2022 முடிவடைவதற்கு முன்னர் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்கலாம் என இலங்கை அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர் அதன் பின்னர் ஜனவரியில் கிடைக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

இலங்கை சர்வதேச சந்தையில் டொலர் கொள்வனவில் ஈடுபடுவதற்கு அதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும் காலம் அவசியமானது.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்கு முன்னர் இந்த நிதியுதவியை பெறுவதற்காக எங்களால் முடிந்தளவு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்கதெரிவித்துள்ளார்

அரசாங்க தரப்பிலிருந்து எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகள் இழுபடுவதால் இந்த தாமதம் இது குழப்பமான செயற்பாடு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்தைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் அவர்கள் மேலும் சில தெளிவுபடுத்தல்களை கோரியுள்ளனர், நாங்கள் நிச்சயமாக கடன்வழங்குநர்களின் அங்கீகாரத்தை பெறுவோம் ஆனால் எப்போது என்பது தெரியாது என செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன்வழங்கிய தரப்புகள் கடன் மறுசீரமைப்பு குறித்து எங்களிற்கு எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எங்களிற்கு உதவ தயார் என பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது ஆனால் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு மின் கட்டணம் அதிகரிக்கப்படின் விசாரணை மேற்கொள்ளும்

ஜனவரியில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக கருதப்படும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் மின்சார கட்டணம்  அதிகரிக்கப்பட்டால் முறைப்பாடுகள் இல்லாமலேயே இந்த விவகாரத்தில் தலையிட தயார் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதை பொருளாதார நெருக்கடி காரணமாக  ஏற்கனவே பெரும் சுமைகளை சுமக்கும் மக்களை மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும்  உரிமை அரசாங்கத்திற்கோ அதன் பங்குதாரர்களிற்கோ கிடையாது என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அமைச்சோ அல்லது இலங்கை மின்சார சபையோ மின்சார கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்தால் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் என அதன் இயக்குநர் நிகால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் மற்றும் அது தொடர்பான விசேட வைபவங்கள் இடம்பெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில், தேவாலயங்களுக்கு பொறுப்பான பாதிரிமார்கள் மற்றும் போதகர்களை சந்தித்து, கலந்துரையாடி, அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையின்போது தேவாலயங்களுக்குள் நுழையும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் அந்நியர்களை அடையாளம் காண்பதற்கு  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துறைமுக நகருக்கு தனியான நீதிமன்றம்

கொழும்பு துறைமுக நகர அதிகார வரம்புக்குள் புதிதாக வர்த்தக மேல் நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பாக சட்டத்துறை உயர் அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், எதிர்காலத்தில் துறைமுக நகரப் பகுதியில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எல்லை நிர்ணயங்களின் போது வெளிப்படைத் தன்மை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

உள்ளுராட்சி வட்டாரங்களை குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிராகரித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (டிச. 20) காலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மகிந்த தேசபிரியவின் தலைமையில்  அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கட்சித் தலைவர்கள்  மேற்படி நடவடிக்கையினை கூட்டாக நிராகரித்துள்ளனர்.

அத்தோடு புதிய எல்லை நிர்ணயம் தொடர்பில்  தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ள கட்சித் தலைவர்கள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதில் பல்வேறு குறைபாடுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

பல்லின சமூகங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்கள் பாதிக்கப்படாத வகையில் அல்லது அவர்களது பிரதிநிதித்துவம் திட்டமிட்டு இல்லாது செய்யும் வகையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படக் கூடாது.

ஆதாவது அந்தந்த பிரதேசங்களில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு தவிர்க்கும் வகையில் வட்டார எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படுவதாக பொது அமைப்புகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

கட்சித் தலைவர்கள் எல்லை நிர்ணயங்களின் போது வெளிப்படைத் தன்மையுடனும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளினதும் கருத்துக்களும் பெறப்பட வேண்டும் எனவும் தனியே அதிகாரிகளால் மட்டும் இவற்றை தீர்மானிக்க விட முடியாது என்றும்  கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ரோஹாங்கிய அகதிகள் யாழ். சிறையிலிருந்து மீரிகான தடுப்பு முகாமிற்கு மாற்றம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி வியாழக்கிழமை (டிச.22) காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மாலை வேளையில் மீரிகான தடுப்பு முகாமை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ஆம் திகதி  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  டிசம்பர் 18ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 19ஆம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான்  காயத்திரி சைலவன், 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை  2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே டிசம்பர் 19ஆம் திகதி இரவு 8 மணியளவில் தற்காலிகமாக 105 பேரும்  யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு 104 பேரை மீரிகானவுக்கு அனுப்ப இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது

பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு

கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இரசாயன கூட்டுத்தாபனத்துக்குக்கான காணிகள் எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் இன்று (21) பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் தாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருவதாகவும் தமது காணிகளையும் சேர்த்து இரசாயனத் தொழிற்சாலைக்கான காணியெனத் தெரிவித்து எல்லையிட்டதுடன் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வீதியை மூடியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.