கே. கே. எஸ். – பாண்டிசேரி கப்பல் சேவை ஜனவரியில் – அமைச்சர் நிமால் தெரிவிப்பு

இந்தியா – இலங்கை இடையே விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதல்கட்டமாக பாண்டிச்சேரி – காங்கேசன்துறை ஜனவரி மத்தியில் ஆரம்பிக்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவரின் அமைச்சில் நேற்று செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

தம்பதிவ யாத்திரைக்கு (இந்தியாவின் பௌத்த தலங்களுக்கான யாத்திரை) செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பெரும் நிவாரணமாக அமையும். ஒரு பயணிக்கான கட்டணம் 60 அமெரிக்க டொலர் என்பதுடன் 100 கிலோ எடையுள்ள பொருட்களை ஒருவர் எடுத் துச் செல்லமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நல்லிணக்கத்துக்கான நடைமுறைகளை ஜனவரி 31இற்கு முன்னர் நிரூபியுங்கள்! தமிழ் பேசும் தரப்புகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் நீடிக்கும் காணி ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணல், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், புதிய அரசமைப்பு தொடர்பில் ஏற்கனவே எட்டப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஓர் இணக்கப்பாட்டை அடைதல் ஆகிய விடயங்களை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தரப்பு செய்ய வேண்டும் என்று தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.இனப் பிரச்னைக்கு தீர்வு எட்டும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அழைப்பு விடுத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையகத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தென்னிலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள் கலந்து கொண்டன.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் தற்போதும் நீடிக்கும் காணிகள் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற விடயங்களை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் நீதி அமைச்சரும் இப்போதைய வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மூலமாக செய்யப்பட்ட விடயங்களை முன்வைத்தனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் சட்ட விவகாரங்களை கருத்தில் கொண்டே அவர்களை விடுதலை செய்ய முடியும். அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய முடியும் என்று கூறினர்.

வேண்டியது நீதியே

அவர்களின் கருத்துக்கு பதில் உரைத்த சம்பந்தன், “காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பதும் அதனைத்தான்…” என்று கூறினார்.

தொடர்ந்து, மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பிளவுபடாத இலங்கைக்குள் – உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு உச்ச அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று சம்பந்தனும், விக்னேஸ்வரனும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து இந்த அனைத்து விடயங்களையும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னதாக நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பந்தன் வலியுறுத்தினார்.

இதன்பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “13ஆவது திருத்தச் சட்டத்தை நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

 

13ஐ ஆதரித்த ஹக்கீம்

இதைத் தொடர்ந்து சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன் பின்னர் படிப்படியாக முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார். 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்ட மனோ கணேசன் மலையக தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேம தாஸ, 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்ததுடன், பிளவுபடுத்த முடியாத இலங் கைக்குள் – ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கூறினார்.

சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன், சமஷ்டி மூலம் இனப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண் டும். அதேசமயம், அபிவிருத்தி பணிகளும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப் பட வேண்டும் என்று கூறினார்.

நசீர் அஹமட் எதிர்ப்பு

சுற்றாடல் துறை அமைச்சரான நசீர் அஹமட் மாத்திரம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக்கூடாது என்று எதிர்ப்பைக் கிளப்பினார். சுமந்திரன் எம். பி, அரசமைப்பு விடயத்தை ஆரம்பத்தில் தொடங்க வேண்டியதில்லை. இது தொடர்பாக பல அறிக்கைகள் – இணக்கப்பாடுகள் – வரைவுகள் கூட இருக்கின்றன. அவற்றையெல்லாம் சேர்த்து ஓர் இணக்கப்பாட்டை எட்டி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். ஜனவரி மாதத்திலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனெனில் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சனைக்கு தீர்வு என்ற காலக்கெடுவை வைத்திருக்கிறார். எனவே, ஜனவரியில் முடிவு – இணக்கம் ஒன்று எட்டப்பட வேண்டும். இது மிகக் குறுகிய காலம் என்றாலும் அனைவரும் முயற்சிப்போம் – என்றார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனவரியில் ஒரு திகதியில் கூடிப் பேசுவது என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மகிந்த மௌனம் இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து மகிந்த ராஜபக்ஷ, சாகர காரியவசம் ஆகியோர் பங்கேற்ற போதிலும் அவர்கள் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை பிரதானி இலங்கைக்கு விஜயம் ; இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னாவின் அழைப்பின் பேரில், இந்திய கடற்படையின் பிரதானி அட்மிரல் ஆர் ஹரி குமார், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக திங்கட்கிழமை (12) கொழும்பை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், பாதுகாப்புச் செயலர், பாதுகாப்புப் படைத் தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

அத்தோடு வியாழக்கிழமை (15) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் பிரதம அதிதியாக கலந்து கொள்வுள்ளார்.

இதே வேளை புதன்கிழமை (14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சஹ்யாத்ரி கப்பல் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

இந்திய கடற்படை பிரதானியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் அடையாளப்படுத்துகிறது.

அத்தோடு இவ்விஜத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதோடு , பொதுவான பாதுகாப்பு அமைதியை உறுதி செய்வதற்கான திறனை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரு பிள்ளைகளுக்கு ரூ.40 ஆயிரம் தேவை – ஹர்ஷ டி சில்வா

முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எங்களது எச்சரிக்கைகளைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாடு இந்நிலைமைக்கு வந்திருக்காது எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2020ஆம் ஆண்டு முதல் நாம் கூறியவற்றை இந்த அரசாங்கம் கேட்கவில்லை. அரசாங்கம் பயணிக்கும் பாதை சரியில்லை. இந்த முறையில் பயணித்தால் நாடு வீழும், பணவீக்கம் ஏற்படும், பொருள்களின் விலைகள் அதிகரிக்கும், வட்டி வீதங்கள் அதிகரிக்குமென எச்சரித்தோம். ஆனால், நாம் கூறிய எதனையும் கேட்கவில்லை. நாம் இவ்வாறு கூறும்போத சிரித்தார்கள். அரசாங்கம் திமிர் பிடித்திருந்ததால் சுயவிமர்சனத்தைக்கூட செய்யவில்லை. இறுதியில் நாம் எச்சரித்த அனைத்தும் நடந்தது.

நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாம் கூறியதை கேட்காத மொட்டுக் கட்சி அரசாங்கம், தமது கடந்தக் கால பயணம் தவறு புதியப் பாதையில் பயணிக்க வேண்டும். புதியப் பாதை சிரமமானதாக இருக்கும் என இப்போது கூறுகிறது. இவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. லீகுவான் வந்தாலும் இந்நாட்டைக் கட்டி யெழுப்ப முடியாது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் ஒன்றிணைய வேண்டுமென கேட்கிறார்கள் – என்றார்.

இனப்பிரச்சனை தொடர்பான பேச்சு: இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சனை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ கலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது என்றும் நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரந்தாலும் அப்போது அரசாங்கத்திற்குல் ஏற்பட்ட பிரச்சினையால் தட்டிக்கழிக்கபட்டது என்றார்.

தற்போதும் இந்த பேச்சுவார்த்தை ஐ நா தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம், பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இருக்கலாம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் சந்தேகம் வெளியிட்டார்.

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்- ரெலோ சபா.குகதாஸ்

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் ஏற்பட்ட காலநிலை அனர்த்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாடுகள், எருமைகள் ,ஆடுகள் என ஆயிரத்துக்கு அதிகமான கால் நடைகள் இறந்துள்ளன.  இதனால் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல கோடி ரூபா பெறுமதியான தங்களது கால்நடைகளை இழந்துள்ளமையால் அவர்களது வாழ்வாதார மீட்சிக்கு அரசாங்கம் விரைவாக இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க செயலாளர்கள்  துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்தியஸ்தம் அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் ” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியான 13 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.

1. அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்ததையை (ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.

2. பேச்சுவார்த்தைக்காக 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.

3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.

4. பேச்சுவார்த்தை ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது.

அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவினையும் பெற்றுத்தராது. ஆனால், தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்டன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும்.

இதனை நான் 13 ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன். இந்த பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்த கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் பாரதி விழா

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா தேவி மண்டபத்தில் துணைத் தூதர் நடராஜ் ராகேஷ் தலைமையில் நடைபெற்றது.இதில் கம்பவாரிதி இ. ஜெயராஜை நடுவராக கொண்டு பாரதி நம் நெஞ்சில் ஆழப் பதிவது – சமூகப் பாடல்களாலா ? அல்லது பக்திப் பாடல்களாலா ? என்ற பொருளில் பட்டிமன்றம் இடம்பெற்றது.

 இதில் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் கம்பநேசன் இ. வாசுதேவா ,  ந. விஜயசுந்தரம், செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.நிகழ்வின் தொடக்கமாக நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா இயக்குநர் திருமதி சத்தியப்பிரியா கஜேந்திரன் அவர்களின் நெறியாள்கையில் பாரதி பாடல் நடனமும் இடம்பெற்றது.

யாழ்-சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியது. இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.
வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.